எம்.ஏ.சுமந்திரன்

எம்.ஏ.சுமந்திரன்

“பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதன் கீழ் உள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.” – எம். ஏ. சுமந்திரன்

நாட்டிற்கு வரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு செவ்வாயக்கிழமை தமிழ் தேசியக்கூட்டமைப்பை சந்திக்கின்ற போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்று முழுதாக நீக்க வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துவோம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இராஜாங்க அமைச்சரொருவரால் அச்சுறுத்தப்பட்ட அரசியல் கைதிகளை இன்று (25) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இராஜாங்க அமைச்சரினால் துன்புறுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்து பேசியிருக்கின்றோம்.  கடந்த 12 ஆம் திகதி மாலை 6.05 மணியளவில் சிறைச்சாலைக்கு பொறுப்பாக உள்ள இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்கு வந்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இருக்கின்ற கைதிகளை தன் முன்பாக கொண்டு வந்து நிறுத்தி அவர்களை மிரட்டி அனைவரையும் முழங்காலில் நிற்க வைத்து மிக மோசமாக நடந்துகொண்ட சம்பவம் பற்றியும் அதில் இருவரை மிகவும் கூடுதலாக பயமுறுத்தி தன்னுடைய கைத்துப்பாக்கியை அவர்களின் தலையில் வைத்து சுடுவதற்கு ஆயத்தமான விடயங்கள் அனைத்தையும் நாங்கள் நேரடியாக கேட்டறிந்துள்ளோம்.

இது தொடர்பான விசாரணைகள் இடம் பெறுவதாகவும் அறிந்துள்ளோம். மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. தற்போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமித்துள்ள விசாரணைக் குழுவும் விசாரணை செய்கின்றது. இதனைவிடவும் கூடுதலான விசாரணைகள் இடம்பெறும் என நாம் அறிகின்றோம். இந்த சம்பவங்கள் உண்மையாக இடம்பெற்ற நிகழ்வுகள் இதில் எவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

கடந்த நாடாளுமன்ற தினத்தில் இவ்விடயம் எழுப்பப்பட்ட போது இந்த விடயத்திற்கு பொறுப்பாக உள்ள அமைச்சரவை அமைச்சரான நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டார். இரண்டு தடவைகள் திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்டார். கைதிகளிடமும் அவர்களின் உறவினர்களுக்கு இதன் காரணமாக ஏற்பட்ட மன உழைச்சலுக்காகவும் மன்னிப்பு கேட்டார். ஆகவே நடக்காத விடயத்திற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இந்த சிறைச்சாலைகளில் இருந்து தமிழ் பிரதேச சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட வேண்டும். கொரோனா காலத்தில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர்கள் மாற்றப்பட்டு இருந்தவர்கள். எனவே யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற முடியாது என எவரும் சொல்ல முடியாது. வவுனியாவில் உள்ளது விளக்கமறியல் சிறையே. அது சிறிய இடம். எனவே முன்னர் நிர்வாகத்திற்கு தேவையானதாக யாழ்ப்பாணத்திற்கு மாற்றியிருந்தது போல இவர்களது பாதுகாப்பு கருத்தியும் விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெற வேண்டுமாக இருந்தால் அவர்கள் அவ்வாறான சூழலுக்குள் மாற்றப்பட வேண்டும். எனவேதான் அவர்கள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க கூடியதாக இருக்கும். பயம் இல்லாமல் சாட்சியம் வழங்க கூடியதாக இருக்கும். வெளியில் இருக்கும் சாதாரண மக்களே சாட்சியம் வழங்க அச்சப்படும் சூழலில் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர்கள் அது குறித்து பயப்படுவது நியாயம் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
இவர்கள் நீண்ட காலமாக விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாமல் வழக்குகள் நிறைவு பெறாமல் வைக்கப்பட்டுள்ளவர்கள். அவர்களுக்கு எதிராக நீண்ட காலமாகியும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. வெறுமனே நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமறியல் நீடிப்பு மாத்திரம் நடைபெறுகின்றது. ஆகவே இவர்களது காலம் நீடிக்கப்படாமல் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். நாம் பல காலமாக கேட்டு வரும் விடயம் இது.

