March

March

“இலக்கியத்தின் பெயரில் இலக்கியமற்றோர்” – சேனன்

‘இலக்கியச் சந்திப்பு’ என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்து சிலர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் ஒரு சிறு குழு – இருப்பினும் ‘சக்தி வாய்ந்த குழு’. ஏனெனில் இவர்களில் பலர் இலங்கை அரச ஆதரவாளர்கள் – கொடூரங்கள் செய்த அதிகார சக்திகளின் நெருங்கிய நட்புகள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இலக்கியம் செய்வதில்லை. தனது சொந்த தேவைகளுக்காக இந்தச் சந்திப்பை பாவித்துக் கொள்ளும் ஷோபாசக்தி தவிர்ந்து யாரும் எதுவும் இலக்கிய -தத்துவ பங்களிப்பு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அந்த சாதனைகளை கூறுங்கள். இவர்கள் மத்தியல் தத்துவார்த்த தெளிவு உள்ளவர் என ஒருவரைக்கூட குறிப்பிட முடியாது. பல ஆண்டுகளாக வெற்று அலட்டல்களை மட்டுமே இவர்கள் செய்து வருகிறார்கள். இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படும் பலருக்கும் உண்மை விபரங்கள் சொல்லப்படுவதில்லை. அரசியற் பின்னணி தெரியாது கலந்து கொண்டு சிலர் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 

நிதானமான உரையாடல் – அறிவு பூர்வமான விவாதம் என்பதெல்லாம் இவர்களுக்கு ஒருபோதும் சாத்தியமில்லை. அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் யாரும் தந்துவிட முடியாது. வன்முறை மிரட்டல்கள் மற்றும் அவதூறுகள் மட்டுமே இவர்களின் வரலாறாக மிஞ்சி நிற்கிறது.

 

வன்முறை எனச் சொன்னதும் – வெறும் வார்த்தையில் வன்முறை என நினைக்க வேண்டாம். இலங்கையில் நடந்த பல கொடூரங்களை நியாயப் படுத்தல் – மற்றும் – கண்டும் காணாது விடல் – மறைத்தல் – போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதன் புதிய உச்சக் கட்டமாக இலங்கையில் நடந்த ஏப்ரல் படுகொலை பின்னணி வரலாற்றைத் திரிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

 

பாலியல் வன்முறை முதற்கொண்டு பல்வேறு பாரிய குற்றச் சாட்டுகளை எதிர் கொண்டு வருபவர் பிள்ளையான் எனபப்டும் முன்னாள் போராளியும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன். இவற்றில் பல குற்றச் சாட்டுகளுக்கு ஏராளமான சாட்சிகள் ஆதாரங்கள் இன்று வெளிவந்துள்ளன. குறிப்பாக ஏப்ரல் படுகொலை சார்பாக இவரின் தொடர்பு பற்றி சர்வதேச ஊடகங்கள் ஸ்தாபனங்கள் உட்பட பலர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த வரலாற்றைத் திரிபு செய்யும் நடவடிக்கையின் பகுதியாகப் பிள்ளையானின் ‘பிரச்சாரக் குழு’ ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது. இவரை நல்லவர் வல்லவர் அறிவின் சிகரம் என்றெல்லாம் புலம்பித் தள்ளும் குடுப்பம்தான் இலங்கியச் சந்திப்பை ஒழுங்கு செய்வதிலும் ஈடுபட்டு வருகிறது. கேட்டால் அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என இவர்கள் சொல்லக் கூடும். அந்தப் பேச்சு ஒளித்து நின்று குத்தும் நடவடிக்கை. விமர்சனத்தோடு ஒன்றுபடும் களப்போறல்ல இலக்கிய சந்திப்பு. தவிர பிள்ளையான் மேலிருக்கும் விமர்சனம் என்பது தள்ளி வைத்து விட்டு போகக் கூடியதல்ல. அதை மறைத்து இலக்கிய அல்லது வேறுவகை ‘கூட்டுகள்’ போடுவது அரசியல் கேவலம்.

 

பிரச்ச்சார தளத்தை நேரடியாக கட்டும் வலிமை இவர்களிடம் கிடையாது. இலக்கிய சந்திப்பு என்ற போர்வையின் பின் இருந்து கொண்டு அரச ஆதரவு அரசியலை மறைமுகமாக செய்வது இந்த சந்திப்பு குழுவுக்கு ஒன்றும் புதிதல்ல. இலங்கை யுத்தம் முடித்தமைக்கு ராஜபக்சவுக்கு நன்றி சொன்னது. ஓடிய இரகுத்தம் ஆற முதல் இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு எடுத்துச் சென்று கொண்டாடியது. யுத்த மறுப்பு செய்ய மறுத்தது மட்டுமின்றி – யுத்த மறுப்பு செய்தோரை பாசிச ஆதரவாளர் என அவதூறு செய்தது. புலிகள் கொன்று குவிக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு படுகொலையை நியாயப் படுத்தியது. பின்பு கொலைகளை தமிழ் மக்கள் மறந்துவிட வேண்டும் என பிரச்சாரம் செய்தது. கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான சமீபத்து போராட்டங்கள் எதையுமே ஆதரிக்க மறுத்தது. என நாம் அடுக்கிக் கொண்டு போக முடியும்.

