2024

2024

நான் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கற்ற மாணவன் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !

நான் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கற்ற மாணவன் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !

தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் 18.12.2024 சமர்ப்பித்து கருத்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பேசிய விடயங்கள் பேசுபொருளாகியுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, எனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்.தாம் ஒருபோதும் பொய்யான சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறு சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக எவரேனும் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன்.

தனது கல்வித் தகுதி உண்மையா பொய்யா என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் விசாரித்து உறுதி செய்ய முடியும். தனது வெளிநாட்டுப் படிப்பிற்குப் பிறகு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் திறந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.

அங்கு சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். அப்போது விரிவுரையாளராக இருந்த தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வகுப்புகளில் கூட கலந்து கொண்டேன்” என்றார்.

சொகுபேருந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து!

சொகுபேருந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து!

 

பனங்கொட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த உழவு இயந்திரமும் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும் நேற்று அதிகாலை கொடிகாமத்தில் மோதி விபத்தில் சிக்கின. இவ் விபத்தில் இவ்விரு வாகானங்களையும் செலுத்தி வந்த சாரதிகள் உட்பட 4 நான்கு பேர் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்தானது ஏ9 வீதியில் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் இவ்வாறான விபத்துக்கள் அதிகாலை வேளையிலேயே நடைபெறுகின்றது. அதற்கான வாய்ப்புகளே அதிகம். நித்திரைத் தூக்கமும் சோர்வும் அதற்கான காரணங்கள். இது தொடர்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது. விபத்திற்கான காரணம் முழமையாகத் தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை தொடர்கின்றனர்.

ஜனாதிபதியின் இந்திய விஜயமும் எதிர்க்கட்சியினரின் சந்தேகமும்!

ஜனாதிபதியின் இந்திய விஜயமும் எதிர்க்கட்சியினரின் சந்தேகமும்!

நேற்று பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின் போது எதிர்கட்சி உறுப்பினர் நளின் பண்டார முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட “எட்கா ஒப்பந்தம்” தொடக்கம் அனைத்திற்கும் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுமதி வழங்கியதா? அல்லது எட்கா (ETCA – Economic and Technology Cooperation Agreement) ஒப்பந்தத்தை செய்ய ரணில் விக்கிரம சிங்கவிற்கு மக்கள் ஆணை இல்லை என்று கூறி அவ்வொப்பந்தத்தை எதிர்த்து வந்த என்பிபி தற்போது எதிர்ப்பதை நிறுத்தி விட்டதா? எனக் கேட்டார். எட்கா ஒப்பந்தம் எனப்படுவது இலங்கை இந்தியாவிற்கிடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகும்.

எட்கா ஒப்பந்தம் பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து இலங்கை கடும்போக்குடைய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இதனை எதிர்த்து வந்திருக்கின்றார்கள். எட்கா ஒப்பந்தத்தின் படி இலங்கை – இந்தியா இரு நாடுகளுக்குமிடையே பொருட்கள் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் வர்த்தகம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குதல் பற்றியதாகும். எட்கா ஒப்பந்தம் வருவதை எதிர்த்தவர்கள், கைச்சாத்தானால் இலங்கை இந்தியாவின் கொலனியாகிவிடும் என சிங்கள மக்கள் மத்தியில் பீதியையும் கிளப்பியிருந்தனர்.

இந்தநிலமையிலேயே அநுராவின் இந்தியப் பயணம் தொடர்பில் இக்கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவுடனான வலுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்க அநுரகுமார திஸ்ஸநாயக்காவிற்கு மக்கள் ஆணை உள்ளது. அதன்படி மேலதிகமாக உற்பத்தி செய்யும் வலுசக்தியை பிம்ஸ்டெக் வலயத்திற்குள் ஏற்றுமதி செய்து நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்போம் என்றார். அத்துடன் நாட்டை காட்டிக்கொடுக்கும் எந்த ஒப்பந்தத்திலும் நாங்கள் இந்தியாவுடன் கையொப்பம் இடவில்லை என்றும் அறிவுள்ளவர்கள் அதனைப் படித்துப் பாருங்கள் என்றும் காட்டமாக பதிலளித்தார்.