முற்றுமுழுதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோருகின்றோம். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது. அதனை நீக்குவதாக வாக்குறுதி கொடுத்து நீக்காத காரணத்தால்தான் ஐ எஸ் பி வரிச்சலுகை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு எதிர்வரும் வாரங்களில் இங்கு வருகின்றார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்புடனும் செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்பதனையே நாம் வலியுறுத்துவோம். அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கின்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

இதனை அரசாங்கம் செய்தால் மாத்திரமே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கிடைக்க கூடிய சில சலுகைகளை அவர்கள் கோரக்கூடியதாக இருக்கும். இது நாட்டு மக்களுக்கும் முக்கியமான விடயம். பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளும் நிலையில் வரிச்சலுகையும் இல்லாமல் போவது மக்களின் வயிற்றில் பாரிய அடியாக இருக்கும். ஆகவே அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதன் கீழ் உள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என நாம் கோருகின்றோம் என தெரிவித்தார்.

“ஐ.நாவில் ஜனாதிபதி கூறிய விடயங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது.” – நாடாளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் !

“வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதே தற்போதிருக்கும் பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றில் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரை சந்தித்த ஜனாதிபதி நாட்டின் பொறுப்புக்கூறல் தொடர்பாக வினைத்திறனாக செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை உடனடியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றது.

ஆனால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அந்த கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்டவகையில், எந்தவிதமான வெளிவாரி பொறிமுறைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதேபோன்றுதான் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

ஆனால் ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கடந்த யூலை மாதம் நடத்தவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதுடன், பின்னர் அந்த சந்திப்பை நடத்த திகதி ஒதுக்குவதாக கூறி 2 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் அதற்கான திகதி ஒதுக்கப்படவில்லை.

அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எம்.ஏ.சுமந்திரன் கோரினார்.

“தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல் தயவுசெய்து உங்கள் வீட்டிற்கு திரும்புங்கள்.” – எம்.ஏ.சுமந்திரனிடம் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை !

“ரோம் சாசனத்தில் கையெழுத்திட இலங்கையை வலியுறுத்துங்கள். இல்லையேல் தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டிற்குத் திரும்புங்கள்.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அங்கு மேலும் பேசிய அவர்கள்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர OMP இடத்தில் அல்ல. தமிழர்களையும் விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரணைக்கு கொண்டு வருவதன்  ஊடாக சுமந்திரன் தனது வழக்கு வலுப்பெறும் என்று கூறுகிறார்.

அவர் இங்கே என்ன பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் கூறுகிறோம். சுமந்திரன் மற்றும் அவரது நண்பர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை இலங்கையை ரோம் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

இந்த ரோம் சட்டத்தில் கையெழுத்திடாமல், நீதி வழங்கப்படாத நிலமையே உள்ளது.  எனவே, நாங்கள் இந்த விடயத்தில் சுமந்திரனை மழுப்ப வேண்டாம் என கேட்கிறோம். சில செயல்களைக் செய்து காட்டுங்கள். ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு இலங்கையைக் கோருவதற்கு உங்களால் முடியாவிட்டால், தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டிற்குத் திரும்புங்கள்.

நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. நீங்கள் தமிழர் தரப்பை அழிக்கிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.

 “நாங்கள் எந்த சமூகத்துக்கும் எதிரானவர்கள் அல்ல.” – அம்பாறையில் எம்.ஏ.சுமந்திரன் !

“நாங்கள் எந்த சமூகத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. இனவாதத்தின் பெயரால் தமிழ்  சமூகத்திற்கு தீமை செய்ய வேண்டாம்.” என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி முக்கியஸ்தர்களுடன் காரைதீவு பிரதேசத்தில் நூலக வளாகத்தில் இன்று   இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

நாங்கள் நீதி , நியாயத்தை தூய மனதோடு செய்பவர்கள் . எந்த சமூகத்திற்கும் தீங்கு வரக்கூடாது என்று மிக தெளிவோடு எமது கருத்துகளை முன்வைக்கின்றோம் .

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத்திற்கு எதிராக முஸ்லிம் தலைவர்களை விட குரல் கொடுத்தோம். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக பலவித இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக சரியாக நியாயமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்கவில்லை என்று ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. இதனை சீர்செய்ய வேண்டிய கடப்பாடு முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது.

முஸ்லிம் மக்கள் இந்த விடயம் தொடர்பாக கவனிக்கப்பட வேண்டியது நியாயத்திற்காக பேசுகின்றார்கள் யார் என்பதனை கண்டறிய வேண்டும். தங்களது சொந்த நன்மைக்காகவும், வியாபாரத்திற்காகவும் செயற்படுகின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். இனவாத அடிப்படையில் அல்லாமல் நீதி நியாயத்திற்காக முன்னிற்கின்றவர்களை ஆதரிக்க வேண்டும்.

