February

February

மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை தமிழர்களை நாடு கடத்தியது சீனா !

கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் இருவரும் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த வெற்று கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்த இவர்கள் இருவரும் மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

 

கடந்த வருடம் ஜனவரி 30 ஆம் திகதி மலேஷியா செல்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “மெர்க்ஸ் யூனிகார்ன்” என்ற கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனுக்குள் குறித்த இருவரும் இரகசியமாக நுழைந்துள்ளனர்.

 

ஆனால் குறித்த கப்பல் மலேஷியாவை சென்றடைந்தபோது, அந்த கொள்கலனில் பதுங்கியிருந்த இரு சந்தேக நபர்களையும் ஏற்றுக்கொள்ள மலேஷியா மறுத்த நிலையில் சந்தேக நபர்களுடன் குறித்த கப்பல் சீனாவை சென்றடைந்தபோது சீன அதிகாரிகள் இவர்களை் இருவரையும் கைது செய்தனர்.

 

26 வயதான மதி ராஜேந்திரன் மற்றும் 39 வயதான ஜெயக்குமார் தர்மராசா ஆகிய இரு இலங்கையர்களே நாடு கடத்தப்பட்டவர்களாவர்.

கஞ்சா பாவித்த பொலிஸ் அதிகாரிக்கு 1 இலட்சம் ரூபா பெறுமதியான தனிப்பட்ட பிணை!

புத்தளம் பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கடந்த 23 ஆம் திகதி புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி இடைநிறுத்தம் செய்தார்.

 

கல்பிட்டி – அந்தாங்கண்ணி பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

 

கடந்த 22 ஆம் திகதி மாலை ஏத்தாலை – ஆங்குடா பிரதேசத்தில் இரகசிய இடத்தில் சிலர் கஞ்சா குடிப்பதாக நுரச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

 

அந்த தகவலின் பிரகாரம் 7 சந்தேகநபர்கள் நுரச்சோலை பொலிஸ் அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அவரிடம் சோதனை நடத்திய அதிகாரிகள் 1,200 மில்லி கிராம் கஞ்சாவை கண்டுபிடித்தனர்.

 

பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 7 சந்தேக நபர்களும் 23 ஆம் திகதி மாலை கல்பிட்டி பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

இதனை அடுத்து சந்தேகநபர்கள் 1 இலட்சம் ரூபா பெறுமதியான தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஒரே ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு!

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின் துண்டிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

 

பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழு நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய போது இவ்விடயம் தெரியவந்துள்ளது.

 

கடந்த வருடம் 10,69,000 மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக தலைவர் வலேபொட தெரிவித்தார்.

 

இணைப்பு துண்டிக்கப்பட்ட நுகர்வோருக்கு, மறு இணைப்பு கட்டணத்தை 50 சதவீதம் குறைத்து, நிலுவையில் உள்ள பில் தொகையை தவணையாக செலுத்த அனுமதிக்குமாறு, அந்தந்த அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.

 

மேலும் கடன் அடிப்படையில் புதிய இணைப்புகளை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவும், மின் கட்டணத்துடன் முழு இணைப்புக் கட்டணத்தையும் தவணை முறையில் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), இலங்கை மின்சார சபை (CEB), நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

40,000-இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சி!

நாடளாவிய ரீதியில் 40,000-இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

 

சுகாதார ஊழியர்கள், நிறைவுகாண் வைத்திய ஊழியர்கள், தாதியர்கள் என சில தரப்பினர் தாம் வசிக்கும் பகுதிகளில் வைத்தியர்களை போன்று செயற்பட்டு சிகிச்சைகளை வழங்குகின்றமையை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

நாட்டின் சுகாதார கட்டமைப்புக்குள் நோயாளர்களுக்கான மருந்துகளை வழங்குவதற்கு துறைசார் அறிவு, பொறுப்பு மற்றும் அதிகாரம் என்பன வைத்தியர்களுக்கு மாத்திரமே காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

 

ஏனைய எந்தவொரு தரப்பினருக்கும் அதற்கான அதிகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களின் வெளிநாட்டு மோகம் – கனடாவுக்கு அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணத்தில் ஏழு கோடி ரூபாய் மோசடி !

கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே இந்த தகவல் வெளிவந்துள்ளது.

 

இது குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கனடாவுக்கு அனுப்புவதாக ஆசை காட்டி யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பண மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டை முன்னேற்ற இரவு நேரப் பொருளாதாரத்திற்கு நாம் மாற வேண்டும் – இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

 

அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இவ்வாறு தெரிவித்தார்.

 

இரவுப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே,

“ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் இரவு நேரங்களில் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இரவில் உணவகங்களைத் திறந்து வைப்பது உள்ளிட்ட இரவு நேரப் பொருளாதாரத்தை நாடுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% அதிகரிக்க முடியும். உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரத்தின் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்கின்றன.

 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, நம் நாட்டு மக்களும் இரவு நேரங்களில் உணவகங்களுக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபடுவதையே விரும்புவது வழக்கம். இதன்மூலம் விசேடமாக மதுவரி வருமானத்தையும் அதிகரிக்க அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கிறது. ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும், நாட்டின் நிலையான வளர்ச்சியைப் பேணுவதற்கும், அரச வருமானத்தை அதிகரிப்பது அவசியம்.

 

இரவு நேரப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஆனால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும், கொழும்பு போன்ற நகர்ப்புறப் பகுதிகளிலும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. எனவே, இதுபோன்ற இடங்கள் தொடர்பான சட்ட, விதிமுறைகளை திருத்தம் செய்து, தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

 

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் இந்த நாட்டிற்கு வந்து பொழுதுபோக்கக்கூடிய வகையில் தற்போதுள்ள சில கட்டுப்பாடுகள் திருத்தப்பட வேண்டும். உதாரணமாக, உணவகங்கள் திறக்கும் நேரத்தை மாற்ற வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியான ஒரு நெகிழ்வான கொள்கைக்கு நாம் செல்ல வேண்டும்.” என்று இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

இலங்கை சிறைச்சாலைகளில் 65 வீதமான போதைப்பொருள் குற்றவாளிகள் – 1500 சிறுவர்களும் உள்ளடக்கம்!

சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது சிறைச்சாலை ஆணையாளர் திரு.ஜகத் சந்தன வீரசிங்க இதனை தெரிவித்தார்.

 

இதேவேளை போதைப்பொருள் குற்றங்களுக்காக 1000 முதல் 1500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலையில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கி இறந்த பல்கலைக்கழக மாணவன் தொடர்பில் வெளியாகியுள்ள பகீர் தகவல் !

யாழ்ப்பாணம், நீர்வேலியில் நேற்று (21) விபத்தில் சிக்கி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவன், வீடொன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பியபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் (22) என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து, விபத்தில் சிக்கியவர் என்பது தெரியவந்தது.

இதேவேளை வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்டியில் உள்ள வீடொன்றில் தாக்குதல் முயற்சி நடந்தது.இது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது, குறித்த வீட்டிற்குள் நுழைந்து துடுப்பு மட்டையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி, வானுக்கு தீ வைத்து விட்டு திரும்பி வரும் போதே பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனும் காயமடைந்தவரும் இணைந்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு விட்டு திரும்பி வரும் போது நீர்வேலியில் விபத்தில் சிக்கினர்.

விபத்தை தொடர்ந்து, நண்பரொருவருக்கு அறிவித்து அவர் மூலம் சம்பவத்தை மறைக்க அந்த இடத்தை சுத்தம் செய்து, தடயங்களை அழிக்க முற்பட்டதுடன், காயமடைந்தவரை நோயாளர் காவு வண்டியில் ஏற்றியனுப்பியுள்ளனர்.

 

அத்துடன், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றையவர், மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்து விட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து தடயத்தை அழிக்க முற்பட்டவரையும் வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இருவரிடமும் அச்சுவேலி மற்றும் வல்வெட்டித்துறை காவல்துறையினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் தொடர்பான தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் குறித்த தாக்குதல் தொடர்பில் வேறு காரணங்களும் வெளியாகியுள்ளன.

