October

October

இலங்கையில் 15சதவீத பாடசாலை மாணவர்கள் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் – கண் மருத்துவர் ஹிரண்ய குணசேகர

இலங்கையில் 15 சதவீத பாடசாலை மாணவர்கள் தொலைதூரக் கண்பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் கண் மருத்துவர் ஹிரண்ய குணசேகர தெரிவித்துள்ளார்.

உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

குழந்தைகளின் கண் நோய்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதேனும் குழந்தை கண் நோயால் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.

குழந்தைகள் மிக அருகில் தொலைகாட்சி பார்ப்பது, புத்தகங்களைப் படிப்பது, தலைவலி, அடிக்கடி கண் சிமிட்டுதல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீரிழிவு நோயினால் ஏற்படும் கிளௌகோமாவின் பக்கவிளைவாக குருந்தூர கண்பார்வை குறைபாடு பாதிப்பும் உள்ளது.

குருந்தூர கண்பார்வை குறைபாடு மயோபியா என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு பிரெய்லியை அறிமுகப்படுத்தக்கூடாது. சில குழந்தைகள் குருந்தூர கண்பார்வை குறைபாடுடன் பிறக்கிறார்கள், பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் ரூபெல்லாவின் வெளிப்பாட்டின் காரணமாகவும் இந்தப் பாதிப்பு ஏற்படுகின்றது.

உலகில் சுமார் 128 மில்லியன் மக்கள் இத்தகைய கருந்தூர பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர் எனவே பெற்றோர்கள் இது குறித்து குழந்தைகளிடம் மிகவும் அவதானத்துடன் இருத்தல் அவசியம்.

காசாவில் இருந்து வெளியேறிய 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் – தொடர்ந்தும் நெருக்கடி கொடுக்கும் இஸ்ரேல் !

கடந்த வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இன்று 7-வது நாளாக இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இந்தச் சூழலில் இன்று (அக்.13) தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் போரினால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவு நிலவரப்படி காசா பகுதியில் இருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் அங்கமான மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (Office for the Coordination of Humanitarian Affairs) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. காசா பகுதியில் குடியிருப்புகள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் என எதையும் விட்டுவைக்காமல் இஸ்ரேலியப் படைகள் தாக்கிவரும் சூழலில் உயிருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். கடைசித் தகவலின்படி காசாவிலிருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலில் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகள் பல சேதமடைந்துள்ளன. காசாவில் இருந்து இதுவரை வெளியேறியவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஐ.நா.வின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 27 ஆயிரம் பேர் பாலஸ்தீன அரசு ஏற்படுத்தியுள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சுமார் 1.50 லட்சம் பேர் காசாவின் தெற்கில் மைதானங்களில், பொது கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 752 குடியிருப்பு கட்டிடங்களும், பிற கட்டிடங்களும் தரைமட்டமாகியுள்ளன. 1948-க்குப் பின்னர் இதுவே இந்தப் பிராந்தியத்தின் மிக மோசமாக தாக்குதல் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காசாவில் தண்ணீர், சுகாதார வசதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் தொடங்கியதிலிருந்து இப்போது வரை அங்கே 6 கிணறுகள், 3 நீரேற்று நிலையங்கள், ஒரு தண்ணீர் ஊற்று மற்றும் ஒரு நீர் சத்திகரிப்பு நிலையம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீர் வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் கர்ப்பிணிகள் உணவு, தண்ணீரின்றி வாடிவருகின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் தீவிர தாக்குதல் பகுதிகளில் 11 லட்சம் பேர் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை உடனடியாக மீட்காவிட்டால் அத்தனை பேரும் பட்டினியாலேயே உயிரிழக்க நேரிடும் என்றும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஆயத்தமாகி வருவதால், இரு நாடுகள் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது.

பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளி குழுக்கள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக போர் தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழியாக கடும் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமானதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. ஐ.நா. பள்ளிகளிலும், அருகில் உள்ள கட்டிடங்களிலும் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இருதரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 2,400-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில், தரைவழி தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் ராணுவம் ஆயத்தமாகி வருகிறது. தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்டு ஹெக்ட் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தீவிரவாதிகளின் நுக்பா படைகளின் இருப்பிடங்களை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இவர்கள்தான் கடந்த வாரம் ராக்கெட்குண்டு தாக்குதல் நடத்தியவர்கள்.

ஹமாஸ் கடற்படையின் மூத்த தலைவர் வீட்டில் ஏராளமான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அங்கும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பெய்த் லாகியா நகரில் நடத்திய வான் தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

“நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு செல்வந்தர் முதல் வறியவர் வரை அனைவருக்கும் வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு செல்வந்தர் முதல் வறியவர் வரை அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்

“ மனித மூலதனத்தை போன்றே டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்வதும் சவாலாகியுள்ளது. அதேபோல் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குறைந்தளவான வளங்களுடனேயே நாம் டிஜிட்டல் வசதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

அதனால் தனியார் துறையினரின் தனிப்பட்ட முதலீடுகள் வாயிலாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதற்கமைய டிஜிட்டல் வசதிகள் தொடர்பிலான எமது கொள்கை மேற்படி விடயத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படும்.

அதேபோல் மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.

அதன் பின்னர் அதிக சனத்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் நகரங்களை நோக்கி நகர வேண்டும். அதேபோல் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை விநியோகிப்பவர்களும் முதலீடுகளை எதிர்பார்த்துள்ளனர்.

அதேபோல் முதலீடுகளை முன்னோக்கி கொண்டுச் செல்லும் இயலுமை அரசாங்கத்திடம் உள்ளது.அதனால் தற்போதுள்ளதை விடவும் மாறுபட்ட நிதித்துறை ஒன்று எமக்கு அவசியப்படுகிறது. செல்வந்தர்கள் மற்றும் வறியவர்களுக்கு இடையில் டிஜிட்டல் தொடர்பாடல் ஒன்று இருக்க முடியாது.

அதனை நாம் நனவாக்கி கொள்வது எவ்வாறு என்பதை சிந்திக்க வேண்டும். அந்த வகையில் நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்குள்பிரவேசிக்கும் இயலுமை சகலருக்கும் கிட்ட வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் !

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன் மீது மேற்கொண்டுவரும் தாக்குதலை கண்டித்தும் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை (13) ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டம் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராகவும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (13) தெவட்டகஹபள்ளிவாசலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழில் சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் – வைத்தியர் உட்பட மூவரை கைது செய்ய கோரிக்கை !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் 03 பேரை உடனடியாக கைது செய்யுமாறு  நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் குறித்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி வைத்தியர், பெண் மற்றும் ஆண் தாதி உத்தியோகத்தர்கள் ஆகிய மூவரையும் உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த வழக்கில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் EXIM வங்கி இணக்கம் !

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அடிப்படை வேலைத்திட்டத்திற்கு இலங்கையும் சீனாவின் EXIM வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளன.

நீண்ட கால கடன்களை மீளச் செலுத்துவதற்கான இலங்கையின் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் இந்த உடன்பாடு உதவியாக இருக்குமென நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க பொதுக்கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான சீன EXIM வங்கியின் பங்களிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

கடன் பெறுநர்கள்,வணிகக் கடன் வழங்குநர் குழுவுடன் சீன EXIM வங்கி தொடர்ந்தும் உறவைப் பேணுமென இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கும் சீன EXIM வங்கிக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது.

அந்த ஒப்புதலின் பின்னர், இரண்டாவது தவணைக் கொடுப்பனவான 334 மில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்குமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையும் ன EXIM வங்கியும் அடுத்த சில வாரங்களுக்கு இதற்காக தீவிரமாக செயற்படுமென நிதி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“நீதிபதி சரவணராஜாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவர் திட்டமிட்டே வெளிநாடு சென்றுள்ளார்.” – விசாரணை முடிவை அறிவித்தது குற்றபுலனாய்வு பிரிவு !

