11

11

கலாச்சார அழிப்புக்கும் மக்கள் தொகையை குறைக்கும் திட்டங்களுக்கும் யு.எஸ் எய்ட் நிதியளிப்பு – விமல் வீரவன்ச

கலாச்சார அழிப்புக்கும் மக்கள் தொகையை குறைக்கும் திட்டங்களுக்கும் யு.எஸ் எய்ட் நிதியளிப்பு – விமல் வீரவன்ச

இலங்கையில் நாட்டின் கலாச்சாரத்தை அழித்து மக்கள் தொகையைக் குறைக்கும் திட்டங்களுக்கு USAID 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த விமல் வீரவங்ச,

“யு.எஸ் எய்ட்டினர் பல்வேறு வகையான மாற்றங்களை ஊக்குவித்தனர், குறிப்பாக இளைஞர்களிடையே LGBTQ சமூகப் பிரச்சாரம் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பில் பெரும் ஊக்குவிப்புகளில் ஈடுபட்டனர். 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது ஒரு பெரிய தொகை. இந்த திட்டங்கள் பாலின மாற்றத்தை ஊக்குவிக்கவும் இறுதியில் மக்கள் தொகையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நமது கலாச்சாரத்தை அழிக்க வடிவமைக்கப்பட்ட இந்த முயற்சிகள் மூலம் இந்த நாட்டு மக்கள் விலைக்கு வாங்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்களும் நிதியளிக்கப்பட்டுள்ளனர்,” என்று கூறியதுடன் எதிர்காலத்தில் அவர்களின் பெயர்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ USAID இலங்கையின் உள்ளூர் அரசியல் விடயங்களில் தலையீடு செய்ததாகவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை சீர்க்குலைக்கவும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளவும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) 260 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்திகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பெயரில் உள்ள எக்ஸ் கணக்கை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டுள்ளன.

முப்பதாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 56 ஆண்டுகள் கடூழிய சிறை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி !

முப்பதாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 56 ஆண்டுகள் கடூழிய சிறை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி !

 

மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரரிடமிருந்து இலஞ்சம் பெற்ற மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, தண்டனையை 7 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு 40,000/- ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இலஞ்சமாகப் பெற்ற 36,000/- ரூபாவை அபராதமாக வசூலிக்க உத்தரவிட்டார்.

மாகாண சபையிலும் கை வைக்க மாட்டோம். தையிட்டி விவகாரத்தில் தமிழர்களின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட மாட்டோம்.” – இராமலிங்கம் சந்திரசேகர் !

மாகாண சபையிலும் கை வைக்க மாட்டோம். தையிட்டி விவகாரத்தில் தமிழர்களின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட மாட்டோம்.” – இராமலிங்கம் சந்திரசேகர் !

 

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்.மாவட்ட செயலகத்தில் சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த போது தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்தும் அமைச்சர் தெரிவிக்கையில்,

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ்வரும் மாகாண சபை முறைமை நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தர தீர்வு என நாம் நம்பவில்லை. மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ள முறைமையாக மாற்றியமைப்போம். சிறுபான்மையின மக்கள் உட்பட நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும்.

அதேவேளை, மக்களுடன் கலந்துரையாடி, நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் ஏற்படாத வகையில் தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். தையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும்.

முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்னவென்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டியில் விகாரை கட்டப்படும்போது அதுதொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காதவர்கள் தற்போது அந்தப்பிரச்சினையை பூதாகரமாக தூக்கிப்பிடிக்கின்றார்கள். தையிட்டி விகாரை விடயத்தினை தூக்கிப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே அந்த விடயத்தினை முன்னெடுக்கின்றார்களா? இல்லை விரைவில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதற்கான துருப்புச்சீட்டாக இதனைப் பயன்படுத்தப் பார்க்கின்றார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கிடையில் கைகலப்பு – இருவர் மருத்துவமனையில்.

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கிடையில் கைகலப்பு – இருவர் மருத்துவமனையில்.

 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின்போது 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் இருவர் காயடைந்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறான மோதல் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வு, கலைவாரம் உட்பட்ட நிகழ்வுகள் சுமூகமாக இடம்பெறுவதே சவாலாக காணப்படுகின்றது. கலைவார நிகழ்வுகளுக்கு தொடர்ச்சியாக நிர்வாகம் தடைவிதித்த வரலாறுகளும் உண்டு.