எனினும், அதற்கு வாய்ப்பில்லையென்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான வீட்டு உரிமையாளர், யாழ்ப்பாணம்- கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளார். வீட்டு உரிமையாளர் கிளிநொச்சியில் காணியொன்று கொள்வனவு செய்த போது, வெளிநாட்டிலுள்ள ஒருவருடன் தகராறு எழுந்தது. காணி உரிமையாளரின் உறவினரான வெளிநாட்டு வாசி, உடுப்பிட்டியிலுள்ளவருக்கு தெலைபேசியில் கொலை மிரட்டல்களும் விடுத்திருந்தார். இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் கொழும்பில் பொலிஸ் முறைப்பாடும் செய்திருந்தார்.

இந்த பின்னணியிலேயே, அவரது வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது.

காயமடைந்து சிகிச்சை பெறுபவர் கூறிய தகவலின்படி, ஒரு தலை காதல் விவகாரத்துக்கான எந்த சூழலும் இல்லையென கருதப்படுவதால், வெளிநாட்டிலுள்ள ஒருவரால் கூலிப்படையாக அனுப்பப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின், புளொட்டின் கடைசித்தூண் சாய்ந்தது! நியாயங்களும் அநியாயங்களும் கலந்த போராளியின் வாழ்வு!!

நாற்பத்தைந்தாண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் பின்னான 15 ஆண்டுகளுமாக ஒரு மூன்று தலைமுறை இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட வரலாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுடைய வரலாறு. இப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, பல்வேறு சூழ்நிலைகளில் இருந்தும் உயிர் தப்பியவர்கள் தற்போது தங்களுடைய இயற்கையான முடிவை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளனர். அவர்களின் உடல்போல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று சாட்சியங்களும் எம் கண் முன்னே சாம்பலாகின்றது அல்லது மண்ணோடு மண்ணாகிப் போகின்றது. இவ்வாறு தனது இயற்கையான முடிவை இன்று சந்தித்தவர் ஆர் ஆர் எனப் பரவலாக அறியப்பட்ட ஆர் ராகவன் என்ற வேலாயுதம் நல்லநாதர். இவர் புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர். இக்கட்சியின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவருமான இவர், இக்கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு எல்லாமே ஆர் ஆர் தான். இவர் புளொட் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமாவார். இவர் தன்னுடைய அறுபதுகளில் உயிரிழந்துள்ளார்.

1980களில் தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியாகி தங்கள் வாக்கு வங்கி இடதுசாரிகள் பக்கம் சாய்ந்துவிடாமல் தடுக்க முன்வைக்கப்பட்ட தமிழீழம் என்ற கோசம், அன்று தமிழ் இளைஞர்களை ஐஸ் போதை மாத்திரைக்கு இணையாக உசுப்பேற்றியது. அவ்வாறு தனது பதின்ம வயதில் உசுப்பேற்றப்பட்ட பல்லாயிரம் இளைஞர்களில் ஆர் ஆர் உம் ஒருவர். ஆம் இவருடைய சொந்த ஊரான சுழிபுரம் மண் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கோட்டையாக இருந்தது. இந்த மண்ணின் வடக்கம்பரை பகுதியிலேயே 1976இல் தமிழீழக் கோரிக்கையை முன் வைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்து. அதனால் ஆர் ஆர் இன் தலைமுறையினர் ஆயதங்களை நோக்கித் தள்ளப்பட்டனர்.

சுழிபுரத்தில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் பொன்னாலையில் யாழ் மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவை தமிழ் தேசியம் தனது வாக்கு வங்கிக்கு இடைஞ்சல் எனக் கருதி போட்டுத்தள்ளியது. அதே சமயம் தெற்கில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நட்பு சக்தியாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள பெரும் தேசியவாதத்தை பரல் கணக்கில் நெய்யூற்றி தென்பகுதி எங்கும் எரியவிட்டது. முறுக்கேறிய இளைஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தாக்குதல்களை மேற்கொண்டனர். அவர்கள் தாக்குதல்கள் எதிரியைக் குறி வைத்ததிலும் பார்க்க தங்களுக்குள்ளேயே குத்து வெட்டு போட்டுத் தள்ளியும் உள்ளனர். அவ்வாறு முதற் சகோதரப் படுகொலையாகக் கருதப்படும் சுந்தரம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.