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிருக்கு எவ்வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு சென்றமை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டு செப்டம்பர் 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவணராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அவை குறித்து விசாரணை நடத்திய குற்றபுலனாய்வு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜா 2021 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நீதவானாக நியமிக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அவருக்குத் தேவையான சகல பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் முகவர் ஒருவர் ஊடாக விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டது என்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அமெரிக்காவில் உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த தொலைபேசி எண் செயல்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

கல்முனைப் பகுதியில் இருந்து விமானப் பயணச்சீட்டுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஷார்ஜா, நைரோபி, டெல்லி வழியாக ஒக்டோபர் 12ம் திகதி இலங்கை திரும்புவதற்கு டிக்கெட் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஷார்ஜாவை அடுத்து நைரோபிக்கு செல்ல நீதவான் விமான டிக்கெட்டை பயன்படுத்தவில்லை என்பது விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதியின் வெளிநாட்டுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவரது ஆவணத்தில் நைரோபியே அவரது இலக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் சேவையிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய இரண்டு அதிகாரிகளும், உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புக்காக 12 மணித்தியாலங்கள் உட்பட தினமும் நான்கு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மேலும் நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிள் பிரேமன், பாதுகாப்பு போதுமானதாக இல்லை என நீதிபதி ஒருபோதும் கூறவில்லை என்றும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி தம்மிடம் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.

நீதிபதி வெளிநாடு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தனது காரை விற்றுவிட்டு செப்டம்பர் 23ஆம் திகதி வெளிநாடு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றில் கடமையாற்றி வரும், தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என நீதிமன்றப் பதிவாளர் கூறியுள்ளார்.

இதேவேளை தனது கணவர் நீதிபதி என்ற முறையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு இல்லாதது குறித்து குறிப்பிட்ட அவர் சமீபகாலமாக அவ்வாறான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தன்னிடம் கூறவில்லை எனவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 23 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் தனது கணவர் வெளியேறியதாகவும், அவர் வெளிநாடு செல்வது தனக்குத் தெரியாது என்றும்நீதிபதியின் மனைவி கூறியுள்ளார்.

“நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை ஐரோப்பாவில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.” – சரத் வீரசேகர

“நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை ஐரோப்பாவில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.” எனவும் “தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாது போன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும்.” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்.டி.டி.ஈ. அமைப்பை நாம் பெரும்பாலும் அழித்துள்ளோம். ஆனால், நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை உள்ளிட்ட ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்னமும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ் பிரிவினைவாத புலம் பெயர் அமைப்புக்கள், தங்களின் கனவை இன்னமும் விடவில்லை. தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே இவர்களின் இலக்காகும்.

இதனால்தான், நாம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெனிவாவில் இவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அத்தோடு, வடக்கு கிழக்கிலுள்ள பௌத்த புராதன சின்னங்களை அழிக்கும் செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

யுத்தத்திற்கு பின்னர் 12 ஆயிரத்து 422 புலி உறுப்பினர்களை நாம் புனர்வாழ்வளித்து, சமூக மயமாக்கியுள்ளோம். பயங்கரவாதத்தை நாம் கட்டமைப்பு ரீதியாக இல்லாதொழித்தாலும், அவர்களின் ஈழக் கனவு இன்னமும் இருப்பதனால், எமக்கு இன்னமும் அச்சுறுத்தலான சூழல் இன்னமும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில்தான் மீண்டும், எல்.டி.டி.ஈ. அமைப்பு தலைத்தூக்கி வருவதாக இந்தியாவிலிருந்து எமக்கு புலனாய்வுத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுதொடர்பாக இராணுவப் புலனாய்வுத் துறையினர், ஆராய்ந்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலை முன்மாதிரியாக கொண்டு நாட்டை முன்னேற்ற அனைவரும் ஒன்றிணையுங்கள்.” – ஐக்கியதேசிய கட்சி அழைப்பு !

