October

October

2023 காலாண்டிற்குள் 1.45 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் !

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் சுற்றுலாத்துறை வருமானம் 1.45 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

 

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

 

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகளவான சுற்றுலாப் பயணிகள், இவ்வாண்டே நாட்டிற்கு வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் 65 வீட்டுப் பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் !

பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையின் 65 வீட்டுப் பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

சவுதி அரேபியாவின் ஜெட்டா மற்றும் ரியாத் நகரங்களிலுள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 34 பேர் தங்கியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர், காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 24 பேரும் ஓமானில் 07 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

இவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரில் Cryptocurrency நிலையங்களுக்கு அனுமதி!

கொழும்பு துறைமுக நகரில் இரண்டு க்ரிப்டோகரன்சி (Cryptocurrency) பணப்பரிமாற்ற மத்திய நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அறிவித்துள்ளது.

 

அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் கருத்தையும் அறிந்து குழுவிற்கு தெரியப்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு துறைமுக நகரத்தில் செயற்படும் மட்டத்தில் காணப்படும் வணிகங்களை ஒப்பந்தம் செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை 4 வாரங்களுக்குள் குழுவிற்கு பெற்றுக்கொடுக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும்.” –

அடுத்த மூன்று வருடங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“30 வருடகால விடுதலைப் புலிகளின் யுத்தத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீட்டுத் தேவை 20 ஆயிரத்து 276 ஆக காணப்படுகின்றது. யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த 3 ஆயிரத்து 828 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 683 பேர் தற்போது தாய்நாடு திரும்பியுள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அந்த குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படவுள்ளது.

அங்கு அவர்களுக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

லைக்கா சாமியார் ஐந்து மில்லியன் பவுண்கள் பிணையில் விடுதலை! “நானோ லைக்காவோ சாமியாரை பிணை எடுக்கவில்லை” லைக்கா துணைத் தலைவர் பிரேம்! : காணொலி

பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய காரணங்களுக்காக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓம் சரவணபவ என்ற ஆசாமி புலிக்கள் முரளிகிருஸ்ணன் செப்ரம்பர் பிற்பகுதியில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐந்து மில்லியன் பவுண்கள் பெறுமதியான வீட்டை பிணை வைத்தே இந்தப் போலி ஆசாமியை லைக்கா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேமநாதன் சிவசாமி என்றழைக்கப்படும் பிரேம் பிணைமீட்டுள்ளார். இது தொடர்பாக ஒக்ரோபர் 21 லைக்கா துணைத் தலைவரோடு தொடர்பை ஏற்படுத்த முயன்ற போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் இச்செய்தி இவ்வழக்கு சம்பந்தப்பட்ட சட்டக்குழுவினூடாக தேசம்நெற்க்கு கிடைக்கப்பெற்றது. மேலும் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரனின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இது பற்றிய தேசம்திரை காணொலி வெளியான சில மணி நேரங்களில் தேசம்நெற்றை தொடர்புகொண்ட லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் “நானோ லைக்காவோ சாமியைப் பிணை மீட்கவில்லை என்று அறுதியிட்டுத் தெரிவித்திருந்தார். அப்படியானால் உங்களின் பினாமிகளுடாக பிணை எடுத்தீர்களா என்று கேட்டபோது அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனப் பிரேம் சினந்தார். தங்களுக்கு வேறு நெருக்கடிகள் விடயமாக அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற போது எங்கள் ஊடகம் தங்களை தொடர்ந்தும் தொந்தரவு பண்ணுவதாக குற்றம் சாட்டினார். தங்கள் சட்டத்தரணிகள் குழுவினுடாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் தமிழர்கள் என்பதால் தான் நேரடியாகத் தொடர்பு கொண்டதாக பிரேம் இந்த உரையாடலில் தெரிவித்தார். ஈழத் தமிழ் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீங்கள் எதற்காக ஆதரவு வழங்குகின்றீர்கள் அவர் சம்பந்தப்பட்ட சட்ட விடயங்களுக்கு ஏன் ஆதரவளிக்கின்றீர்கள் என்று கேட்ட போது, தங்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை என்றும் அதனுடன் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றும் லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் தெரிவித்தார்.

லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் உரையாடலை நிறுத்திய சில நிமிடங்களிலேயே இச்செய்தி வெளியான யூரியூப் சனல் இடைநிறுத்தப்பட்டது. இச்செயலைக் கண்டிக்கும் வகையில் வெவ்வேறு சமூக வலைத்தளங்களில் இந்த லைக்கா சாமியார் தன் ஆண்குறியை வெளியே எடுத்து உருவுகின்ற வீடியோக்கள் வெளியிடப்பட்டு இருந்தது. கணணிக் காட்சி உரையாடலில் லைக்கா சாமியார் தன் ஆண்குறியை தன் கைகளால் உருவுவதும் உரையாடுவதும் அவருடைய முகபாவனைகளோடு வெளியாகி உள்ளது.

