அரசியலில் ஒரு பொது ஊடகம் ……. சாராயம்: – ரி கொன்ஸ்ரன்ரைன்

Alchocol_Labelபல நூறு ஆண்டுகளாக உலக ராஜதந்திர அரசியலில் இரண்டு விடயங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. இவற்றிற்கு அடிமையாகி மண்கவ்வியவர்கள் பலர். பெரியார் ஈ வே ராமசாமி ஊடாக அண்ணாத்துரையைத் தொட்டு நம்ம ஜோன் மேஜர் வரைக்கும் ‘பொம்பிளைப் பிரச்சினை’. சேர்ச்சில் தொடக்கம் சந்திரிக்கா ஊடாக விஜயகாந்த் வரைக்கும் ‘தண்ணிப் பிரச்சினை’.

தமிழ்நாட்டில் கறுத்தக் கண்ணாடி அரசியல்வாதிகள் வலம்வருவதற்கு இரண்டு காரணம் கூறப்படுகிறது. முதலாவது இவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை மற்றவர்கள் அவதானிக்க முடியாது. மற்றையது சம்பந்தப்பட்டவரின் கண்ணின் நிறத்தை அல்லது நிதானத்தை யாரும் கணிப்பிட முடியாது.

அண்மையில் 90 வயதை அடைந்த உலகப் பிரசித்திபெற்ற நெல்சன் மண்டேலாவைப் பற்றி அவருடைய நெருங்கிய நண்பர்கள் கருத்துத் தெரிவித்தபோது… அழகிய பெண்கள் மீது மண்டேலாவிற்கு இருந்த கவர்ச்சியைப் பற்றி பலமுறை தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். “What ever he did in his life Nelson Mondela always had an eye for a good looking women”.

சர்வதேச ராஜதந்திர அரசியல் ஒருபுறம் இருக்க நம்மட லோக்கல் விஷயத்திற்கு வருவோம். போர்க்காலங்களில் வடக்கு கிழக்கு மாகாணம் ஸ்ரீலங்காவின் மதுபான வியாபாரத்தில் முன்னிலையில் இருந்திருக்கின்றது. இவ் மதுபான வியாபாரம் சட்டரீதியாக இடம்பெறாத காரணத்தினால் இதுகுறித்த புள்ளிவிபரங்கள் கணிப்பீடுகள் ஒன்றும் வெளியாகவில்லை. வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மதுபான வியாபாரத்தில் நேரடியாக ஈடுபட்ட இருபெரும் சிங்கள வியாபாரிகளின் கருத்தே இங்கு மூல காரணிகளாக மேற்கோள் காட்டப்படுகிறது. இவ்விரு சிங்கள வியாபார முதலாளிகளும் பல சொத்துக்களுக்கு அதிபதிகள். கொழும்பின் பிரபல வீதியில் மாளிகை போன்ற வீடுகளும் வெளிநாடுகளில் பல சொத்துக்களும் வைத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க அரசு உட்பட சந்திரிகா அரசிற்கும் பணஉதவிகள் புரிந்தனர். இரண்டு முக்கிய கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் ஒரே நேரத்தில் பல லட்சக் கணக்கான பணத்தை வாரி வழங்கியவர்கள். யார் பதவிக்கு வந்தாலும் நாம் எப்போதும் வெல்லும் கட்சிதான் என்ற அரசியல் தத்துவார்த்தத்தை பின்பற்றுபவர்கள். இவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான வியாபாரத்தை தொடக்கி வைத்ததே சந்திரிக்கா அரசின் உயர் அதிகாரிகள் என்று தெரிவிக்கின்றார்கள். விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவும் பிள்ளையானும் பிரிந்தபின் இதே வியாபாரத்தை தாம் கிழக்கிலும் தொடர்ந்துள்ளார்கள். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் கிழக்கு மாகாண பிரிவின் பின் முஸ்லிம் பெயருடன் கூடிய ஒரு முக்கிய நபரும் தமது மதுபான வியாபாரத்தில் முக்கிய தொடர்பாளராக இருந்துள்ளதாக கூறுகிறார்கள்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்னர் தமது வியாபாரத்தில் மிகுந்த மந்த நிலைமை தொடங்கியதாக கூறும் இவர்கள் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மிக உயர்வாக மதிக்கிறார்கள். பண கொடுக்கல் வாங்கல்களில் விடுதலைப் புலிகளைப்போல் நேர்மையானவர்கள். ஒருவரும் இல்லை என பற்றுச் சான்றிதழ்கூட கொடுக்கிறார்கள். தங்களின் மதுபான பௌசர்கள் சொன்ன நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் மிகவும் பவுத்திரமாக திருப்பி கையளிக்கப்படும். சம்பவங்களை பெருமையாக விபரிக்கின்றனர்.