 

இவ்வளவு கேவலமான அரசியல் பின்னனி உள்ள இவர்கள் இலங்கை அரச ஆதரவு நிலைப்பாடு என நேரடியாக ஏன் சொல்வதில்லை? தம்மை முற்போக்கு நபர்கள் எனக் காட்டிக் கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் – மற்றும் -சிந்தனையாளர்/இலக்கியச் செயற்பாட்டாளர்/பல்கலைக்கழக புத்தி ஜீவிகள் மத்தியில் சில ஆதரவை பெறுவது – அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்பை தக்க வைப்பது என்பதும் இவர்களில் பலரதும் நோக்கம். நேரடியாக தமது அரசியல் நிலைப்பாட்டை வாதிக்கும் மன பலம் – மன சுத்தி இவர்களில் யாருக்கும் கிடையாது. பொய்ப் பெயர்களின் பின் இருந்து இயங்குவது – தொலை பேசி மற்றும் தனியார் உரையாடல்களில் குசு குசுப்பது – எவ்வித ஆதாரமும் அற்ற அவதூறுகளைச் செய்வது என்ற வரலாறுதான் இவர்கள் பலரதும் வரலாறு.

 

சந்திரகாந்தன் பெயரில் இம்மாதம் வெளியான (மார்ச்) ‘ஈஸ்டர் படுகொலை இன , மத நல்லிணக்கம் – அறிதலும் புரிதலும் ‘ என்ற நூல் முற்று முழுதான பொய் பிரச்சார நூல். இதை விமர்சித்த அத்தாஸ் பிவரும் புள்ளியை சுட்டிக் காட்டி இருப்பது கவனத்துக்கு உரியது

 

‘…ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாத்திற்காகப் புரியப்பட்ட ஒன்று என்பதுடன் அவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களால் மேலும் செய்யப்பட முடியும் என்ற வக்கிரப் போக்கு இந்த நூலின் முன் அட்டை சஹ்ரானின் புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் முக்கியமாக நூல் விபரக் குறிப்பில் நூல் அச்சிடப்பட்ட அச்சகத்தின் விரபங்கள் எதுவும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை …இந்நூலின் சுமார் 200 பக்கங்களுக்கு மேல் வாசிக்க அவசியப்படவில்லை . ஏனெனில் , இணையத்தளங்களில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் விபரம் , இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியான தாக்குதல்கள் எனக் குறிப்படப்படும் பல விடயங்கள் அப்படியே பிரதியிடப்பட்டுள்ளன…’ (“சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும்” – அத்தாஸ் – அக்கரைப்பற்று – தேசம் (thesamnet.co.uk))

இஸ்லாமுக்கு எதிரான – ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பற்றிய உண்மை எதுவுமற்ற – தாக்குதல் செய்தவர்களை காப்பாற்றும் – இந்த நூலை போற்றிப் புகழ்பவர்கள் அதை என்ன நோக்கில் செய்கிறார்கள் என்பதை ஊகிப்பது கடினமில்லை. இந்தத் தக்குதலளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் சந்திரகாந்தன் கையால் இந்தப் புத்தக பிரதியை பெற்றுக் கொள்ளும் தலைவிதிக்கு திணிக்கப் பட்டிருப்பது மேலும் கேவலம்.

 

ஒரு காலத்தில் – புலிகள் மற்றய இயக்கங்களைத் தாக்கிய காலத்தில் – மற்ற இயக்கம் சார் புலி எதிர்ப்பு சக்திகள் ஓன்று கூட்டும் இடமாக இருந்தது இலக்கியச் சந்திப்பு. அத்தருனத்தில் அடக்குமுறை சார் நபர்கள் கருத்துக்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கக்கப்படக் கூடிய சூழல் இருந்தது. உயிர் பயக் கெடுதி இருத்த போதிலும் இதைப் பலர் துணிந்து செய்தனர் என்பது மிகையில்லை. இன்று அது தூரத்து வரலாறு. அதிகாரத்துடன் ஏதோ ஒருவகையில் இணைந்து தம்மையும் நிறுவனப் படுத்திக் கொண்ட ‘புள்ளிகள்’ பலருக்கும் அத்தகய ‘கடும் விமர்சன’ போக்கு இன்று தேவை இல்லை. பெண்ணியம் – தேசம் – சாதிய ஒடுக்குமுறை – ஆகிய அனைத்துமே இன்று இவர்கள் தமது சொந்த நலன்களுக்காக பாவிக்கும் ஆயுதங்கள் என குறுகி நிற்கிறது. இஸ்லாமிய வெறுப்பு ஊறிக் கிடப்பது பற்றி எவரும் கண்டுகொள்வதில்லை. இந்த லட்சணத்தில் இன உறவு பற்றி பேசப் போகிறார்களாம். அதைப் பல மேடைகளில் ராஜபக்ச பேசி நாம் கேட்டு இருக்கிறோம். நீங்களும் ஒப்பிக்கத் தேவை இல்லை.

 

தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்தல் – அதனால் தாம் முற்போக்கு என காட்டுதல் ஆகிய ஒற்றை நோக்கை தாண்ட முடியாத இந்த குழுவுக்கு வெளியில்தான் இலக்கியம் இயங்கி வருகிறது.

 

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் – சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

 

மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும் பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

 

மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும் பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வேகமெடுக்கும் HIV பரவல்!

கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

 

இதன் அடிப்படையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார் .கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டொக்டர் ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

4 வருட கடூழிய சிறைத்தண்டனை பெற்றவுடன் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்!

4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

ஞானசார தேரர் இதற்கு முன்னரும் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், அதற்கான சிகிச்சைக்காகவேஅவர் சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொடஅத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்க ஜனாதிபதி தலைமையில் இணைய வழி முறைமை அறிமுகம்!

இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அல்லது சிறுவர்களை சிக்கிக்கொள்ளக்கூடிய இணைய பக்கங்கள், புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட காரணங்களால் சிறுவர்கள் பெருமளவில் சைபர் வலையப்பிற்குள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, உலகின் முன்னணி இணைய சிறுவர் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய இராஜ்ஜியத்தின் Internet Watch Foundation – IWF உடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதோடு, Save the Children & Child அதற்கான நிதி உதவியை வழங்கியுள்ளது

 

இந்த இணைய வழி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் www.childprotection.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இணையத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் சிறுவர்களின் பாலியல் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய புகைப்படங்கள் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவியுடன் IWF நிறுவனத்திடம் முறைபாடு செய்யலாம். பின்னர் குறித்த நிறுவனத்தினால் காணொலிகள் இணையத்தில் இருந்து அகற்றப்பட்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களுக்கு 011 – 2 778911 இலக்கத்திற்கு சட்ட செயற்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்ள 269 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாகவும் www.childprotection.gov.lk என்ற உத்தியோபூர்வ இணையத்தள பக்கத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் அறிந்துகொள்ள முடியும்.

 

இதேவேளை, சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.

 

மேற்படி குழுவின் அறிக்கை ஒக்டோபர் 2023 இல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், பல தரப்பினருடனும் ஆலோசித்து சிறுவர் பாதுகாப்பு தொடர்பான குறுகிய கால, இடைக் கால, நீண்ட கால தீர்வுகளுக்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

சிறுவர் பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் பணியாற்றும் நிறுவனங்கள் தொடர்பிலான இடைக்கால பரிந்துரைகளை செயற்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும், பிரச்சினைகளின் தன்மைக்கு அமைவாக முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டத்தினை 06 மாதங்களில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

 

சிறுவர் பாதுகாப்பு குறித்து இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் கவனம் செலுத்தாமல் இருந்தமையும் மிகப்பெரிய பிரச்சினையாகியுள்ளதென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது கடினமாக இருந்தாலும், சிறுவர் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

மேற்படி குழுவின் அறிக்கையை விரைவில் செயற்படுத்த வேண்டியது அவசியமெனவும், அதற்காக அமைச்சு, பொலிஸ், சிறுவர் பாதுகாப்பு மற்றும் சீர்த்திருத்த நிலையங்களின் அதிகாரிகள் அர்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவொன்றை நிறுவுமாறு அறிவுறுத்தியிருப்பதாகவும், சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புக்கான புதிய சட்டமூலங்களை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, உரிய அமைச்சுக்களின் அதிகாரிகள், சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்னம், சொலிசிட்டர் ஜெனரல் அயேசா பியசேன,பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதானிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

 

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை !

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பிரகாரம், பொலிஸ் அதிகாரிக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்வதைத் தவிர்ப்பதற்காக முச்சக்கர வண்டி சாரதியிடம் பொலிஸ் சார்ஜன்ட் 500 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு அதன் பிறகு நான்கு குற்றச்சாட்டுகளுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

நான்கு குற்றச்சாட்டுக்களிலும் பொலிஸ் சார்ஜன்ட் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 20,000 ரூபாய் அபராதமும், இலஞ்சமாக பெற்ற 500 ரூபாவை திருப்பிக்கொடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளவுள்ள தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல்வாதிகள் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வை காணவேண்டும் – மார்ச் 12 இயக்கத்தின் மாநாட்டில் பேராசிரியர் அர்ஜூன பராக்கிரம

இலங்கை எதிர்கொள்ளவுள்ள தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல்வாதிகள் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வை காணவேண்டும் குறிப்பாக 13வது திருத்தத்தையாவது உரிய முறையில் அமுல்படுத்தவேண்டும் – வடக்குகிழக்கில் பாதுகாப்பு படையினர் ஆக்கிரமித்த பொதுமக்களின் காணிகளை நிலங்கை மீள அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகளை கொழும்பில் இடம்பெற்ற மார்ச் 12 இயக்கத்தின் மாநாட்டில் பேராசிரியர் அர்ஜூன பராக்கிரம முன்வைத்துள்ளார்.

 

தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

 

தூய்மையானஅரசியல் என்பதை நாங்கள் வலியுறுத்தவேண்டும், இதற்கு ஒரு வரைவிலக்கணத்தை வழங்கவேண்டும்.

 

வீடு இடிந்துள்ள நிலையில் வீட்டுக்கு மேலோட்டமான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமா அல்லது வீட்டை முற்றாக மாற்றவேண்டுமா என்பதே எங்கள் முன்னால் உள்ள கேள்வியாகும்.

 

நாங்கள் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும்போது அவர்கள் தூய்மையான அரசியலை அழுத்தம் திருத்தமாக நடைமுறைப்படுத்தக்கூடியவர்களாகயிருக்கவேண்டும்.

 

மக்கள் விதிக்கின்ற எல்லா நிபந்தனைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்பவர்களாகயிருக்கவேண்டும்.

 

கிட்டத்தட்ட 10 அல்லது 15 நிபந்தனைகைளை நான் இங்கு முன்வைக்கவிரும்புகின்றேன்.

 

இலவசகல்வி இலவச சுகாதாரத்திற்கு தேசிய வருமானத்திலிருந்து மூன்று வீதத்தினைஒதுக்கவேண்டும்.

 

தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையயான நிரந்தரமான தீர்வை காணவேண்டும் குறிப்பாக 13வது திருத்தத்தையாவது உரிய முறையில் அமுல்படுத்தவேண்டும்.

 

மலைய மக்களின் காணி உரிமை வீட்டுரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்திஉத்தரவாதப்படுத்தவேண்டும்.

 

வடக்குகிழக்கில் பாதுகாப்பு படையினர்ஆக்கிரமித்த பொதுமக்களின் காணிகளை நிலங்கை மீள அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.

 

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நஸ்டஈட்டை வழங்க வேண்டும் காணாமலாக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை நேர்மையாக எடுத்துரைக்கவேண்டும்.

 

சட்டவிரோதமான சட்டங்களை இல்லாது ஒழிக்கவேண்டும் இந்த நாடு ஜனநாய நாடு என்ற அடிப்படையில் ஆர்ப்பாட்டங்களை தெரிவிப்பதற்கும்தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதற்கும் உரிமையுண்டு அந்த உரிமையை பேணி பாதுகாக்கவேண்டும்.