இதே சுழிபுரத்தில் பொதுவுடமைக் கருத்துக்களை வளர்த்தெடுத்தவர் கே ஏ சுப்பிரமணியம். எழுபதுகளின் பிற்பகுதிகளிலும் எண்பதுகளின் முற்பகுதியிலும் ஈழத்தமிழர் அரசியலில் சுழிபுரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய வாதக் கருத்துக்களும் இடதுசாரித்துவச் சிந்தனையும் ஒன்றையொன்று முரண்டுபிடித்த இடங்களில் சுழிபுரம் குறிப்பிடத்தக்கது. அதில் கே ஏ சுப்பிரமணியத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. மீரான் மாஸ்ரர் என்று அறியப்பட்ட இவருடைய மகனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த இரு முரண்பட்ட அரசியல் கருத்துநிலைகளால் உந்தப்பட்ட சிலர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வன்முறையற்ற வடிவமாகச் செயற்பட்ட காந்தியத்துடன் தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்களில் சுழிபுரத்தைச் சேர்ந்த சந்ததியார் மிகக் குறிப்பிடத்தக்கவர். அவரால் அரசியலுக்குள் ஈர்க்கப்பட்ட பலர் காந்தியத்துக்குள் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் பின்னர் புதிய தமிழ் புலிகள் பிளவுபட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் உருவாக்கப்பட்ட போது கழகத்தின் உறுப்பினர்கள் ஆயினர். இவ்வாறு சுழிபுரத்தில் அவருடைய பதின்ம வயதில் அரசியல் நடவடிக்கைகளால் தேடப்பட்ட ஆர் ஆர் 1981களில் திருகோணமலையில் இயங்கிய காந்தியப் பண்ணையில் மறைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

இலங்கை பாதுகாப்புப் படையினர் இஸ்ரேல் மோசாட் உளவுப் பிரிவின் ஆலோசணைப்படி தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தினர். 1981 இல் யாழ் பொதுநூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. யாழ் நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. குமுதினிப் படகுப் படுகொலை உட்படப் பல படுகொலைகள் இடம்பெற்றது. இளைஞர்கள் கண்மூடித்தனமாகக் கைது செய்யப்பட்டனர். யாழ் திருநல்வேலியில் 1983இல் இலங்கை இராணுவத்திற்கு எதிரான தாக்குதலும், அதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் நட்புசக்தியாக என்றும் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி தென்பகுதி எங்கும் தமிழ் மக்கள் மீதான இனவாதத் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. இவற்றின் எதிரொலியாக தமிழ் இளைஞர்கள் சாரை சாரையாக ஆயுத அமைப்புகளை நோக்கித் தள்ளப்பட்டனர்.

தனது பங்குக்கு இந்தியாவும் அமெரிக்க சார்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாடம் புகட்ட தமிழ் ஆயத அமைப்புகளுக்கு பயிற்சியும் ஆயதங்களும் வழங்கி அவர்களை வீங்கிப் பெருக்க வைத்தது. இயற்கையான முறையில் அரசியல் ரீதியாக படிப்படியாக வளராமல் ஆயதம் தாங்கிய அரசியலற்ற இயந்திரங்களாக ரோபோக்களாக போராளிகள் உருவாக்கப்பட்டனர். படுகொலைகளும் சகோதரப்படுகொலைகளும் சர்வசாதரணமானது. எல்லாப் போராளிகளும் தமிழ் மக்களது உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே தங்கள் உயிர்களை துச்சமென மதித்து ஆயதம் ஏந்தச் சென்றனர். அப்போது திருவடிநிலையில், மாதகலில் எந்த இயக்கத்தின் படகு அக்கரைக்குச் செல்ல காத்திருக்கின்றதோ அந்தப் படகில் ஏறினர். படகு தரையிறங்கும் போது தான் தெரியும் அவர்கள் எந்த இயக்கத்தில் சேர்கிறார்கள் என்பது. புளொட் படகில் ஏற வந்தவர் புலிகளின் படகில் ஏறி புலியான கதையும் மாறி நடந்த கதைகளும் ஏராளம்.