நாங்கள் எந்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எங்கள் தமிழ் சமூகத்திற்கு எதிரான அநீதிகளை தட்டி கேட்கின்ற பிரதான பொறுப்பு எங்கள் தோள்களில் இருக்கின்றது. அதனை செய்வோம். பாதிக்கப்பட்ட எந்த சமூகத்திற்கும் குரல் கொடுக்கப்பட்டதை அண்மை காலத்தில் பலர் கண்டுள்ளனர் சிலர் நன்மை பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகங்கள் கூடிக்கொண்டே போகிறது. கொரோனாவை காரணம் காட்டி செய்வதொன்று மற்றது காலாகாலமாக மாற்று சமூகத்தினர் செய்கின்ற அடாவடிகள் வீரியம் பெறுகின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக முக தோற்றத்தை வைத்து கொண்டு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கம் செய்ய வேண்டிய பல விடையங்களை தடுத்து வருகின்றனர். இங்கிருந்து அவர்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி உங்களுடைய சொந்த நன்மைக்காக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களது இருப்பை கேள்விக்குறியாக்க வேண்டாம்.

இனவாதத்தின் பெயரால் தமிழ்  சமூகத்திற்கு தீமை செய்ய வேண்டாம் என அம்பாறை மாவட்டதிலிருக்கும் ஏனைய சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள் என தெரிவித்தார்.

“ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.” – எம்.ஏ. சுமந்திரன்

“ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாகரசபை முதல்வர் ரி.சரவணபவான் மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு இன்று வியாழக்கிழமை (22) வந்தது அதில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களை கடந்த பெப்பிரவரி நாங்கள் தான் ஆரம்பித்து வைத்தோம். ஆகவே மக்களுடைய போராட்டங்கள் அனைத்துக்கும் எங்களுடைய ஆதரவு இருக்கின்றது அரசாங்கம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவசரமாக மக்களிடம் இருந்த செல்வாக்கை முழுமையாக இழந்து நிற்கின்றது.

நாங்கள் எந்த நாட்டுக்கும் சாந்தவர்கள் அல்ல. எதிரானவர்களும் அல்ல ஆனால் இலங்கைவாழ் தமிழ் மக்களை பொறுத்தளவிலே எங்களுடைய அரசியல் பிரச்சனை சம்மந்தமாக இந்தியா தமிழ் மக்கள் சார்பிலே சர்வதேச உடன்படிக்கையை 1987 ம் ஆண்டு கைச்சாத்திட்டது அது முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. அதன்காரணமாக நாங்கள் இந்தியாவுடன் நெருங்கி செயற்படுகின்றோம் இந்திய அரசும் தொடர்ச்சியாக அதிலே உள்ள விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய கருத்தை மிகவும் ஆணித்தரமாக சொல்லிவருகின்றனர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பகையிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தியாவினுடைய கரை எல்லை இலங்கை கரை எல்லை 30 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்றது. இந்தியாவினுடைய பாதுகாப்பு நிமிர்த்தமாக இந்தியா கரிசனையாக இருப்பது எவரும் ஏற்றுக் கொள்ள கூடிய விடயம்.

அதேவேளையிலே சீனா இலங்கைக்குள் வந்து காலடி எடுத்து வைக்கும் விடயமாக மற்றைய நாடுகள் விசேடமாக ஜனநாயகத்தை பேணுகின்ற மனித உரிமையை மதிக்கின்ற நாடுகள் இங்கே வந்து இலங்கை அரசாங்கத்தோடு நட்புறவு பேணி தங்களுடைய விழுமியங்களை பரப்புவது நல்ல விடையம்.

ஆனால் சீனாவை பெறுத்தவரையில் அங்கு ஜனநாயகம் இருப்பது எவருக்கும் தெரியாத விடயம் ஒரு கட்சி ஆட்சி. மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை மனித உரிமைகள் என்றால் அது என்னவென்று கேட்கின்ற அளவுக்குதான் சீனாவினுடைய நிலைப்பாடு

ஐ.நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக 2012 இருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா அந்த தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையிலே பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையிலே மனித உரிமை மீறல்களுக்கு அதிகமாக முகம் கொடுக்கின்றவர்கள் என்ற வகையிலே. ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையிலே. சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.

