12

12

சமூக ஊடகங்களில் கசிந்த கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள் – ரத்து செய்யப்பட்ட வினாத்தாள்!

தற்போது நடைபெற்று வரும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை (12) அறிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை (10) விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக நம்பப்படுவதால் வினாத்தாளை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் வினாத்தாள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

 

உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்திற்கான இரண்டாம் பகுதிக்குரிய புதிய வினாத்தாள் நடத்தப்படும் திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பின்னர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதும் தமிழக அரசிடம் ஆயுதம் நான் கேட்கிறேன் – சென்னையில் இரா.சாணக்கியன்

முன்னரான காலப்பகுதியில் ஈழத் தமிழர்கள் தமிழக அரசிடம் ஆயுதங்களைக் கோரியதாகவும் அதற்கு தமிழக அரசு உதவியதாகவும், இப்போதும் தமிழக அரசிடம் ஆயுதம் நான் கேட்கிறேன், அந்த ஆயுதம் பொருளாதார ஆதரவே, என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சென்னையில் நேற்றையதினம் (11) ஆரம்பமான 2024ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர் தினத்தின் முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது தமிழக மாநில அரசு செய்த உதவிக்கு சாணக்கியன் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், நெருக்கடியான நேரத்தில் தமிழக அரசு நிவாரணப் பொருட்களை அனுப்பியது, பெருமையான தருணம், ஏனெனில் நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்குமட்டுமல்ல, அனைத்து இலங்கையர்களுக்கும் அனுப்பப்பட்டது என்று சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேவேளை, 1980 களில், ஈழத் தமிழர்கள் தமிழக அரசிடம் ஆயுதங்களைக் கோரியதாகம் அதற்கான உதவிகளை தமிழக அரசு வழங்கியது இப்போது தமிழக அரசிடம் நான் ஆயுதம் கேட்கிறேன், பொருளாதார ஆதரவே, அந்த ஆயுதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக தமிழ்நாட்டு அரசிடம் கேட்கும் ஆயுதமே இந்த பொருளாதார வளர்ச்சி. இந்த பொருளாதார வளர்ச்சியை வைத்து ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான சிறந்த எதிர்க்காலத்தை அமைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொடுங்கோல் ஆட்சியை முறையடிக்கின்ற அகிம்சை போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் – அடைக்கலநாதன் கோரிக்கை!

இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சியை முறையடிக்கின்ற அகிம்சை போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழத்தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என நம்புவதாகவும் மேலும் சிறப்பு முகாம்களிலுள்ள இலங்கை தமிழரை தமிழக அரசு விடுவிக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அகதிகளாக தமிழ்நாட்டை சென்றடைந்த இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள உதவிகள் தொடர்பிலும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

இணையவழி கடன் மோசடிகளுக்கு எதிராக புதிய அதிகாரங்களுடன் கூடிய புதிய சட்டங்கள் – இலங்கை நதி இராஜாங்க அமைச்சர் !

இணையவழி கடன் மோசடிகளுக்கு எதிராக புதிய அதிகாரங்களுடன் கூடிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை நிகர நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை சட்டமூலம் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், ஆனால் இணையவழி கடன் கடத்தல் போன்ற விடயங்களை சட்டமூலத்தில் முழுமையாக உள்ளடக்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

இணையவழி கடன் பரிமுதல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இது ஒரு பாரிய ஆபத்தான நிலை என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

“பணத்தை தங்கள் பாக்கெட்டுகளில் போடுவதற்காக வரி விலக்கு அளிக்கும் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.” -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பணம் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“பணத்தை தங்கள் பாக்கெட்டுகளில் போடுவதற்காக வரி விலக்கு அளிக்கும் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரத்தினக்கல் தொழிற்துறையை பாரியளவில் முன்னேற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம்.

 

ஏனைய நாடுகளிடம் எப்போதும் உதவி கேட்க முடியாது. நமக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும். அதற்கு நாட்டின் பொருளாதாரம் தயார் படுத்தப்பட வேண்டும்.வாக்குறுதிகளை அளித்து இவற்றைச் செய்ய முடியாது.

 

அந்நியச் செலாவணியை ஈட்டும் புதிய பொருளாதாரம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். அது ஏற்றுமதி பொருளாதாரமாக இருக்க வேண்டும். மேலும், சுற்றுலாத்துறை மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது.

நாம் ஒரு நாடாக முன்னேறுவதாக இருந்தால், நமது முயற்சியின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும்.

யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியும். ஆனால் பெறுபேறுகள் கிடைக்க வேண்டும்.