காந்தியப் பண்ணையில் திருகோணமலையைச் சேர்ந்த பார்த்தன் என்று அறியப்பட்ட ஜெயச்சந்திரனை நண்பராக்கிக் கொண்ட ஆர் ஆர் ஓரிரு ஆண்டுகள் திருகோணமலையிலேயே வாழ்ந்து 1983 இல் தமிழகத்துக்குச் சென்று ஆயதப்பயிற்சி எடுத்துள்ளார். தமிழ் இளைஞர்கள் ஆயத அமைப்புகைள நோக்கி ஓடிய போது அவ்வாறு ஓடியவர்களை கவர்ந்து இழுத்ததில் புளொட் வெற்றிகண்டது. வடக்கு கிழக்கின் கிராமங்கள் தோறும் புளொட் அமைப்பின் கட்டமைப்புகள் பெருமளவில் காணப்பட்டன. எண்ணிக்கையின் அடிப்படையில் புளொட் ஒரு பெரும் அமைப்பாக காணப்பட்டது. அதிலும் சுழிபுரம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கோட்டையாக இருந்து புளொட்டின் கோட்டையாக மாறியது. புளொட்டின் தலைவர் உமாமகேஸ்வரனின் விசுவாசிகள் பெரும்பாலும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் 1984இல் உமாமகேஸ்வரன் பின்தளமான இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது சுழிபுரத்திலேயே தங்கி இருந்தார். அக்காலகட்டத்தில் தாயகத்துக்கு வந்த முதல் போராட்டக் குழுவின் தலைவர் உமாமகேஸ்வரன் தான்.

சுழிபுரம் புளொட்டின் வளர்ச்சிக்கும் அதன் தலைமைக்கும் எவ்வளவு முக்கியமாக இருந்ததோ அதே அளவுக்கு அதன் வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தது. தங்கள் தலைவர் உமாமகேஸ்வரனை உளவுபார்க்க வந்துவிட்டார்கள் என்ற சந்தேகத்தில் நோட்டிஸ் ஒட்ட வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆறு பதின்மவயது இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மிகக் கோரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அரையும் குறையுமாக புதைக்கப்பட்டனர். ஈழத்தமிர்கள் பல்வேறு படுகொலைகளைச் சந்தித்த போதும் இவ்வாறு மோசமானதொரு படுகொலையை அவர்கள் தங்கள் இனத்துக்குள்ளேயே மேற்கொண்டது இன்றும் மாறாத வடுவாக உள்ளது. அந்த ஆறு இளைஞர்களும் கூட சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களைப் படுகொலை செய்த கந்தன் என்ற கந்தசாமியின் தலைமையில் இப்படுகொலையைச் செய்தவர்களும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்களே. ஏற்கனவே புளொட் அமைப்புக்குள் சந்ததியார் உட்பட உட்படுகொலைகள் தொடர்பான விடயங்கள் பூதாகரமாகி கழகம் பாரிய இருப்புச் சிக்கலை எதிர்நோக்கியிருந்த நிலையில் சுழிபுரம் படுகொலை மக்கள் மத்தியில் இருந்து கழகத்தை அந்நியப்பட வைத்தது.

தமிழீழ மக்கள் கழகத்தில் இருந்த அரசியல் தெளிவுடைய சக்திகள் படிப்படியாக தங்களை கழகத்திலிருந்து விடுவித்துக் கொண்டனர். பலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அதனால் பெரும்பாலும் அரசியல் தெளிவற்ற ஆயதங்களை மட்டுமே நம்பியவர்களின் கையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தள்ளப்பட்டது. இதற்கு கழகத்திலிருந்து வெளியேறியவர்களுக்கும் கணிசமான பொறுப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தொடர்ந்தும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைமை அரசியல் தெளிவற்ற ஆயதமேந்திய சுழிபுரம் ரோபோக்களிடமே இருந்தது. சுடு என்று நினைத்தாலேயே சுட்டுவிடுவார்கள்.

