03

03

ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரவலடையும் கத்தி குத்து கலாச்சாரம் – பாரிஸில் அதிகாலையில் நடந்த துயரம் !

பிரான்ஸின் பாரிஸில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை காலை நடந்த இந்த கத்திக்குத்து சம்பவத்தின் போது ஒருவர் வயிற்றில் பலத்த காயம் அடைந்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இத்தாலிய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்ததாகவும் மாலி நாட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பாரிஸில் பல இடங்களில் கத்திக்குத்து தாக்குதல்கள் நடந்துள்ளன. டிசம்பரில், ஈபிள் டவர் அருகே சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இருவர் காயமடைந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தலைநகர் கரே டு நோர்டில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.

இதேவேளை இங்கிலாந்தின் லண்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த கத்தி குத்து கலாச்சாரம் மேலோங்கியிருப்பதை அவதானிக்க முடிவதுடன் இந்த வருடம் 2024 ஜனவரி 8ஆம் திகதி ஞானேஸ்வரன் அனோஜன் என்ற தமிழ் இளைஞன் லண்டனில் ஸாரோபரி கில் புகையிரத நிலையத்தில் வைத்து கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு இன்று நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

 

இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரட்னாயக்கவுக்கு, சந்திப்பின் போதே ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

 

சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதம் மற்றும் மேலதிக தகவல்களை தருமாறும் ஜனாதிபதி சிறீதரன் எம்.பியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊழல் குற்றச்சாட்டில் கைதான கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (சனிக்கிழமை) மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.