 

நிறைவேற்று அதிகார முறையை முற்றாக இல்லாது ஒழித்து அதற்கான சட்டநடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

 

ஊழல் இலஞ்சம் போன்றவற்றை முற்றாக ஒழிக்கவேண்டும் . பொருளாதார ரீதியில் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள மக்களிற்கு நிவாரணங்களை வழங்கவேண்டும்

 

இந்த நிபந்தனைகளை எந்த அரசியல்வாதி ஏற்க தயாராக இருக்கின்றாரோ அவரின் சார்பாத்தான் நாங்கள் செயற்பட முடியும்.

 

போலி வாக்குறுதிகளை நம்பி நாம் ஒன்றும் செய்யமுடியாது.

 

மார்ச் 12 இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் நதீசானி பெரேரா உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது,

தூய அரசியல் எழுச்சிக்கான இந்த நிகழ்விற்கு பெருந்திரளான மக்கள் வந்திருப்பது புத்துணர்ச்சியளிக்கின்றது.

 

ஒன்பது வருடங்களிற்கு முன்னர் சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கியது மார்ச் 12 இயக்கம் – இன்றுவரை நாங்கள் செயற்பட்டுவருகின்றோம்.

 

இந்த நாட்டில் இயற்கை வளம் உள்ளது மழை வெயில் உள்ளது நாடு மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் உள்ளது ஆனால் நாங்கள் பொருளாதார ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

 

காரணம் என்ன?

 

அரசியல் நேர்மையின்மை பொறுப்புக்கூறல் இன்மை வெளிப்படைதன்மையின்மை ஆகியவையே காரணம்.

 

இதன் காரணமாக ஊழல் மோசடி போன்றவை இடம்பெறுகின்றன.

 

நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது.

 

2022 இல் அமைப்புமுறை மாற்றத்திற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மக்கள் புரட்சி இடம்பெற்றது.

 

அந்த மக்கள் புரட்சிக்கு செயல்வடிவம் கொடுக்கின்ற ஆண்டு இது.

 

இந்த ஆண்டு தேர்தல் இடம்பெறவுள்ளமையே இதற்கான காரணமாகும்.

 

அனைத்து இனத்தவர்களும் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

 

 

“சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும்” – அத்தாஸ் – அக்கரைப்பற்று

சர்வதேச ரீதியாக அதிர்வலையை ஏற்படுத்திய ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவ . சந்திரகாந்தன் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த நூலின் பெயர் ‘ ஈஸ்டர் படுகொலை இன , மத நல்லிணக்கம் – அறிதலும் புரிதலும் ‘ ஆகும் . இந்த நூல் 23.03.2024 ஆம் திகதி மட்டக்களப்பில் வெளியீட்டு வைக்கப்பட்டது . இவரது இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியதாகும் .

இவருக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு பின்னர் ஏன் ‘ சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும் ‘ என்று தலைப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழக்கூடும் . இவரது நூலும் அந்த மாதிரித்தான் உள்ளது . ஈஸ்டர் படுகொலை தொடர்பில் தலைப்பிட்டுவிட்டு இணையத்தள செய்திகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார் . இந்த நூலைப் பொறுத்தவரை தகவல் மூலமற்ற செய்திகளும் பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன . குறிப்பாக இந்த நூலின் பின்னால் அதிகார சக்திகளின் மறைகரங்கள் உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது . ஏனெனில் , ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்ற போது சஹ்ரானின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தொலைபேசியில் வைத்திருந்தமைக்காக பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கைது  செய்யப்பட்டு பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் . ஆனால் அவ்வாறான எதுவித கெடுபிடிகளும் இல்லாமல் சர்வதேச ரீதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட சஹ்ரான் எனும் தீவிரவாதியின் புகைப்படத்தை முன் அட்டையில் இட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.  இங்குள்ள கேள்வி என்னவெனில் , பாதுகாப்புத் தரப்பினர் முஸ்லிம்களைக் கைது செய்தமை போன்று ஏன் பிள்ளையானைக் கைது செய்யவில்லை என்பதுடன் அவருக்கு எதிராக ஏன் எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாகும் . மேலும் சஹ்ரானின் இப் புகைப்படத்தை இவர் இஸ்லாமிய மதத்திற்கும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் எதிரான குறியீடாகப் பயன்படுத்தியுள்ளார் . ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாத்திற்காகப் புரியப்பட்ட ஒன்று என்பதுடன் அவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களால் மேலும் செய்யப்பட முடியும் என்ற வக்கிரப் போக்கு இந்த நூலின் முன் அட்டை சஹ்ரானின் புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் முக்கியமாக நூல் விபரக் குறிப்பில் நூல் அச்சிடப்பட்ட அச்சகத்தின் விரபங்கள் எதுவும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை . அவை மறைக்கப்பட்டுள்ளன . குறிப்பாக அச்சு மற்றும் வெளியீட்டுக் கட்டளைச் சட்டம் பிரிவு 02 இன் படி இது குற்றச் செயல் என்பதுடன் பிரிவு 03. இக் குற்றத்திற்கான தண்டனையும் குறிப்பிடுகின்றது .