கனடா செல்லவுள்ளோருக்கு புதிய சிக்கல் – ட்ரம்பின் மிரட்டலுக்கு பணிந்தது கனடா!

கனடா செல்லவுள்ளோருக்கு புதிய சிக்கல் – ட்ரம்பின் மிரட்டலுக்கு பணிந்தது கனடா!

சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் குற்றங்களை கண்காணிக்கும் பொருட்டு புதிய எல்லைப் பாதுகாப்பு விதிகளை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு மேலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. கனடா, எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த 1.3 பில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், கண்காணிப்பு கோபுரங்கள், மற்றும் நாய்கள், குழுக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும், சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கூட்டு குழு உருவாக்கப்படவுள்ளது.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுக்காவிட்டால், கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத வரிவிதிப்புகளை அதிகரிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டியதிலிருந்து கனடா கடும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றது. கனடா அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாகும் மற்றும் அதன் மொத்த ஏற்றுமதியில் சுமார் 75 சதவிகிதம் அமெரிக்காவையே சார்ந்துள்ளது. ட்ரம்ப்பால் விதிக்கப்படும் புதிய கட்டணங்கள் கனடாவின் பொருளாதாரத்திற்கு ஒரு அடியாக இருக்கலாம். இதனை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை கனடா முன்னெடுத்துள்ளது.

கடந்த ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப் பகுதிக்குள் 23,000 க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் புதிய விதிகள் காரணமாக கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோர் மற்றும் அகதி அந்தஸ்து கோருவோர் தொடர்பில் மேலும் கெடுபிடிகள் அதிகரிக்கப்படலாம். விண்ணப்பதாரர்களின் பின்புலம் மற்றும் ஆவணங்கள் கடுமையாக சரி பார்க்கப்படலாம், பொது நலனுக்காக ஆவணங்களை ரத்து செய்யும் உரிமை கொண்ட புதிய சட்டத்தால், குடியேற்றக் கொள்கைகள் இன்னும் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கஜேந்திரகுமாருக்கும் அறளைபெயருகிறது: சங்கரி ஐயாவுக்கு போட்டியாக கடிதம் எழுதுகிறார்!

கஜேந்திரகுமாருக்கும் அறளைபெயருகிறது: சங்கரி ஐயாவுக்கு போட்டியாக கடிதம் எழுதுகிறார்!
தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி சங்கரி ஐயா தான் கடிதம் எழுதுவதில் வல்லவர். அவருக்குப் போட்டியாக கஜேந்திர குமாரும் கடித எழுத ஆரம்பித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அனுரவுடன் எவ்வித ஆக்கபூர்வமான பேச்சுகளையும் இதுவரை முன்னெடுக்காத நிலையில், இந்தக் கடிதத்தை கஜேந்திரகுமார் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், இலங்கை ஒற்றையாட்சிக் கருத்தைக் கைவிட்டு தமிழ் மக்களை உள்ளடக்கிய பெடரல் அரசியலமைப்பை தயாரிக்க, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு மோடியை அவர் கோரியுள்ளார்..
கடந்த எழுபத்தைந்து வருடங்களில் இலங்கையின் கொள்கை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க தவறியமையே நாடு இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சியை எதிர்கொள்வதற்கு காரணம் என அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தை தன்னுடைய நலன் தவிர வேறு எதற்காகவும் இந்தியா கையிலெடுக்கப் போவது இல்லை. தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசின் மீது அது எவ்வித அழுத்தத்தையும் பிரயோகிக்கப்போவதும் இல்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது ஆட்சியிலுள்ளவர்களுடன் தமிழ்ப் பிரதிநிதிகள் ஆக்கபூர்வமாக தொடர் பேச்சுக்களை முன்னெடுத்து புரிந்துணர்வின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஒன்று. பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தயாராகவுள்ள தலைவராக அனுரகுமார திசநாயக்க காணப்படுகின்றார். ஆனால் அதைச் சரிவர பயன்படுத்தாது வெறும் கண்துடைப்புக்காக இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.
தமிழர் விவகாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தம்முடைய அரசியல் இருப்புக்காகவே பயன்படுத்துகின்றனர் என்பது மீண்டும் இந்த சம்பவத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்களுடைய அரசியல் சாயம் வெழுத்து வாக்கு வங்கி கவிழ்ந்து ஒரு ஆசனம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னணியினர் தொடர்ந்தும் பூகோள அரசியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றினால் அடுத்த ஆசனமும் பறிபோகும் என்கின்றனர் அரசியல் அவதானிகள். இந்தியாவை வைத்து இலங்கைக்கு குட்டலாம் என்ற போர்மிலா காலாவதியாகிப் போனது காலாவாதியாகிப் போய்க்கொண்டிருக்கின்ற பொன்னம்பலம் சஜேந்திரகுமாருக்குப் புரியவில்லையா அல்லது அவருக்கும் அறளைபெயருகிறதா? என்கிறார் ஆய்வாளர் மாவடி ஏஆர் சிறிதரன்.