ஆகவே நாங்கள் உயரியதாக கருதுகின்ற விழுமியங்களை கொண்ட நாடுகள் இலங்கைக்கு அறிவுரை கூறுவது இலங்கையில் ஈடுபடுவது வரவேற்கதக்க விடயம் என்றார்.

“ரிஷாட்பதியுதீன் வீட்டில் நடந்த அசம்பாவிதம் இனிமேல் இடம்பெறாது தடுக்க வேண்டும்.” – எம்.ஏ சுமந்திரன்

“ரிஷாட்பதியுதீன் வீட்டில் நடந்த அசம்பாவிதம் இனிமேல் இடம்பெறாது தடுக்க வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் வீட்டிலே பணிபுரிந்து, தீக்காயங்களுக்கு உற்பட்டு, கடந்த 15ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணமும் அதைத் தொடர்ந்து வெளிவருகின்ற தகவல்களும் முழு நாட்டு மக்களுக்கும் மிகவும் வேதனையை அளிக்கின்றதாக இருக்கின்றது.

ஈடு செய்ய முடியாத இவ் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் தெரிவித்து நிற்பதோடு, அவர்களது துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம் என்பதனையும் தெரிவிக்கின்றோம்.

இந்த துர் செயலை நாம் மிக வன்மையாக கண்டிப்பதோடு, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என்றும் குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் முறையான தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதனையும் இச்சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக நாம் வேண்டி நிற்கின்றோம்.

வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக  கல்வியை தொடரமுடியாது சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதும், பல்வேறு வகையான துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு சிறார்கள் முகம்கொடுப்பதும் அண்மைய காலகட்டத்தில் மிகவும் அதிகரித்திருக்கின்றது. இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களது கல்வி உரிமைகள் தொடர்பான நாட்டின் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தபடுவதனை வலியுறுத்துகிறோம்.

தொடர்ந்தும் எதிர்காலத்தில் இவ்விதமான அசம்பாவிதங்கள் இடம்பெறாது இருக்க அரசு மற்றும் அதிகாரிகளோடு பொதுமக்களும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செல்லப்பட வேண்டியது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குருந்தூர் மலையில் இந்து மக்கள் சென்று வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்வோம்.” – எம்.ஏ.சுமந்திரன்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கடந்த 30.01.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தினைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அன்று வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்கள் சிலவற்றினைக் கையளித்திருந்தனர்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்து வழக்குத் தொடர்வது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றினை கையளித்திருந்தனர்.

இச் சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை சம்மந்தமாக சில வருடங்களுக்கு முன்பிருந்தே ஒரு பிணக்கு ஏற்பட்டது. அது தொடர்பாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழக்கொன்று தாக்கல்செய்யப்பட்டு அதிலே ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டிருக்கின்றது. இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்களத்தினர், அமைச்சரோடு வந்து அங்கே இருந்த வழிபாட்டுச்சின்னத்தை அகற்றி ஒரு புத்தர் சிலையை வைத்து புதியதாக தொல்பொருள் ஆராய்ச்சி என்று ஆரம்பித்துள்ளார்கள்.

ஆகையினாலே இது தொடர்பாக வழக்கு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்காக, கடந்த 2018ஆம் அண்டு தாக்கல்செய்யப்பட்ட AR/673/18 என்ற வழக்கின் ஆவணப் பிரதியை முழுமையாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என்னிடம் கையளித்திருக்கின்றார்.

அந்தவகையில் இது தொடர்பான அடுத்தடுத்த நடவடிக்கைகள், அதாவது அந்த இடத்திலே இந்து மக்கள் சென்று வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.

“மாகாண சபை முறைமை முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டிக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஓர் ஆட்சியாக மலர வேண்டும்.”  – எம்.ஏ.சுமந்திரன்

“மாகாண சபை முறைமை முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டிக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஓர் ஆட்சியாக மலர வேண்டும்.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். அல்வாய் கிழக்கு, இலகடியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் – சிங்களப் புத்தாண்டு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டிலே பலவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன. பொருளாதாரப் பிரச்சினை இப்போது முக்கியமாக மேலோங்கி நிற்கின்ற இந்தச் சூழ்நிலையிலேயே இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு வழியில்லாமல் இருப்பவர்களை நினைவு கூருகின்றோம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்தப் புத்தாண்டிலாவது ஒரு விடிவு ஏற்பட வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருக்கின்றார்கள். அந்த இலக்கை அடைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

எங்களுடைய முயற்சி ஒருபோதும் கைவிடப்படமாட்டாது. ஆகையினாலே அனைத்து மக்களுக்கும் நாங்கள் வாழ்த்துச் சொல்லுகின்ற அதே வேளையில், விசேடமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலையை நாங்கள் வேண்டி அதற்காக உழைப்போம் என்று உறுதி கூறுகின்றோம்.