இந்நூலானது குறித்த சட்டத்தை மீறி வெளியிடப்பட்டுள்ளது . குறிப்பாக இந்நூலானது மிகப்பெரிய பொய்யொன்றைப் பதிவு செய்துள்ளது . பக்கம் 30 இல் ” இரண்டாம் தடவை மேற்கொள்ளப்பட்ட உடற் கூற்றியல் மரபணுப் பரிசோதனையில் ( DNA ) புலஸ்தினியின் மரணம் உறுதி செய்யப்பட்டது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . இது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரமாகவே அமைகின்றது . ஏனெனில் , புலஸ்தினி மகேந்திரன் ( சாரா ஜாஸ்மின் ) எனும் பெண் 26.04.2019 ஆம் திகதி சாய்ந்தமருது பாதுகாப்பு வீட்டில் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் 03 பரிசோதனைகள் நடத்தப்பட்டன . இதில் முதல் பரிசோதனையில் இவரது மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை . இரண்டாவது பரிசோதனையிலும் இவரது மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை . சுமார் 04 வருடங்களின் பின் 06.04.2023 ஆம் திகதி வெளியிடப்பட்ட மூன்றாவது பரிசோதனை அறிக்கையிலேயே குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது . உண்மை இவ்வாறு இருக்க இவர் , இரண்டாவது பரிசோதனையில் புலஸ்தினி மகேந்திரனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது என்று எழுதியுள்ளமை ஏன் ? மேலும் பக்கம் 32 இல் ” நேரடியாக எதிர்வினையை சிங்கள பௌத்த மக்கள் மீது தொடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் சிறுபான்மை முஸ்லிம்களைப் பொறுத்தவரை பாரதூரமாக இருக்கும் . அதனால் எதிர்கொள்ளும் கட்டமைப்பு ஐ.எஸ் குழுவினரிடம் இல்லை . இதனால் பௌத்த விகாரைகள் தடுக்கப்பட்டு சிங்கள மக்கள் ஒன்று கூடும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டன ” என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார். இத்தகவல் இருட்டடிப்புச் செய்யப்பட்ட பொய்யாகும் . ஏனெனில் , கொச்சிக்கடை அந்தோனியர் தேவாலயத்தில் இறந்தவர்களில் கணிசமானவர்கள் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இறந்தவர்கள் அனைவரும் தமிழ் கிறிஸ்தவர்கள் . அதேபோன்றுதான் நீர்கொழும்பு கட்டுவாப்பீட்டி தேவாலயமுமாகும் . இம் மூன்று தேவாலயங்களில் இறந்தவர்களில் கணிசமானவர்கள் தமிழ் பேசும் மக்களாக உள்ளமையை மறைத்து சிங்கள் மக்கள் ஒன்று கூடும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டன என்ற கருத்தைக் குறிப்பிடுகின்றார் . ஆனால் தொலைக்காட்சிகளில் பேசும் பேசும் போது இஸ்லாமியத் தீவிரவாதிகள் திட்டமிட்டு தமிழ் மக்களை அல்லது கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்துள்ளார்கள் என்று பேசி வருகின்றார். ஆக இவரின் இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடுடையதாக உள்ளது . இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்னவெனில் , ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வியாபார நிலையங்கள் மீதான எரிப்புக்களையும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களையும் உயிரழிப்புக்களையும் செய்தவர்கள் யார் ? அவர்கள் அத்தனை பேரும் கிறிஸ்தவர்களா ? மேலும் சீயோன் தேவாலய சபையின் பிரதம ஊழியரான றொசான் மகேசன் என்பரின் நேர்காணல் ஒன்று இந்த நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது . பக்கம் 48 இல் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட தீயை அணைக்க தீ அணைப்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.

* 45 நிமிசம் நெருப்பு பத்திக் கொண்டே இருந்துச்சு . தீயணைப்புப் படை வாரதுக்கு எப்படியும் 15 – 17 நிமிசம் போயிருச்சு . நான் அந்த சி.சி.டியில் கவனிச்சனான் . 17 நிமிசத்துக்குப் பிறகு தான் அவங்க வந்ததும் அவர்களுக்குத் தண்ணீரக் குழாய்களைப் பூட்டத் தெரியவில்லை. இதெல்லாம் இழுத்திட்டு போற நேரம் ஒரு 35 நிமிசம் ஆச்சுது . அப்ப எங்கட பிள்ளைகள் தான் அந்தக் குழாய்களையும் பூட்டிக் குடுக்கக்கூட உதவியிருக்காங்க ” எனக் குறிப்பிடுகின்றார் . இவரின் நேர்காணலில் இருந்து எழும் கேள்வி என்னவெனில் , சியோன் தேவாலயத்திற்குத் தீயணைக்க வந்தவர்களுக்கு தண்ணீரக் குழாய்களைப் பூட்டத் தெரியாமல் போனமை ஏன் என்பதாகும் . இவர்கள் உண்மையில் தீயணைப்புப் படையினரா அல்லது வேற்று நபர்களா ? மேலும் இவர் குறித்த நேர்காணலின் இறுதியில் பக்கம் 49 இல் ” முஸ்லிம்களுக்குத் தெரியும் , அவர்களுக்குத் தெரியாம இது நடக்கல்ல ” என்பதைத் தொடர்ந்து மூன்று தடவைகள் சொன்னதாகத் தொடர்ந்து மூன்று தடவைகள் இந்நூலில் பதியப்பட்டுள்ளன . இங்குள்ள கேள்வி என்னவெனில் , சீயோன் தேவாலய சபையின் பிரதம ஊழியரான றொசான் மகேசன் குறிப்பிடும் முஸ்லிம்கள் யார் ? எல்லா முஸ்லிம்களும் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை அறிந்திருந்தார்களா அல்லது குறித்த முஸ்லிம் நபர்கள் மாத்திரம் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தார்களா ? அவர் உறுதியாகக் குறிப்பிடும் அந்த முஸ்லிம் நபர்கள் யார் ? ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்து அதனை மறைத்த குற்றத்தைப் புரிந்த முஸ்லிம் நபர்களுக்கு எதிராக ஏன் இவர் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை அத்துடன் அல்லது கோரவில்லை ? மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்த முஸ்லிம் நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்காமல் மறைத்த குற்றத்திற்கு பிரதம ஊழியரான றொசான் மகேசனும் உள்ளாக்கப்படுவாரா ? றொசான் மகேசனின் கருத்தானது மிகவும் பாராதூரமான குற்றச்சாட்டாக உள்ளது . முஸ்லிம்கள் முன்கூட்டியே அறிந்திருந்தார்கள் என்று குறிப்பிடுவதானது கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை முஸ்லிம்கள் விரும்பியிருந்தார்கள் என்பதாக அரத்தம் கொள்ளப்படுவதுடன் முஸ்லிம்கள் ஈஸ்டர் படுகொலையைத் தடுக்க விரும்பவில்லை என்பதாக அமைகின்றது . இதன் மறுதலை முஸ்லிம்கள் . மாற்று மதத்தினர் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றவர்களாக உள்ளனர் . உண்மையில் மதிப்புக்குரிய றொசான் மகேசன் இக்கருத்தைக் கூறினாரா அல்லது இந்நூலின் ஆசிரியர் சந்திரகாந்தன்இக்கருத்தைப் பதிவு செய்துள்ளாரா ? நிச்சயமாக இக்கருத்தானது கத்தோலிக்க கிறிஸ்தவ முஸ்லிம்களுக்கு இடையிலான நல்லுறவினைச் சிதைக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது . இவ்வாறான ஒரு நிலையை உருவாக்குவதற்காக இக்கருத்து திட்டமிட்டுப் பதியப்பட்டுள்ளதா என்ற பல கேள்விகள் உள்ளன .