சர்வதேச அரசியல் நெருக்கடிக்குள் இலங்கை சிக்குகின்றது! இஸ்ரேலிய போர்க்குற்றவாளி இலங்கையில்!  

சர்வதேச அரசியல் நெருக்கடிக்குள் இலங்கை சிக்குகின்றது! இஸ்ரேலிய போர்க்குற்றவாளி இலங்கையில்!

 

சர்வதேச கிரிமினல் நீதிமன்றினால் குற்றச்சாட்டப்பட்ட இஸ்ரேலிய குற்றவாளி இலங்கையில் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ஹின்ட் ராஜாப் பவுண்டேசன் என்கின்ற அமைப்பு அறிவித்துள்ளது. பாலஸ்தீன குடிமகனின் கொலையில் குற்றவாளியாகக் கருதப்படும் இஸ்ரேலிய சிப்பாய் கால் பெரென்பு என்பவர் கொழும்பிலுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நபரைக் கைதுசெய்யுமாறும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஒத்துழைக்குமாறும் ஹின்ட் ராஜாப் பவுண்டேசன் இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த விடயத்தில் இலங்கை அரசு எதிர்வினையாற்றினாலோ அல்லது எதிர்வினையாற்றமாலிருந்தாலே இது ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கும். சம்பந்தப்பட்டவரை இலங்கை அரசு கைது செய்யாவிட்டால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்குச் செய்கின்ற ஒரு துரோகமாக அது அமையும். குறிப்பாக தென்னாபிரிக்காவின் முயற்சியினாலேயே சர்வதேச குற்றிவியல் நீதிமன்றம் இஸ்ரேலியப் பிரதமர் மற்றும் இராணுவ அதிகாரிகள், வீரர்களுக்கு எதிராக இனப்படுகொலைக்குற்றச்சாட்டை கொண்டு வந்து அதில் வெற்றியும் கண்டது. அதற்கு இலங்கை தன்னுடைய பக்கத்தில் ஆதரவு வழங்க வேண்டிய கடமைப்பாட்டை உடையது.

ஆனால் சம்பந்தப்பட்ட இஸ்ரேலிய போர்க் குற்றவாளி கைது செய்யப்பட்டால், இஸ்ரேலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் இலங்கையில் ஜனாதிபதி அனுரா தலைமையிலான ஆட்சிக்கு ஆப்பு வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதற்கு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போன்றவர்கள் அரசியல் ரீதியில் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஜனாதிபதி அனுராவுக்கு கொலை அச்சுறுத்தலும் உருவாகலாம். அதனால் இவ்விடயம் தொடர்பில் மிக அவதானமாக இலங்கை அரசு செயற்பட வேண்டும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கால் பெரென்புக் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கவச வாகனம் ஒன்றின் திரையினூடாக சிதைவடைந்து இறந்திருந்த பாலஸ்தீன குடிமகன் ஒருவரின் உடலத்தைப் பார்க்கின்றார். இன்னொரு நபருடன் அராபிய மொழியில் சிரித்து கேலி செய்கின்றார். அவர்களது உரையாடலில் சிதைவடைந்த உடலை போர் வெற்றியின் அடையாளமாக கையாளுவது தெரிகின்றது.