அரசுக்குள்ளே மாகாண சபைத் தேர்தல் நடத்துவது பற்றி பெரியதொரு இழுபறி நடந்து கொண்டிருக்கின்றது என்று எங்களுக்குத் தெரிகிறது. அரசு அனைத்து மாகாண சபைகளையும் கைப்பற்ற வேண்டும் என்று சிந்திக்கின்றார்கள். ஆனால், கடும்போக்குவாத பின்னணியைக் கொண்ட பலர் – குறிப்பாக இந்த அரசைக் கொண்டு வந்தவர்கள் – விசேடமாக ஜனாதிபதியின் வெற்றிக்காக உழைத்த இனவாத சிந்தனை உள்ள கடும்போக்குவாதிகள் மாகாண சபை முறை அகற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்து வருகின்றார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம். ஆனால், வெறுமனே இருக்கின்ற மாகாண சபை முறைமையே நாங்கள் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். ஆனால், அது முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டிக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஓர் ஆட்சியாக மலர வேண்டும். அதற்கான எங்களுடைய யோசனைகளை இந்த அரசு நியமித்துள்ள அரசமைப்பு வரைபு குழுவிடம் முன்வைத்துள்ளோம். ஆகையினாலே எங்களுடைய முயற்சி இது தொடர்பாக தொடர்ந்து நடைபெறும். மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என மேலும் தெரிவித்துள்ளார்.

“தொல்லியல் திணைக்களத்துக்கு புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கோ விகாரைகள் கட்டுவதற்கோ அவர்களுக்குரிய சட்டத்திலே எந்தவொரு அதிகாரங்களும் கிடையாது.” – எம்.ஏ.சுமந்திரன்

“தொல்லியல் திணைக்களத்துக்கு புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கோ விகாரைகள் கட்டுவதற்கோ அவர்களுக்குரிய சட்டத்திலே எந்தவொரு அதிகாரங்களும் கிடையாது.” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கோயில் வளாகத்தில் நேற்று(10.04.2021) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “உருத்திரபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள மேட்டில் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொல்லியல் திணைக்களத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள சட்டத்தில் அவர்களுக்கு உள்ள அதிகாரமானது, தொன்மை வாய்ந்த புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது மட்டுமேயாகும். புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கோ விகாரைகள் கட்டுவதற்கோ அவர்களுக்குரிய சட்டத்திலே எந்தவொரு அதிகாரங்களும் கிடையாது.

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கோயில் வளாகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அவ்வாறான ஆராய்ச்சிகள் தமிழ் தரப்பையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த தடவை குறித்த கோயிலுக்கு வந்திருந்த தொல்பொருள் திணைக்களத்தினரின் நடவடிக்கைக்கு ஊர் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அவர்கள் நடவடிக்கையைக் கைவிட்டுப் போயுள்ளார்கள். இந்நிலையில், தொல்லியல் திணைக்களம் விகாரைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தால் அதனை நாம் வலுவாக எதிர்ப்போம்.

இதேவேளை, எமது பிரதேசங்களிலே புராதனச் சின்னங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவ்வாறான புராதனச் சின்னங்களை அவர்கள் ஆராய்ச்சி செய்யலாம். நாம் தொன்மை வாய்ந்த ஒரு இனம் என்ற நிலையில் எமது பிரதேசங்களில் நிச்சயமாக பல தொன்மை வாய்ந்த இடங்கள் இருக்கும். எனவே, அவை ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இதன்போது, தமிழர்கள் எப்போதிருந்து இங்கே வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

எனவே, அவ்வாறான ஆராய்ச்சிகள் செய்யப்படும்போது தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள், துறைசார் உத்தியோகத்தர்கள், துறைசார் மாணவர்கள் எல்லோரையும் இணைத்து அந்த ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சிங்கள மக்கள் மத்தியிலும் துரோகி எனப்படுகின்றேன் தமிழ் மக்கள் மத்தியிலும் துரோகியாக நான் சொல்லப்படுகின்றேன்.” – மட்டக்களப்பில் எம்.ஏ.சுமந்திரன் !

