19

19

பாகிஸ்தானில் பலூச் மக்கள் மீது தொடரும் இனப்படுகொலை – ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் !

பாகிஸ்தானில் பலூச் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி தேரா காஜி கான் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் மாகாணமாக உள்ள பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் பலூச் போராளிகள் பலர் காணாமல் போவதாகவும், அரசே பயங்கரவாத அமைப்பு போல தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் பலூச் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பலுசிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பலூச் ஒற்றுமைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பலூச் மக்கள் கடத்தப்படுவது, கொல்லப்படுவது, போலி என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வது என பலூச் இனப்படுகொலையில் பாகிஸ்தான் அரசு ஈடுபடுவதாகவும், இதனை பலூச் தேசம் ஒருபோதும் ஏற்காது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பலரும் தங்கள் கைகளில் காணாமல் போன தங்கள் குடும்பத்தவர்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பலூச் யாக்ஜேட்டி கவுன்சில் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். ”தேரா காஜிகானில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். ஆனால், இதில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கில் போலீசார் நகரின் நான்கு வழிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இதன்மூலம் அவர்கள் மக்களுக்கு தொடர்ந்து தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று அந்த கவுன்சலின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தேரா காஜி கானில் டிசம்பர் 19ம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்திருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். பலூச் மக்களை கொல்வதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அரச பயங்கரவாதம் தொடருவதை அனுமதிக்க முடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவாக முன்னிலையாவதால் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள் சட்டத்தரணிகள் – பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் தற்போது கைது செய்யப்படும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக முன்னிலையாவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வழக்குகளுக்கு முன்னிலையாவதன் மூலம் குறித்த சட்டத்தரணிகள் மில்லியன் கணக்கில் சம்பாதிப்பதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

காவல்துறையினரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 2 ஆயிரத்து 121 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட காலி முகத்திடல் போராட்டங்கள் காரணமாக போதைப்பொருள் தொடர்பான விடயங்களில் அதிக கவனம் செலுத்த முடியாதிருந்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை, இலங்கையில் போதைப்பொருள் பாவனையை அதிகரித்ததுடன், விநியோகத்தையும் பாரியளவில் அதிகரித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைக்கு தற்போது பல சட்டத்தரணிகள் முன்னிலையாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை குறித்த தரப்பினர் எதிர்த்திருந்தாக டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் மக்களுக்காக குரல் கொடுப்பதாக தெரிவிக்கும் சட்டத்தரணிகளே, இவ்வாறாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இது எங்களுடைய போர் மட்டுமல்ல. அமெரிக்காவின் போரும் கூட” – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இது எங்களுடைய போர் மட்டுமின்றி, பல வழிகளில் உங்களுடைய போரும் கூட என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பு, கடந்த ஒக்டோபர் 7 ந் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. பெண்கள், முதியவர்கள் என பலரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது. 200-க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டினுடன் இணைந்து கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

அப்போது, இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதற்காக தனது நன்றியை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து அவர் கூறும்போது,

“காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான நாகரீகத்தின் போரை நாங்கள் நடத்தி கொண்டிருக்கிறோம். நாங்கள் எப்போது பேசுகிறோமோ அப்போது, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றியை பெற வேண்டும் என்ற எங்களுடைய ஈடுபாட்டை நான் மீண்டும் வெளிப்படுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இது எங்களுடைய போர் மட்டுமின்றி, பல வழிகளில் உங்களுடைய போரும் கூட என நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில், உலகில் நாகரீகத்தின் சக்தியை நீங்கள் வழிநடத்தி செல்கிறீர்கள் என்று அமெரிக்காவை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

“வடக்கு கிழக்கில் மாகாணசபை தேர்தல்களை நடத்தி அங்கே மாகாணசபைகளை  ஏற்படுத்த ரணில் தயாரில்லை .” – மனோ கணேசன்

“வடக்கு கிழக்கில் மாகாணசபை தேர்தல்களை நடத்தி அங்கே மாகாணசபைகளை  ஏற்படுத்த ரணில் தயாரில்லை .” என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் அறிக்கையொன்றில் மேலும் கூறியதாவது,

உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களை, தடை நீக்கம் செய்து, அழைத்து ஜனாதிபதி ரணில் பேசுவது நல்லதே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் உள்நாட்டில் தமிழருக்கு தொடர்ந்து தவறான சமிக்ஞைகளை தருகிறார். இதில் ஒன்று, மக்களுடன் எந்தவித நேரடி தொடர்புகளும் இல்லாத அமைச்சர் டிரான் அலசின் பேச்சை கேட்டு, எனது தொகுதி கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவுகளை ஆரம்பித்துள்ளமை ஆகும்.

