October

October

“முல்லைத்தீவு நீதிபதி மன அழுத்தத்தால் பதவி விலகுவதாக இருந்தால் இலங்கையிலுள்ள சகல நீதிபதிகளும் பதவி விலக நேரிடும்.” – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

தனக்கு கொலை அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக பதவி விலகுவதாக தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதில் ‘உயிரச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தான் பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகளுக்கு மனஅழுத்தம் இருப்பது வழமை ,மன அழுத்தத்தால் பதவி விலகுவதாக இருந்தால் இலங்கையிலுள்ள சகல நீதிபதிகளும் பதவி விலக நேரிடும்.

நீதிபதிகளுக்கு மாத்திரமல்ல சட்டத்தரணிகளுக்கும் மன அழுத்தம் உள்ளது.நாடாளுமன்றம் வரும் எமக்கும் மன அழுத்தம் உள்ளது.சபாபீடத்தில் அமர்ந்துள்ள சபாநாயகருக்கும் மன அழுத்தம் உள்ளது.அவ்வாறானால் அவரும் பதவி விலக நேரிடும். தனக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிபதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள போதும் அது எந்தவகையான, யாரால் விடுக்கப்பட்டது என்பது தொடர்பிலோ ,தனக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகையான மன அழுத்தம் என்பது தொடர்பிலோ எதுவுமே குறிப்பிடவில்லை.

தனக்கு உயிரச்சுறுத்தல் இருந்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.உயிரச்சுறுத்தல் விடுத்த நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க முடியும். ,காவல்துறை மா அதிபருக்கு அறிவிக்க முடியும்..அந்த அதிகாரம் எமக்கு கூட இல்லை.ஆனால் அவர் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

காஸாவில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தி கொழும்பு ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை நோக்கி அமைதிப்பேரணி !

பலஸ்தீன மக்களுடான தமது ஆதரவை வெளிப்படுத்தியும், காஸாவில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் நேற்றைய தினம் புதன்கிழமை (18) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டு தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

ஹமாஸ் அமைப்பினால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் – ஹமாஸ் மோதலின் நீட்சியாக கடந்த சில தினங்களாக காஸாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திவரும் தாக்குதல்களால் சிறுவர்கள் உட்பட பெருமளவானோர் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்துவரும் நிலையில், அந்நாடுகளில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி அந்த அரசாங்கங்களுக்கு எதிராகவும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் பலஸ்தீன மக்கள் மீதான இலங்கையர்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கிலான ‘ஒருமைப்பாட்டு’ போராட்டமொன்று உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் அமைப்பினால் நேற்று புதன்கிழமை பி.ப 3.00 மணிக்கு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரகத்தில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை நோக்கிய அமைதிப்பேரணியாகவே இப்போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் பலஸ்தீன மக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தி போராட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கில் பி.ப 3.00 மணியளவில் பெருமளவானோர் விஜேராம மாவத்தையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தை வந்தடைந்த அதேவேளையில் அப்பகுதியில் பஸ் மற்றும் ஜீப் வண்டிகளில் பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் இன, மதபேதமின்றி அங்கு குழுமியிருந்த மக்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட், ‘காஸாவில் துன்பப்படும் எமது மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தி இங்கு ஒன்றிணைந்திருக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் எனது மனமுவந்த நன்றியைக் கூறுகின்றேன். பலஸ்தீன மக்களுக்கான உங்களது ஆதரவுக்கு நன்றி. நாங்கள் உங்களை நேசிக்கின்றோம்’ என்று மிகவும் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து அடைமழைக்கு மத்தியில் பலஸ்தீன கொடிகளையும், ‘நாங்கள் பலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம்’, ‘நாங்கள் பலஸ்தீனத்துடன் இருக்கிறோம்’, ‘கொலைகளை நிறுத்துங்கள்’, ‘பலஸ்தீன கேள்விக்கான அடிப்படைக்குத் தீர்வை வழங்குங்கள்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு அங்கிருந்து அனைவரும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட வேளையில், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் அவர்களைத் தடுத்தனர். இவ்வாறு கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறும், பேரணியாகவும் செல்லமுடியாது என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தினர்.

அதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் தமது சொந்த வாகனங்களிலும், பேரணியாகவன்றி சில குழுக்களாகவும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை சென்றடைந்து, அங்கு கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது ‘பலஸ்தீனம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை உடன் நடைமுறைப்படுத்துங்கள். சுதந்திரமானதும், இறையாண்மை உடையதுமான பலஸ்தீனத்தை உருவாக்குங்கள்’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதையை அவர்கள் ஏந்தியிருந்தனர். அதன் பின்னர் பலஸ்தீன மக்களுடனான தமது ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும், காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் அலுவலகப் பிரதிநிதியிடம் மகஜரொன்றைக் கையளித்ததுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

“இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை மறைக்கும்  ஒரு செயல்பாடாகும்.” – செந்தில் தொண்டமான் அதிருப்தி !