இதற்கிடையே தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய இயக்கங்களை ஒவ்வொன்றாக அழித்து 1986இல் தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவை முற்றாக அழித்த போது, தமிழீழம் என்ற கோரிக்கையே அர்த்தமற்றதாகியது. அன்றைய காலகட்டத்தில் இலங்கை இராணுவம் படுகொலை செய்த போராளிகளைக் காட்டிலும் தங்களுக்குள்ளேளே சகோதரப் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் அதிகம். 1987 இல் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்குள் நுழைய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வவுனியாவில் தளம் அமைத்து தனித்து செயற்பட ஆரம்பித்தது. கடத்தல், கொள்ளை, கப்பம், கொலை என்பன தாசன் என்று அறியப்பட்ட மாணிக்கதாசனால் மேற்கொள்ளப்பட்டது.

இக்காலப் பகுதிகளில் ஆர் ஆர், உமாமகேஸ்வரனின் தலைமையை பாதுகாக்கும் அனைத்தையும் மேற்கொண்டு வந்தவர். 1988இல் உமமாகேஸ்வரனின் மாலைதீவைக் கைப்பற்றும் திட்டத்திற்கு புலனாய்வை மேற்கொண்டவர் ஆர் ஆர் எனத் தெரியவருகின்றது. மேலும் இத்தாகுதல் திட்டத்திற்கு சென்றவர்களில் ஆர் ஆர் மிக முக்கியமானவர். அதனால் ஆர் ஆர் க்கு ஏனையவர்களைக் காட்டிலும் கூடுதல் தண்டணை வழங்கப்பட்டது.

மாலை தீவில் 5 ஆண்டுகால சிறைவாசம் ஆர் ஆர் ரை மிகவும் மாற்றியமைத்தது. எம் கே சுப்பிரமணியத்தின் குடும்பத்தினரோடு நெருக்கமாக இருந்த ஆர் ஆர் க்கு அவர்கள் தொடர்ச்சியாக நூல்களை அனுப்பி வந்துள்ளனர். சிறையில் நிறையவே வாசித்த ஆர் ஆர் வாசிப்பால் பூரணமடைந்த ஒரு மனிதராக மாறினார். ஆனால் 1993 இல் ஆர் ஆர் மாலை தீவிலிருந்து நாடு திரும்பிய பொழுது அவருடைய கழகத்தினதும் நாட்டினதும் நிலை முற்றிலுமாக மாறியிருந்தது.

ஆர் ஆர் போன்று தமிழ் இளைஞர்கள் வரிசையில் நின்று தங்கள் கைகளை பிளேட்டினால் கீறி தமிழ் தேசியத் தலைவர்களுக்கு நெற்றித் திலகம் இட்ட காலங்கள் மறைந்தது. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தமிழ் தேசியத் தலைவர்கள் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்குத் திரும்ப, இவர்களை நம்பி ஆயதம் ஏந்திய, அரசியலில் அரிச்சுவடி மட்டும் படித்த அல்லது அதுவும் படியாத இளைஞர்கள் ஆயதங்களை அத்தலைவர்கள் பக்கம் திருப்பினர். தங்கள் கைகளைக் கீறி இரத்த திலகம் இட்டவர்கள், 1989 யூலை 13 அத்தலைவர்களையே இரத்த வெள்ளத்தில் வீழ்த்தியது வரலாறு. அதற்கு அடுத்த சில தினங்களிலேயே ஆர் ஆர் இன் நேசத்துக்குரிய தலைவர் உமாமகேஸ்வரன் ஆர் ஆர் இன் சுழிபுரம் நண்பர்களாலேயே திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆர் ஆர் இன் இன்னும் சில நெருங்கிய நண்பர்கள் ஊரவர்கள் அதற்கு சில மாதங்கள் முன் முள்ளிக்குளத்தில் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டனர்.