 “நீங்கள் தையிட்டி விகாரையை இடியுங்கள் ; நாங்கள் எந்த கோயிலையும் இடிக்க மாட்டோம்.” – ரதன தேரர் பா.உ சிறிதரனுக்கு மடல் !

“நீங்கள் தையிட்டி விகாரையை இடியுங்கள் ; நாங்கள் எந்த கோயிலையும் இடிக்க மாட்டோம்.” – ரதன தேரர் பா.உ சிறிதரனுக்கு மடல் !

 

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்றவரும், ஆசிரியராக பணியாற்றி வருபவருமான பௌத்த துறவி ரதன தேரர் என்பவர் ” நீங்கள் தையிட்டி விகாரையை இடியுங்கள் ; நாங்கள் தென்னிலங்கையில் எந்த கோயிலையும் இடிக்க மாட்டோம்.” என பா.உ சிறிதரன் உள்ளிட்ட தமிழ்தேசிய தலைமைகளிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரதன தேரர் தமது பேஸ்புக் பதிவில்,

ஐயா ! எனக்கு உங்களை விட தனது இனத்துக்காக 30 ஆண்டுகள் போராடியவர்கள் சிறந்தவர்கள் என்று கூறுகிறேன். அந்த ஆட்சிக் காலத்தில் கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள “லும்பினி” விஹாரையில் தலைமை தேரருக்கு உணவு வழங்கப்பட்டது தலைவரின் அறிவிப்பின் பேரில் அவரது அமைப்பால்.

பௌத்தத்தின் படி திருடுவது கடுமையான பாவம். ஏமாற்றுவதும் பாவம். இந்த விகாரை அப்படி உருவாக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதேபோல் தையிட்டி விகாரையை இடிக்கவேண்டும் எண்டால் இடிக்கலாம் அது உங்கள் விருப்பம். ஆனால் நாங்கள் நாட்டில் எந்த இடத்தில் உள்ள எந்த ஒரு கோவில் அல்லது ஆலயத்தையும் இடிக்க போகவில்லை.எநாங்கள் பெளத்தர்கள். புத்தர் அருளிய போதனைகள் பின்பற்றுவர்கள். உண்மையான பெளத்தர்களாக வாழ வேணுமெனில் முதலில் தன்னுடைய மகிழ்ச்சியை விட மற்றவரின் சந்தோசத்தை பற்றி சிந்திக்கவேண்டும் என்று புத்த பெருமானின் உபதேசத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஐயா! நீங்கள் ஒருநாள் எங்கள் விகாரைக்கு வாருங்கள். புத்தர் வணங்க மட்டுமல்ல புத்தர் சிலைக்கு இரு பக்கத்தில் உள்ள இந்து கடவுளான முருகன் மற்றும் விஷ்னு, கண்ணகி (பத்தினி ) ஆகிய கடவுள்கள் வணங்கலாம் பூஜையும் செய்யலாம். ஒருநாள் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேக்கிறேன். தையிட்டில் தவறாக விஹாரை கட்டி இருக்கு என்றால் அந்த விஹாரை அங்கே உருவாக்கும்போது செய்ய வேண்டியசெயலை செய்யாமல் விஹாரை திறந்த பின்னர் இப்படி கூறுவது உங்களில் உள்ள அறியாமையும் பொறுப்பின்மை தான் தெரியும்.

உலகில் மிகப்பெரிய புத்தர் சிலையான ஆப்கானிஸ்தானில் இருந்த “ப்பாமியன்” புத்தர் சிலையை உடைக்கும் போது எங்களுக்கு வராத பகைமை தையிட்டி விஹாரை உடைந்தால் வர முடியுமா என்று குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டியை வைத்து மீண்டும் ஓர் கறுப்பு ஜூலை – பா.உ அர்ச்சுனா வழியில் பயணிக்குமா தமிழ்தேசியம்..?

