14

14

இலங்கை பொருளாதார நெருக்கடியால் 263,000 குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மூடப்பட்டுள்ளன !

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில், 2018 ஆம் ஆண்டில் நாட்டில் இயங்கிய 263,000 குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் கோவிட் நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

2018 ஆம் ஆண்டில், 254,000 சிறு வணிகங்கள், 6,900 சிறிய அளவிலான வணிகங்கள் மற்றும் 1,800 நடுத்தர அளவிலான வணிகங்கள் மூடப்பட்டுள்ளன.

 

மூடப்பட்ட நிறுவனங்களில் 197,000 நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் 56,600 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த ஆண்டு (2023) மார்ச் முதல் ஜூன் வரை திணைக்களம் நடத்திய “இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களில் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வில்” இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

 

நாட்டில் விவசாயம் அல்லாத நடவடிக்கைகள் தொடர்பான 7,813 சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் மாதிரியைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இங்கு, குறுந்தொழில் துறையின் கீழ், முச்சக்கரவண்டி வேலை செய்பவர்கள், சிறிய சில்லறை விற்பனைக் கடைகள் நடத்துபவர்கள், ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப் பணியில் ஈடுபடுபவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கு, கடந்த 2018 ஆம் ஆண்டில் செயல்பட்ட, ஆனால் 2022 ஆம் ஆண்டிற்குள் செயல்படாமல் இருக்கும் வணிக இடங்கள் குறித்து கணக்கெடுப்பு கவனம் செலுத்தியுள்ளது. 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய வணிக இடங்கள் இந்தக் கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படவில்லை என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில், செயல்பாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் எண்ணிக்கை 13 லட்சமாக இருந்தது.

 

கடந்த 2020 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது ஒரு சதவீதமாக 33.4 சதவீதமாகும். 2019ல் 9.9 சதவீத நிறுவனங்கள், 2021ல் 27.4 சதவீத நிறுவனங்கள், 2022ல் 29.3 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

 

கடந்த 2018 ஆம் ஆண்டில், இந்த வணிக நிறுவனங்களில் 2.7 மில்லியன் ஊழியர்கள் பணிபுரிந்தனர், இந்த எண்ணிக்கை 2.5 மில்லியனாக குறைந்துள்ளது.

 

நிரந்தரமாக மூடப்பட்ட வணிகங்களில் 27,600 பெண்களால் நடத்தப்பட்டன. மேலும், தற்காலிகமாக மூடப்பட்ட வணிகங்களில் 11,700 பெண்களால் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரத்திற்கு அழுத்தம் – USAID

நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வௌியிடும் சுதந்திரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அந்த நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்து இலங்கை மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தம் காரணமாக சர்வதேச சமூக வலைத்தள நிறுவனங்கள் குற்றவியல் வழக்குகளுக்கு உட்படும் அபாய நிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் !

காலநிலை மாற்றம் மற்றும் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்  இடம்பெயரும் மிருகங்கள் பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும்  100 கோடி  விலங்குகள் பாலைவனங்கள், சமவெளிகள் அல்லது பெருங்கடல்கள் வழியாக இனப்பெருக்கம் மற்றும்  உணவுகளை தேடி  இடம்பெயர்வை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், இடம்பெயரும் உயிரினங்களின் மீது திணிக்கப்படும் நீடிக்க முடியாத அழுத்தங்கள் அவற்றின் எண்ணிக்கையை குறைவடைய செய்வதோடு, உணவு விநியோகத்தை சீர்குலைத்து வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் ,

1979 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயரும் விலங்குகளை பாதுகப்பதற்கான மாநாட்டில் 1,189 இனங்கள் இருப்பதாக பட்டியலிடப்பட்டது. அதில்  44 சதவீதம் குறைவடைந்துள்ளதோடு, 22  சதவீதம் முற்றிலும் அழிந்துவிடும்.

