20

20

‘றோ இன்றி ஒரு புலியும் அசையாது’ பாவம் தலைவர்: அழித்தவர்களின் முகவர்களே டென்மார்க்கில் அஞ்சலியும் செய்தனர்!

கார்திக் மனோகரன் தன்னுடைய சித்தப்பாவான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் அஞ்சலி செய்ய முற்பட்ட நிகழ்வு, தலைவரை அவமானப்படுத்துவதாகவும் அவர் உயிரோடு இருக்கும் வரை வாழ்ந்த லட்சியக் கனவை வன்புணர்வு செய்ததாகவும் அமைந்தது எனத் தெரிவிக்கின்றார் முன்னாள் பெண் போராளியான விமிலினி சிவநேசன். இறுதி யுத்தத்திற்கு முன்னரே போராட்டத்தில் தனது காலை இழந்த அவர் தம்பி கார்த்திக் மனோகரன் சித்தப்பாவிற்கும் அவர் குடும்பத்திற்கும் அஞ்சலி வைக்க வேண்டும் என்று எடுத்த முடிவை தான் வரவேற்றதாகத் தெரிவித்த விமிலினி, அதனை அவர் தங்கள் குடும்ப நிகழ்வாக எல்லோரையும் அழைத்து செய்திருக்க வேண்டும். அதனை விடுத்து தலைவரின் இலட்சியங்களுக்கு விரோதமான புல்லுருவிகளை அழைத்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது, தலைவரின் இலட்சியங்களை வன்புணர்வு செய்ததற்குச் சமன் என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் 2009 இலேயே வீர வணக்க அஞ்சலியைச் செய்திருக்க வேண்டும். அது 15 ஆண்டுகள் கடந்து தற்போதாவது நிகழ்கின்றதே என்ற எண்ணம் வே பிரபாகரனின் இலட்சியக் கனவில் பயணித்த பலருக்கும் இருந்தது. அவர்களும் வெளியே இருந்து நிகழ்வின் உண்மைத் தன்மை தெரியும் வரை வரவேற்றனர். ஆனால் நிகழ்வில் இந்திய உளவுத்துறையான றோ தமிழீழம் வாங்கித் தரும் என்று சன்னதமாடும் பாரதிய ஜனதா கட்சி சங்கிகள் நிகழ்வை நடத்தினார்கள் என்ற பின்னணி வெளியே வந்ததும் இந்நிகழ்வு பிரபாகரனின் இலட்சியக் கனவை வன்புணர்வு செய்ததாகவே அமைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது அரசியலற்ற பார்வை தொடர்பிலும் அதீத இராணுவ பிரம்மை தொடர்பிலும் கடும் விமர்சனங்கள் இருந்த போதும் தன்னையும் தனது குடும்பத்தையும் தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த அந்த இலட்சியம் தொடர்பில் அவரது எதிரிகளும் கூட முரண்படவில்லை. பிரபாகரனுக்கு ஒரு விடுதலைப் போராளியான கௌரவத்துடனும் மரியாதையுடனும் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். தன்னிடம் தோற்றுப்போன எல்லாளனைக் கௌரவித்தவன் துட்டகைமுனு. இன்றும் அந்த கௌரவம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவரின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் தற்போது இந்திய உளவுப்பிரிவான றோ வுக்கும் மோடிக்கும் சங்கூதிக்கொண்டு பிரபாகரனனுக்கு அஞ்சலி செய்வது மிக வேடிக்கையானது.