தையிட்டியை வைத்து மீண்டும் ஓர் கறுப்பு ஜூலை – பா.உ அர்ச்சுனா வழியில் பயணிக்குமா தமிழ்தேசியம்..?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சியமைத்த நல்லாட்சி அரசு காலத்தில் உருவாக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையை இடிப்பதை ஊதிப்பெருசாக்கி எதிர்வரும் தேர்தல்களில் என்.பி.பியை தோற்கடித்து தமது வாக்குவங்கியை மீண்டும் நிலைநிறுத்த தமிழ்த்தேசியக் கட்சிகள் முயல்கின்றமை தமிழ் குறுந்தேசியவாதத்தின் அரசியல் வறட்சியின் வெளிப்பாடு என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்டி முழுமைப்படுத்தப்பட்ட தையிட்டி விகாரையை உடைக்குமாறு கூறுவது மொக்குத்தனமான முடிவு எனவும் மீண்டும் தெற்கில் ஓர் ஜூலைகலவரம் ஏற்பட வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கும் இராமநாதன் அர்ச்சுனா, மீளவும் மக்களை உசுப்பேற்றி குளிர்காய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிதரன் ஆகியோர் முற்படுகின்றனர் என தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள இராமநாதன் அர்ச்சுனா,

விகாரை கட்டி முழுமைப் படுத்தும்வரை தூங்கி விட்டு இப்போது வந்து விகாரையை இடிக்க கேட்பது அறிவில்லாததன் வெளிப்பாடு. அரசியல்வாதிகள் தூண்டிவிட்டு ஒதுங்கி விடுவார்கள் பாதிக்கப்படுவது அந்த காணி உரிமையாளர்களும், இவர்களுக்காக திரளும் மக்களுமே. தையிட்டி விகாரையின் விகாராதிபதியுடன் நான் நேரில் சென்று சந்தித்தேன். அவர் மக்கள் தன்னுடன் அன்னியோன்யமாக பழகுவதாகவும் அவர் அப்பகுதி பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிப்பதாகவும் தெரிவிக்கிறார். சிங்களவர்கள் பற்றி போலியான விம்பம் ஒன்றை தமிழ்தேசிய தலைவர்கள் கட்டமைத்துள்ளார்கள். அந்த மக்கள் அருமையான மக்கள் – அரசியல்வாதிகள் தான் தூண்டி விடுகிறார்கள். தமிழ் மக்கள் இந்த பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். அரசியல் கதிரைகளுக்காக மக்களை தூண்டி விட பார்க்கிறார்கள். சுகாஸ் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் சைக்கிள் கட்சியில் இருக்கிறார்கள். இதுவரை ஒரு வழக்கு கூட விகாரைக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பவர்களும் போடவில்லை. பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட மக்களும் போடவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலதிகமாக போராட்டங்கள் கவனயீர்ப்புகள் செய்த யாருமே இதை சட்ட ரீதியாக அணுகாது போதே தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் இது முழுக்க முழுக்க அரசியல் சதுராட்டம். இனிமேல் விகாரைகள் கட்டுவதை தடுக்க வேண்டுமே தவிர கட்டிய விகாரையை உடை என்பது மடத்தனம் என தெரிவித்துள்ளார்.

மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம், தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் பா.உ இராமநாதன் அர்ச்சுனாவின் நிலைப்பாடு சரியானதாக உள்ளது எனவும், அவர் கூறுகின்ற வழிமுறைகள் சாலப்பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கதது.

தையிட்டி விகாரை விவகாரம் மீண்டும் ஓர் பதற்றமான சூழலை தமிழ் – சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது. தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடமேறியது முதல் இனவாதக் கருத்துக்கள் செயலிழக்கும் சூழல் உருவான போதும் கூட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இனவாத சூழல் ஒன்றை உருவாக்குவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சாடியுள்ளார்.

இதேவேளை, யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம்” என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது என தெரிவித்துள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி , தையிட்டி விகாரை எந்தக் காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் நாட்டில் அமைந்துள்ள எந்த மதத் தலங்களையும் அகற்ற முடியாது. அது மத ரீதியான, இன ரீதியான வன்முறைகளுக்கே வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்று கூட்டணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் , தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டியதுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு நாம் ஆதரவு வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

தையிட்டி விகாரை இடிக்கப்படக்கூடாது ! இடிக்கப்படமாட்டாது ! இன்னுமொரு இன மத கலவரத்துக்கு நெய்வார்க்கும் புலித்தோல் போர்த்த நரிகள் !

