October

October

தனியாருக்கு சொந்தமாகும் சிறீலங்கா டெலிகொம்!

சிறிலங்கா தொலைத் தொடர்பு நிறுவனத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான சொத்து எண்ணிக்கை கணக்கிடும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

வெளிநாட்டு நிறுவனமொன்றினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ஜகத் குருசிங்க தெரிவித்தார்.

இந்த நிலைமையை தடுக்க எதிர்வரும் நாட்களில் கடுமையான தொழில்சார் நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் மூலம் இந்நிறுவனத்தின் பெறுமதி கணக்கிடப்படுவதாகத் தெரிவித்த அவர், தனியாருக்கு கடன் வழங்குவதே இந்த நிறுவனத்தின் பொறுப்பாகும் என்றார்.

இது மிகப் பெரிய மோசடி என்றும், இதற்கு எதிராக கடுமையான தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஐவர் கைது !

4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் நீண்ட நாள் மீன்பிடி படகில் பயணித்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரும் கடற்படையினரும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இன்று(22) காலை தேவேந்திரமுனை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்த குறித்த படகை சோதனையிட்ட போது, அதிலிருந்து சுமார் 200 கிலோகிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படும் அபாயம்..?

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியினை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் அண்மையில் நிதி போதாத நிலமையை சுட்டிக்காட்டி காலதாமதம் ஆகலாம் என்று ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

 

எங்களுக்கு இதில் ஒரு ஐயம் ஏற்படுகின்றது என்னவென்றால் காலதாமதங்கள் , நிதி இல்லை என்று கூறுவதும், ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதும், குறித்த காலப்பகுதி மழை காலமாக இருப்பதாலும் இப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், சட்டத்தின் ஆட்சியை நடத்துமாறும் வெளிப்படைத்தன்மையை மக்களோடு பேணுமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

“நாடாளுமன்றத்தில் மரியாதை, ஒழுக்கம் என்ற ஒன்று இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முறையாக நடந்து கொள்ளாவிட்டால் அதனை எதிர்கொள்ளும் அதிகாரம் வழங்கும் வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நாளை சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த வரைவை தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் மரியாதை, ஒழுக்கம் என்ற ஒன்று இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் குறிப்பிட்டார்.

 

எனவே, நாடாளுமன்றத்தின் ஒழுக்கம் மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், இங்கிலாந்தின் நாடாளுமன்ற நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

“றமேஷ் வேதா” – லண்டன் தமிழ் ஆளுமையின் மறைவு !

நகைச்சுவை கலைஞர் றமேஷ் வேதநாயகம் இன்று அதிகாலை 22 ம் திகதி ஒக்ரோபர் இயற்கையை எய்தினார். அவர் மோட்டோ நீயுரோன்ஸ்- நரம்பு தொடர்பான நோயினால் இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல்

பாதிக்கப்பட்டிருந்தவர்.
மிக அரிதானதும் இலட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் இந்நோயானது படிப்படியாக உடலின் ஒவ்வொரு அவயங்களாக செயலிழக்கச் செய்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும். துரதிர்ஷ்டவசமாக றமேஷ் வேதாவும் இந்நோயினால் பாதிக்கப்பட்டு இயற்கையை எய்தினார்.

புலம்பெயர் தொலைக்காட்சிகளில்,, “பிடிக்கல பிடிக்கல” என்ற நாடக தொடர் மூலமும் பல குறும்படங்கள் ஊடாகவும் மற்றும் முழு நீள திரைப்படங்கள் ஊடாகவும் ஈழத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவர் ஒரு சிறந்த நகைச்சுவை நாடகக் கலைஞரும் ஆவார்.

இலங்கையில் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த பல தசாப்தங்களாக லண்டனில் வாழ்ந்தவர். கணக்கியளாளராக பணியாற்றிய இவர் நடிப்புத் துறை மீதான ஈர்ப்பினால் கலைத்துறையில் முழு ஆர்வத்தோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனது நகைச்சுவை நடிப்பினாலும் குணாதிசயத்தாலும் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.

2023 ஆம் ஆண்டு சிவஜோதி ஞாபகார்த்த விருது – ” நகைச்சுவை தென்றல்” என்ற பட்டத்தை காலஞ் சென்ற றமேஷ் வேதாவுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருந்ததாக “லிட்டில் எயிட்டின்” நிர்வாக இயக்குநர் ஹம்சகௌரி தெரிவித்திருந்தார்.

விருது வழங்கும் விழா நவம்பர் 18 இல் நடைபெற இருந்த நிலையில் சடுதியாக றமேஷ் வேதாவின் மரணச் செய்தியை கேட்டு தான் அதிர்ச்சியும் மிகுந்த கவலையும் அடைந்ததாக தெரிவிக்கும் ஹம்சகௌரி லிட்டில் எயிட்டின் சார்பாக றமேஷ் வேதாவின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் தெரிவித்தார்.

ஒரு நல்ல மனிதரை, நல்ல கலைஞரை மற்றும் நல்ல நண்பரை தான் இழந்து தவிப்பதாக இவர் நடித்த படங்களையும் நாடகங்களையும் இயக்கிய கலைத் தம்பதியினர் றஜிதா மற்றும் பிரதீபன் அவர்களும் தேசம்நெட்டுக்கு தெரிவித்தார்கள்.
என்றும் ஆர்வம் குன்றாத றமேஷ் வேதா எமது திரைகுழுமத்திற்கு மிகப்பெரும் பலமாகவும் ஊக்கியாகவும் இருந்தவர். அவருடைய மறைவு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமல்ல எமக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என ஈழத்தமிழ் முன்னணி இயக்குநரான ஆர். புதியவன் தேசம்நெட்டுக்கு தெரிவித்தார்.