பொருளாதார யுத்தத்துக்கு முகம்கொடுத்திருக்கும் எமது நாட்டை அதில் இருந்து மீட்கும் பயணத்தில் இஸ்ரேலை முன்மாதிரியாக்கொண்டு இணைந்துகொள்ளுமாறு  எதிர்க்கட்சித் தலைவரிடமும் அநுரகுமார திஸாநாயக்கவிடமும் இளைஞர் யுவதிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் யுத்தத்தின் மூலம் எங்களுக்கு  பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த முன்மாதிரியான விடயங்கள் இருக்கின்றன. அதுதான் இஸ்ரேல் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் தேசிய இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொண்டு நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினையில் ஒன்றாக இணைந்து செயற்பட அவர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசியல் பேதங்களை பின்தள்ளிவிட்டு ஒன்றாக இணைந்துசெயற்பட இஸ்ரேல் தற்போது எடுத்துள்ள தீர்மானம் இலங்கைக்கு சிறந்த முன்மாதிரியை வழங்குகிறது.

இலங்கை பொருளாதார ரீதியில் யுத்தம் ஒன்றுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில்  இலங்கையிலும் எதிர்க்கட்சிக்கும் வேறு அரசியல் கட்சிகளுக்கும் தற்போது இருக்கும் பொறுப்பு இதுவாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோன்று வெளிநாடுகளில் இருக்கும் இஸ்ரேல் இளைஞர் யுவதிகள் தங்களின் நாட்டுக்கு வந்து, தற்போது நாட்டுக்காக செயற்பட தயாராகி வருகின்றனர்.

தங்கள் நாடு நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நேரத்தில் இளைஞர் யுவதிகள் தங்களின் கடமையை செய்வதற்கு முன்னுக்கு வருகிறார்கள். இதுவும்  எமது நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த முன்மாதிரியாகும்.

அதனால் இஸ்ரேலை முன்மாதிரியாக்கொண்டு  நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கு  இணைந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடமும் அநுரகுமார திஸாநாயக்கவிடமும் இளைஞர் யுவதிகளிடமும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

“பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” – ஈரான், அரேபியா அறிவிப்பு !

ஹமாஸ் – இஸ்ரேல் போர் குறித்து ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருவரும் தொலைபேசியில் விவாதித்துள்ளனர். உலக அரங்கில் மிக முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

Iran President, Saudi Crown Prince discuss Gaza in first talk since ties  restored - India Today

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஈரானிய அரசு ஊடகம்,

“பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” என இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளது. அப்போது, “நடந்துகொண்டிருக்கும் போரினை தடுக்க சர்வதேச அளவில் சவுதி புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது” என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியிடம் உறுதியளித்தார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதையும் சவுதி விரும்பவில்லை” என்றும் ஆலோசனையில் முகமது பின் சல்மான் கூறியிருக்கிறார். சவுதி மற்றும் ஈரான் இடையேயான இந்தப் பேச்சுவார்த்தைகள் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட 47 பேருக்கு 2016-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த மரண தண்டனை பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும், மேற்காசிய நாடான ஈரானிலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த தவறவில்லை. இதனால், சவுதி – ஈரான் உறவில் விரிசல் ஏற்பட ஒருகட்டத்தில், ஈரான் உடனான உறவை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியா பகிரங்கமாக அறிவித்தது.

இரு நாடுகளையும் மீண்டும் இணைக்க உலக நாடுகள் பலவும் ஆர்வம் காட்டின. இதன்பின் கடந்த மார்ச் மாதம் சீனா இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்துவைத்தது. அதன்படி, ஈரானும், சவுதி அரேபியாவும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டன. தொடர்ந்து இரு நாடுகளிலும் அடுத்த இரண்டு மாதங்களில் தூதரகங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த சமாதானங்களுக்கு பிறகு முதல் முறையாக இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் விவகாரத்தில் மேலும் சர்வதேச கவனம் விழுந்துள்ளது.