இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

“இலங்கையில் என்னை புலி என்றும் கனடாவில் புலி இல்லை என்றும் ஏசுகிறார்கள்.” – கனடாவில் இரா.சாணக்கியன் !

இலங்கையில் என்னை புலி என்கிறார்கள், கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னை பார்க்கின்றேன்.

சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து ஒன்று உள்ளது. இவர் என்ன எங்களுடைய பிரச்சனைகளை கதைக்கின்றார். எங்களுக்காக பேசுகின்றார் என. எனினும் நான் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுகின்றேன்.

அதிலே இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியிலேயே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை பாராட்டுவதனை விடவும், இஸ்லாமியர்களுடைய பாராட்டுக்கள் அதிகமாக வருகின்றது. எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர் சொன்னார் நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று. அது உண்மைதான். என்னை பொறுத்தவரையில் நான் அந்த வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்யவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் பேரினவாதிகளின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரா.சாணக்கியனை மொஹமட் சாணக்கியன் என குறிப்பிட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் – சிறீதரன் வழங்கிய பதில் என்ன..?

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனை கீழ்த்தரமான அரசியல்வாதியென திட்டித்தீர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், எந்தத் தகுதியும் திலீபனுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று  கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை “மொஹமட் சாணக்கியன்“ என தனது உரையில் கூறியிருந்தார்.

எனினும் இதன்போது சாணக்கியன் சபையில்லை என்பதால் உடனடியாக ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி திலீபனின் சர்ச்சைக்குரிய கூற்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் , இராசமாணிக்கம் இராஜபுத்திர சாணக்கியன் என்கிற பெயரை மாற்றி மொஹமட் சாணக்கியன் திலீபன் தனது உரையில் கூறுகிறார். இதுவொரு கீழ்த்தரமான செயலாகும். அதனால், இதனை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை தவறாக கூறுவது பாராளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு முரணானது என்றார். இந்த (திலீபன்) படிக்காத பாராளுமன்ற உறுப்பினரை திருத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொதுமக்களை அச்சுறுத்தி மட்டக்களப்பின் அமைதியை சீர்குழைக்கும் சுமனரத்ன தேரர் – பொலிஸார் வேடிக்கை பார்ப்பது ஏன்..?

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிஸார் கைகட்டி அதனை வேடிக்கை பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசனம் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதன்காரணமாக நேற்றைய தினம் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியிருந்தது. பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும் அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த போராட்டத்தினை குறித்த மத குரு முன்னெடுத்திருந்தார்.

இந்தநிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் குறித்த மத குரு போராடிவருவதாகவம் பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கோரியுள்ளார்.

அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இவர் அவரின் அறையினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியிருந்தார்.
இதன்காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக நேற்றைய தினம் முடங்கியிருந்தது. பிரதேச செயலாளரையும், அரசாங்க ஊழியர்களின் நடவடிக்கைக்கு அச்சுறுத்தும் வகையில் குறித்த பிக்குவின் நடவடிக்கைகள் காணப்பட்டன.

அங்குள்ள ஊழியர்கள் வீதியில் இறங்கி குறித்த பிக்குவை கைது செய்யக்கோரி போராட்டம் நடாத்திய போதும் மக்களையும் ஊழியர்களையும் காப்பாற்ற வேண்டிய பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். பெண் ஒருவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது இவர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏனோ. எமது மக்களுக்கு இவ் நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை வாழும் உரிமையும் இல்லை.

இவரின் இவ்வாறான செயல்பாடுகள் ஆனது எமது மாவட்டத்தில் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. நாடாளுமன்றத்தில் கூட இவரின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்திருந்தேன். இவரினால் எமது மக்களும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். தற்போது ஒரு நாடு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுவது இதுதானா என்ற கேள்விக்குறி எழுகின்றது.

இவ்வாறான செயல்பாடுகளுக்கு மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் அரச தரப்பு அரசியல்வாதிகளை நம்பி இருந்து எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை. எமது மக்களே மென்மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். எமது மக்களுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“பணத்தை எப்படி செலவழிக்கலாம் என்பதற்காக ஒரு வரவு செலவுத்திட்டம்.” – இரா.சாணக்கியன்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பணத்தை எவ்வாறு செலவழிக்க முடியும் என்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனை தெரிவித்தார்.

​​வெளிநாட்டு முதலீடுகள் மூலமே வருவாயை ஈட்டுவதற்கான ஒரே வழியாக இருக்கும் நிலையில் 2022 வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வெட் மற்றும் வரிவிதிப்பு முறை மாற்றப்பட்டாலும், தற்போதைய பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அது போதுமானதாக இருக்காது என இரா.சாணக்கியன் கூறினார்.