 

காணொலியின் அடிப்படையில், காஸா பகுதியில் கால் பெரென்பு இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை, மனிதாபிமான சட்டங்களை மீறிய செயல்களில் அவர் நேரடியாக ஈடுபட்டிருந்தமை, யுத்த விதிமீறிய கொலையில் ஈடுபட்டமை மற்றும் இறந்தவரின் மதிப்பை தாழ்த்திய சம்பவங்கள் வெளிப்படையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

 

பிடிக்கப்போன பிள்ளையாரை குரங்காக்கிய ஊசி அர்ச்சுனா!

பிடிக்கப்போன பிள்ளையாரை குரங்காக்கிய ஊசி அர்ச்சுனா!

சமீப வாரங்களாக கொழுந்துவிட்டெரியும் யாழ்ப்பாண வைத்திய சாலையில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 170 மருத்துவ ஊழியர்களின் பணி நியமனப் பிரச்சினையை கையிலெடுத்துள்ள எம்பி அர்ச்சுனா நேற்றைய தினம் பாராளுமன்றதில் இவ்விடயத்தை சொதப்பினார். மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு என்று நேர ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்ட அர்ச்சுனா எடுத்துக் கொண்ட விடயத்தலைப்பிற்கு அப்பால் போய் தனிமனித தாக்குதல்களில் ஈடுபட்டு சபையின் நேரத்தை வீணடித்தார்.

எம்பி அர்ச்சுனா கொண்டு வந்த விடயத்தின் கனதியின் பொறுப்பையுணர்ந்து செயற்படவில்லை என மக்கள் விசனமடைந்துள்ளனர். நேற்றைய தினம் எம்பி அர்ச்சுனா பாராளுமன்றத்தில் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மற்றும் தொண்டர் அடிப்படையில் வேலை செய்கின்ற பணியாளர்கள் பல சிரமங்களையும் துன்பங்களையும் எதிர்கொள்வதாக தன்னிடம் பலர் முறையிட்டு அவற்றுக்கு தீர்வு பெற்றுத் தரும்படி கேட்டுள்ளதாகவும், இவ் விடயங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக ஊசி அர்ச்சுனாவுக்கு முன்னதாகவே சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராஜா அந்த ஊழியர்களை கொழும்பிற்கு அழைத்துச் சென்று, சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன், அவர்கள் தங்கள் முறைப்பாட்டை சொல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தொடங்கிய விடயத்தை விட்டு விலகி யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம், பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் குறிப்பாக டக்ளஸ் தேவாநந்தா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா என ஒவ்வொருவர் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை வைத்து கூச்சலிட்டார். இக் கூச்சல்களின் நடுவே எதிர்கட்சியினரைப் பார்த்து கடுமையாக விமர்சித்தார். நீங்கள் டக்ளஸ் தேவாநந்தாவை வைத்து தமிழ் மக்களை கொன்று போட்டீர்கள் என்றும் எதிர்கட்சித் தலைவர் O/L பரீட்சையில் சித்தியடையவில்லை எனவும் ஆதாரங்களை கொண்டு வராமல் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தார். இதே டக்ளஸ் தேவானந்தாவை தனது தந்தை என்றும் சில மாதங்களுக்கு முன் துதி பாடியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