இந்தப் பின்னணியில் மாலைதீவுச் சிறையில் இருந்து திரும்பிய ஆர் ஆர் தொடர்ந்தும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளரானார். 1999 செப்ரம்பர் 2இல் உள்வீட்டு சதியும் சேர்ந்து மாணிக்கதாசன் கொல்லப்பட்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மிக மோசமான படுகொலைகள் உட்பட பல கப்பம், கடத்தல், கொள்ளை எனப் பல்வேறு செயற்பாடுகளுக்குப் பின்னால் இருந்தவர் மாணிக்கதாசன். இவரது படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் ஐரோப்பாவரை நீடித்திருந்தது. இதுவரை இவ்விடயங்கள் தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இவ்விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை.

இதுவிடயமாக ஆர் ஆர் உடன் பேசப்பட்டபோது, “நீங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எதுவும் சொல்லலாம். எங்களுக்கு அரசியல் பாடம் எடுக்கிறீர்கள். இங்கு வந்து வாழ்ந்து பாருகங்கள். எங்கள் வாழ்வே ஒவ்வொரு நாளும் போராட்டமே” என்று பதிலளித்தார். தமிழ் மக்களிள் விடுதலைக்காக அன்று போராடச் சென்ற ஆர் ஆர் போன்ற குழந்தைப் போராளிகளின் வாழ்க்கையை எப்படி மதிப்பீடு செய்வது என்பது மிகக் கடினமானதும் சிக்கலானதுமாகும். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட ஏராளமான கோடிக்கணக்கான சொத்துக்கள் இன்னமும் அதன் தலைவர் சித்தார்த்தனின் குடும்பத்திடமும் மாணிக்கதாசனின் உறவினர்களிடமும் இருப்பதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகின்றது. ஆர் ஆர் இடம் இருந்த சொத்துக்களும் அவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதே கைமாற்றப்பட்டுவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆர் ஆர் தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு நல்ல மனிதராகவே பலராலும் கணிக்கப்படுகின்றார். தன்னுடைய பதின்ம வயதில் தன்னுயிரை துச்சமென மதித்து தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடச் சென்றவர்களை, அவர்களது போராட்டப் பயணத்தின் பின்னணியில் மதிப்பீடு செய்வதென்பது மிகக் கடினமானது. மாலைதீவில் இருந்து நிறைந்த வாசிப்போடு தாயகம் திரும்பிய ஆர் ஆர் இலங்கையில் ஐந்து ஆண்டுகள் சட்டக் கல்வியைக் கற்றுள்ளார். பலருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகளையும் செய்துள்ளார். உலகம் பூராகவும் உள்ள அவருடைய தோழர்கள் அவருக்கு தங்கள் அஞ்சலியைச் செலுத்துகின்றனர். நிறைந்த அநியாயங்களும், நியாயங்களும் கொண்ட போராட்டப் பயணத்தில் அநியாயத்திற்கும் நியாயத்திற்குமான இடைவெளி எமது போராட்டத்தில் மிகக் குறுகியதாக்கப்பட்டுவிட்டது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போராளிகளிடையே காணப்பட்டது. ஆதலால் ஆர் ஆர் இன் போராட்ட வாழ்வும் அதன் நியாயத்தன்மையும் எப்போதும் விவாதத்துக்குரியதாகவே இருக்கும்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைப் பொறுத்தவரை அந்த அமைப்பின் கடைசித்தூண் ஆர் ஆர் என்றால் மிகையல்ல. இப்போதைய தலைவர் சித்தார்த்தன் கூட கழகத்தின் உறுப்பினராக உமாவின் மறைவுக்குப் பின் தன்னை இணைத்துக்கொண்டவர். அவருக்கு கழகத்தையும் தெரியாது. போராட்டமும் தெரியாது. கழகத்தின் இருப்புக்கான தேவை இல்லாமல் போய் நீண்டகாலம் ஆகிவிட்டது. கழகம் காலாவதியாகி விட்டது. இனிக் கழகம் மெல்லக் கலையும். அதுவே அரசியல் யதார்த்தமாகும்.

 

காசாவில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல் – 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் பலி !

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து காசா சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று(21) கூறியதாவது, காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்தனா்.

அதையடுத்து, அந்தப் பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் குண்டுவீச்சில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 29,313ஆக அதிகரித்துள்ளது.

தாக்குதலில் இதுவரை 69,333க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.