இலங்கை – இந்தியா

இலங்கை – இந்தியா

நஞ்சுப்போத்தல்களை தந்து எங்களை கொலை செய்யுங்கள் – யாழ்ப்பாண மீனவர்கள்

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கினால் எமக்கு நஞ்சுப் போத்தலைத் தந்து கொலை செய்யுங்கள் என்று யாழ்ப்பாணம் காரைநகர் அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாத காலத்துக்குள் 60 இலட்சம் ரூபா வலை, உடைமைகள் இந்திய இழுவைப் படகுகளினால் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.
“எங்களது கடற்றொழில் அமைச்சர் சரி, எங்களது அரசாங்கம் சரி எமது பிரச்சினைகளில் கரிசனை கொள்கிறார்கள் இல்லை. இப்போது மீன்பிடி பருவ காலம். இவ்வாறான சூழ்நிலையில் எமது மீனவர்கள் தொழில் செய்து உழைக்கும் நேரத்தில், அவர்களது பல இலட்சம் ரூபா பெறுமதியான முதல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏனைய தொழிலாளிகள் கடலுக்குச் சென்று தொழில் செய்வதற்குப் பயப்படுகின்றனர். இது குறித்து கடற்படையினருக்கு தெரிவித்த வேளை தமக்குக் கைது செய்வதற்கு அனுமதி இல்லை எனக் கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் படகுகள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அவ்வாறு நடப்பதில்லை, எமது கரையிலிருந்து 5 கிலோமீற்றர் எல்லைக்குள் வந்து தொழில் செய்து எமது வளங்களை அழிக்கின்றனர்.” என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

“இந்தியாவின் உதவியே புலிப்பயங்கரவாதத்தை நாம் தோற்கடிக்க உதவியது.”- இலங்கை வெளிவிவகார அமைச்சர்அலிசப்ரி

“இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம்.”  என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தெரிவித்துள்ளது

இந்தியாவுடனான உறவுகள் வரலாற்று ரீதியிலானவை, நாங்கள் ஒரு நாகரீகத்தை பகிர்ந்துகொள்கின்றோம். எங்கள் மத கலாச்சார பொருளாதார சமூக பாதுகாப்பு  கரிசனைகள் பொதுவானவை.

கருத்துவேறுபாடுகள் ஏற்பட்ட காலங்களும் உள்ளன. குடும்பங்களில் கூட அது சாத்தியம்,ஆனால் நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளோம். இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருந்துள்ளது,இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம். அதற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம்.

ஆனால் இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் நாங்கள் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படவேண்டும்,உங்கள் நாட்டின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி உங்களிற்கு விருப்பமில்லாத நாடாகயிருக்கலாம்.ஆனால் நீங்கள் அவ்வாறே செயற்படவேண்டியுள்ளது உலகம் அவ்வாறே மாறிவருகின்றது.

ஆனால் இதன் அர்த்தம் நாங்கள் இந்தியாவின் நலன்களை அலட்சியப்படுத்துகின்றோம் அதற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றோம் என்பதல்ல,நாங்கள் இந்த விவகாரத்தை வித்தியாசமாக கையாள்கின்றோம்.

இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுடனான உறவே மிகமுக்கியமானது. ஆனால் முற்றிலும் ஒரு நாட்டையே நம்பியிருப்பது நியாயமற்றது. இலங்கைக்கு ஏனைய நாடுகள் நியாயபூர்வமாக வந்து உதவி செய்வது முதலீடு செய்வது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை என ஜெய்சங்கரே தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கரிசனைகள் உள்ளன. ஆனால் நாங்கள் இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளிற்கு யாரும் பாதிப்பு ஏற்படுத்த அனுமதிக்கமாட்டோம். எவரும் அதனை செய்யமுயலவில்லை நாங்கள் இந்தியாவின் உணர்வுகளை புரிந்துகொண்டுள்ளோம்.” எனவும் தெரிவித்துள்ளார்.

“மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும்.” – சி.வி.விக்னேஸ்வரன்

“மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும்” என தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிக்கம் பெருக விடாது தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் துறைமுகம்சார் பாரிய கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கம் கொண்ட பாரிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான சாத்தியப்பாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை இந்திய அரசும் முதலீட்டாளர்களும் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இதன் மூலம் வட கிழக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி மலையக தமிழ் இளைஞர் யுவதிகள் பலரும் பெருநன்மையடைவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் முதலிட முன் வரும்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த தொழில் முனைவாளர்கள், உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், சேவைத்துறை சார்ந்தவர்களுடன் இணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், இந்தியாவுடன் இலகுவில் இணைக்கப்படக் கூடிய மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உதவ தயார் – இந்தியா!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் அல்ல.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் அல்ல.” என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் அல்ல.

மக்களின் எதிர்காலத்துக்கு எது சரியோ அதை முன்பே திட்டமிட்டு பலவற்றை நிறைவேற்றியுள்ளதோடு இன்னும் நிறைவேற்றுவேன்.

கடலட்டை பண்ணைகள் தொடர்பில் சிலர் அறிந்து பேசுகிறார்களோ..?  அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் பேசுகிறார்களோ என எனக்குத் தெரியாது.

வடக்கு மாகாணத்தில் சுமார் 5,000 ஏக்கரில் கடல் அட்டை பண்ணைகளை விரிவுபடுத்த ஏற்கனவே திட்டங்கள் தீட்டப்பப்பட்டுள்ள நிலையில் சுமார் 1,150 ஏக்கரில் கடலட்டைப் பண்ணைகள் செயல்படுத்தப்படுகிறன.

நான் அமைச்சராக வர முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பண்ணைகளும், யாழ் மாவட்டத்தில் 11 பண்ணைகளும் மன்னார் மாவட்டத்தில் 3 பண்ணைகளுமாக 32 பண்ணைகள் காணப்பட்டன.

நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 277 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும்163 பண்ணைகள் அமைக்கப்பட உள்ளது.

யாழ் மாவட்டத்தில் 245 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும் 176 பண்ணைகள் அமைக்கப்படவுள்ளதோடு மன்னார் மாவட்டத்தில் 78 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் இன்னும் பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன.

பருத்தித்தீவு கடல் அட்டை பண்ணையில் சீன இராணுவத்தினர் இருப்பதாகவும் இதனால் இந்தியா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்தப் பண்ணைகளுக்கும் சீனர்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரியாலையில் உள்ள கடல் அட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்தில் ஏற்கனவே சீனர்கள் வந்தார்கள். அங்கு இருக்கின்ற சீனர்களை தவிர வேறு யாரும் இதுவரை கடலட்டை பண்ணை செயற்பாடுகளில் வடக்கில் ஈடுபடவில்லை.

நாரா நிறுவனம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் போன்றவற்றினால் ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளில் தழுவல் அடிப்படையில் கடலட்டை பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. அதற்கான அனுமதிகளை உரிய ஒழுங்கு முறைகளில் பெற்றுக்கொள்வதற்கு தேவையான காலத்தை, வீண் விரயமாக்க கூடாது என்பதனாலேயே தழுவல் முறையில் வழங்கப்படுகின்றன.

ஏனினும், தன்னிச்சையாக யாராவது அனுமதிகள் இன்றி கடலட்டை பண்ணைகளை அமைப்பார்களாயின் அவை அகற்றப்படும்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள பண்ணைகளில் 95 வீதமானவை அந்தந்தப் பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களினாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்தியா, சீனா போன்ற நாடுகள் கடலட்டை பண்ணைகளில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் செலுத்தி வருகினனறன.

அவ்வாறு, என்னை அணுகியவர்களிடம் வருடாந்தம் இரண்டரை கோடி கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்து எமக்கு வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளேன்.

அவர்கள் யாராக இருந்தாலும், எமது மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் பட்சத்திலேயே அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும்.

என்னை பொறுத்தவரையில் இந்தியாவா சீனாவா என்ற வினா எழுப்பப் படுமானால் இந்தியாவே என கூறிக் கொள்வதோடு கடல் சார்ந்து மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் விரைவாகவும் வினைதிறனாகவும் செயல்படுத்தப்படும்´” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்ததது ஏன்.? – இந்தியா விளக்கம் !