இரண்டாவது, வடக்கு கிழக்கிலாவாது மாகாணசபை தேர்தல்களை நடத்தி அங்கே மாகாணசபைகளை  ஏற்படுத்த ரணில் தயாரில்லை என்பதாகும். மூன்றாவது, பாதிட்டில் ரணில் உறுதியளித்த, மலைநாட்டில் 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாமையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடந்த வாரம் அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து மூன்று விடயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி கோரிக்கை விடுத்தேன்.

தற்போது ஜனத்தொகை புள்ளிவிபர கணக்கெடுப்பு சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளுக்கு மேலதிகமாக, உங்கள் அமைச்சர் டிரான் அலசின் பொலிஸ்காரர்களை தமிழர்களின் வீடுகளுக்கு சிங்களம் மட்டும் படிவங்களுடன் அனுப்பி, சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளை செய்து, எனது தொகுதி கொழும்பில் வாழும் தமிழர் மத்தியில் தேவையற்ற பதட்டங்களை ஏன் ஏற்படுத்துக்கிறீர்கள்?

குறைந்தபட்சம் உடனடியாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலாவது மாகாணசபை தேர்தல்களை நடத்தி, அங்கே முதற்கட்டமாக மாகாணசபை  நிர்வாகங்களை ஏற்படுத்தலாம். அதை ஏன் இழு, இழு என்று இழுத்துகொண்டே போகிறீர்கள்?

மலைநாட்டு பெருந்தோட்டங்களில், நீங்கள் பாதிட்டில் உறுதியளித்த 10 பேர்ச் காணி துண்டுகளை, பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வழங்கலாம்.

இந்திய, இலங்கை வீடமைப்பு திட்டங்களின் வீடு கட்டும் பணிகள், அரச நிர்வாக கட்டமைப்புகளின் ஊடாக நடைமுறையாக தாமதம் ஆகும். ஆகவே காணி வழங்களுக்காக நீங்கள் ஒதுக்கிக்கொண்டுள்ள 400 கோடி ரூபாயை பயன்படுத்தி, காணிகளை பிரித்து வழங்கலாம். ஆனால், இந்த 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதில் கூற வேண்டும். அல்லது அவருடன் கூட்டு குடித்தனம் செய்கின்றவர்கள் பதில் கூற வேண்டும். இவை தொடர்பில் கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கா, இந்தியா, சுவிஸ், நெதர்லாந்து, கனடா, பிரான்ஸ், தென்னாபிரிக்கா, இத்தாலி நாடுகளின் தூதுவர்களும் ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளின் துணை தூதர்களும், முதன்மை அதிகாரிகளும் கலந்துக்கொண்ட நிகழ்விலும் அவர்களுக்கு விளக்கமாக நான் எடுத்து கூறி இருந்தேன்.

வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட வழக்கு – யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழ்., வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண விசாரணை தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி வழங்கப்படவுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன், பொலிஸாரின் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொலிஸார் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிலர் சாட்சியம் வழங்கினர்.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த முன்னர் உயிரிழந்தவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெல்லிப்பழை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

மேலும், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரை அனுமதித்தமை தொடர்பான மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு அவர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

மரண விசாரணை தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கில் உயிரிழந்த இளைஞன் சார்பில் பெருமளவான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

தனியார் மயமாகும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் – போராட்டத்தில் ஊழியர்கள் !