மேலும் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தன்மீது மக்களுக்காக குரல் கொடுத்ததற்காக 19 வழக்குகள் போடப்பட்டுள்ளாதாகவும், பாராளுமன்றத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தான் தாக்கப்பட்டதாகவும் முறையிட்டார். தன்னுடைய பாதுகாப்புத் தொடர்பில் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே சபாநாயகர் அடிக்கடி குறுக்கிட்டு அர்ச்சுனாவை சமர்ப்பித்த விடயம் தொடர்பில் பேசும்படி எச்சரித்தார். அதை எதையும் காதில் வாங்காது அர்ச்சுனா தான் விடயத்திற்குள் நின்று கொண்டு தான் பேசுகிறேன் என்று கோபமாக கத்திக் கொண்டு “என்னுடைய கருத்துக்களை சபையில் முன்வைக்க எனக்கு சரியான வாய்ப்புக்கள் வழங்க முடியாவிட்டால், நான் சபைக்கு வராது வீட்டில் இருக்கிறேன்” என முரண்பட்டுக் கொண்டார். அத்தோடு நிற்காமல் எதிர்க்கட்சித் தலைவரை அவதூறாக பேச முற்பட்டார். அப்போது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அர்ச்சுனா கிண்ணியாவில் சஜித் பிரேமதாசா தலைமையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்தை ஞாபகப்படுத்தியோடு, “அது யாருடைய அரசியல் மேடை?” என சிலேடையாக கேட்க அனைவரும் நளினத்தோடு சிரிக்க ஆரம்பிக்க அர்ச்சுனா தனது குறளி வித்தையை நிறுத்தினார்.

பிந்திய செய்திகளின்படி சபாநாயகர் எம்பி அர்ச்சுனா சபைக்கு முரணாக வரம்பு மீறி உளறியவையை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படியே ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் எம்பி அர்ச்சுனா சபையின் கவனத்தை திசை திருப்பி சர்ச்சைகளில் ஈடுபட்டுக் கொண்டு வந்தால் அர்ச்சுனாவை தெரிவு செய்த மக்களுடைய பிரச்சினைகள் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படாது. பாராளுமன்றம் மக்களுக்கான பிரச்சினைகளை பேசி மற்றும் விவாதித்து தீர்வு காணுமிடம். ஊசி அர்ச்சுனா மாறாக தனது தனிப்பட்ட பகை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமான தனி மனிதர்களுக்கிடையான பிணக்குகளை பேசும் இடமாக மாற்றி வருகின்றார்.

இப்படியிருக்க யாழ்ப்பாண வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி நேற்றைய தினமான டிசம்பர் 18 அர்ச்சுனா மீது 100 கோடி நட்ட ஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வாறு 100 கோடி கிடைக்கும் போது அதனை யாழ்ப்பாண வைத்தியசாலை அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என முகநூலினூடாக அறிவித்துள்ளார்.

பொதுவாக இலங்கையில் உள்ள தமிழ் மருத்துவர்களுக்கு ஒரு உயர்வுச் சிக்கல் மனோநிலையுண்டு. தாங்கள் ‘டொக்டர்ஸ்’ என்பதால் தங்களுக்கு அறிவுப் புலமை அதிகம் எனத் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் உரையாடல்களில் நடவடிக்கைகளில் அடிமுட்டாள் தனமாகவும் சகிக்க முடியாத அளவுக்கு மோசமான கருத்தியல் நிலைப்பாடுடையவர்களாகவும் உள்ளனர். தங்களை ‘சேர்’ என அழைக்க மற்றவர்களை வற்புறுத்துவது, நான் ‘டொக்டர்’ நான் டொக்டர் என தங்களுக்கு தாங்களே அழைத்துக்கொள்வது போன்ற தாழ்வுச் சிக்கல்களும் இவர்களிடம் உண்டு. நிறைகுடம் தழும்பாது என்பார்கள். இந்த வெற்றுக் குடங்களின் குடைச்சல் தாங்க முடியிதில்லை என்கிறார் ‘சும்மா’ டொக்டர் பொன்னம்பலம்.

சமஷ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் – சரத் வீரசேகர

இந்தியாவின் விருப்பத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக் கூடாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின்போது மாகாணசபைத் தேர்தல்களை அடுத்த வருட நடுப்பகுதியில் நடத்துவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியமா, அவசியமற்றதா என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆகவே இந்தியாவின் விருப்பத்துக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முறையற்றது.

மாகாண சபைத் தேர்தல் குறித்து மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கமும், இந்தியாவும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டுக்கும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த பணிகளை நிறைவு செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே நல்லாட்சி அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. சமஷ்டியாட்சி முறைமை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அம்சங்களை இல்லாதொழிக்கும்.