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். இதுதொடர்பாக இலங்கை அரசை ஐ.நா.வும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தன.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இலங்கை அரசிடம் மாற்றம் ஏற்படாததால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மீண்டும் இத்தகைய வரைவு தீர்மானத்தை உருவாக்கின. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில், அந்த வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமைகளையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும். மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபட்ட முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு தொடர வேண்டும். பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணைக்கு நாங்கள்உதவுவோம். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உள்ளன. வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 20 நாடுகளும், எதிராக சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் உள்பட 20 நாடுகள் புறக்கணித்தன. பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

வாக்கெடுப்புக்கு இடையே இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் இந்திரா மணி பாண்டே ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கையில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகிய வாக்குறுதிகளை இலங்கை அரசு அளித்திருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போதுமானது அல்ல. இந்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற இலங்கை பாடுபட வேண்டும். இலங்கை தமிழர்களின் சட்டபூர்வ உணர்வுகளை நிறைவேற்றுதல், அனைத்து இலங்கை மக்களின் வாழ்க்கையை செழிப்பாக்குதல் ஆகியவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவற்றை அடைய இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும். இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும். இலங்கையின் அண்டை நாடு என்ற முறையில், 2009-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு மறுவாழ்வு பணிகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் உதவி செய்துள்ளது. இவ்வாறு இந்திய தூதர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்காக எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது – சரத் வீரசேகர

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்கிய நிலையில் அதனை தற்போதைய அமைச்சர் அலி சப்ரி ரத்து செய்வது இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும் என குறிப்பிட்டார்.

கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் அவர்களுக்காக வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்தார்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் செய்த செயலால் என்னுடன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.” மாவை காட்டம் !

70 ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கவலை வெளியிட்டார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற கூட்டம் இடம்பெற்றபோது அங்கு சென்ற டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் எழுத்து மூலம் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நான் அந்த நிகழ்வுக்கு போக முடியவில்லை. இந்த விடயம் இரவோடு இரவாக ஊடகங்களுக்கு செய்திகளாக சென்றிருக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் நடக்கின்ற நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாக பிளவுப்பட்டு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று செய்தியை இரவில் தெரியப்படுத்தும் நிலை உருவானது.

இது பாரதூரமான நிலைமை. அவ்வாறு உடன்பாடு ஏற்பட்டிருந்தால் அதனை வெற்றி பெற்றதற்கு பின்னர் வெளியிட்டிருக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அது தெரிந்தால் போதுமானது. அதற்கிடையில் அதனை வெளியே கூறியதை ஏற்கமுடியாது. இதன் காரணத்தினாலும் எதிர்பாராத தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இந்தியா நிர்பந்தித்து தான் ரணிலுக்கு எதிரான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்ற கருத்து அங்கு பேசப்பட்டு இருக்கின்றதென தகவல் வெளியாகியுள்ளது. அதனுடைய உண்மை எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் அவ்வாறு இந்தியாவினுடைய பெயரை உச்சரித்து அந்த தீர்மானத்தை எடுத்ததை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். இது ராஜதந்திரமற்ற மூலோபாயமற்ற விடயம் என்பதுடன் ஒரு பிரச்சனையை உருவாக்கி இருக்கின்றது. இவ்வாறான செய்திகள் காரணமாக பலர் என்னுடன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு செய்தி வெளியான நிலையில் மறுநாள் காலையில் அவ்வாறான எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரனுடைய பெயரில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இவை எல்லாம் தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற செயல்களாகும். இதன் காரணமாக டலஸ் அழகப்பெரும எதிர்பார்த்த வாக்குகளை பெற முடியாமல் ரணில் எதிர்பார்த்த அளவுக்கு 134 வாக்குகள் பெறுகின்ற நிலைமையை உருவாக்கி இருக்கின்றது.