தேசம்நெட் மற்றும் தேசம்திரையுடன் நீண்ட காலமாக உறவைக் கொண்டிருந்தவர் றமேஷ் வேதா. இவருடைய பிள்ளைகள் சிறுவர் தேசம் பகுதியில் எழுத்தாளர்களாகவும் இருந்தவர்கள். றமேஷ் வேதாவின் மறைவுச் செய்தி ஈழத்தமிழர்களுக்கு நகைச்சுவை உலகில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறும் தேசம் ஜெயபாலன் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறான நல்ல மனிதருக்கு இக் கொடியநோய் ஏற்பட்டதும் அவருடைய திடீர் மறைவும் இயற்கை இழைக்கும் அநீதியின் மீது கோபத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

நகைச்சுவை கலைஞர் றமேஷ் வேதநாயகத்தின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினரின் பிரிவுத்துயரில் கலைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ளுகின்றனர். நகைச்சுவைகலைஞர் றமேஷ் வேதாவின் இறுதி நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

“காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

 

இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளில் இடம்பெறும் கொலைகளுக்காக எமது கண்டனங்களை தெரிவிக்கின்றோம். அங்கு பாரியளவில் மனித அவலங்கள் இடம்பெற்று வருகின்றன.

 

அது சிறிய நாடாக இருந்தாலும் நாங்கள் ஒன்றும் தெரியாதது போன்று நடு நிலையாக இருந்துவிட முடியாது. சரி பிழைகள் தொடர்பில் கூற வரவில்லை இரு தரப்பின் நியாயங்கள் , அநியாங்கள் தொடர்பில் கதைப்பதற்கான நேரமல்ல.

 

வன்முறைகளை எதிர்க்க வேண்டும். இரு தரப்பினரும் யுத்தத்தை நிறுத்தி மனித அவலங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நீண்ட காலமாக நாங்களும் இவ்வாறான யுத்தம் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு யார் பொறுப்பாளிகள். அத்துமீறியவர்களையே நாங்கள் இனங்காண வேண்டும்.

 

முதலில் அவல யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும். நாடுகள் வன்முறைகளின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முயல்கின்றன.

 

இந்த காலத்தில் அதற்கு இடமளிக்க முடியுமா? அதனை ஏன் தீர்த்து வைக்க முடியவில்லை. பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்தம் வகித்தல் ஆகியன மூலம் தீர்வுகளை காணலாம்.

 

உலகில் பல பகுதிகளில் சண்டைகள் நடக்கின்றன. உக்ரேன் மத்திய கிழக்கு நாடுகளில் சண்டைகள் நடக்கின்றன. மத்திய கிழக்கில் நடக்கும் விடயங்களின் தாக்கங்களை நாங்கள் மூன்று தசாப்தங்களாக அனுபவித்துள்ளோம்.

வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் இங்கே வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை.

 

இங்கேயும் அரச பயங்கரவாதமே இருந்தது. எவ்வகையாக வன்முறையாக இருந்தாலும் அவை கண்டனத்திற்குரியதே. இஸ்ரேல் காஸாவை விட்டு விலக வேண்டும். எவராக இருந்தாலும் மக்கள் உயிர்களை பறிக்க எந்த உரிமையும் கிடையாது.

 

இங்கே சிலர் இரட்டை வேடத்துடன் செயற்படுகின்றனர். அரசியல் ரீதியான பிரச்சினையே பல நாடுகளில் நடக்கின்றன. அவற்றை அரசியல் ரீதியில் தீர்க்க முடியும். இங்கேயும் அதே நிலைமையே இருக்கின்றது.

 

அரசியல் தீர்வாக இராணுவ தீர்வு அமைய முடியாது என்று மஹிந்த ராஜபக்ஷ் கூறினார். ஆனால் இறுதியில் அவர் இராணுவ தீர்வையே முன்னெடுத்தார்.

 

எவ்வாறாயினும் இவ்வாறான வன்முறைகளை அனுமதிக்க முடியாது. இவற்றை கண்டிக்க வேண்டும். துன்பப்படும் மக்கள் யாராக இருந்தாலும் நாங்கள் ஒற்றுமையுடன் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் !

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் Elsevier நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

 

இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டிருப்போரில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களான பேராசிரியர் நவரட்ணராஜா சதிபரன்,கலாநிதி ரி.மதனரஞ்சன் ஆகிய இருவரும் இடம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

பணிநாள் மற்றும் வருடாந்த அடிப்படையில் விஞ்ஞானிகளைப் பல்வேறு காரணிகளைக் கொண்டு தர வரிசைப் படுத்தி இந்தப் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

 

22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத்துறைகளில் இருந்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலில் இணைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தாக்கப்பட்ட விவகாரம் – விசாரணை குழு நியமனம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்தார்.

 

இந்த விடயம் தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் 07 ஆம் திகதி சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (20) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சபாநாயகர் குழுவொன்றை அமைத்துள்ளார்.

 

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸவின் தலைமையிலேயே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

இந்த குழுவில் ஆளுங்கட்சி சார்பில் சமல் ராஜபக்ஸ மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

எதிர்க்கட்சி சார்பில் கயந்த கருணாதிலக்கவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்கள்!

மேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

 

தற்போதுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரண்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் p சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

 

குறித்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.