கடவுள் மனிதனைப் படைத்தானா அல்லது கடவுளை மனிதன் படைத்தானா என்றால் கடவுளை மனிதன் படைத்தான் என்பதற்கு தையிட்டி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புத்தரா, சுத்தரா, யேசுவா, சிவனா, இல்லை தமிழ் கடவுளா, சிங்களக் கடவுளா, அல்லது கூறுகெட்ட கடவுளா என்றால் இந்த நாசமறுத்த மதங்களால் மனுசன் மிருகமானது தான் மிச்சம். மதங்கள் மனுசனின் மனிதாபிமானத்தின் கடைசிச்சொட்டு ஈவிரக்கத்தையும் வற்றச்செய்து மற்றையவனின் இதயத்தை பிளந்து தின்னும் வெறியோடு திரிகின்றனர்.

நாலு பேரை ரயரைப் போட்டு உயிரோடு கொழுத்தினால், அந்த மனிதக் கொழுப்பு எரிகின்ற வாசனையில் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு ஒரு கூட்டம் தவிக்கின்றது. இந்த வாசனை இலங்கை மக்களுக்கொன்றும் புதிததல்ல. அதிகார வெறிகொண்ட சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள் கொலை அரசியலில் மிகக் கைதேர்ந்தவர்கள். இலங்கையின் வரலாற்றில் படுகொலைகள் அத்தனையும் அரசியல் தலைமைகளினால் ஊக்குவிக்கப்பட்டு, அரசியல் லாபங்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டன. 2009 ற்குப் பின் உயிர்கள் கொல்லப்படவில்லை, தங்களுடைய அரசியலை முன்னெடுக்க முடியவில்லை என்ற தவிப்பு குறும் தேசியவாத தமிழ், சிங்கள அரசியல் தலைவர்களிடம் தற்போது மேலோங்கி நிற்கின்றது. தமிழ், சிங்கள குறும்தேசியவாதத் தலைமைகள் என்னவிலை கொடுத்தும் தங்கள் இருப்பைத் தக்கவைப்பார்கள். அதற்கு அவர்களுக்கு இப்போதுள்ள ஒரே துருப்புச்சீட்டு தையிட்டி விகாரையும் ஒரு மத – இனக் கலவரமும்.

சிங்கள இனவாதிகளுக்கு எவ்விதத்திலும் குறையாதவர்கள் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி. இவர்களுடைய சந்தர்ப்பவாத அரசியலுக்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு, தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டே இவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவரை முதுகில் குத்தியவர்கள். அப்போது இவர்கள் வே பிரபாகரனின் துப்பாக்கிக்கு கட்டுப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தார்கள். 2009 யுத்தம் மிகத் தீவிரம் பெற்ற காலத்தில் இவர்கள் யாரும் நாட்டில் இல்லை. இவர்கள் எல்லோருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படப் போகின்றார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்படுவார் என்ற விடயம் 2009 முற்பகுதியிலேயே தெரியப்படுத்தப்பட்டு விட்டது. இதனை அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் 2009 முற்பகுதியில் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.

இறுதி யுத்தம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வேர்கள் புலனாய்வுத்துறையின் புலனாய்வுப் பகுப்பாளர் முல்லை மதி கூறுகையில்: இரா சம்பந்தன் வே, பிரபாகரனின் மறைவுச் செய்திக்காக எப்படிக் காந்திருந்தார் என்பதையும் பஸில் ராஜபக்சவோடு இடம்பெற்ற உரையாடலையும் குறிப்பிட்டிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைவரும் அழிக்கப்படப்போகிறார்கள் என்பது இவர்கள் அனைவருக்கும் மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. இருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளையோ அதன் தலைவர்களையோ காப்பாற்ற இன்று தங்களை விடுதலைப் புலிகளாக சித்தரிக்கும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோ, செல்வம் அடைக்கலநாதனோ, சிவஞானம் சிறிதரனோ (அப்பொழுது இவர் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை.) இதற்காகத் துடிக்கவில்லை.