70 ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒரு கட்சியாக இருக்கும் போது இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகள் எவ்வளவு விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. எமது கருத்தில் நம்பிக்கையில்லை என்று இந்தியாவை இழுத்து பேச வேண்டிய சந்தர்ப்பத்தை நினைத்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

அவ்வாறு பாவித்து தான் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருந்தால் அது பாரதூரமானது. இந்த கருத்து மிகவும் பாதகமானது. முழுமையான எங்களுக்கு பலமாக இருக்கின்ற இந்தியாவினுடைய பெயரை கூறுவது மிகவும் தவறான செய்தியாகும். இதனால் பாரிய விளைவுகளை எதிர் நோக்க வேண்டி வரும் என்றார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க இந்தியாவில் வீதிக்கண்காட்சி நடத்த திட்டமிடும் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் !

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டி எழுப்பவும், வெளிநாட்டு அந்நிய செலாவணிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும், இந்தியாவிலுள்ள முக்கிய ஐந்து நகரங்களில் வீதி கண்காட்சிகளை இலங்கை நடத்த உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அழகிய கடற்கரைகள், குன்றுகள், அழகான கடலோர நகரங்களுக்கு பெயர் பெற்ற இலங்கை கடந்த ஏழு தசாப்தங்களிலும் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது எனவும், பொருளாதார சிக்கல்கள், கொவிட்-19 தொற்று நோய் என்பன காரணமாக சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

22 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய தேவையான வெளிநாட்டு கையிருப்பு இல்லாமல் மருந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

இருப்பினும் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு 61 ஆயிரத்து 951 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும், மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவேற்பதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டுமானால் இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாக வருமானம் அதிகரிக்க வேண்டும் எனவும் அது மிகவும் இன்றியமையாத ஒரு வருமானமாக காணப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா உட்பட சில நாடுகள் இலங்கைக்கு அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்ட போதிலும், கடந்த ஆண்டு 2 இலட்சத்துக்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்ததாகவும் இந்த ஆண்டில் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு தனது கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) சமர்ப்பிக்க உள்ளதாகவும், இது பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் திட்டத்தில் ஒரு முக்கியமான படியாக காணப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் கரிசனையினால் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான தனி நிர்வாக கட்டமைப்பினை உருவாக்க முடியும்.”- சிறீதரன்

யுத்தம் நடந்து 30 ஆண்டுகள் அதற்கு பின்னர் 12 ஆண்டுகள் கடந்து 42 ஆண்டுகள் இந்த மண்ணிலே கடந்திருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பரசியல் பாதிப்படைய செய்யுமல்லவா எனவும், அதற்கான மாற்று திட்டங்கள் உள்ளதா எனவும் ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோது இவ்விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் 30 வருடங்களிற்கு மேல் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009க்கு முதலே 30 ஆண்டுகளிற்கு மேலாக தொடர்ச்சியான பொருளாதார தடை, மக்கள் உழைக்கக்கூடிய சூழல் இல்லா நிலை குறிப்பாக 10 ஆண்டுகளாக மின்சாரம் என்றால் என்ன என்று கேள்வி கேட்குமளவிற்கு வடக்கு கிழக்கிலே மக்கள் வாழ்ந்திருந்தார்கள்.

இந்த நிலையில்தான் பொருளாதார ரீதியில் மக்கள் ஒடுக்கப்பட்டு உற்பத்தி தொழில்துறைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் யுத்தத்தை காரணமாக காட்டிக்கொண்டிருந்தார்கள். உலக நாடுகளும் இலங்கை அரசு சொல்வதை கேட்டு வடக்கு கிழக்கில் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு பின்னின்றன.

யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கென பெருந்தொகையான நிதியை இலங்கை அரசுக்கு உலக நாடுகள் வழங்கியிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்ட நிதிகளைக்கூட அதிவேக பாதைகள், தெற்கின் அபிவிருத்திகளிற்கு இலங்கை அரசு பயன்படுத்தியபோது, அதனை கண்காணிக்கக்கூடிய நிலை இல்லாமல் எங்களுடைய பொருளாதாரம் கீழ் நிலைக்கு சென்றுள்ளது.

