09

09

ஈஸ்டருக்கு முன் பிள்ளையான் சி.ஐ.டியினரால் கைது ! பயங்கரவாதத் தடைசட்டம் பயன்படுத்தப்படும் !

ஈஸ்டருக்கு முன் பிள்ளையான் சி.ஐ.டியினரால் கைது ! பயங்கரவாதத் தடைசட்டம் பயன்படுத்தப்படும் !

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவால் கட்சி தலைமை காரியாலயத்தில் வைத்து பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தும் நிலையிலேயே இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தற்போதுள்ள குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். திட்டமிட்ட பாதாளக்குழுக்கள், போதைவஸ்து கடத்தல் மற்றும் குற்றங்கள், தேசிய பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு வேறு சட்டங்கள் நடைமுறையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதில் உறுதியாக உள்ளோம் என்றும் அதற்கு அவகாசம் தேவை எனவும் சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் ஏப்பிரல் 21 ஈஸ்டருக்கு முதல் வெளியாகும் என ஜனாதிபதி அநுர சமீபத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னணியில் கோத்தபாய மற்றும் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் துணை இராணுவக் குழுவாக செயற்பட்ட பிள்ளையானின் கைது இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. அநுர தலைமையிலான என்பிபி அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் இரண்டு தடவை கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறைக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

 

அதேநேரம் பிள்ளையான் போன்று விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி துணை இராணுவக் குழுவாக செயற்பட்ட கருணா அம்மானும் முன்னாள் எம்பி சதாசிவம் வியாழேந்திரனும் பிள்ளையானுடன் இணைந்து ‘ கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்றவொரு தேர்தல் கூட்டை உருவாக்கியிருந்தனர். இந்த அமைப்பு உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்னர் ச. வியாழேந்திரன் கைதானார். இப்போது பிள்ளையான் கைதாகியுள்ளார். என்பிபி அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை தேர்தல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது என பிள்ளையான் ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றனர். இன்னொரு பக்கம் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற பிள்ளையான் பலி ஆடாக்கப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது.

 

அரச சேவையில் 30,000 புதிய ஆட்சேர்ப்புகள் – அமைச்சரவை அங்கீகாரம்!

அரச சேவையில் 30,000 புதிய ஆட்சேர்ப்புகள் – அமைச்சரவை அங்கீகாரம்!

அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30,000 பேரை அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஏப்ரல் 7 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . அதில் ஆட்சேர்ப்பு திட்டமும் அனுமதிக்கப்பட்டது. தகைமைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையிலான ஆட்சேர்ப்பே அரசின் கொள்கையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை குறைக்கவும், அரச துறையின் பணிச்சுமையை சமநிலைப்படுத்தவும் என 2025 வரவு செலவுத் திட்டத்தில் ரூ.10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போதைய நிலவரத்தில் 18,853 பேரை அரச சேவையில் இணைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், மொத்தமாக 30,000 பேரை இணைக்கும் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை கோருவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கும் துறைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

மணல் ஊழலில் கைதான முன்னாள் எம்பி வியாழேந்திரன் பிணையில் விடுதலை !

மணல் ஊழலில் கைதான முன்னாள் எம்பி வியாழேந்திரன் பிணையில் விடுதலை !

ஏப்பிரல் 8 ஆன நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் 14 நாட்கள் கழித்து பிணையில் விடுதலை. மணல் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன் இலஞ்சம் பெற உதவிய குற்றச்சாட்டிலேயே வியாழேந்திரன் கைதாகியிருந்தார். இதே வழக்கில் வியாழேந்திரனின் தனிப்பட்ட செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். எனினும் வழக்கு விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான முன்னாள் பதுளை நாடாளுமன்ற எம்பி சாமர சம்பத் தசநாயக்க எம்பியும் இன்று பிணையில் விடுதலையாகியுள்ளார். இதேபோன்று தரமற்ற ஊசிமருந்துகளை ஊழல் செய்து இறக்குமதி செய்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல தொடர்ந்து விளக்கமறியலில் உள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

மலையக மக்களுக்கு கடல் கடந்த இந்தியப் பிரஜை அந்தஸ்தை மோடியிடம் கோரிய எம்பி மனோ கணேசன்!

மலையக மக்களுக்கு கடல் கடந்த இந்தியப் பிரஜை அந்தஸ்தை மோடியிடம் கோரிய எம்பி மனோ கணேசன்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்பியுமான மனோ கணேசன் “மலையக மக்களுக்கு கடல் கடந்த இந்தியப் பிரஜை அந்தஸ்து“ வழங்க கோரியதாக ஹிரு செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. மனோ கணேசனின் அக் கோரிக்கையை மோடி பரிசீலப்பதாக கூறினார் என மனோ கணேசன் ஹிரு செய்திச் சேவைக்கு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது மலையக மக்களின் சமூக மற்றும் கல்வி அபிவிருத்தியை முன்னிறுத்திய கோரிக்கைகைகளை முன்வைத்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாங்கள் அரசியல் கோரிக்கைகளை இந்தியாவிடம் திணிக்கமாட்டோம். இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்புச் செயல்முறையை ஆரம்பிக்கும் போது எங்கள் அரசியல் யோசனைகளை சமர்ப்பிப்போம்.