“சிங்கள மக்கள் மத்தியிலும் துரோகி எனப்படுகின்றேன் தமிழ் மக்கள் மத்தியிலும் துரோகியாக நான் சொல்லப்படுகின்றேன்.” என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதில் வழங்கினார்.

IMG 0133

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் சர்வதேசத்திடமே இன்று நீதிகோரி நிற்கின்றோம்,சர்வதேசத்தின் அறிக்கைகளை நாங்கள் சாதகமாகவே பாவிக்கின்றோம்.இந்த அறிக்கைகளுக்கு எதிராக யாரும் கருத்துகளை தெரிவித்ததாக நான் அறியவில்லை. இருதரப்பினரும் போர்க்குற்றம் செய்தார்கள் என்று நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்திடமிருந்து எங்களுக்கு நீதியும் ஆனால் நாங்கள் சொல்வதையே அங்கிருந்து சொல்லவேண்டும் என்பதை யாரும் எதிர்பார்க்கமுடியாது. அனைத்து பக்கங்களையும் விசாரணைசெய்து சரியான தீர்மானங்களையே அவர்கள் எடுப்பார்கள். விசாரணைகள் நடந்துமுடிந்துவிட்டது.அதனை நீதிமன்ற பொறிமுறைக்குள் கொண்டுசெல்லவேண்டுமாகயிருந்தால் அது கட்டாயமாகும்.

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியது இனஅழிப்பு தீர்மானம் என்று நாங்கள் கூறினாலும் அதன் இறுதியில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. அது அவ்வாறானதொரு சர்வதேச குற்றம் இல்லை. அதிலேயே சொல்லப்பட்டுள்ளது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு இன்னும் சர்வதேச குற்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றுதான் அந்த தீர்மானம் முடிவுறுகின்றது.நாங்களே சொல்லுகின்றோம் இங்கு நடைபெற்றது சர்வதேச குற்றம் இல்லையென்று. அதனையே நாங்கள் இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என தலையில் தூக்கிவைத்துகொண்டாடி வருகின்றோம்.

இன்று கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகள் இன அழிப்பின் ஒரு அங்கமாகவுள்ளது.நாங்கள் அதனை மறுக்கவில்லை. ஒருவரின் மனதில் உள்ள இன அழிப்பு எண்ணங்கள் மாறிமாறி வருவதையே கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்று சொல்லப்படும். எனினும் அவ்வாறான இன அழிப்பு சர்வதேச சட்டங்களில் இல்லை.எனினும் விக்னேஸ்வரன் ஐயா வடமாகாணசபையில் நிறைவேற்றியதை வைத்து இனிவரும் காலங்களில் சேர்த்துக்கொள்வார்களோ தெரியாது.

உண்மைகளை சொல்லவேண்டும். தமிழ் மக்களுக்கு நாங்கள் பாரிய எதிர்பார்ப்பினை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். அவ்வாறு வழங்கி அவர்களுக்கு கிடைக்காததன் காரணமாகவே விரக்தி நிலையில் உள்ளனர். குறிப்பாக வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் மனநிலையில் உள்ள விரக்தி நிலையும் அதுதான். சர்வதேசம் எங்களை கைவிட்டுவிட்டது என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றது. சர்வதேசம் கைவிடவில்லை. நாங்கள் தேவையற்ற வகையில் மக்களுக்கு கூடுதலான எதிர்பார்ப்பினை வழங்கிக்கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் உண்மை நிலையினை சொன்னால் இவர் அரசாங்கத்திற்காக பேசுகின்றார் என்பார்கள். நாங்கள் அரசாங்கத்திற்காக பேசவில்லை உண்மையினை சொல்லுகின்றோம்.பொய்யான எதிர்பார்ப்பினை வழங்குவது என்பது பிழையான விடயமாகும். 30ஆயிரம் பேர் காணாமல் போயிருக்கின்றதற்கான ஆதாரங்கள் சாட்சியங்கள் உள்ள நிலையில் காணாமல்போனவர்களை கண்டுபிடித்து தருவேன் என்ற எதிர்பார்ப்பினை ஒருதாயிக்கு கொடுப்பது என்பது மிகவும் கொடுமையான செயல். அதன் காரணத்தினால் உண்மையினை சொல்லவேண்டும்.
நீதிகிடைக்கவேண்டும், குற்றவாளிகளுக்கு தண்டனைவழங்கப்படவேண்டும். அதற்கு இயன்றதை நாங்கள் செய்வோம். உண்மையைச்சொல்வது ஒருபோதும் துரோகச்செயல் இல்லை.