வாழைச்சேனையிலும் அம்பாறையிலும் வவுனியாவிலும் கொள்வரவாகிய மதுபானங்களுக்காக London Tooting பகுதியிலுள்ள கடையொன்றில் பணம் கைமாறப்பட்டுள்ளது. ஜந்து பவுண் நோட்டில் உள்ள இலக்கம் குறிப்பிடப்பட்டு அந்த ஜந்து பவுணை இங்கு Tooting இல் கையளிக்கப்படும் பட்சத்தில் பல ஆயிரக் கணக்கான பவுண்கள் கைமாறப்பட்டுள்ளன. வருபவரை அடையாளப்படுத்துவதற்காக கையளிக்கப்படும் ஜந்து பவுண் நோட்டை ஏற்கும் லண்டன் கடைக்காரர் அந்த ஜந்து பவுணிற்கு சமனான ஜந்து பவுண் குத்திகளை கொடுக்கும் கண்ணியவராம்.
இவர்களின் கணிப்பின்படி போர்க்காலங்களில் ஸ்ரீலங்காவின் அனைத்து மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு மாகாணத்தின் மதுபான வியாபாரம் அதிகளவில் இருந்திருக்கின்றது. சிங்கள பிரதேசங்களில் மதுபான வியாபாரத்தில் ஈடுபடும்போது இவர்கள் பலவிதமான இடையூறுகளையும் செலவுகளையும் ஈடுகொடுக்க வேண்டியிருக்கின்றது. பல தனிப்பட்டவர்களையும் பல திணைக்களங்களையும் தாஜாபண்ண வேண்டியிருந்தது. அதற்கும் மேலாக வரி செலுத்த வேண்டும். ஆக மொத்தமாக 295 ரூபாய்க்கு விற்பனையாகும் 750 ml சாராயத்திற்கு 200 ரூபாய் வரை செலவாகிறது. இதே மதுபானத்தை இவர்கள் வடக்கு மாகாணத்திற்கு விற்கும்போது 100 ரூபாய்தான் செலவாகிறது. மிகுதி அனைத்தும் நயம். அதுமட்டுமல்லாமல் பணம் பவுண்ஸில் லண்டனில் சுளையாகக் கொடுக்கப் படுகின்றது. அதிலும் குறிப்பாக வரி இல்லை. ஒரு இழுபறியோ தாமதமோ இல்லை.

போரில் இடம்பெற்ற உயிரிழப்பு மற்றும் ஏனைய அனர்த்தங்களுடன் இவ்வாறான சமுதாய குளறுபடிகளும் மௌனமாக கூட்டாக வளர்ந்துள்ளன. இதன் தாக்கங்களை சமுதாயம் வளரும் காலங்களில்தான் முகம்கொள்ளப் போகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மொக்குத்தனமான போராட்டம் முள்ளிவாய்க்காலில் கோரத்தனமாக முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை. அதன் விளைவுகளை நாம் தொடர்ந்தும் சந்திக்கத்தான் போகின்றோம்.

Show More
Leave a Reply to thevi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • thevi
    thevi

    ஒரு பகுதியினர் இரத்தம் சிந்திக் கொண்டிருக்க அதன் ஊடாக தம்மை வளர்த்துக் கொண்டவர்கள் அந்த சிங்கள வியாபாரிகள் மட்டுமல்ல தமிழர்களும் குறைந்தவர்களல்லர்.

    இந்த சாராய வியாபாரத்தின் பணமாற்ற உத்தி ஐயன் படத்தில் வருகிறது.

    சமுதாய குழறுபடிகளின் தாக்கம் பல வடிவங்களில் வெளிவரத்தான் போகின்றது. உதாரணமாக வெளிநாட்டிலுள்ளவர்களின் பணங்களில் ஆடம்பர பகட்டு வாழ்க்கையை இதுவரை வாழ்ந்தவர்கள் இனி உழைத்து வாழ்வது பற்றி சிந்திக்கும் போது குரோதமும் கைகலப்புக்களும் மண்வாரித் தூற்றுதலும் மலியப் போகின்றன.

    Reply