இந்தியப் பிரதமர் மோடியினுடனான சந்திப்பில் அறிவியல், கணிதம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களை உருவாக்கும் சிறப்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பெண்களுக்கான தாதியர் பயிற்சி நிலையம் அமைக்க இந்திய உதவியை கோரியதாகவும் குறிப்பிட்டார். இந்திய உயர்கல்வி நிறுவனத்துடன் இணைந்துள்ள ஒரு வளாகத்தை உருவாக்கும் நோக்கத்தையும் பகிர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் மறுசீரமைப்பு விரைவில் ஆரம்பம் !

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் மறுசீரமைப்பு விரைவில் ஆரம்பம் !

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உயர் அதிகாரிகளுடன் ஒரு முக்கிய கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை இலாபமுள்ளதாக மாற்றும் முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. ஏர்லைன்ஸின் கடன் மேலாண்மை தொடர்பாக குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டது.

புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நிர்வாக அமைப்புகளை கொண்டு வருவதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் தேசிய விமான சேவையாகவே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைத் தொடர்ந்து செயல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை இலாபம் தரும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தலைவரும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்டார் – நானும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்கின்றேன் – பா உ அர்ச்சுனா

தலைவரும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்டார் – நானும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்கின்றேன் – பா உ அர்ச்சுனா

பெண்களை கேவலப்படுத்தி அவமானப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றத்தில் சிறப்புரிமை தடை செய்யப்பட்டதற்கு எதிரான முறைப்பாட்டை பாராளுமன்ற சபாநாயகரிடம் நேற்று கையளித்தார் பா உ இராமநாதன் அர்ச்சுனா. தன்னுடைய சிறப்புரிமை மீளளிக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தன்னுடைய காணொலியில் சூளுரைத்துள்ளார் பா உ இராமநாதன் அர்ச்சுனா.

இதற்காகவும் அர்ச்சுனா மீது அவரால் பாதிக்கப்பட்ட பலரும் போட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவும் வழக்குகளை நடாத்துவதற்கும், தன்னுடைய காரைத் திருத்துவதற்கும், பண உதவி செய்யுங்கள் – ‘பிச்சை போடுங்கள்’ என்று, புலம்பெயர் தமிழர்களை நோக்கி கேட்டு, ஏப்ரல் 8இல் பா உ அர்ச்சுனா ஒரு பதிவை இட்டுள்ளார்.

தான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பணம் பெறுவதை நியாயப்படுத்துவதற்கு அர்ச்சுனா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரைத் துணைக்கு அழைத்துள்ளார். வே பிரபாகரனும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பிச்சை எடுத்திருந்தார். நானும் அதனையே செய்கின்றேன் என அவர் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்திருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பல கடுமையான அரசியல் விமர்சனங்கள் உள்ளது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட “விடுதலைப் புலிகளின் தலைவர் தன்னுடைய சொந்த தேவைகளுக்கு பணம் கேட்டார். மோசடி செய்தார்” என்ற குற்றச்சாட்டுக்களை வைப்பதில்லை. ஆனால் வே பிரபாகரனையும் மாவீரர்களையும் வைத்துப் பணம் பறிக்கும் கும்பல்கள் பல உலகின் பல பாகங்கிலும் உருவாகியுள்ளது.

‘பா உ அர்ச்சுனா போல் தலைவரும் பிச்சை எடுத்தார் தானும் அந்த விழயில் பிச்சை எடுக்கின்றேன்’ என வழக்குகளை நடாத்த, காரைத் திருத்த, காசை அனுப்பி வைக்கும்படி கோருகின்றார். சுவிஸில் உள்ள அப்துல்லா என அறியப்பட்ட ரகுபதி ‘தலைவர் குடும்பத்துடன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார். அவருக்கு சிகிச்சையளிக்க பணம் வேண்டும்’ என்று கோருகின்றார். 1990க்களின் முற்பகுதியில் தளபதி கிட்டு லண்டனில் இருந்த போது சொன்னது, “எங்களுக்கு எதிரி ஒரு பிரச்சினையில்லை, அவர்களை எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் எங்களோடு கூட இருப்பவர்கள் தான் மிக ஆபத்தானவர்கள்.” அது போல் புலிகளையும் மாவீரர்களையும் பயன்படுத்துபவர்கள் பற்றி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

பா உ அர்ச்சுனா தொடர்பில் அவருடைய சுயேட்சைக்குழுவில் போட்டியிட தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூவரை வழங்கிய பாதிக்கப்பட்ட பெண் அர்ச்சுனா மீது தங்கள் நவாலிப் பகுதி அண்ணன் ஒருவர் அர்ச்சுனாவுக்கு பணம் அனுப்பியதாகவும் ஆனால் இவர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவே இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிக்ரொக் சாளினியால் பாராளுமன்ற சிறப்புரிமையை இழந்த அர்ச்சுனா அதனை மீளக் கோருகின்றார் !