நாம் அனைவரும் நாட்டின் உண்மையான நிலைமையை புரிந்து கொண்டு முன்னேறினால் 02 வருடங்களின் பின்னர் இந்நிலையிலிருந்து விடுபட முடியும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் சுமார் 25,000 பேர் வரை வருமான வரி இலக்கத்திற்கு பதிவு செய்கிறார்கள் !

நாளாந்தம் சுமார் 25,000 பேர் டின் இலக்கத்திற்காக பதிவு செய்கிறார்கள் என உள்நாட்டு வருவாய்த் துறை பணியாளர்கள் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜே.டி.சந்தனா தெரிவித்துள்ளார்.

இதேவேளை TIN இலக்கத்தை கட்டாயமாக்குவதற்கான கால அவகாசத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிதார்

 

முன்னதாக பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் TIN இலக்கத்தை பெற்றுக் கொள்வது கட்டாயம் என நிதி அமைச்சு அறிவித்திருந்தது.

 

இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் TIN இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்திய நடவடிக்கை – 863 சந்தேக நபர்கள் கைது !

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 863 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறு கைதானவர்களில் 24 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் போதைக்கு அடிமையான 19 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

 

இந்த நடவடிக்கையின் போது 303 கிராம் ஹெராயின் போதைபொருள், 141 கிராம் ஐஸ் போதைப்பொருள், 10 கிலோ கஞ்சா, 66, 0573 கஞ்சா செடிகள், 4 கஞ்சா சுருட்டுகள் , 29 கிராம் தூல் போதைப்பொருள், 1250 போதை மாத்திரைகள், 135 கிராம் மதன மோதக குளிசைகள், ஒரு கிராம் குஷ் போதைபொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன .

 

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 39 பேர் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆண், பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்த புதிய சட்டம் –

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்தார்.

 

ஆண், பெண் சமத்துவத்தை (Gender Equality Bill) ஆண், பெண் சமத்துவ சட்டமூலத்தின் வாயிலாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

 

நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த வகையில் தற்போது மாணவர் ஒருவருக்காக ஒதுக்கப்படும் தொகையை 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 

இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 

அதற்கமையவே நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாகவும், தோட்ட பாடசாலைகள் தவிர்ந்த பாலர் பாடசாலைகளில் மட்டும் 120,000 மாணவர்கள் இருப்பதாகவும் தோட்ட பாலர் பாடசாலைகளிலிருக்கும் 35,000 மாணவர்களும் உள்ளடங்களாக 155,000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார்.

 

அதேபோல் கர்பிணித் தாய்மாருக்கான போசாக்குப் பொதிகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக 220,214 கர்பிணித் தாய்மாருக்கு 4,500 பெறுமதியான போசாக்கு பொதிகளை 10 மாதங்களுக்கு வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் பாலர் பாடசாலை ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கபடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் பாலர் பருவகால மேம்பாடு தொடர்பிலான தேசிய செயலாளர் அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் 18,333 பாலர் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பாலர் பாடசாலைகளை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் 2500 ரூபாயினை வழங்கவும், அது போதுமான தொகை இல்லை என்பதால் அதனை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் அமைச்சினால் மகளிர் மற்றும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு 03 புதிய சட்டங்களை கொண்டுவரவிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அதற்கமைய, ஆண், பெண் சமத்துவ சட்டம். (Gender Equality Bill) ஊடாக ஆண், பெண் சமத்துவத்தை பாதுகாக்கவும், LGBTIQ ஊடாக ஆண், பெண் சமூக சமத்துவத்தை நிலைப்படுத்தும் சபையொன்றை நிறுவி அதன் கீழ் சமூக சமத்துவ மத்தியஸ்த அதிகாரிகளின் (Gender Focal Point) என்ற அரச நிறுவனத்திற்கான ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அதேபோல் பெண்கள் வௌிநாடு செல்லும் போது குழந்தையின் வயது குறைந்தபட்சம் 5 ஆக கருத்தில் கொள்ளப்படும் என்றும், 05 வயதுக்கு குறைவான குழந்தைகளிருக்கும் எத்தனை தாய்மார் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலக மட்டத்தில் தேடியறிவிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அதேபோல் மாகாண ஆளுநர்கள், போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் அறிவித்து மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் (CCTV) பொருத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அதேபோல் பொது போக்குவரத்து சேவைகளுக்குள் பெண்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிகளை ஓரளவு தடுக்கும் எதிர்பார்ப்புடனேயே கெமராக்களை பொருத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்காக பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் கெமராக்களை பொருத்த வேண்டியது அவசியம் என்ற நிபந்தனையுடன் அனுமதி பத்திரங்கைளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.