ஆகவே எக்காரணிகளுக்காகவும் சமஷ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் சரத் வீரசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்திட்டங்களை மீறி சட்டமாணி பரீட்சை எழுதிய நாமல் ராஜபக்ஷ !

தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்திட்டங்களை முழுமையாக மீறி தனி அறையில் இருந்து சட்டமாணி பரீட்சை எழுதிய நாமல் ராஜபக்ஷ பல்கலைக்கழகங்களில் கடினமாக படித்து பட்டம் பெற்றவர்களின் கல்வித் தகைமையை கேள்விக்குள்ளாக்குகிறார்.
முறையான விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாடசாலை மாணவர்களின் கல்வி தொடர்பான குறை நிரப்பு பிரேரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகைமை பற்றி பேசப்படுவது சிறந்ததொரு மாற்றமாகும். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கல்வித் தகைமை பற்றி ஏன் பேசப்படுவதில்லை என்று பலர் கேள்வியெழுப்புகிறார்கள்.
நாமல் ராஜபக்ஷவுடன் சட்டக்கல்லூரியில் கல்வி கற்றவர் வெளிநாட்டில் இருந்து இவ்விடயம் குறித்து பேசியுள்ளார். நாமல் ராஜபக்ஷ இந்தியாவில் பெற்றுக் கொள்ள ஏதேனுமொரு கல்விச் சான்றிதழை பயன்படுத்தியே சட்டக்கல்லூரிக்கு தேர்வாகியுள்ளார். நாமல் ராஜபக்ஷ பிரத்தியேக அறையில் இருந்து 2010 ஆம் ஆண்டு சட்டமாணி இறுதி பரீட்சையை எழுதியதாகவும் அவருக்கு வினாத்தாள் முன்கூட்டியதாகவும் சுவிஸ்லாந்தில் அரசியல் அடைக்கலம் பெற்றுள்ள துசார என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ முறையற்ற வகையில் பரீட்சைக்கு தோற்றியமை தொடர்பில் துசார என்ற நபர் முறைப்பாடளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏனெனில் நாமல் ராஜபக்ஷவின் தந்தை அப்போதைய ஜனாதிபதி. இதன் பின்னர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டத்தின் பின் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் உயர் பீடம் நாமல் ராஜபக்ஷவின் முதல் பட்டத்தை கேள்விக்குள்ளாக்கி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இதுவே வரலாறு தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்தை முழுமையாக மீறியே நாமல் ராஜபக்ஷ சட்டமாணி பரீட்சை எழுதினார். முறையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகத்தில் கடினமாக படித்து பட்டம் பெற்றவர்களை இவர் இன்று கேள்வியெழுப்புகிறார் என்றார்.

சர்ச்சைக்குரிய யூரியூப்பர் சவுக்கு சங்கர் மீண்டும் சிறையில்!

சர்ச்சைக்குரிய யூரியூப்பர் சவுக்கு சங்கர் மீண்டும் சிறையில்!

குண்டர் சட்டத்தின் கீழ் காரில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே இவ்வருடத் தொடக்கத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் சவுக்கின் தாயார் இந்தியாவின் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் குண்டர் சட்டத்தை இரத்து செய்ய சவுக்கு சங்கர் விடுதலையானார். இவ்வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. வழக்கு விசாரணைக்கு சமூகம் தராமையால் பிடிவிறாந்து வழங்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சவுக்கு சங்கர் கைது செய்ப்பட்டுள்ளார். பெண் பொலிஸ் காவலர்களை அவதூறாக பேட்டியளித்தும் சவுக்கு சங்கர் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அதற்காக அவர் சிறையிலிருந்த சமயம் பெண் பொலிஸ் காவலர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகி இருந்தது. அது தொடர்பில் சவுக்கு தான் சிறையில் தாக்கப்பட்டதாக ஊடகங்கள் முன் கூப்பாடு போட்டமையும் குறிப்பிடத்தக்கது.