இந்திய அமைதிப்படை காலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் காட்டிக்கொடுத்து, பல புலி உறுப்பினர்களையும் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குக் தலையாட்டிக் காட்டிக்கொடுத்தவர் ‘சுக்லா’ என்றழைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர். இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கு மரண தண்டனை விதித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அன்று யாழ்ப்பாணத்திலிருந்து சுக்லா வை இந்திய இராணுவம் தனது ஹெலிகொப்டரில் கொண்டு வந்து கட்டுநாயக்காவில் தரையிறக்கியது. 90களில் சுக்லா புலம்பெயர்ந்து பாரிஸில் தரையிறங்கினார். அன்று புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு ஆட்பற்றாக்குறை இருந்ததால் புலிகளைக் காட்டிக்கொடுத்தவர்களும் புலிகளால் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர்களும் புலிகளால் மரண தண்டணை விதிக்கப்பட்டவர்களும் புலம்பெயர் தேசங்களில் தீவிர புலிகளாக இயங்க ஆரம்பித்தனர். அவ்வாறு மாறியவர்களுள் சுக்லாவும் குறிப்பிடத்தக்கவர். தற்போதும் பிரான்ஸில் தான் இவர் வாழ்கின்றார். பாம்பு கூரூப் என்ற வன்முறைக் குழுவின் பின்னணியிலும் இவர் இருந்தவர். பாரிஸில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் பின்னணியிலும் இவர் இருந்துள்ளார். குறிப்பாக பாரிஸ் சபாலிங்கத்தின் படுகொலையை இவரது குழுவே மேற்கொண்டதாக நம்பப்படுகின்றது. தற்போது கனடாவில் வாழும் முன்னாள் சுவிஸ் பொறுப்பாளர் முரளியின் நெருங்கிய நண்பர் சுக்லா. சுவிஸில் பாம்பு கூரூப் உருவாக்கப்பட்டதே முரளிக்கு சில பல காரியங்களைச் செய்வதற்காகவே. சபாலிங்கத்தின் படுகொலையில் முரளியினதும், சுக்லாவினதும் கரங்கள் இருப்பதாகவே தற்போதும் நம்பப்படுகின்றது.

இவ்வாறானவர்கள் பிரபாகரனுக்கு இறுதி அஞ்சலி கொண்டாடும் அவல நிலை ஏனைய அமைப்புகளின் தலைவர்களுக்கு ஏற்படவில்லை. பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்ட சிறிசபாரத்தினம், பத்மநாபா, அ அமிர்தலிங்கம் போன்றவர்களும் சரி பிரபாகரனால் படுகொலை செய்யப்படாத உமா மகேஸ்வரனானாலும் சரி அவர்களுக்கான நினைவு நிகழ்வுகள் அவர்கள் இறந்த நாள் தொடக்கம் அவர்களது அமைப்பினால் ஒரு அரசியல் உரையாடல் நிகழ்வாக முன்னணி அரசியல் செயற்பாட்டாளர்களின் அரசியல் உரைகளோடு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

முப்பது வருடங்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு தலைவனுக்கு றோ தமிழீழம் பெற்றுத் தரும் இந்தியாவை எதிர்க்காமல் அணி திரண்டு வாருங்கள் என்று போராட அழைக்கின்றது இந்த றோ கும்பல். இவர்கள் 2009 மேல் ஒரு தடவை மரணித்த வே பிரபாகரனதும் அவரது குடும்பத்தின் மீதும் கோசலம் அடித்து அவமானப்படுத்துகின்றனர்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நேசக்கரம் அமைப்பின் சாந்தி வவுனியன் அரசியல் ஒழுக்கமற்ற ஒருவர். இவர் 2009இற்கு பின் தமிழகத்திற்கு தப்பி வந்த பெண் போராளிகளோடு தொடர்பு கொண்டு மரியாதைக் குறைவாக அவர்களோடு உரையாடியவர். சில தகவல்களை வைத்துக்கொண்டு கதைகளைப் புனைந்து தனது விருப்பு வெறுப்புக்கமைய குழுசார்பு மனப்பான்மையுடன் செயற்படுபவர். பசையுள்ள இடத்தில் ஒட்டிக்கொள்ளும் இவர் ஐபிசி பாஸ்கரனையோ சுபாஸ்கரனையோ கூட அடுத்த தேசியத் தலைவர் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நிகழ்ச்சியில் மாவீரன் பிரபாகரன் உரை நிகழ்த்திய நிலா என்ற பாலநந்தினி பாலசுப்பிரமணியம், றோ தமிழீழம் பெற்றுத்தரும் தலைவர் பிரபாகரன் இந்தியாவுடன் மோதியது தான் அவரது தவறு இல்லாவிட்டால் இந்திய றோ வே தமிழீழம் பெற்றுத் தந்திருக்கும் என்கிறார். அக்கூட்டத்தில் தலைவர் பிரபாகரன் இறந்தாலும் அவருடைய இலட்சியங்கள் இறக்கவில்லை என்று சொல்லும் நிலா, றோ வோடு சேர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுக்க அழைப்பு விடுக்கின்றார். இந்த திபாகரன் – நிலா கூட்டின் மதியுரைஞர் தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசு. மு திருநாவுக்கரசு, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், பழ நெடுமாறன், வெற்றிச் செல்வன் ஆகியோர் நேரடியாகவே றோவின் பராமரிப்பில் உள்ளவர்கள். இவர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிச் செயற்படுபவர்கள்.