இவர்கள் யாழ் குடாநாட்டு கிணறுகளில் மலசலம் கலந்து மக்கள் நோய்வாய்ப்படுவது பற்றியும் எவ்வித கவலையும் கிடையாது. அந்தக் குடிநீருக்கும் மத்தியப்படுத்தப்பட்ட கழிவகற்றலுக்கும் ஆப்பு வைத்தவரே சிவஞானம் சிறிதரன் மற்றும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போன்ற பா உ க்கள். இவர்களுக்கு தையிட்டியில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரின் காணிகள் இழக்கப்பட்டது பற்றி எவ்வித அக்கறையும் கிடையாது. பா உ சிறிதரன் போன்றவர்களால் முண்டு கொடுத்து நிறுத்தப்பட்ட ரணில் விக்கிரமசிங்க – மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமையில் தான் இந்த விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்றைக்கு துடிக்கும் நீங்கள் அன்று அதனை நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் 1000 விகாரைகள் கட்ட திட்டம் போட்ட சஜித் பிரேமதாஸாவை ஆதரித்த தமிழரசுக் கட்சியில் தான் எஸ் சிறிதரன் இன்றும் தொங்கிக் கொண்டுள்ளார்.

சென்றவாரம் இந்த விகாரை உடைப்பு போலித் தமிழ் தேசிய பா உ க்கள் சஜித் தலைமையிலான எதிர்க்கட்சியைச் சந்தித்து உள்ளது. தமிழ் – சிங்கள பகுதிகளில் உள்ள இனவாத சக்திகளுக்கு, இப்போது நாட்டு மக்களிடையே ஏற்பட்டு வருகின்ற புரிந்துணர்வும், ஒடுக்கப்பட்ட சமூகங்களிடையே ஏற்படுகின்ற நெருக்கமும் பெரும் பதற்றத்தையும் தங்களுடைய இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது. அதனால் தற்போதுள்ள சுமூகநிலையைச் சீரழிக்க நாட்டில் ஒரு இனக்கலவரம் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. அதனால் தான்: பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தையிட்டி விகாரை உடைத்து அகற்றப்பட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்றாற் போல் இவர்களின் பாராளுமன்ற நண்பன் உதயன்கம்பன்பில “தையிட்டியில் உள்ள திஸ்ஸ விகாரையில் தமிழர்களைக் கை வைக்க விடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். இவையெல்லாம் திட்டமிட்டு இனவாதத்தைக் கிளறி இரத்தக் களரியொன்றைக் காண வேண்டும் என இந்த அரசியல் வாதிகள் விடாமுயற்சியில் இறங்கி உள்ளதையே காட்டுகின்றது.

பா உ சிறிதரனின் தமிழரசுக் கட்சிக்கு தையிட்டி விகாரை அங்குரார்பணத்திற்கும் அழைப்பு விடுக்பபட்டிருந்தது. பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் கட்சியில் சட்டத்தரணிகளுக்கா பஞ்சம், அப்படி இருக்கையில் நீதிமன்றத் தீர்ப்புக்க எதிராக விகாரை கட்டப்பட்டதாக சொல்லும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், அந்த வழக்கு இலக்கத்தை ஏன் வெளியிடவில்லை.

தையிட்டியில் மக்களுடைய காணியில் அவர்களுடைய அனுமதியின்றி இராணுவம் புத்தவிகாரை அமைத்தது முற்றிலும் உண்மை. அதனை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டும். ஆனால் தையிட்டி விகாரையை கட்டிய அரசாங்கத்துக்கு ஒரு தூணாக நின்றவர்களே தற்போது விகாரையை இடிக்கச் சொல்லி குரல் எழுப்புகின்றார்கள்.

மேலும் இவ்விகாரை, நயினா தீவு நாக விகாரையின் விகாராதிபதிக்கும் இராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டினால் கட்டப்பட்ட விகாரையாகும். இந்த விகாரை அமைப்பதற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒருவர் தனது 20 பரப்புக் காணியையும் அன்பளிப்புச் செய்துள்ளார். இராணுவம் இவ்வாறான தான்தோறித் தனங்களில் ஈடுபட்டால் அதனைச் சட்டத்தின் மூலம் கையாண்டிருக்க வேண்டும். நீதி மன்றத்துக்கூடாக தடையுத்தரவுகளைப் பெற்றிருக்க வேண்டும். மேல் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்க வேண்டும். பாராளுமன்றத்தில் போராடியிருக்க வேண்டும். ஆனால் இந்த தமிழ் தேசிய சட்டத்தரணிகள் இதுவரை சட்டரீதியாக ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு பொலிஸ் முறைப்பாடு கூடப் பதிவு செய்யப்படவில்லை. ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதும் அவ்வப்போது விகாரைக்கு முன்னால் நின்று படம் எடுத்து போஸ்ற் போடுவதுமாகவே உள்ளனர்.

