10

10

இந்த நாட்டில் சுயலாப தேவைக்காக ஜனாநாயக உரிமைகளைப் பயன்படுத்துகின்றனர். – நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!

இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுப்பதற்காக மே 9 காலிமுகத்திடல் பேராட்டத்திற்கு வழிவகுத்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (09) கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

“மே 9 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றது. போராட்டத்தை விட அதனை முன்னெடுத்தவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.போராட்டத்தில் காயமடைந்தவர்கள் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சொத்துக்கள் வாகனங்கள் என்பன சேதமாக்கப்பட்டன.

இந்த நாட்டில் சுயலாப தேவைக்காக ஜனாநாயக உரிமைகளைப் பயன்படுத்துகின்றனர்.

நாட்டு மக்கள் புத்திசாலிகள். எனவே போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் இலாபம் தேடுபவர்களிடம் ஏமாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது“. என நாமல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் இராணுவ சேவைக்காக இலங்கை இளைஞர்களை அனுப்பும் வியாபாரம் – எச்சரிக்கிறார் அமைச்சர் மனுஷ நாணயக்கார !

ஆட்கடத்தல்காரர்கள் சிலர் இணைந்து ரஷ்யாவின் இராணுவ சேவைக்காக இலங்கை இளைஞர்களை அனுப்பும் வியாபாரம் இந்த நாட்களில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வியாபாரத்தில் யாரும் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சுற்றுலா வீசா ஊடாக ரஷ்யா இராணுவ சேவையில் இணைந்துகொண்டு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள சில குடும்பத்தினர் வியாழக்கிழமை (9) அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்.

ரஷ்யா இராணுவத்தில் உயர் சம்பளத்துடன் தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து ஓய்வுபெற்ற இராணுவத்தினர் இதற்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். என்றாலும் அவர்கள் வென்கர் கூலிப்படையில் சேவைக்காகச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் அங்கு முன்னணி பாதுகாப்பு வலயத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் அவர்களுக்கு பல மாதங்களாக அவர்களுக்குரிய சம்பளமும் வழங்காமல் இருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்த நபரையும் யுத்த சேவைக்காக வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதில்லை. அதேபோன்று சுற்றுலா விசா ஊடாக தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என எந்தளவு அறிவுறுத்தல் மேற்கொண்டாலும் இவ்வாறு தொழிலுக்குச் சென்று பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

ஆட்கடத்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டத்தின் பிரகாரம் பணியகத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த முறைப்பாடுகள் குற்ற விசாரணை திணைக்களத்தினாலேயே விசாரிக்கப்படுகின்றன. அதனால் எந்த சந்தர்ப்பத்திலும் சுற்றுலா விசா ஊடாக தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என  இலங்கை மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி –

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவக அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமகால அரசியல் நிலவரங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் வரவுள்ள தேர்தல் தொடர்பான முன்னெடுப்புக்கள் போன்றவை தொடர்பிலும், அவை சரியான முறையில் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் வகையில் குறித்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இதன்போது, தேர்தலில் எமது கட்சியின் வாக்குப்பலத்தை அதிகரிப்பு செய்ய வேண்டிய அவசியம் தொடர்பாக வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவலங்களையும் அரசியல் கோஷங்களாக பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்கள், தமது நலன்களுக்காக தமிழ் மக்களை இன்னுமொருமுறை பலிக்கடாவாக்க முனைகிறார்கள்.

இவ்வாறான முட்டாள்தனமான முயற்சிகள் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட குழுக்களினாலும் மிதவாத தமிழ் தலைமைகளினாலும் பலமுறை முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் அவற்றினால் எமது மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை. மாறாக மீளமுடியாத பின்னடைவுகளையே ஏற்படுத்தியிருந்தன.

எனினும், நடைமுறை சாத்தியமான சிந்தனையோ, சரியான வேலைத்திட்டத்தினை முன்வைத்து அதற்காக உழைக்கும் குணாம்சமோ இல்லாதவர்கள், எமது மக்களை உணர்ச்சியூட்டும் தோற்றுப்போன வழிமுறையையே மீண்டும் கையில் எடுத்து தம்மை அரசியலில் நிலைநிறுத்த முனைகிறார்கள்.

ஆனால், ஈ.பி.டி.பி. ஆகிய நாங்கள், எமது மக்களுக்கு சரியான வழியை காட்டுகின்ற தனித்துவமான தரப்பு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருவதுடன் தேர்தல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம்.

மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினைகள் முதல் அபிவிருத்தி உள்ளடங்கலான அரசியல் தீர்வு வரையிலான மூன்று ‘அ’ க்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை முன்வைக்க கூடிய ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி மட்டும் தான் இருக்கின்றது.

இதில் அனைவரும் தெளிவாக இருப்பதும் அவசியம்.

கடந்த 34 வருடங்களாக பல்வேறு விடயங்களில் அவை நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கு நாம் கட்டி வளர்த்துள்ள தேசிய நல்லிணக்கமும் கணிசமான பங்களிப்பை செய்திருக்கிறது.

எனவே, அடுத்த வரவுள்ள தேர்தல் என்பது தமிழ் மக்களை வெற்றியின் கதானாயகர்களாக அடையாளப்படுத்தும் வகையில் எமது செயற்பாடுகளும் மக்களுக்கான தெளிவுபடுத்தல்களும் அமைய வேண்டும்.

அதன்மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைவதற்கான வழியை பிரகாசமாக்க முடியும்” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.