ஈழ அரசியலில் றோ இன்றி ஒரு புலியும் அசையாது என்ற நிலையே தற்போதுள்ளது. தற்போது அரசியலில் ஈடுபடுபவர்களில் புலித்தேசியம் பேசுகின்ற அல்லது புலிகளுக்காக வக்காலத்து வாங்குகின்றவர்கள் மிகப்பெரும்பாலானோர் இந்திய, இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகளோடு சேர்ந்து செயற்படுபவர்களாகவே உள்ளனர். இதற்கு தமிழ் நாட்டில் கலையகத்தை வைத்துச் செயற்படும் ஐபிசியும் லங்காசிறியும் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. இந்திய உளவுத்துறைக்குச் சேவகம் செய்ய இவர்கள் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றனர்.

றோ வின் ஒரு பிரிவு பழ நெடுமாறன் கவிஞர் காசி ஆனந்தன் அணி துவாரகா வந்துவிட்டார், பிரபாகரன் வந்துகொண்டிருக்கிறார், அவருக்குப் பின்னால் மதிவதனி வருகிறார் என்று கதையளக்க, முன்னாள் இந்திய இராணுவ மேஜர் மதன்குமார் அதற்கு ‘பில்ட்அப்’ கொடுக்கின்றார். மறுபக்கம் றோவின் மற்றைய பிரிவு மு திருநாவுக்கரசு வழிகாட்டலில் இயங்கும் திபாகரன் – நிலா கூட்டு துவாரகா வரவில்லை. தலைவரும் வரமாட்டார், மதிவதனியும் வரமாட்டார். அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செய்வோம் என்று கார்த்திக் மனோகரனின் நிகழ்வை தங்களுடைய நிகழ்வாக ஹைஜாக் பண்ணி ஒரு விடுதலைப் போராளியின் நிகழ்வில் கோசலம் அடித்துள்ளனர்.

இவ்வாறு மற்றவர்களுடைய நிகழ்வுகளில் புகுந்து அவற்றை ஹைஜாக் பண்ணுவதை தங்களுடைய திறமை என்று றோவின் ஈழத்தமிழ் ஊதுகுழலாகச் செயற்படும் லங்காசிறியிலும் ஐபிசியிலும் மார்தட்டி வருகின்றார் திபாகரன். தமிழரசுக் கட்சியின் பிரித்தானியக் கிளையைக் கைப்பற்ற இவர்கள் போட்ட திட்டத்தை தேசம்நெற் அம்பலப்படுத்தி இருந்தது. அரசியலில் ஏடே தொடங்கியிராத கார்த்திக் மனோகரன் சித்தப்பாவுக்கும் குடும்பத்துக்கும் நிகழ்த்திய வீரவணக்க நிகழ்வில் றோ – மோடி கூட்டம் கோசலம் அடித்தது மிகக் கேவலமானது. ஒரு காலத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் வைக்கும் கூட்டங்களில் தங்களைப் புலிகளாகக் காட்டிக்கொள்ளும் இவ்வாறான விரோத சக்திகள் புகுந்து அட்டகாசம் பண்ணுவது வழமை. இப்போது அவர்கள் தங்கள் தலைவனின் வீரவணக்க நிகழ்வையே அவ்வாறு அசிங்கப்படுத்துகின்றனர்.