ரிக்ரொக் சாளினியால் பாராளுமன்ற சிறப்புரிமையை இழந்த அர்ச்சுனா அதனை மீளக் கோருகின்றார் !

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கிளிநொச்சி ரிக் ரொக் சாளினியை விபச்சாரி என்று பாராளுமன்றத்தில் கூறியது தெரிந்ததே. ஒரு பெண்ணை விபச்சாரி என்று கூறியது பாராளுமன்ற விதிமுறைகளுக்கு முரணானது என்றும், இது பெண்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் பெண்ணியவாதியும் மனித உரிமைவாதியுமான அருளலிங்கம் சுவாஸ்திகா கண்டித்திருந்தார். அத்தோடு இதனை பாராளுமன்ற பதிவுகளிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சுவாஸ்திகா சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை பலரும் கோரியிருந்தானர். இந்தப் பின்னணியில் பா உ அர்ச்சுனாவின் பாராளுமன்ற சிறப்புரிமை சிறிதுகாலம் பறிக்கப்பட்டது. அதன்படி அவருடைய பாராளுமன்ற உரைகள் வெளியிடப்படாது. அவரும் அதனை தன்னுடைய காணொலிகளில் பதிவிட முடியாது. இந்தத் தடையை நீக்குமாறு அர்ச்சுனா பாராளுமன்றத்தில் நேற்று எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பா உ அர்ச்சுனாவின் பெண்களுக்கு எதிரான மோசமான கருத்துக்களுக்கு அர்ச்சுனா மட்டும் பொறுப்பல்ல அவருக்கு நிதியை வாரி வழங்கும் புலம்பெயர்ந்த மக்களும் வாக்களித்தவர்களும் கூட, பெண்கள் தொடர்பான ஆணாதிக்க மனநிலையோடு இருப்பதாக சுவஸ்திகா அருளலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

ரிக்ரொக் சாளினியை அவமானப்படுத்த முயன்று தற்போது அவமானப்பட்டுள்ள பா உ அர்ச்சுனா, தன்னுடைய சிறப்புரிமையை மீள வழங்காவிடில் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் சிந்தித்து வருவதாகத் தெரிவித்தள்ளார்.

பா உ அர்ச்சுனாவிற்கு எதிரான குற்றச்சாட்டை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர் பிரதம கொரடாவான விமல் ரத்நாயக்கா. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விமல் ரத்நாயக்கா உரையாற்றி இருந்தார். அவர் சுவாஸ்திகா சுட்டிக்காட்டியதை தவறாக சுவாஸ்திகாவை பாராளுமன்றத்தில் அரச்சுனா விபச்சாரி என்று சொன்னதாகக் குறிப்பிட்டார். அதாவது கிளிநொச்சிப் பெண் ரிக்ரொக் சாளினியையே பா உ அர்ச்சுனா பாராளுமன்றத்தில் விபச்சாரி என்று விபரித்தார். அர்ச்சுனா அருளலிங்கம் சுவாஸ்திகாவை பாராளுமன்றத்துக்கு வெளியே விபச்சாரி என்று விபரித்திருந்தார். ஆனால் விமல் ரத்நாயக்கா சாளினி என்று குறிப்பிடாமல் சுவாஸ்திகாவைச் சுட்டிக்காட்டி அர்ச்சுனாவின் சிறப்புரிமையை குறகியகாலம் தடை செய்ய வைத்தார். இதுதொடர்பில் அருளலிங்கம் சுவாஸ்திகா கபிடல் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்:

இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு பெயரை மாறிச் சாளினி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சுவாஸ்திகா என்று சொன்னதை வைத்துக்கொண்டு தன்மீதான ஒழுங்காற்று நடவடிக்கை தவறு என்றும், தான் தமிழர் என்பதால் திட்டமிட்டமுறையில் தனது குரல் ஒடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு தனது குற்றச்சாட்டை சபாநாயகரிடம் பா உ அர்ச்சுனா இன்று கையளித்தார். அர்ச்சுனா தன்மீது விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் வருகின்ற போது தான் ஒரு ஒடுக்கப்படுகின்ற இனம், தமிழீழ விடுதலைப் புலிகளை நேசிப்பவர், தேசியத் தலைவரை நேசிப்பவர் என்ற துருப்புச்சீட்டுக்களை வீசி விளையாடுவதில் கைதேர்ந்தவர். இது அவருடைய கபிடல் ரிவி நேர்காணலில் அம்பலமாகி இருந்தது.