10

10

கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியதில் சதித்திட்டம் எதுவுமில்லை – அரகலய செயற்பாட்டாளர் வசந்த முதலிகே

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியதில் சதித்திட்டம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள அரகலய என்ற காலிமுகத்திடல் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, பொதுமக்களே அவரை வீட்டுக்கு அனுப்பினர் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு மக்களுக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, “என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

குறித்த நூலில் தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான அரசியல் காரணங்களை விளக்கியுள்ளார். அதில் “2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்றதில் இருந்து வெளிநாட்டுத் தலையீடுகள் இலங்கையின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

2019 நவம்பரில் நான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து, சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் இருந்துள்ளன.

மேலும், இந்த நாடு சுதந்திரமடைந்த முதல் அறுபது வருடங்களில் ஒருபோதும் அனுபவித்திராத வகையில் வெளிநாட்டுத் தலையீடும், உள்ளக அரசியலின் சூழ்ச்சியும் இன்று இலங்கையின் வாழ்க்கையில் கலந்துள்ளது“ என்று கோட்டாபய தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளை தமிழர்களும் – முஸ்லீம்களும் தனக்கு எதிரான சதியை செய்ததாக கோட்டாபாய ராஜபக்ச தனது நூலில் குறிப்பிட்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் ‘அரகலய’ போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் மக்கள் பேரவையின் செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி கைது !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி ஒருவரையும் மற்றும் இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு நேற்று 09 பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தநிலையில் குறித்த நபர்களிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

வெடுக்குநாறிமலையில் பொலிஸார் அடாவடி – மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் !

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய உணர்வாளர்களின் அழைப்பின் அடிப்படையில் இந்த போராட்டம் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகில் நடைபெற்றது.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ததுடன் மேலும், கடும் அடக்குமுறையினை பிரயோகித்திருந்தனர்.

இதனை கண்டிக்கும் முகமாகவே மட்டக்களப்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, “எங்கள் மண்ணில் எங்கள் மலையில் உங்களுக்கு உரிமையில்லை, சிவராத்திரி நாளிலும் சிங்கள அடக்குமுறை ” தமிழர்களின் வழிபடும் உரிமையினை தடுக்கும் அரசை கண்டிக்கின்றோம், ஆதிசிவன் கோயில் நிலத்தினை அழிக்காதே வெளியேறு,

வெடுக்குநாறி ஆதிசிவன் சிவராத்திரி பூசையை தடுத்த படையினரின் அராஜகத்தை கண்டிக்கின்றோம் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை தாங்கிவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்

உறவுகளின் சங்கத்தினர், மதத்தலைவர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு 2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் !

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான குறித்த யுவதியிடமிருந்து 2 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

இதன்போது, கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா இருந்தள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த பெண் விமானப்படையினரால் கைதுசெய்யப்பட்டு யாழ்;. பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளநிலையில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு !

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கம் இடையில் நாளை ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த கலந்தரையாடலுக்காக எதிர்க் கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய அழைப்பை ஏற்று அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரை இதில் பங்கேற்க வைக்க தீர்மானித்துள்ளது.

அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் , அவரின் பங்கேற்பு தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் அவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசின் கீழ் பதிவு செய்தே மதமாற்றங்களில் ஈடுபட வேண்டும் – கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

பதிவு செய்யப்படாத மத மாற்றங்களில் ஈடுபடும் மத நிலையங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்படாத மதமாற்றங்களில் ஈடுபடும் மத நிலையங்கள் மீது சோதனை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்குமாறு பௌத்த விவகார ஆணையாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் பீடாதிபதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சமய வழிபாட்டுத் தலங்கள், பௌத்த பிக்குகள் மற்றும் மதச் சிதைவுகள் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளில் பௌத்த பிக்குகளுக்கு ‘வணக்கத்திற்குரியவர்’ மற்றும் ‘பிக்குனிகளுக்கு’ ‘வணக்கத்திற்குரியவர்’ என்ற பட்டங்களைச் சேர்க்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

காசாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுகிறார்கள் !

காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுகிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திய எட்டு தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன், காசாவுக்குள் கூடுதல் உதவிகளை அனுமதிக்க வேண்டும், அப்பாவிகளின் உயிர்களைப் பாதுகாப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம், மகளிர் தினத்தன்று காசாவில் பாலஸ்தீனப் பெண்களின் அவலநிலை குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வரை 9,000 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கின்றனர்.

காசாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. காசாவில் பலி எண்ணிக்கை 30,878 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 72,402 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி – நாளொன்றுக்கு 1000 கருக்கலைப்புகள் !

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

எட்வகாட்டா என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சுகாதார அணையாடை பாவனையை நிறுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட குடும்ப வருமானம் தொடர்பான அறிக்கையில் காட்டப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நாட்டில் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 1000 கருக்கலைப்புகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் தினத்தன்று இடம்பெற்ற  போதைப்பொருள் விருந்து – 27 இளைஞர்கள் கைது !

ஹோமாகம மாகம்மன ஆடம்பர வீடமைப்புத்  தொகுதியில் மகளிர் தினத்தன்று இடம்பெற்ற  பிறந்தநாளை முன்னிட்டு போதைப்பொருள் விருந்து நடத்திய 27 இளைஞர்களில் போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து இளைஞர்கள் மற்றும் பணத்தை பெற்றதாக சந்தேகிக்கப்படும் மூன்று யுவதிகள் கெஸ்பாவ  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 6 பேரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான்  இஷாரா ஜெயக்கொடி உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குவார்.

சந்தேக நபர்களான பெண்களின் சமூக நோய் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு !

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அலுலகத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரட்நாயக்க கலந்துகொண்டு காணி உரிமையாளர்களுக்கான காணிப் பத்திரங்களை வழங்கிவைத்தார்.

இதில் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரம ரட்ன, ஜனாதிபதி செயலக வட மாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன், முன்னாள் அரசாங்க அதிபர்கள் பாதுகாப்பு படையினர், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.