இந்திய புலனாய்வுத்துறையும், இந்திய இராணுவத்தால் பயிற்றப்பட்ட இலங்கைப் புலனாய்வத்துறையும் இணைந்தே இறுதி யுத்தத்தை நடத்தியதாக அதன் பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தற்போது கனடாவில் வாழும் இவர் தான் இலங்கைச் சிறையில் நான்காம் மாடியில் இருந்த போதும் தன்னைக் கைது செய்ததும் விசாரணை செய்ததும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் என்று தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவு என்றொன்று இலங்கையில் இல்லை என்றும் அங்கு இருப்பதும் இந்திய புலனாய்வுப் பிரிவால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்தியாவின் நலன்களுக்காகப் பணியாற்றும் புலனாய்வுப் பிரிவு என்றும் அவர் தெரிவித்தார்.

றோ இன்றி ஒரு புலியும் அசையாது என்பது போல் பிரபாகரனும் அவரது குடும்பத்தில் ஒருவரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டது இந்திய புலனாய்வுப் பிரிவு. அதன் படி அக்குடும்பத்தையே படுகொலை செய்தவர்களின் முகவர்கள் அக்குடும்பத்திற்கு வீரவணக்கம் செலுத்த, ஆயிரம் ஆயிரம் போராளிகளும் மக்களும் அதனை வேடிக்கையாக கடந்து செல்கின்றனர். பாவம் பிரபாகன். அவருக்கு ஒரு கௌரவமான வீர வணக்கத்தை ஈழத்தமிழர்கள்: ஒடுக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம், மலையக மற்றும் சமூகங்களுடனும் ஒடுக்கப்பட்ட உலக மக்களோடும் இணைந்து சுயவிமர்சனத்தோடு செய்ய வேண்டும்.

 

இப்ராஹீம் ரைசி உயிரிழந்தமைக்கும் எங்களது நாட்டும் எந்த வித தொடர்பும் இல்லை – மறுக்கும் இஸ்ரேல்!

ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைசி உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தமைக்கும் தங்களது நாட்டும் எந்த வித தொடர்பும் இல்லை என இஸ்ரேல்  திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்ககு வானூர்தி கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் நேற்று (19) விபத்துக்குள்ளானது.

அதன்போது, அதிபர் ரைசி உட்பட 8 பேர் உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகம் உறுதிபடுத்தியது.

அத்துடன், ஈரான் அதிபரின் மரணத்திற்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புதான் காரணம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில், இஸ்ரேல், இந்த சந்தேகங்களை திட்டவட்டமாக மறுத்து வருவதோடு இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பேசிய இஸ்ரேல் அதிகாரிகள், ரைசியின் உலங்கு வானூர்தி விபத்துக்கு நாங்கள் காரணம் அல்ல,இது எங்களுடைய நடவடிக்கையும் அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே..? அவர்களிற்கு என்ன நடந்தது..? – கொழும்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் கேள்வி!

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே அவர்களிற்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த கேள்வியை எழுப்பினார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

 

எனது விஜயம் குறிப்பிடத்தக்கது ஏனென்றால் இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற காலப்பகுதியில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இந்த காலப்பகுதியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டனர் .

இந்த வருடம் இலங்கையில் நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் இந்த வருடம் இலங்கையின் தலைவிதியையும் மனித உரிமை பாதுகாப்பின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். நான் ஏன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டேன்?

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து அறிந்துகொள்வதற்காக இந்த விஜயத்தை நான் மேற்கொண்டேன்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்காக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவதற்காகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆதரவை வழங்கவும் நான் இந்த விஜயத்தினை மேற்கொண்டேன்.

நான் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டேன். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்தேன்.

அவர்கள் வெளிப்படுத்துகின்ற துணிச்சலும் மீள்எழுச்சி தன்மையும் நீதியை காண்பதற்கான அவர்களது உறுதிப்பாடும் எனது மனதை தொட்டுள்ளது.