பிறப்பு, இறப்பு சான்றிதழில் இனத்தினை குறிப்பிடுவது குறித்து பதிவாளர் நாயக திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் தமது இனத்தை குறிப்பிடுவது தொடர்பாக பதிவாளர் நாயக திணைக்களத்திற்கு சுற்றுரூபம் வெளியிட எவ்வித உரிமையும் இல்லை.

இலங்கையர் என்ற வகையில் தனது இனத்தை பிறப்பு இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிட இந்நாட்டு பிரஜை என்ற வகையில் அனைவருக்கும் உரிமை உள்ளது.

பிரஜா உரிமை இல்லாத சமூகமாக நாம் இருந்த பொழுது, இந்தியா வம்சாவளி தமிழர்கள் என்ற அடையாளமே எமக்கான அங்கீகாரமாக இருந்தது. எம் இனத்தின் அடையாளத்தை தீர்மானிப்பதற்கு மூன்றாம் தரப்பினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

1948 ஆம் ஆண்டுகளில் பிரஜா உரிமை இன்றி இருந்த நம் சமூகம் கிட்டத்தட்ட 40 வருட போராட்டங்களுக்கு பிறகு இந்திய வம்சாவளியினர் என்ற அங்கீகாரத்துடன் பிரஜா உரிமை பெற்றது.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை மறைக்கும்  ஒரு செயல்பாடாகும். இவ்வாறான சுற்றுநிரூபங்களை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

“பாலஸ்தீனமும் – இலங்கையும் – காலனித்துவச் சிந்தனையில் தார்மீக உணர்விழந்த மேற்குலகமும் ! ” – தேசம் திரை காணொளி !

பாலஸ்தீனமும் – இலங்கையும் – காலனித்துவச் சிந்தனையில் தார்மீக உணர்விழந்த மேற்குலகமும் !

இரு தரப்பு மோதல் கொலையான சம்பவம் – கிளிநொச்சியில் 22 வயது இளைஞர் கைது !

கிளிநொச்சி, ஊற்றுக்குளம் பகுதியில்  நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருதரப்பினரிடையே இடம்பெற்ற மோதல் வலுவடைந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் உருத்திரபுரம் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வடக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலுக்கு பிரத்தியேகமான முதலீட்டு வலயம்.”- இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த

வடக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலுக்கு பிரத்தியேகமான முதலீட்டு வலயமொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

இதன் மூலம் மீன்பிடி தொழில் தொடர்பான முதலீடுகளை கொண்டுவர முடியும் எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இதனைக் குறிப்பிட்டார்.

அத்தோடு இதன் ஊடாக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மீன்பிடித் தொழிலுக்கும் மட்டுமன்றி நுகர்வோருக்கும் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் இடைத்தரகர்கள் குழுவொன்று முறையற்ற இலாபம் ஈட்டுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகவே அத்தகைய மீன்பிடி மாபியாவை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

வரண்டு போன அமேசன் – இறந்துபோன நூற்றுக்கணக்கான டொல்பின்கள் !

பிரேசிலில் மழைக்காடுகளின் வழியாக ஓடும் அமேசான் நதியின் கிளை நதிகள் வரண்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத வரட்சி காரணமாக அமேசானின் கிளை நதிகள் வரண்டுள்ளன.

இதன் காரணமாக அந்த நதிகளின் வழியாக தொலை தூர கிராமங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வது பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், நூற்றுக்கணக்கான டொல்பின்களும் இறந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், ஏராளமான படகுகள் தரைத்தட்டி கிடக்கின்றன. இதுதொடர்பான ட்ரோன் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

 

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை இல்லை.” – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று சபையில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை தான் நாம் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளோம்.

ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய நாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இது முற்றிலும் பொய்யான ஒரு விடயமாகும். எமக்கு அப்படி செய்ய வேண்டிய தேவையும் கிடையாது.

நாம் செய்ய முடியுமான செயற்பாடுகளை மட்டும்தான் செய்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையை பொலிஸார் மட்டக்களப்பில் செயற்படுத்தவில்லை.” – சாணக்கியன் குற்றச்சாட்டு !

மட்டக்களப்பு மயிலத்தமடு  மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில்  ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைகளை பொலிஸார் செயற்படுத்தவில்லை. நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில் எவரிடம் இது  தொடர்பில்  முறையிடுவது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில்  இன்று (18) புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி தற்போது நாட்டில் இல்லை.  பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சரும் நாட்டில் இல்லை. அத்துடன் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள  சேவைகால நீடிப்பும் சட்டவிரோதமானது. பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்ட  பதவி நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையால் நீக்க முடியாது என்று இன்னொரு தரப்பு கூறுகிறது. கடந்த  ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி  தலைமையில் விசேட கூட்டமொன்று  இடம்பெற்றது. மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையை  பொலிஸார்  இன்று வரையில் பொலிஸாரால் மட்டக்களப்பில் செயற்படுத்தவில்லை.

பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவர்கள் மூவர் தொடர்பிலும் பிரச்சினை இருந்தால் பாராளுமன்றத்தின் ஊடாக கலந்துரையாடி அதற்கு தீர்வு காண வேண்டும். பொலிஸ்மா அதிபர் இல்லாத நேரத்தில் நாங்கள் பிரச்சினைகளை யாரிடம் கூறுவது.

மட்டக்களப்பில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி கூறியதை யார் செயற்படுத்தப் போகின்றார். அது தொடர்பில் யாரை கேட்பது. நாட்டில் சட்டத்தை செயற்படுத்துவதற்கு யார் பொலிஸ்மா அதிபராக இருக்கின்றார். என்பதை குறிப்பிட  வேண்டும்.

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவம்  மீண்டும் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது.இது தொடர்பில் ஆளும் கட்சியில் பொறுப்புடன்  ஒருவர்  பதிலளிக்க வேண்டும் என்று  கேட்கின்றேன் என்றார்.

இதன்போது  எழுந்து பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன எதனை கேட்பதென்பதனை குழப்பிக்கொண்டே  அவர் கேட்கிறார். ஜனாதிபதியின் பெயரை குறிப்பிட்டு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்தப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி இவர்களையும், அதிகாரிகளையும் அழைத்து சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டதுடன்,  அது தொடர்பில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அது தொடர்பில் சீனா செல்ல முன்னர் என்னிடமும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆகவே  அந்தப் பிரச்சினையை அத்துடன் நீக்கிக்கொள்ளுங்கள். ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சர், அவர் எங்கு இருந்தாலும் தேவையான ஆலோசனைகளை வழங்குவார் என்றார்.

இதனை  தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி எழுந்த சுயாதீன உறுப்பினர்  நிமல் லான்சா, இந்த சபையில் ஜனாதிபதி இல்லாத நேரத்திலேயே இவ்வாறு பேசுகின்றார். இவ்வாறு கருத்து முன்வைக்க முடியாது என்றார்.

இவ்வேளையில் சாணக்கியன்  குறுக்கிட்டு கருத்து தெரிவிக்க முயன்ற போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன்  இவரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை கோருகின்றேன் என்றார்.

தொடர்ந்து மீண்டும் உரையாற்றிய  பாராளுமன்ற உறுப்பினர்  நிமல் லான்சா ,

நான் சபாநாயகரிடமே பேச சந்தர்ப்பம் கேட்டேன். நான் சுமந்திரனிடம் கேட்கவில்லை, சாணக்கியனிடம் கேட்கவில்லை. தமிழ், ஆங்கிலம், சிங்களம் எதுவும் உங்களுக்கு தெரியாதா ? சபையில் இல்லாத ஒருவர் பற்றி இங்கே கூறுவது தவறே. இதனால் அந்த கருத்துக்களை ஹன்சாட்டில் இருந்து நீக்குங்கள்.

ஜனாதிபதி பிரச்சினையொன்று தொடர்பில் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இல்லையென்றால் அவர் வந்த பின்னர் சந்தித்து கதையுங்கள்.

இப்போது ஜனாதிபதி சீனாவுக்கு முக்கிய விடயமாகவே சீனாவுக்கு சென்றுள்ளார். அவர் இந்த சபையில் இல்லாத நேரத்தில் அவர் பற்றி கூறியவற்றை நீக்கிவிடுங்கள் என்றார்.

“ஏழு பயணிகளே பதிவு செய்துள்ளனர்“- இடைநிறுத்தப்பட்டது நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையான பயணிகள் கப்பல் சேவை !

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறைக்கு இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் (20) தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி நாகப்பட்டினம் – இலங்கை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் இடை நிறுத்தப்படுவதுடன் மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவையின் தொடக்க நிகழ்வினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி ஊடாக ஆரம்பித்து வைத்தார்.

நாகை துறைமுகத்திலிருந்து 50 பயணிகளுடன் இலங்கை வந்தடைந்த பயணிகள் கப்பலின் பயண கட்டணம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து இந்திய ரூபாய் மதிப்பில் 7,670 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு ஒரு நாள் கட்டணமாக இலங்கை செல்லும் பயணிகளுக்கான பயண கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் 3,000 ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதியன்று நாகையிலிருந்து- காங்கேசன்துறைக்கு பயணிப்பதற்காக ஏழு பேர் மாத்திரமே முன்பதிவு செய்திருந்தனர். இதனையடுத்தே நாளை மறுதினம் (20) வெள்ளிக்கிழமை முதல் நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படுவதாகவும் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழமைக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.