மேலும் இந்நூலின் 121 ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது ” இந்தியாவில் உள்ள ஹெச்.ஜி. ரசூல் என்ற எழுத்தாளர் பின்வருமாறு கூறுகின்றார் . இந்த வஹாபி குழுவினர் உயர்ந்தது எது ? புத்த சாசனமா ? அல்லது குரானா ? என இலங்கையில் பிரச்சாரம் செய்து புத்த பிக்குகளிடமும் பொதுபலசேனாவிடமும் சமய வெறியை ஊட்டுவதற்குக் காரணமாக அமைந்த அண்மைக்கால வரலாறு நாம் அறிந்ததே ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . இதில் ஒரு சில உண்மைகள் இருந்தாலும் நூறு வீத உண்மையாகக் கொள்ள முடியாது . இங்கு பாரிய இருட்டடிப்பொன்று செய்யப்பட்டுள்ளது . பௌத்த பிக்குகளுக்கும் பொதுபலசேனா அமைப்பிற்கும் மத வெறி ஏற்படக் காரணம் வஹாபிசக் குழுவினர் என்ற கருத்தானது பொதுபலசேனா இயக்கம் இயல்பிலேயே சாந்தமான அமைதி போதிக்கும் அமைப்பு என்பதும் அதற்கு மதவெறி வருவதற்குக் காரணம் வஹாபிசக் குழுவினர் தான் என்பதாகவும் உள்ளது . எனினும் வரலாற்றை எடுத்து நோக்கினால் , 30 வருட யுத்த காலத்தில் பொதுபலசேனாவைப் போன்று பல பௌத்த அமைப்புக்கள் உருவாகியிருந்தன . அவை தமிழர் தொடர்பில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்ற நிலைப்பாடு தமிழர்களிடம் உண்டு . குறிப்பாக தனிச் சிங்கள் மொழிச் சட்டம் போன்ற மொழி வெறி பிடித்தமைக்கும் கிறிஸ்தவ மிசனறிகளுக்கு எதிரான தாக்குதல்களின் போது மதவெறி பிடித்தமைக்கும் காரணம் இந்த வஹாபிச குழுவினர் அல்ல . 1900 ஆண்டளவில் கிறிஸ்தவ மிசனறிகளுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராகவும் பௌத்த தேசிவாத அமைப்புக்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன . அவ்வாறான தாக்குதல்களுக்கு கிறிஸ்தவ மிசநெறிகளின் அடிப்படைவாதமே காரணம் என்று குற்றம் சுமத்த முடியுமா ? ஒருபோதும் இல்லை . அது தவறான வாதமாகும் . – இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகின்றது . ஆரம்பத்தில் அதன் எதிரியாக கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் . 1915 சிங்கள முஸ்லிம் கலவரத்தின் போது முஸ்லிம்களின் வர்த்தகம் மறைமுகக் காரணியாக இருந்தது . பின்னர் 1956 களில் சிங்கள மொழி பௌத்த மத மறுலர்ச்சியாக மாறியது . பின்னர் 1970 களில் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் போது அது பௌத்த இனவாதமாக வடிவம் கொண்டது . குறிப்பாக 2009 யுத்தத்தின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதமாக அது வடிவம் கொண்டுள்ளது . பொதுபலசேனா போன்ற பௌத்த இயக்கங்களின் உருவாக்கம் அதன் ஸ்தீரம் என்பது பூகோள மற்றும் தேசிய அரசியல் சக்திகளின் மறைகரம் என சர்வதேச ரீதியாக அறியப்பட்ட கலாநிதிகள் பேராசிரியர்கள் மிகப் பெரிய ஆய்வுகளை வெளியிட்டுள்ள நிலையில் வராற்றை இருட்டடிப்புச் செய்து மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சுப் போடும் இதுபோன்ற பல கதைகள் இந்நூலில் அதிகம் உள்ளன .

எனினும் இந்நூலில் பக்கம் 121 – 122 இல் மிக முக்கிய விடயம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் சந்திரகாந்தன் . சிங்கள மக்களை மையப்படுத்தி ஏன் இந்த தஃவா தேவைப்பட்டது ? இந்த தஃவா அமைப்பை முன்னெடுத்தவர்கள் தமிழக தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் . தமிழ் நாட்டில் உள்ள எல்லா இந்துக்களுக்கும் இஸ்லாத்தைச் சொல்லிவிட்டு அவர்கள் இலங்கைக்கு வந்துவிட்டார்களா ? இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் . பல மதங்கள் உள்ள நாட்டில் இந்த அணுகுமுறை என்ன விபரீதத்தை தரப்போகின்றது என்ற விமர்சனங்களை நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது என்கின்றார்.