ஐ.நா.தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கைவெளியிட்டபோது அதனை சிங்கள ஊடகங்கள் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்த சுமந்திரன் எம்.பி என்று செய்திவெளியிட்டபோது சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எதிரான கருத்துகள் வெளிப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியிலும் துரோகி தமிழ் மக்கள் மத்தியிலும் துரோகியாக நான் சொல்லப்படுகின்றது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பிற்காக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று உழைத்தோம். அதனை நாங்கள் மறுக்கவில்லை.

இது இலங்கைக்கு எதிரான தீர்மானம் இல்லை. இலங்கை சரியான வழியில் பயணிக்கவேண்டுமாகயிருந்தால் இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.அதுவே இலங்கைக்கு நல்லதாகும்.இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தப்பிச்செல்வது இலங்கைக்கு நல்லதல்ல.அதற்கு உதவியாக சர்வதேசம் வருகின்றபோது அது இலங்கைக்கு எதிரான தீர்மானம் இல்லை.ஆனால் இலங்கை ஆட்சியாளர்களுக்கு அது எதிரான தீர்மானம்.ஆட்சியாளர்கள் அதனை தடுக்கின்றனர்.செய்யவிடாமல் குறுக்கே நிற்கின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த தடவை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் முக்கியமான தீர்மானம்.இப்படியான தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காரணம் 47நாடுகளை நாங்கள் எடுத்துப் பார்த்தபோது அது சாதகமாக இருக்கவில்லை. ஆனபடியால் இம்முறை மிகவும் கடினம் என நினைத்திருந்தோம். மனிதவுரிமை உயர் ஸ்தானிகர் மிச்சேல் பச்லட் அம்மையார் மிகமிக சக்தி வாய்ந்த காட்டமான ஒரு அறிக்கையை முதலில் வெளியிட்டார். டிசம்பர் மாதமே இவ் அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது.

மனிதவுரிமை உயர் ஸ்தானிகர் மிச்சேல் பச்லட் அவர்களும் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட ஒருவராவார். சிலி நாட்டிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் இருந்தவராவார். அவருக்கு சர்வதேசத்தில் விஷேடமாக மனித உரிமைகள் ஆணையகத்தில் மிகப் பெரிய மதிப்பு இருக்கின்றது. அந்த அம்மையாரின் அறிக்கை காரணமாக பல நாடுகள் அதற்கு மாறாகச் செல்லத் தயாராக இல்லை. அதனால் தான் தென்னமெரிக்காவில் பல நாடுகள் இதற்கு சாதகமாக வாக்களித்தார்கள். ஏனென்றால் மிச்சேல் பச்லட் அம்மையாரைப் பற்றி அந்த நாட்டின் பலருக்குத் தெரியும். 47நாடுகள் கொண்ட சபையில் எங்களுக்கு ஆதரவு குறைவாக கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவேளையில் அவரின் அறிக்கை காரணமாக அது மாற்றம்பெற்றது.

மனித உரிமை பேரவையினால் இலங்கையினை குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்லமுடியாது.அதற்கான அதிகாரம் மனித உரிமை பேரவைக்கு இல்லை.நாங்கள் போராட்டங்களை நடாத்தி,சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தி,உண்ணாவிரத போராட்டத்தில் பத்து பேர் உயிரிழந்திருந்தாலும் மனித உரிமை பேரவையினால் அதனை செய்யமுடியாது.பாதுகாப்பு சபைக்கு மட்டுமே குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்வதற்கான அதிகாரம் உள்ளது.

நாங்கள் கேட்டது பாரப்படுத்தலுக்கான பொறுப்புக்கூரலுக்கு ஏதுவான காரணியை மனித உரிமை பேரவைக்கு வெளியில் கொண்டுசெல்லுங்கள் என்று கோரியிருந்தோம்.அதுவெளியே விடப்பட்டுள்ளது.நாங்கள் கேட்டதற்கு அமைவாக அதுவெளியே விடப்பட்டுள்ளது.