தங்களுடைய காணிகள் தங்களுக்கு வேண்டும் என்று கோருவதற்கு காணி உரிமையாளர்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் ஒரு விகாரை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அதனை உடைக்கக் கோருவது அல்லது அதனை அப்புறப்படுத்தக் கோருவது. ஒரு ஆரோக்கியமான முடிவல்ல. மேலும் இப்போராட்டம் அரசியல் வாதிகளுக்கு அழைப்புவிடுத்து தற்போது அரசியல்வாதிகளின் போராட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. குறிப்பாக பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தையிட்டி விகாரையை உடைத்து அப்புறப்படுத்தும் போராட்டமாக மாற்றப்பட்டு விட்டது, இந்தப் போராட்டம் காணி உரிமையாளர்களின் கையில் இல்லை. இது ஆரம்பத்திலிருந்தே பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மற்றும் சிவஞானம் சிறிதரனின் இனக்கலவரத்தைத் தூண்டுவதற்கான போராட்டம். அதில் செல்வம் அடைக்கலநாதனும் தெற்கில் உதயகம்பன்பிலவும் இணைந்தகொண்டுள்ளனர்.

இந்த விகாரை கட்டப்பட்டதற்கும் சிவஞானம் சிறிதரனுக்கும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கும் இருக்கும் சம்பந்தம் கூட தேசிய மக்கள் சக்த்தி அரசாங்கத்துக்குக் கிடையாது. அவர்கள் மதம் என்பதை மக்களுக்கு போதையூட்டும் ஒரு நிறுவனமாகவே பார்க்கின்றனர். அதனால் தான் நாக விகாராதிபதியைக் கூட ஜனாதிபதி அனுர சென்று சந்திக்கவில்லை. நாக விகாராதிபதி அனுரவை நம்பமுடியாது என்றும் அவர் மத நம்பிக்கையற்றவர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த மிக முக்கியமான பெண் ஆளுமை மாவீரர்களின் தாய், போராளி தமிழ் கவி அம்மா மாவீலாறு அணை விளையாட்டாக மூடப்பட்டது எவ்விதம் வினையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவை நோக்கிச் சென்றது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் 2006 முதல் பொங்கு தமிழ் நடத்தி போருக்கு அழைத்தபோதும் புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் யாழ்பாணத்து புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள் ஷெல் தங்கள் மீது விழாது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு யுத்த போதையேறி நின்றனர். எவ்வளவுக்கு அதிகமாக மக்கள் சாகின்றார்களோ அவ்வளவுக்கு சர்வதேச நாடுகள் தலையீடு செய்து தமிழர்களுக்கு தீர்வுகொண்டு வந்து தரும் என்று முட்டாள்தனமாக நம்பினர். தமிழர்களை வழிநடாத்திய முட்டாள்தனமான அரசியல் தான் தமிழர்களை இந்நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியது. அதில் யாழ்ப்பாணத்து தமிழ் தலைமைகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் நடந்துமடிந்த யுத்தத்தைப் பயன்படுத்தி நான் உட்பட யாழ்ப்பாணத்து மக்கள் தொகையில் மூன்றில் ஒன்று வெளிநாடு சென்றுவிட்டது. இன்னுமொரு மூன்றில் ஒன்று பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன் போன்று கொழும்பில் ஒரு வீடு யாழ்ப்பாணத்தில் ஒரு வீடு என்று வாழ்கிறது. ஆனால் இவர்களை நம்பினால் தையிட்டி குடும்பங்களுக்கு அவர்களுடைய ஆயுட்காலத்தில் காணி கிடைப்பதற்கான வாய்ப்பு கிடையாது.