ஆனால் இவ்வாறான, குழந்தைகளை இளம் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் பேர்வழிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் புல்லுருவிகளும் ஈனர்களும் சமூக வலைத்தளங்களில் தாராளமாக வலம் வருகின்றனர்.

கேரளாவில் மோசடிப் பேர்வழியாக அறியப்பட்ட புலிக்கள் முரளிகிருஸ்ணன் எப்படி லைக்கா சாமியானார் என்பதும் லைக்காவின் லைக்குகளை வாங்கினார் என்பதும் ‘பணம் – பக்தி – பாலியல் ஓம் சரவணபவ!’ என்ற தலைப்பில் தேசம்திரை காணொலியாகி வெளி வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து லைக்கா மோபைல் துணைத் தலைவரை யூலை நடுப்பகுதியில் சந்தித்து மேற்கொண்ட பதிவு ‘போலிச்சாமியார் ஓம் சரவணபவவிற்கு முண்டுகொடுக்கவில்லை’ என அவர் தெரிவித்த கருத்தைத் தாங்கி வெளிவந்திருந்தது.

“கூடியிருந்து விஸ்கி அடித்த லைக்கா குழுமம், லைக்கா சாமியாருக்கு முன் கூடி, அவர் காலைக் கழுவிய தண்ணியை அடிக்க, அவர் அப்படி என்னத்தைத்தான் காட்டினார் ?” என வினவுகின்றார் கற்பக விநாயகர் அடியவர் எம் ஜி கிருஸ்ணன். ஈழத் தமிழ் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சாமியாரை ஐந்து மில்லியன் பவுண்கள் பிணை செலுத்தி வெளியே எடுத்துள்ளார் லைக்காவின் துணைத் தலைவர் பிரேம். பிரேம் தன்னுடைய மனைவி சாமியாரில் மிகுந்த பக்தியுடையவர் எனத் தெரிவித்து இருந்தார். பிரேம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர். அச்சமயத்திலேயே தெய்வதீஸ்வரி செல்வேந்திரனால் லைக்கா குழுமத்தினருக்கு சாமியார் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தார். மருத்துவ சிகிச்சையின் பயனாக பிரேம் குணமடைந்த போதும், சாமியின் காலைக் கழுவிக்கு குடித்தால் தான் புற்றுநோய் குணமானது என பிரேம் குடும்பத்தினர் நம்புகின்றனர். அது தேசம் ஜெயபாலன் பிரேமுடன் உரையாடியதில் வெளிப்பட்டு இருந்தது. ஈழத் தமிழ் பெண்களை சாமியால் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததை அச்சந்திப்பில் பிரேம் கண்டிக்கவில்லை. ஆனால் சாமியாரை லைக்காவோடு தொடர்புபடுத்துவது பற்றியே விசனம் தெரிவித்து இருந்தார்.

சாமியாரின் வழக்குடன் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தானோ லைக்காவோ அவருக்காக வாதாடவோ அவருடைய வழக்குச் செலவுகளை ஏற்கவோ இல்லை என அறுதியிட்டுத் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது லைக்காவின் துணைத் தலைவர் பிரேம் ஐந்து மில்லியன் பவுண் பிணையில் சாமியாரை வெளியே எடுத்துள்ளார் எனத் தெரிய வருகின்றது. சாமியாருக்கு கட்டப்பட்ட கோவிலுக்கான நிதியையும் இவரே வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

பணம் – பக்தி – பாலியல் ஆகிய மூன்று அம்சங்களும் ஒருங்கிணைவது சமூகச் சீரழிவுக்கு வழிகோலுகின்றது. இவ்வாறான அயோக்கியர்களுக்கு லைக்கா போன்ற அமைப்புகளும் ஆலயங்களும் உறுதுணையாக இருப்பது மிக ஆபத்தான நிலையைத் தோற்றுவித்துள்ளது. புலம்பெயர் நாடுகளில் உள்ள பணம் படைத்த வர்த்தகப் புள்ளிகள் தங்களிடம் பணம் இருப்பதால் தங்களை தட்டிக் கேட்க யாராலும் முடியாது என்ற தோரணையுடன் ரவுடிகளாகச் செயற்படுகின்றனர். தங்கள் கைகளில் ஊடகங்களையும், அடியாட்களையும், மொட்டைக்கடிதம் எழுதுபவர்களையும் வைத்துக்கொண்டு இவர்கள் எதிர்கால சமூகத்தையே சீரழித்து வருகின்றனர். தவறணை நடத்துவது அதற்கு ஆட்களை வரவழைக்க போதைப்பொருள் விற்பனைகளை மறைமுகமாக அனுமதிப்பது என இந்தக் கூட்டத்தின் அடாவடித்தனங்கள் சொல்லில் அடங்கா.