கடனை அடைப்பதற்கும் கையிருப்பில் டொலர்களை வைத்திருப்பதற்குமான எந்தவித திட்டங்களும் இந்த வரவுசெலவு திட்டத்தில் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்..” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

“புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளதால்  வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேணும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(10) உரையாற்றிய போதே அரசாங்கத்திடம் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை இந்த வேளையில் முன்வைக்க விரும்புகின்றேன். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலரும் இரட்டைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்.இரட்டைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்வது இலகுவாக இருந்தாலும், அதற்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது டொலருக்கான பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமைக்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள அமைச்சர் உள்ள நாட்டில், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர். எனவே அவர்களுக்கு விரைவாக இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

குறிப்பாக தபால் மூலமாகவேணும் அவர்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கையினை அரசாங்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தும் என நம்புகின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி கோத்தாபாயராஜபக்ஷ சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க மாட்டார்.” – இரா.சாணக்கியன்

“ஜனாதிபதி கோத்தாபாயராஜபக்ஷ சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்குத் தெரியும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஒரே நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என நாம் கேட்கின்றோம். எம்மைப் புறக்கணித்தால் நாம் வேறு எங்கு செல்வது? எனவே ஜனாதிபதியிடம் நாம் எதனையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன செய்வார் என்பது எமக்கும் தெரியும். ஜனநாயகத்தை பாதுகாக்க மாட்டார் என்பதும், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்குத் தெரியும்.

நாட்டில் இன்று ஒருபுறம் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தமது விவசாயத்தை ஏதேனும் ஒரு விதத்தில் முன்னெடுக்க முடியும். ஆனால் மக்களுக்கே பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது.

அடுத்த ஆண்டுக்குள் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நட்டஈடு கொடுத்துவிட்டு மக்களுக்கு ஏற்படும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு எவ்வாறு தீர்வு கொடுப்பது?

மக்களுக்கு ஒரு வேளை உணவு கிடைக்காவிட்டால் ஏற்படும் நிலை என்ன என்பது சகலருக்கும் தெரியும். அடுத்த ஒரு வாரத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். இதனை எவரும் மறுக்க முடியாது. இந்த நெருக்கடியில் கறுப்பு சந்தையின் தேவை அதிகரிக்கும். மக்களும் கறுப்புச் சந்தையை நாடும் நிலைமை ஏற்படும்” என்றார்.

“அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காதீர்கள்.” – இரா.சாணக்கியன்

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காமல் வெளியேறிதன் பின்னர் விமர்சியுங்கள் என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்திலிருந்து கொண்டு ஆளும் கட்சியினர் அரசாங்கத்தினை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்திலிருந்து கொண்டு எதிர்கட்சிக்கான வேலையினை செய்ய முடியாது. அரசாங்கத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் எங்களுடன் இணைந்து அந்த வேலையினை செய்யுங்கள்.

அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் அரசாங்கத்தினை விமர்சிப்பதாகவே நாங்கள் நினைப்போம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் முப்படையை வைத்திருந்த காலம் போய் இன்று பத்துபேருடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றோம்.” – இரா.சாணக்கியன் ஆதங்கம் !

“அபிவிருத்தி என்பது வெறுமனே கொங்கிறீற்றுப் பாதை போடுவதோ கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்று சொல்லி காசைப் பிரித்துக் கொடுப்பதோ அல்ல. எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றமே மக்களின் பொருளாதார நலனுக்கான அபிவிருத்தி என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் முப்படையை வைத்துக் கொண்டிருந்த காலம் போய் இன்று பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டே பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றோம். அவ்வாறு இருக்கையில் எமது பலம், பலவீனம் என்ன என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும்.

இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் வரலாறு காணாத அளவிற்கு மக்களின் எதிர்ப்பினை சந்தித்த அரசாங்கமொன்று செயலில் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் மிகமிகக் குறுகிய காலத்தினுள் மக்களின் எதிர்பைச் சம்பாதித்த அரசென்று சொன்னால் அது இதுவாகத் தான் இருக்கும்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது மாநாட்டிலேயே இதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ராஜபக்ஷ குடும்பத்தின் மூவர் மூன்று விதமான கருத்துகளைச் சொல்லியிருந்தார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் மோசமான நிலைமை குறித்த உண்மையான கருத்தை இதன் போது வெளியிட்டிருந்தார். கடந்த காலங்களிலே தாங்கள் ஒரு தனிக்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களின் கட்சி என்பன மொட்டுவின் பங்காளிகள் என்பதை நேற்றைய தினம் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இவை அனைத்தையும் தாண்டி நாங்கள் தற்போது மட்டக்களப்பின் நிலைமை குறித்துப் பார்த்தால், மட்டக்களப்பில் பசளை இல்லாமல் விவசாயிகள் மிகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறு இருக்கையில் பொங்கலுக்குப் பின்னர் விவசாயிகள் மில்லியனர்களாகப் போவதாக அலட்சியமான கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஏனெனில் இந்த மாவட்டத்திலே விவசாயத்தை நம்பி வாழும் மக்களை மிகவும் கேவலப்படுத்தும் முகமாக பசளை இல்லாவிட்டாலும் விவசாயம் செய்ய வேண்டும், மில்லியனர்களாக ஆக முடியும் என்ற பொய்யான விடயங்களைச் சொல்வதன் ஊடாக பொருளாதாரம் தொடர்பாக அவருக்கு இருக்கும் அறிவே வெளிப்படுகின்றது.

இவர்கள் சொல்வது போல் குறைந்த விளைச்சலில் விவசாயிகள் மில்லியனர்களாக ஆகுவதாக இருந்தால் இந்த மாவட்டத்திலே மக்கள் அரிசியை விடுத்து வேறு எதையாவது சாப்பிட வேண்டும். ஏனெனில் விளைச்சல் குறையுமாக இருந்தால் நெல்லின் விலை அதிகரிக்கும் நெல் விலை அதிகரித்தால் அரிசியின் விலை அதிகரிக்கும். அரிசியின் விலை அதிகரித்தால் அன்றாடம் சாப்பிடுவதற்குக் கூட மக்கள் கஷ்டப்படும் நிலைமையே உருவாகும்.

எப்பாடுபட்டாவது விவசாயிகள் முட்டி மோதி விவசாயத்தில் ஈடுபட்டாலும், அடுத்து இருக்கும் மிக முக்கிய பிரச்சனை யானைப் பிரச்சனை. கடந்த சில நாட்களாக யானை தாக்கத்திற்குள்ளாகி எத்தனையோ பேர் மரணத்தைத் தழுவிக் கொண்டனர். இது மிகவும் கவலையான விடயம். கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று வந்தவர்களிடம் ஒரு கேள்வி. 2020ம் ஆண்டு செம்டெம்பர் மாதம் வரை கிழக்கு மாகாணத்தில் நல்லாட்சி அரசாங்கத்தினால் 670 கிலோமீட்டர் யானை வேலி அமைக்கப்பட்டது. அக்காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட எமது மக்களுக்கு மிக முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற யானை வேலி விடயத்தைச் செய்திருந்தோம். வடக்கு கிழக்கிலே சுமார் 1200 கிலோமீட்டர் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு அரசாங்கத்துடன் இருந்து மக்களுக்கு நன்மை செய்யப் போகின்றோம், கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று வந்தவர்களால் 2020 செம்டெம்பர் தொடக்கம் 2021 செப்டெம்பர் வரை 40 கிலோமீட்டர் யானை வேலி தான் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழர் வாழும் பிரதேசம் ஒன்றோ இரண்டு தான் இருக்கின்றது. அபிவிருத்தி என்பது வெறுமனே கொங்கிறீற்றுப் பாதை போடுவதோ கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்று சொல்லி காசைப் பிரித்துக் கொடுப்பதோ அல்ல. எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றமே மக்களின் பொருளாதார நலனுக்கான அபிவிருத்தி என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையிலே இன்று எங்கள் விவசாயிகள் உரமில்லாமல் களை நாசினிகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இன்று அரசாங்கத்துடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறுமனே தென்னங்கன்றுகளைக் கொடுத்து வளர்க்கச் சொல்லுகின்றார்கள். ஆனால், அந்தத் தென்னங் கன்றுகளுக்கு வண்டு அடித்தால் அதனைத் தடை செய்வதற்கான உரிய கிரிமி நாசினிகள் இங்கு இல்லை. எங்களுடைய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உங்களின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது அபிவிருத்தி அசியல் அல்ல. அண்மையில் காணி அமைச்சர் எமது மாவட்டத்திற்கு வந்த யார் யாருக்கு காணிப் பத்திரம் கொடுத்தார் என்பதை அனைவரும் அறிவார்கள். எமது மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதேநேரம் இயற்கைப் பசளை தயாரிப்பதற்கு காணி வழங்குவதாகச் சொல்லியிருந்தார்கள். அவை அனைத்தும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

எமது மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் சவால் விட்டார் புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதியைக் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யுமாறு, ஆனால் என்னால் கொண்டுவரப்பட்ட கனேடிய முதலீட்டுத்திட்டத்தை அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற பதவியைப் பயன்படுத்தி தடை செய்ததே சிவநேசதுரை சந்திரகாந்தன் தான்.