 

இவ்விடயம் மிகவும் முக்கியத்துவத்துடன் முஸ்லிம்களால்  அணுகப்பட வேண்டியதாகும் . தீவிரப் போக்குள்ள தவ்ஹீத் நபர்கள் தொடர்பில் முஸ்லிம் சமுதாயம் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டிய அபாயக் கட்டத்தில் உள்ளது . குறிப்பாக இலங்கையில் உள்ள ஒரு சில தவ்ஹித் அமைப்புக்களுக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பு இருந்ததா என்பது தொடர்பில் ஈஸ்டர் தாக்குதலை விசாரணை செய்த பாராளுமன்ற விசேட குழு பல இடங்களில் கேள்வி எழுப்பியுள்ளது .

இலங்கையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளான தவ்ஹீத் இயக்கங்களின் மூலவேர் இந்தியா குறிப்பாக தமிழ் நாட்டில் செயற்பட்டுவரும் சில தவ்ஹீத் இயக்கங்களாகும் . இங்குள்ள முக்கிய கேள்வி என்னவெனில் , இலங்கையில் உள்ள ஒரு சில தவ்ஹீத் இயக்கங்களுக்கும் படையினருக்கும் தொடர்பிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் தமிழ் நாட்டுத் தவ்ஹீத் இயக்கங்கள் மீதும் எழுத்துள்ளன . மேலும் குறித்த தவ்ஹீத் இயக்கங்களால் இந்தியாவிலும் இலங்கையிலும் மத நல்லிணக்கம் உருவானதை விடவும் இனக் குரோதமும் மத முரண்பாடுகளுமே அதிகம் வளர்ந்துள்ளன . ஆக இவ் அமைப்புக்களின் செயற்பாடுகளின் பின்னணியில் ஏதாவது மறை கரங்கள் உள்ளனவா என்ற கேள்வி உள்ளதுடன் இவர்கள் மத நல்லிணக்கத்தைக் காட்டிலும் இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் முரண்பாடான விடயங்களையே தூக்கிப் பிடிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வருகின்றமை ஏன் ? மேலும் இந்நூலின் பக்கம் 125 இல் தப்லீக் ஜமாஅத் எனும் தலைப்பு இடப்பட்டு அது தொடர்பில் பல விடயங்கள் எழுதப்பட்டுள்ளன . பக்கம் 126 இல் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு ” சாதாரண முஸ்லிம்களை மதவாதிகளாக மாற்றுவதில் பெரும்பங்கை இவர்களே வகிக்கின்றனர் . உயிரைக் கொடுப்பவர்களுக்கு சுவர்க்கத்தில் பெரிய அந்தஸ்து உள்ளது . அப்படியாக உயிரைக் கொடுத்து ஷஹீத் ஆகும் போது நேரடியாக மரணித்தவுடன் சுவர்க்கம் கிடைக்கும் . அப்படியானவர்களுக்கு மரணத்தின் பின்னர் எவ்வித விசாரணைகளும் கிடையாது . அவர்களுக்கு சுவரக்கத்தில் வாழ்வதற்கு 72 கன்னிகள் கிடைப்பார்கள் என்பதாக கற்பிப்பதன் மூலமாக அல்லாஹ்வின் பாதையில் செல்வது என்பதன் முழு அர்த்தங்களையும் புரிந்து கொள்வர் என இந்த தப்லீக் ஜமாஅத் பிரச்சாரங்களுக்குள் உள்வாங்கப்பட்டு பக்தி மயமானவர்களாக மாறுகின்ற இளைஞர்கள் ‘ பீஸபீலில்லாஹ் ‘ என்பதன் முழு அர்த்தமான ஜிஹாத் மற்றும் ஷஹித் போன்றவற்றை நோக்கி செல்லக் கூடிய நிலமைக்கு இட்டுச் செல்லப்படுவார்கள் . இந்த தப்லீக் ஜமாஅத்தினர் ஒருபோதும் ஜிஹாத்துக்குச் செல்லுங்கள் . இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குங்கள் என்கின்ற வஹாபிச பிரச்சாரங்களை நேரடியாக மேற்கொள்வதில்லை . சஹ்ரானின் தந்தையார் முகம்மது ஹாசிம் , தப்லீக் பணிகளில் இணைந்து பங்காற்றியவர் என்பது கவனம் கொள்ளத்தக்கது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .

பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பிலும் நபர்கள் தொடர்பிலும் ஈஸ்டர் தாக்குதலுக்கு ஈடான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த இந்த நூல் , பக்கம் 146 இல் அப்துல் ரவூப் மௌலவி என்பவர் தொடர்பில் புகழ்மாலை சூடியுள்ளது . ” அப்துர் ரவூப் மௌலவி அவர்கள் தனது வசிப்பிடமான ஐந்தாம் குறிச்சி , ஆதம்போடி ஹாஜியார் ஒழுங்கையிலிருந்து முஅத்தினார் வீதியூடாக தனது தந்தையின் பத்ரிய்யாப் பள்ளிக்குச் செல்லும் காட்சி ஒரு தனியழகாகும் . இந்திய அத்தரின் நறுமணம் மௌலவி அவர்கள் வருவதற்கு முன்பாகவே அவ்வீதிகளில் பரவத் தொடங்கிவிடும் . தென்றல் தவழ்ந்து வரும் அந்த இனிய மாலைப் பொழுதுகளில் தூரத்தே வருவோரையும் சுண்டி இழுக்கும் வாசணை அப்துல் ரவூப் மௌலவி வருகின்றார் என்ற செய்தியைச் சொல்லிவிடும் ” என்று புகழ்ந்துள்ளது . இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் , சந்திரகாந்தனின் இந்த நிலைப்பாட்டையே இந்தியத் தூதரும் பொதுபலசேனாவும் கொண்டுள்ளதாக அறியப்படுகின்றது . இந்தியத் தூதர் சிறிகோபால் பாக்லே 02.10.2022 ஆம் திகதி அப்துல் ரவூப் மௌலவி குழுவினருடன் பிரத்தியேக சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார் . இது இவரது கிழக்கு மாகாண விஜயத்தின் ஓர் அங்கமாக இருந்தது . அதேபோன்று 21.01.2022 ஆம் திகதி அப்துல் ரவூப் மௌலவி குழுவினருக்கும் கலபொட அத்த ஞானசார தேரருக்கும் இடையிலான சந்திப்பு இராஜகிரியவில் இடம்பெற்றது . கலபொட அத்த ஞானசார தேரர் ஏனைய எல்லா இஸ்லாமிய இயக்கங்களை எதிர்ப்பதுடன் சூபிக்கொள்கை ஆதரிக்கின்றார் . அதேபோன்றே சந்திரகாந்தனும் ஏனைய இஸ்லாமிய இயக்கங்கள் மீது இந்நூலில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளடன் அப்துல் ரவுப் மௌலவியை மாத்திரம் ஆதரிக்கின்றமையில் ஏதாவது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் உண்டா ? மேலும் முக்கியமாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இந்நூலின் ஆசிரியரான சந்திரகாந்தன் மீது அவரது பிரத்தியேகச் செயலாளராகப் பல வருடங்கள் பணிபுரிந்து வந்த ஹன்சீர் அசாத் மௌலானா என்பவர் பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார் . இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆவணம் 05.09.2023 ஆம் திகதி சனல் 04 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்டது . எனினும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்காமல் சந்திரகாந்தன் நழுவிச் சென்றுள்ளார் . ஈஸ்டர் படுகொலை தொடர்பில் 329 பக்கங்களில் நூலை எழுதிய சந்திரகாந்தன் , தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க ஆகக் குறைந்தது ஒரு பக்கத்தைக் கூட ஒதுக்காமல் விட்டுள்ளமை மிகப் பெரிய அபத்தமாகும் . பக்கம் 324 இல் முடிவுரை எனக் குறிப்பட்டதுடன் அதில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . ” குறித்த நூல் அச்சுக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் குறித்த ஈஸ்டர் தாக்குதல் பற்றிய புதிய புரளி கலந்த செய்தியொன்று வெளிவந்தது . அதாவது சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய என்னையும் குறித்த தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அப்புரளியானது சர்வதேச ஊடகமான லண்டனைத் தளமாகக் கொண்டிருக்கும் சனல் 04 தொலைக்காட்சியில் 05.09.2023 அன்று ஒளிபரப்பாகியுள்ளது ” என தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் வெறும் 15 வரிகளில் எழுதியுள்ளமை இந்நூலை வாங்கிய அனைவரையும் ஏமாற்றியதாகவே அமையக் கூடும் .

இந்நூலின் இறுதியாக அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . ” இந்நூலினை ஊன்றி படிக்கின்ற போது சனல் 4 ஊடாக என்மேல் பரப்பப்பட்டுள்ள என்மீதான புரளிகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை வாசகர்களாகிய ஒவ்வொருவரும் நன்கே புரித்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன் . அதையும் தாண்டிய ஏதாவது சந்தேகங்கள் உங்கள் மனதில் இருந்தால் சஹ்ரான் தலைமையிலான ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் தமது தாக்குதலுக்கு தயாரான போது ஒருமித்து நின்று சத்தியப்பிரமாணம் செய்த காணொளி அதனைத் தீரத்து வைக்கும் என்று நம்புகிறேன் ” என நூலை முடித்துள்ளார் . இந்நூல் தொடர்பில் குறிப்பிட்டுச் சொன்னால் , இந்நூலின் சுமார் 200 பக்கங்களுக்கு மேல் வாசிக்க அவசியப்படவில்லை . ஏனெனில் , இணையத்தளங்களில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் விபரம் , இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியான தாக்குதல்கள் எனக் குறிப்படப்படும் பல் விடயங்கள் அப்படியே பிரதியிடப்பட்டுள்ளன . அச் செய்திகள் தொடர்பில் தகவல் மூலங்களும் இடப்படவில்லை . இந்நூலை வாசிப்பதற்கு முன்பு இருந்த ஈர்ப்பும் அவதானிப்பும் வாசித்து முடித்த பின் அப்படியே இல்லாமற் போய்விட்டது . உண்மையைச் சொல்லப்போனால் இந்த நூலை வாசித்து முடித்த போது மரத்தில் மாடு கட்டிய நகைச்சுவை தான் என் ஞாபகத்திற்கு வந்தது . உங்களுக்கும் மரத்தில் மாடு கட்டிய நகைச் சுவை தெரிந்தால் சிரித்துவிட்டுச் செல்லுங்கள் . தெரியாவிட்டால் இந்த நூலை வாசித்துப் பாருங்கள் .

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத் தண்டனை !

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி 4 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி என சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டது.

 

2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டது.

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தைக்கு 14 நாட்கள் விளக்கமறியல் !

அம்பாறை – மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போதே, படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இது தொடர்பான மறு விசாரணையை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்தி வைக்குமாறும் நீதவான உத்தரவிட்டுள்ளார்.

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவில் இடம்பெற்றுள்ளது.

 

சம்பவ தினமான மார்ச் வியாழக்கிழமை (14) காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

அத்தோடு, குறித்த மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் வெளியானது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை காவல் நிலையப் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.