இதனைத் தட்டிக்கேட்டால் தங்கள் ஏவலாளிகளைக் கொண்டு முகநூலை முடக்குவது, குடும்பத்தை இழுத்து மொட்டைக்கடிதம் எழுதுவது, ஒருபடி மேலே சென்று இணையத்தை ஊடுருவி – ஹக் பண்ணி முடக்குவது எனப் பல்வேறு அடாவடித்தனங்களைச் செய்கின்றனர். இவ்வாறான அநியாயங்களுக்கு தேசம்நெற் மற்றும் தேசம்திரை ஊடகங்கள் தொடர்ந்தும் முகம்கொடுத்து வருகின்றன.

லைக்கா சாமியாரை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உறுப்பினர் ஆர் ஜெயதேவன் குறிப்பிடத்தக்கவர். லைக்கா சாமியாருக்கு எதிராக சாட்சியம் அளித்த சிலர் பின்நாட்களில் வெளி அழுத்தங்கள் காரணமாகவும், அவர்களுக்கு எதிரான மொட்டை கடிதங்கள் அழுத்தங்கள் காரணமாகவும் சாட்சியமளிக்க பின் வாங்கினர். நீண்ட காலமாக லைக்கா சாமிக்கு பிணை மறுக்கப்பட்டதற்கும் அவருடைய பிணைக்கு மிகப் பெரும் நிதி பிணையாகக் கோரப்பட்டதற்கும் இதுவே காரணம். ஆர் ஜெயதேவன் இந்த வழக்குத் தொடர்பில் லைக்கா சாமியாருக்கு எதிராக உறுதியாக நின்றதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலியல் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட பின்னும்இ தங்கள் குடும்பத்தினர் அந்த ஆசாமியின் கோவிலுக்குச் சென்று வருவதாகத் தெரிவித்த லைக்கா பிரேம் தான் கோவிலுக்குச் செல்வதால் சாமியை ஆதரிப்பதாக குற்றம்சாட்ட முடியாது எனத் தெரிவித்தார். தற்போது சாமியார் மீது குற்றம்சாட்டுகின்றவர்கள் சாமியின் அடியார்களாக இருந்ததாகவும் லைக்கா பிரேம் தெரிவித்தார். சாமியாரின் சுயரூபம் தெரியாதவரை அவருக்கு அடியாராக இருந்தமை சரி என்று கொண்டாலும் சாமி ஆண்குறியை உசார்ப்படுத்தும் விடியோக்கள் வெளியான பின்னரும் ஏன் இவர்கள் அங்கு செல்கின்றனர் லைக்கா சாமியின் லிங்க பூஜையின் சிறப்பு என்ன என்பது மார்ச் 15 2024 ஹரோ நீதிமன்றில் தெரியவரும்.

குற்றம்சாட்டப்பட்ட நிரூபிக்கப்பட்ட பின்னும் தெய்வதீஸ்வரி செல்வேந்திரன் மற்றும் திருமதி பிரேம் போன்ற சில பெண்கள் இவ்வாறான குற்றவாளிகளுக்கு தொடர்ந்தும் துணை போவது ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக லைக்கா குடும்பத்தினர் இன்னமும் பாலியல் குற்றவாளியான புலிக்கள் முரளிகிருஸ்ணனின் காலைக் கழுவி தீர்த்தம் குடிக்க ஆசைப்படுவது ஏன்? இனிமேல் லைக்கா காட் வாங்கினால் லைக்கா சாமியின் தீர்த்தம் இலவசமாகக் கிடைக்குமோ?

சீனாவுக்கு 100,000 குரங்குகளை அனுப்பும் ஆரம்ப வேலைத்திட்டம் – சுற்றாடல் அமைப்புகளினால் பாதிப்பு !

சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு 100,000 குரங்குகளை அனுப்பும் ஆரம்ப வேலைத்திட்டம் சுற்றாடல் அமைப்புகளினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் விவசாயிகளுக்கு ஏர் ரைபிள்களை விநியோகிக்கும் போது, ​​பயிர் சேதம் பெரும்பாலும் டோக் குரங்குகளால் ஏற்படுவதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுப்பதற்காக இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் நடைமுறையில் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச் சூழல் அமைப்புகளின் ஆலோசனைகள் பயிர்களைச் சுற்றி புடவைகளை தொங்கவிடுவது, தென்னை மரங்களில் தட்டுகள் கட்டுவது போன்ற யோசனைகள் என்றும், அரை ஏக்கர் பயிர்ச்செய்கையை வன விலங்குகளுக்காக ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதால், வன விலங்குகளால் பயிர்ச்செய்கை பயிர்கள் நாசமாக்கப்படுவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து சுற்றறிக்கை!