முன்னைய 30 ஒன்று 34ஒன்று 40ஒன்று தீர்மானங்களில் கலப்பு நீதிமன்ற முறை சொல்லப்பட்டிருந்தது.இந்த தடவை அது சொல்லப்படவில்லை. அதுமட்டுமன்றி ஒரு முழுமையான நீதிமன்ற பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறல் கொண்டுசெல்லப்படவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

முதல் வரைவில் சாட்சிங்களை பாதுகாப்பதும்,அதை பரிசீலிப்பதற்கு என்ற இரண்டு சொற்கள் மட்டுமே இருந்தது. ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சாட்சியங்களை சேகரிப்பதற்கும் என்று சொல் சேர்க்கப்பட்டுள்ளது.இது மிகவும் முக்கியமானது.நாங்கள் கேட்ட முக்கியமான தீர்மானங்களில் இரண்டு தீர்மானத்தில் இருக்கின்றது.அதனால்தான் நாங்கள் தீர்மானத்தினை வரவேற்றோம்.

சிலர் இந்த தீர்மானத்தில் எதுவும் இல்லை,பிரயோசனமற்றது என கூறுகின்றனர்.மக்கள் மத்தியில் தேவையற்ற அதிர்ப்தியை ஏற்படுத்துவதற்கான பொறுப்பற்ற செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. பொறுப்பாக மக்கள் மத்தியில் செயற்படுவோர் எந்த விடயத்தில் எவ்வளவு சாதிக்கமுடியும் என்ற விடயம் தெரிந்திருக்கவேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சாதிக்ககூடியவற்றினை உச்சக்கட்டம் நாங்கள் சாதித்திருக்கின்றோம்.இந்த பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்போது இதனைக்கூட நாங்கள் சாதிக்கமுடியும் என நாங்கள் நினைக்கவில்லை.நாங்கள் பல விடயங்களை முயற்சி செய்துவருகின்றோம்.

சில நாட்களில் சில விடயங்கள் மக்களுக்கு தெரியவரும்.எங்கள் முயற்சிகளை நாங்கள் பகிரங்கமாகவும் சொல்லமுடியாது.தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முழுமையான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.வெறுமனே மக்களுக்கு பொய் சொல்லி அவர்களின் எதிர்பார்ப்பினை உச்சக்கட்டத்திற்கு கொண்டுசென்று அவர்களை ஏமாற்றமடையும் செயற்பாட்டை நாங்கள் முன்னெடுக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தம் வந்திருக்கின்றது.குற்றச்சாட்டவர்கள் மீதான தடைகள் கொண்டுவரப்படுகின்றது.பொருளாதார தடைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கேட்டிருந்தனர்.இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையினை நாங்கள் கோரவில்லை.இலங்கைக்கு எதிரான பொருளாதார தடைவரும்போது அதில் முதலாவதாகவும் மிகவும் மோசமாகவும் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்களாகும்.சிலவேளைகளில் பொருளாதார தடையினை கோரவேண்டிய சூழ்நிலை வரலாம்.அதனை நாங்கள் மறுக்கவில்லை.ஆனால் இன்று நாங்கள் அதனை கோரவில்லை.

இலங்கைக்குள் தீர்வொன்றினை ஏற்படுத்தவேண்டுமானால் சிங்கள மக்கள் மத்தியிலிருக்கின்ற முற்போக்கு சக்திகளும் எங்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும். அவர்களுடைய ஆதரவையும் நாங்கள் தக்கவைக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை வருவது ஆட்சியாளர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்கு அது அழுத்தமல்ல. அவர்களுக்கு போதுமானளவு வளம் இருக்கின்றது. ஆனால் ஆட்சியாளர்களை குறிவைத்து தடைகள் வருமானால் அதுதான் அழுத்தமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாகத்தான் இன்று இருக்கின்றது.மற்றைய கட்சிகளை இணைத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலவீனமடைந்திடும் என்ற அச்சம்தான் இருக்கின்றதே தவிர எங்களை பலப்படுத்துவதற்கு அவர்கள் தேவையில்லை.

தமிழ் மக்களின் நன்மைக்காக ஒற்றுமை தேவை.ஆனால் அடிப்படை கருத்துகளில் வித்தியாசமாக இருக்குமானால் நாங்கள் இணையமுடியாது.ஒற்றுமை ஒரு கொள்கையில்லை.கொள்கையுடன் ஒன்றுபடுபவர்கள் ஒன்றுசேர்ந்து பயணிக்கமுடியும்.” என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேந்திரன் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.