அதனால் தையிட்டி உரிமையாளர்கள் முதலில் தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள மக்கள் நலன்சார்ந்த அரசுக்கு தங்களுடைய பிரச்சினையை விளக்கி, ஆதாரங்களை வழங்கி, ஒரு நிரந்தரத் தீர்வுக்கு வரவேண்டும். அந்தத் தீர்வு இனிமேல் விகாரையை இடித்து காணியைத் தர வேண்டும் என்று கோருவதாக இருக்க முடியாது. ஏனெனில் அது இலங்கையில் இன ஐக்கியத்தை சீர்குலைப்பதுடன் எதிர்காலத்தில் தவறான முன்ணுதாரணமாக அமையும். தையிட்டி விகாரை தமிழ் மக்களின் இன ஐக்கியத்துக்கான சமிக்ஞ்யையாக அடையாளமாக மாற வேண்டும். விகாரைக்கு மிக அவசியமான காணியைத் தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பாலும் அனைத்து பௌத்தர்களும் உடன்படுகின்றனர். தமிழ் மக்களும் விதிவிலக்கல்ல. அவர்களும் விகாரையை உடைக்க வேண்டும் அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு தரம்தாழ்ந்துவிடவில்லை. இதனை வைத்து சுயநல அரசியலை முன்னெடுப்பவர்கள் இதிலிருந்து ஒதுங்கினால் மக்களே தங்களுடைய பிரச்சினையை சுமூகமான விழியில் தீர்த்துக் கொள்வார்கள். அதனால் விகாரை உடைக்கப்படக் கூடாது. உடைக்கப்பட மாட்டாது.

தமிழகம் ஒரு காலகட்டத்தில் பௌதத்திற்கு மாறிய போது தமிழகத்திற்கு அருகிலிருந்த வட இலங்கையிலும் பௌத்தம் பரவியது. இலங்கைக்கு பௌத்தத்தை கொண்டுவந்தவர்கள் தமிழர்களே. அதனால் வடபகுதியில் பௌத்த மத வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. பௌத்தம் தமிழர்களுடைய மதம். அதன் பின்னரே அது சிங்களவர்களுடைய மதமானது. ஆனாலும் இந்து சமயமமும் பௌத்தமும் மிகுந்த உறவைக்கொண்ட சமயங்கள். இந்து சமய சாமிகளின் படங்கள் திருவுருவங்கள் இல்லாத பௌத்த விகாரைகள் இலங்கையில் இல்லை.

1980க்கள் வரை யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் கணிசமான அளவில் வாழ்ந்தனர். அவர்களுடைய பேக்கரித் தொழில் மிகச் செழிப்பாக இருந்தது. யாழில் சிங்களவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், வடக்கைவிட்டு துரத்தப்பட்டனர். பின்னர் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தையும் வடக்கையும் விட்டு துரத்தப்பட்டனர். அவர்கள் தங்களுடைய காணி, நில புலங்களை விட்டுவிட்டுத்தான் சென்றனர். வன்னியில் அரச காணிகள் யாழ்ப்பாணத்தாருக்கு வழங்கப்பட்ட போது மலையகத்திலிருந்து வந்த காணியற்ற மக்களுக்கு யாழ்ப்பாண அதிகாரிகள் காணிகளை வழங்கவில்லை. இன்றும் அந்த மக்கள் காணி அற்றவர்களாகவே வாழ்கின்றனர். யாழ்ப்பாணத் தலைமைகள் இனவாதத்தைக் கக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற, வன்னி, மலையகம், கிழக்கு மக்கள் போராடி மாண்டனர். யாழ்பாணத்தார் வெளிநாடு சென்றனர். இந்த அரசியலை ஜி ஜி பொன்னம்பலம் செய்தார். இப்போது அவருடைய பேரன் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் செய்கின்றார்.

வெள்ளாளர் வாழும் இடங்களில் ஒடுக்கப்பட்டசமூகத்தவர் காணிகளை வாங்க அனுமதிப்பதில்லை. இன்றும் ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் சாமிக்கு எட்ட நிற்பதற்காக பல விதிமுறைகள் உள்ளது. இன்றும் யாழ் மண்ணில் ஒடுக்கப்படுகின்ற சமூகங்களின், மலையகத் தமிழர்களின் ஒடுக்குமுறைக்கு குரல் கொடுக்க ஒரு கஜேந்திரகுமார், ஒரு சிறிதரன், ஒரு அடைக்கலநாதன் கிடையாது. ஆனால் பௌத்த விகாரையை உடைக்க நான் முந்தி நீ மூந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனர். ஒரு காலத்தில் கரவெட்டியில் உள்ள கன்பொல்ல போன்ற கிராமங்கள் உருவாகத் தான் இந்த வலதுசாரித் தமிழ் தேசியம் வழிகோலும்.