எங்களால் கொண்டுவரப்பட்ட திட்டத்தையும் தட்டிக் கழித்து விட்டு எமது மண்ணையும் காணியையும் அபகரித்து விற்ற நீங்கள் மில்லியனர், பில்லியனர் ஆகுவதற்கு எமது மாவட்ட மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

“ஒரு நாடு ஒரு சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு ஒரு குற்றவாளியை தலைவராக்கியுள்ளார்கள் – இரா.சாணக்கியன்

“நாட்டின் சட்டத்தினை மதிக்காத ஒருவரை ஒரு நாடு ஒரு சட்டம்  என்னும் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்துள்ளார்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசனம் வெளிட்டுள்ளார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இன்று காலை ஜனாதிபதியினால் புதிய செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த செயலணிக்கு கலகொடே அத்தே ஞானசார தேரர் தலைமைவகிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது இந்த நாட்டில் இருக்கும் ஒரு நாடு ஒரு சட்டத்தினை அமுல்படுத்துவதற்காக அந்த செயலணி தொடர்பில் வெளியான செய்தியில் பார்க்ககூடியதாகவுள்ளது.

இந்த நாட்டில் உள்ள சட்டத்தினை அமுல்படுத்தினாலேயே போதுமானது. இருக்கின்ற சட்டத்தினை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதே இந்த நிலைப்பாடாகும். ஜனாதிபதிக்கு வேண்டப்பட்டவர்கள், தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு ஒரு சட்டமும், வடகிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமும் என்ற நிலைப்பாடில்லாமல் ஒரு சட்டத்தினை அமுல்படுத்துங்கள் என்றே நாங்கள் கூறியிருந்தோம்.

அதனைவிடுத்து புதிதாக ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயணியை உருவாக்குவதன் மூலம் இலங்கை நாட்டின் சட்டத்தினை மதிக்காத ஒருவரை ஜனாதிபதியாக கொண்டுவந்துள்ளனர். இந்த சட்டத்திற்கு எதிரான எங்களது கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். எதிர்காலத்தில் இதன் ஊடாக தமிழ் பேசும் மக்கள் பாரிய விளைவுகளுக்கு முகம்கொடுக்கும் நிலையுருவாகும்.

இன்று மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடிவருகின்ற நிலைகாணப்படுகின்றது. இன்னும் இரண்டு வருடத்தில் இந்த நாட்டில் பசியினால் மக்கள் உயிரிழக்கும் நிலையேற்படும். இவ்வாறான நிலையில் இலங்கையில் மக்களை திசைதிருப்புவதற்காக போலியான விடயங்களை செய்யாமல்,நாட்டு மக்களின் நலனுக்காக செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் டுவிட்டரிலும் பதிவு செய்துள்ள சாணக்கியன் “

நாட்டில் சட்டத்தை அமுல்ப்படுத்த முடியாது என்றால் எதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும்..? குற்றவாளி ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை வகிப்பது கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாகவே இருக்கிறது என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

“கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காக கொண்டுசெயற்படுகின்றார்.” – இரா.சாணக்கியன்

“கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காக கொண்டுசெயற்படுகின்றார்.”என  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

களுவாஞ்சிகுடியில் உள்ள எனது அலுவலகத்தில் திருகோணமலையிலிருந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் விசாரணைக்காக வருகைதந்திருந்தார்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மண் அகழ்வு விடயமாக கேட்கவிரும்புவதாக கேட்டிருந்தார்.அதற்கு நான் இணக்கம் தெரிவித்திருந்தேன்.சரியான விடயத்தினை செய்யப்போகின்றார்கள் என்று நம்பியிருந்தேன்.

ஆனால் 10-09-2021 சிங்கள பத்திரிகையொன்றில் கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்திருந்த செய்தியொன்று வெளிந்திருந்தது. அதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்த கருத்தினை வைத்து ஆளுனரினால் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரிடம் 09ம் திகதி ஒரு முறைப்பாட்டினை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரை என்ன என்பது கூட தெரியாமல் கிழக்கு மாகாண ஆளுனர் இவ்வாறாக நடந்துகொள்வது மிகவும் கவலையான விடயம். கிழக்கு மாகாண ஆளுனரை பொறுத்தவரையில் அவர் கிழக்கு மாகாணத்தில் முற்றுமுழுதாக தமிழ் பேசும் மக்களுடைய விடயங்களை சரியான வகையில் கையாளாகதவராகவே இருந்துவருகின்றார்.