இந்த தரவினை  1970 முதல் 5,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை ஒருங்கிணைக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையின் நிலையைக் குறிக்கும் லிவிங் பிளானட் இன்டெக்ஸ் (எல்பிஐ)  வழங்கிய மதிப்பீடுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் பிற வகையான அதீத சுரண்டல் உள்ளிட்ட செயல்பாடுகளால், மனிதர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர், இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலில் உள்ள 70 சதவீதமான  உயிரினங்கள் பாதிப்படைகின்றன.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வறட்சி அல்லது காட்டுத் தீ போன்றவை வானிலையில் பாதிப்பை ஏற்படுத்திதுகிறது.இதன் காரணமாக  இடம்பெயர்வு காலத்தை சீர்குலைக்கிறது.

இதேவேளை , வாழ்விடங்கள் அழிந்து வருவதால் 75 சதவீதமான உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு இடையே அதிக இணைப்பு தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அணைகள், குழாய்கள் அல்லது காற்றாலைகள் போன்ற உள்கட்டமைப்பை நிறுவும் போது வாழ்விடங்கள் மற்றும் இடம்பெயர்வு பாதைகளை சீர்குலைப்பதைத் தவிர்க்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய உலகளாவிய உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் 30 சதவீதமான நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை இயற்கைக்காக ஒதுக்கி வைப்பதற்கான 2022 ஆம் ஆண்டு உறுதிமொழியை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை !

திருமணம் ஆகாத (35) வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்க வேண்டும். என நுவரெலியா மேல் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பினை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய நேற்று (13) செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

வழக்கு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கந்தப்பளை ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றிய லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர் கடமை நேரத்தில் 35 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக கடந்த 2019 ஆண்டு நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கின் சாட்சியங்கள் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்தரான லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர் நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு அவருக்கான தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதபதி விராஜ் வீரசூரிய நேற்று செவ்வாய்க்கிழமை (13) வழங்கினார்.

இதன்போது, மன்றில் ஆஜராகியிருந்த குற்றவாளியான லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்ற பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருட சிறை தண்டனையும்,தண்டப்பணம் 20 ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தேசிய கீதம் பாடப்படுகின்ற போது மாணவர்கள் அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்தவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தேசிய கீதம் பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் அதன் மீது அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்தவது அவசியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய தெரிவித்தார்.

யா / அச்சுவேலி புனித திரோச பெண்கள் கல்லூரியில் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடநூல் மற்றும் பாடசாலை சீருடைத் துணிகள் பகிர்ந்தளிக்கும் தேசிய நிகழ்வில் பிரதம விருந்தினராக இன்று புதன்கிழமை (14) கலந்து கொண்டு பிரதம அதிதியாக உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

பொதுவாக அரசியலோ , பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகளின் மனோநிலையிலிருந்து நான் முற்றிலும் வேறுபட்டவராகவே இருக்கின்றேன்.

இதேநேரம் எமது வடக்கு மாகாணத்தின் கல்வி செயற்பாடுகளின் மேம்பாட்டுக்கும் அதனை பாதுகாப்பதற்கும் கல்விசார் அதிகாரிகள் அதிகளவான ஊக்குவிப்புகளை வழங்கிவருகின்றனர்.

ஆனாலும் நான் அறிகின்ற வகையில் உயரதிகாரிகளின் இந்த முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகள் கிடைப்பதில்லை என தெரியவருகின்றது. இந்த நிலை இல்லாது போக வேண்டும். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் நான் கவனத்தில் எடுத்து கொள்வதுடன் வடக்கின் கல்வி தரத்தை மேலும் வலுப்படுத்த என்னாலான முழுமையான ஒத்துழைப்புகளையும் எந்த வேளையிலும் வழங்க தயாராகவே இருக்கின்றேன்.

மேலும் பன்மைத்துவம் சமத்துவம், சம உரிமை போன்றவை கடந்த காலங்களில் கொள்கையளவில் மாத்திரம் இருந்தமை தான் நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு காரணமாக இருந்தது , இனிவருங்காலத்தில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ளும் வகையில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

தொடரும் சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு – களமிறக்கப்பட்ட இராணுவ வீரர்கள்!