இலங்கையில் மிகப்பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர் அவர்களிற்கு என்ன நடந்தது. காணாமல்போதல் என்பது மிகமோசமான வன்முறை. அது முடிவிற்கு வராது. உங்களிற்கு தெரியாது உங்களிற்கு தெரியாது

 

பாதிக்கப்பட்டவர்களிற்கு பலபல வருடங்களிற்கு இந்த வலி தொடரும். மரணத்தை விட இது வலிமிகுந்தது. வலியும் வேதனையும் மிக மோசமானதாக காணப்படும். உளவியல் சித்திரவதை. நாளாந்தம் ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு வாரமும் தசாப்தங்களாக இந்த வலியும் வேதனையும் தொடரும்.

இது இலங்கையின் மீது விழுந்த கறை இந்த கறையை அகற்ற ஒவ்வொரு இலங்கை பிரஜையும் முன்வரவேண்டும். அந்த குழந்தைகள் எங்கே நான்கைந்து மாத குழந்தைகள் மூன்று நான்கு வயதானவர்கள் நான் அவர்களின் நான் அவர்களின் படங்களை பார்த்திருக்கின்றேன்.  15 வருடங்களாகியும் பதில் இல்லை இது மிக நீண்டகாலம். இது மன்னிக்க முடியாத குற்றம்- இவர்கள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும்.

இவர்கள் தாங்களாக முன்வந்து சரணடைந்தவர்கள். சரணடைவதற்கான பகுதிக்கு தாங்களாக சென்று சரணடைந்தார்கள்.

எங்கே அந்த குழந்தைகள்? என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று இலங்கையில் கால் பதிக்கிறார் எலோன் மஸ்க்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று இவ் ஆண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஆரம்பித்து வைக்க  நாட்டிற்கு  எலோன் மஸ்க் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எலோன் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின்  தலைவரும், எக்ஸ் சமூக தளத்தின் உரிமையாளருமாவார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  அவரது காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர்  ருவான் விஜேவர்தனவுடன்  ஞாயிற்றுக்கிழமை  எலோன் மஸ்க்கைச் சந்தித்துள்ளார்.

இதன்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும்  உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி எலோன் மஸ்க்கை இலங்கைக்கு அழைத்துள்ளார். எலோன் மஸ்க் வருகை தொடர்பில்  திகதிகள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. விரைவில்  இலங்கை அரசாங்கம் எலோன் மஸ்க்  குழுவினருடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை உறுதி செய்யும்.

இந்தோனேசியாவின் மிகப்பெரிய பாலி தீவு பகுதியில் தனது ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்க், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளாளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் இப்ஸ்விச் மாநகராட்சியின் மேயராக முதல் முறையாக புலம்பெயர் இலங்கை தமிழர் !

பிரித்தானியாவிலுள்ள நகரமொன்றின் மேயராக முதல் முறையாக புலம்பெயர் இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் ஆணையாளராக பதவி வகிக்கும் இளங்கோ இளவழகன் என்பவர் இப்ஸ்விச் மாநகராட்சியின் வருடாந்த கூட்டத்தில் அதிகவாக்குகளை பெற்று ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

“நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த பெரிய நகரத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டமைக்கு மிகவும் பெருமைப்படுகிறேன்” என இளங்கோ இளவழகன் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனுவை முன்மொழிந்த நகராட்சி தலைமை ஆளுநர் நீல் மெக்டொனால்ட் , தான் பதவியில் இருக்கும் ஆண்டில் பொதுத் தேர்தல் முடிவை இளங்கோ இளவழகன் அறிவிப்பார் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய மேயராக இளங்கோ இளவழகன் நியமிக்கப்பட்டமைக்கு அங்குள்ள தமிழ் சமூகம் வாழ்த்து தெரிவித்து நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக குரல் கொடுத்ததால் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதான மதகுருக்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும் அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி, வெசாக் போயா தினத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக ஆதரவுடன் செயற்பட்ட ஞானசாரஹிமிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு மஹானாஹிமிவருவான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை 2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பலி !

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று திங்கட்கிழமை (20) உறுதிப்படுத்தியுள்ளது.

அசர்பைஜானில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ஈரான் புறப்பட்டார்.

இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்தில் மலைப்பகுதியை கடக்கும்போது ஹெலிகொப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.