“அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசமைப்பின் மூலமே தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்க முடியும்.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தம் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை வழங்குமா? என கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதில் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து அவர்,
“தற்போது உள்ள அரசியலைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலமாகவோ அல்லது அதனை மாற்றியமைப்பதன் மூலமாகவோ தமிழர் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வினை வழங்க முடியாது.
அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழருக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.
தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது, இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் கூறியுள்ளார்.
ஆகவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.” என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம்; இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு தண்டனை வழங்க முற்பட்டால் நாம் சவேந்திர சில்வா பக்கமே நிற்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.