சுகாதார பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலும் 1100 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதன்படி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியசாலைகளின் 72 சுகாதார சங்கங்கள் நேற்று ) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்

மேலும் இரண்டாவது நாளாகவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டமையால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியதால் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனின் பணிப்புரையின் பேரில் இப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுழிபுரம் மத்தி கறுத்தனாந்தோட்டம்  துர்க்கை அம்மன் ஆலய நிர்வாக தெரிவில் குளறுபடி – முடிவுக்கு வந்தது உண்ணாவிரதம்!

ஆலய பிணக்கு ஒன்றினை அடுத்து, வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தம் (தம்பா) நீராகாரம் ஏதுமின்றி கடந்த திங்கட்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்  அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் தமிழ் சைவ பேரவையினரால் வழங்கபட்ட வாக்குறுதிக்கு அமைவாக உண்ணாவிரதம் இன்று காலை  நிறைவு செய்யப்பட்டுள்ளது.

சுழிபுரம் மத்தி கறுத்தனாந்தோட்டம்  துர்க்கை அம்மன் ஆலயத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்கினைத் தீர்த்து பொதுக்கூட்டத்தினை நடாத்துமாறு வலியுறுத்தி குறித்த ஆலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அவரது உடல் நிலையை மோசமடைந்த நிலையில் பல்வேறு தரப்பினரும்  பார்வையிட்டு கலந்துரையாடினர் . இருப்பினும் உரிய தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே  உண்ணாவிரதத்தை கைவிடுவார் என அவர் கூறினார்.

உண்ணாவிரதம் தொடர்பாக சச்சிதானந்தன் கூறுகையில்,

மேற்படி ஆலயத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அடுத்து வலி.மேற்கு பிரதேச செயலாளரிடம் முறையிட்டேன். 2023.12.07 ஆம் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் ஆலயத்தில் கூட்டம் ஒன்று நடைபெறும் என பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துண்டுப்பிரசுரம் ஒட்டினர். எனினும் பின்னர் ஆலயம் பதிவுசெய்யப்படவில்லை எனக் கூறி கூட்டம் நடத்தப்படவில்லை. பின்னர் பிரதேச செயலாளர் இரு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடினார்.முன்பும் பிரதேச செயலரது வாக்குறுதிக்கு அமைவாக உண்ணாவிரதத்தை கைவிட்டுச் பொதுகூட்டம் நடாத்தபடவில்லை எமது  பொது கூட்டம் கூட்டப்பட்டு நிர்வாகம் தெரிவு செய்யபடவேண்டும் இதுவே எனது வேண்டுகோள் எனவும்

ஆலயம் இந்து கலாசாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத காரணத்தால் இவ்விடயத்தில் தாம் தலையிட முடியாது எனக்கூறி இணக்கமன்றுக்கு செல்லுமாறு  வழிப்படுத்தினார். எனினும் எதிர்த்தரப்பு இணக்கமன்றுக்கு வருகைதராத காரணத்தால் தீர்வைக் காண முடியவில்லை. இதனாலேயே உண்ணாவிரதம் இருக்கின்றேன். – என்றார்.

இந்நிலையில் உண்ணாவிரதம் இருப்பவரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு இன்று காலை தமிழ் சைவப் பேரவையின் தலைவரும் ஓய்வு நிலை நீதிபதியுமான வசந்தசேனன் ,அகில இலங்கை சைவ மகா சபை பொது செயலர் பரா நந்தகுமார்,பொருளாளர அருள் சிவானந்தன்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஜெயந்தன், உமாபதி,கிரா அலுவலர்கள் ,பிரதேச வாசிகள் ஆலயத்திற்கு விரைந்து சைவ அமைப்புக்களாகிய நாம் பிரதேச செயலர் மாவட்ட செயலருடன் கலந்துரையாடி கூட்டமொன்றினை நடாத்த  நாம் ஏற்பாடு செய்து தருகின்றோம் என வாக்குறுதியளித்து கோவில் குருக்கள் மூலம் நீர் ஆகாரம் வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவுறுத்தினர்.

பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் !

பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டுச் சபையுடன் நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலின் போதே பிரித்தானிய நிறுவனங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளதாக உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வட்டமேசை கலந்துரையாடலின் போது இலங்கை மற்றும் பிரித்தானிய வர்த்தக சமூகத்திற்கிடையில் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், குறிப்பாக  கொழும்பு, துறைமுக நகரத்தில் செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.