கடந்த காலத்தில் மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை காணி விடயம் தொடர்பில் அவரின் செயற்பாடுகள்,மண்மாபியாக்களை கட்டுப்படுத்திலான அணுகுமுறைகள்,மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அவர் நடந்துகொள்ளும் விதங்களை பார்க்கும்போது கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காக கொண்டுசெயற்படுகின்றார்.கிழக்கு மாகாண ஆளுனரின் செயற்பாடுகள் பொலிஸாரையும் நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடாவேயுள்ளது.

நாடாளுமன்றத்தில் நான் பேசிய ஒரு விடயத்தினை இவ்வாறு விசாரணைசெய்யுமாறு கூறினால் வருங்காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சம்கொள்ளும் நிலையே ஏற்படும். கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாத அரசியலை செய்கின்றது என்று அவர் ஊடகங்களுக்கு எனது பெயரை கூறி தெரிவித்தது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் என முறையிட்டபோதிலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அண்மையில் கூட  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் கைதுசெய்யப்பட்டது அவரது சிறப்புரிமையினை மீறும் ஒரு செயல்.தியாக தீபம் திலிபன் நினைவுதினத்தினை அமைதியான முறையில் அனுஸ்டித்தபோது அவரை கழுத்தைப்பிடித்து இழுத்துச்சென்றதானது பாராளுமன்ற உறுப்பினர் என்றதுக்கே மதிப்பளிக்காத தன்மையினை அங்கு காணமுடிந்தது.கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கும் சிறப்புரிமையை மதிக்கவேண்டும்.

அதிகாரிகளின்  இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகத்தான்  நாடாளுமன்ற சிறப்புரிமையும் சவாலுக்குவந்துள்ளது.இது தொடர்பில் சபாநாயகர் தனது கவனத்தினை செலுத்தவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையினை பாதுகாக்கவேண்டியது அவரின் பொறுப்பு. கிழக்கு மீட்பு கோசத்தினை செய்துவந்தவர்கள் இன்று காணி,மண் என பல கொள்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.இவர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக ஏதாவதுசெய்யவேண்டும்.

இன்று ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200பேருக்கு மட்டுமே இவர்களினால் வேலைவாய்ப்பினைப்பெற்றுக்கொடுக்கமுடிந்தது. 2021ஆம் ஆண்டு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் 33325பேருக்கு இலங்கையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.இதில் சிங்கவர்களுக்கு 31517பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களுக்கு 1060பேருக்கு வழங்கப்பட்டுள்ளது,748முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 33325பேரில் வெறும் ஆயிரம் தான் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் 25வீதத்திற்கு மேல் தமிழ் பேசும் மக்கள் வாழும்போது இனவிகிதாசார அடிப்படையில் வழங்கியிருந்தால் கூட இதில் 8000பேருக்காவது நியமனங்கள் வழங்கியிருக்கவேண்டும்.இந்த விடயத்தினைக்கூட உங்களால் கையாளமுடியாவிட்டால் உங்களால் என்ன அபிவிருத்தியை செய்யமுடியும்.

அண்மைக்காலமாக தூக்கத்திலிருந்த சில இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கும் இங்கும் கருத்துச்சொல்வதும்,ஒருநாளும்  நாடாளுமன்றத்தில் உரையாற்றாதவர்கள் இன்று பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.சாணக்கியன் பேசுகின்றார் என்ற காரணத்தினால் உங்களது மக்களுக்கு ஏதாவது குரல்கொடுக்கவேண்டும் என்று உங்களுக்கு ஆர்வம் வந்ததை வரவேற்கின்றேன்.

20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் 748 முஸ்லிம்களுக்குதான் நியமனம் வழங்கப்பட்டுள்ளது தொடர்பிலாவது சிந்திருக்கவேண்டும்.தனிப்பட்ட இலாபங்களுக்காக மாறிவிட்டு என்னை விமர்சிக்கவரவேண்டாம்.நான்  நாடாளுமன்றத்தில் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுப்பேன்.இதுவே எங்களது கட்சியின் நிலைப்பாடுமாகும்.

தேசிய இனவிகிதாசாரத்தில் நியமனங்களைக்கூட பெற்றுவழங்கமுடியாதவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதானது தங்களது தனிப்பட்ட சுயலாபங்களுக்காகவேயாகும். என தெரிவித்தார்.