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்கள் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் ஒன்று திரண்டு இன்று செவ்வாய்க்கிழமை (19) மதிய நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்துகின்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதலுக்கு எதிராகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலாபம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை நிறுத்து , தேசிய வளங்களை விற்பதை நிறுத்து, பொருளாதாரத்தினை மேம்படுத்துவதாகக் கூறி நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கு இடமளிக்க முடியாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக  கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளில் வாழ்கின்ற இலங்கை புலம்பெயர் மக்களுடன்  இணைந்து செயற்பட தயார் – பிரதமர்  தினேஷ் குணவர்த்தன

சர்வதேச நாடுகளில் வாழ்கின்ற இலங்கை புலம்பெயர் மக்களுடன்  இணைந்து செயற்படுவதற்கும்  அவர்களது பங்களிப்பை  இலங்கையின் வளர்ச்சிக்கு பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று பிரதமர்  தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

கடந்தவாரம் முழுவதும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின்  பிரதிநிதிகள் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்தநிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்தன  புலம் பெயர் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த  இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மகாநாயக்கத் தேரர்கள், ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன் இலங்கையை  மீள் கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்ட இமயமலை பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில்  நான்  இந்தத் தரப்பினரை சந்திக்கவில்லை எனினும் ஒரு விடயத்தை   குறிப்பிட விரும்புகிறேன். அரசாங்கம் புலம்பெயர் மக்களின்  பங்களிப்பை பெறுவதற்கு தயாராக இருப்பதுடன் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டிருந்தார்.

உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த  இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பல்வேறு தரப்பினரை சந்தித்திருந்தபோதிலும் கூட தமிழ்தேசிய மக்கள் முன்னணி  உள்ளிட்ட  சில அரசியல் கட்சிகளும்  சிவில் சமூக அமைப்புக்களும் இது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தன.  அதுமட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் பல்வேறு புலம்பெயர்அமைப்புக்களும் இந்த இமயமலை  பிரகடன முயற்சியை கடுமையாக விமர்சித்திருந்தன.

அந்தவகையில் பிரதமர்  தினேஷ் குணவர்த்தன இது தொடர்பில் மேலும்  குறிப்பிடுகையில் புலம் பெயர் மக்களின் பிரதிநிதிகளை இதற்கு முன்னரும் பல தடவைகள் சந்தித்திருக்கிறேன்.

அவர்கள் இலங்கையில் வந்து முதலீடு செய்யவும்  அபிவிருத்தியில் பங்கெடுக்கவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

அதற்காகவே  வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்காக ஒரு அலுவலகமும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. புலம்பெயர் மக்கள் இலங்கை  வந்து முதலீடு செய்ய விருப்பம்  தெரிவித்தால் அதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்றார்.

அரசாங்கம்   இவ்வருடத்தின் ஆரம்பத்தில் வெளிநாட்டுவாழ் இலங்கையர்களுக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தது. அதன்  பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட இராஜதந்திரி வீ. கிருஷ்ணமூர்த்தி செயற்பட்டு வருகின்றார்.

இலங்கையில் சடுதியாக அதிகரித்த யாசகர்களின் எண்ணிக்கை !

நாட்டில் யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

65 இடங்களை மையப்படுத்தி அந்த திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, நாடு பூராகவும் 3,700 யாசகர்கள் உள்ளதாக அந்த அறிக்கை தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேல் மாகாணத்தில் மாத்திரம் 1,600 யாசகர்கள் உள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான நால்வருக்கு பிணை வழங்க வாய்ப்பு !

மாவீரர் தின நிகழ்வின்போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தரமாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்திய இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த மாணவனை இன்று செவ்வாய்க்கிழமை (19) நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று பிணை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குறித்த மாணவனின் கோவைகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த மாணவனின் கோவைகள் இன்றைய தினம் 11 மணியாவில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சாணக்கியனால் விசேட விதமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை துரிதகதியில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துஸ்பிரயோகம் – 18 வயதுடைய இளைஞர் கைது !

14  வயதான பாடசாலை மாணவியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்று துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் நவகத்தகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதுடைய இளைஞரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தலுவெல வஹ்ரக பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

நவகத்தேகம – வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்துக்கு  உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்  ஆனமடுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.