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லாத வகையில் தனியார் கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சட்டத்தரணி எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 02.00 மணி வரையிலும், மழை பெய்யும் நாட்களில் முழு நாட்களில் தனியார் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இவ்விடயம் தொடர்பில் ஆராய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உதவியை நாடுமாறு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, கந்தளாய், அம்பாறை, மஹாஓயா மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

“காலத்துக்கு காலம் அரசாங்கங்கள் மாறும் போது தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளது.” – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

தேசிய பௌதீகத் திட்டத்தை உடனடியாக ஒவ்வொரு மாவட்டக் குழுவிற்கும் சமர்ப்பித்து அனுமதி பெறுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

 

பாராளுமன்ற வளாகத்தில் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்கள அதிகாரிகளுடன் அண்மையில் (20) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

 

நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களில், அதற்கான நிறுவனங்களை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படுவதால், அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் அடிக்கடி தாமதம் ஏற்படுகிறது. காலத்துக்கு காலம் அரசாங்கங்கள் மாறும் போது தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும், தேசிய பௌதீக திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்கள் மிகவும் வினைத்திறனுள்ளதாகவும் மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

 

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் “தேசிய பௌதீக திட்டம் – 2048” தயாரிக்கப்பட்டுள்ளது. அது 2000/49 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1946 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க நகர மற்றும் கிராம திட்டமிடல் கட்டளையின் படி உள்ளது. தேசிய பௌதீக திட்டம் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் கிடைத்தது. இந்த தேசிய பௌதீக திட்டத்திற்கு அனைத்து மாவட்ட குழுக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அங்கு ஆலோசனை வழங்கினார்.

 

மேலும், இத்திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட உள்ளது. பின்னர் அது வர்த்தமானியில் வெளியிடப்படும். தேசிய பௌதீக திட்டம் பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

 

முதலாவதாக, 2007 இல் தேசிய பௌதீக திட்டம் தயாரிக்கப்பட்டது. பின்னர் அது 2019 இல் புதுப்பிக்கப்பட்டது. “தேசிய பௌதீக திட்டம் – 2048” பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிஞர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை எடுத்துக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதன் பிரதான நோக்கு “ஒரு திட்டமிடப்பட்ட நிலையான வளமான நிலம்” என்பதாகும். இந்த தேசிய பௌதீக திட்டம், அமைச்சின் செயலாளர்கள் குழுவிற்குள் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.

 

நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய பௌதீக திட்டத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி தனித்துவமான பங்களிப்பை வழங்கும் நகர அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், புகையிரத, போக்குவரத்து போன்ற அனைத்து அபிவிருத்தி செயன்முறைகளையும் முன்னெடுப்பதன் மூலம் நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை பெருமளவில் தவிர்க்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டின் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும், பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளை இனங்கண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இந்த தேசிய பௌதீக திட்டம் மிகவும் முக்கியமானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

“இலங்கையர்களுக்கு காணாமல்போன மாகாண சபை தேர்தலும் புதைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலும் அவசியம்.” – மகிந்த தேசப்பிரிய

“இலங்கையர்களுக்கு காணாமல்போன மாகாண சபை தேர்தலும் புதைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலும் அவசியம்.” என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எனினும் முன்னர் கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் சட்டங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய ஆறுமாதங்களில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை ஆணைக்குழு பூர்த்தி செய்வது மிகவும் கடினம், பல மணித்தியாலங்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டியிருக்கும் ஒருவருட காலத்திற்கு கூட இது நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

 

மேலும் ; சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை அவை இந்த காலத்தின் தேவை எனினும் இவற்றிற்கு முன்னர் எங்களிற்கு காணாமல்போன மாகாண சபை தேர்தலும் புதைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கிழக்கில் இருந்து சிங்களவர்களை வெளியேற்ற கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் முயற்சி..?

கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மையினத்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில நாட்களாக பௌத்த குருமார்கள் தன்னையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் குறை கூறி கொண்டு செயற்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்துடன் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்ளை கைப்பற்றினால் அது எந்த இனத்தவர்களாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 

நாட்டில் மீண்டும் ஒருமுறை இனப்பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.