எங்கள் மக்களின் தற்துணிவும், அவர்களது சுய நம்பிக்கையும் தாங்கள் உழைத்து வாழ்வோம் என்ற எண்ணமும் இருந்தமையால்தான் இன்று பல நீண்ட நாட்களாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் தங்களது சுய பொருளாதாரத்தில் பொருளாதாரத்தை கட்டி நிமிர்த்தி வருகின்றார்கள். இந்த நிலையிலே இடைக்கால பொருளாதார நிர்வாகம் தொடர்பிலே பேச்சுக்கள் அடிபடுகின்றது. இது ஒரு நல்ல விடயமாக பலராலும் பார்க்கப்படுகின்றது. நானும் அதனை சாதகமான செய்தியாக பார்க்கின்றேன்.

குறிப்பாக யுத்தம் நடந்து 30 ஆண்டுகள் அதற்கு பின்னர் 12 ஆண்டுகள் கடந்து 42 ஆண்டுகள் இந்த மண்ணிலே கடந்திருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இளைஞர்களிற்கான தொழில்வாய்ப்பு உள்ளிட்டவை குறைந்திருக்கின்றது. இல்லையென்றும் சொல்லலாம்.

இதற்கான வாய்ப்பாக வடக்கு கிழக்கிற்கான தற்காலிக வாய்ப்பாக வடக்கு கிழக்கினை இணைந்த வகையில் குறிப்பிட்ட சில ஆண்டுகளிற்கு பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான இடைக்கால நிர்வாகத்தினை உருவாக்குவது காலத்திற்கு பொருத்தமானது என கருதுகின்றோம்.

இது தொடர்பில் புத்திஜீவிகள், புலம்பெயர் உறவுகள் உள்ளிட்டவர்கள் மத்தியில் இந்த விடயம் பரவலாக பேசப்படுகின்றது. இதில் மிக முக்கியமாக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக தமிழ் மக்களினுடைய அரசியல் அங்கிகாரத்தினை பெற்றுக்கொள்ளுதல், அந்த அரசியல் அங்கிகாரம் என்பது வடக்கு கிழக்கு அபிவிருத்தியினால் கட்டப்படுவது தொடர்பில் சிங்கள மக்களிற்கு கூட்டாக அவர்களிற்கு விளங்கும் வகையில் சொல்வதாகும்.

குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு, சமஸ்டி என கூறுவது தமிழீழம் எனும் தனிநாடு என சிங்கள மக்கள் மத்தியில் பயக்கின்றது. ஆகவே இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக ஒரு நிர்வாகம் ஒன்று கிழக்கையும், வடக்கையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டால் சிறப்பாக அமையும், ஏற்கனவே இவ்வாறு1987ம் ஆண்டு ஒரு கட்டமைப்பு எழுத்து வடிவிலே பேசப்பட்டு எழுத்துடனேயே போய்விட்டது. சிரான் அமைப்பும் இவ்வாறான நிர்வாக கட்டமைப்பை வரைந்தது. அதுவும் அரசியல் மாற்றங்களால் இல்லாது போனது. அது நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை.

இப்பொழுது இருக்கின்ற சூழல் இலங்கையின் அரசியலமைப்புக்குள் இந்தியாவினுடைய கூடுதலான கரிசனையில் உதவி வழங்கும் நாடுகளையும் சேர்த்துக்கொண்டால் வடக்கு கிழக்கிற்கான தனி கட்டமைப்பினை உருவாக்க முடியும்.

யுத்த காலத்தில் தென்னிலங்கையில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அங்கு அபிவிருத்தி அடைந்திருக்கின்றது என்பதுடன், எல்லா மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் மற்றம் துறை சார்ந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வேலைவாய்ப்புக்களும் வழங்ப்பட்டுள்ளது.

ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. காரணம் யுத்தம். இதனை நிமிர்த்துவதற்கான ஒரு வழியாக இந்த இடைக்கால நிர்வாகத்தினை நாங்கள் பார்க்கின்றோம். இதன் ஊடாக நாட்டுக்கு நிதியை கொண்டுவர முடியும்.

குறிப்பாக உலக நாடுகளின் நிதி, இந்தியாவின் நேரடி கண்காணிப்பில் முதலீடுகளை கொண்டு வருதல், இந்தியாவின் மேற்பார்வையில் கொண்டு வருவதன் ஊடாக பல சலுகைகளையும் எதிர்பார்க்கலாம். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை வடக்கு கிழக்கிலே அதிகரிப்பதன் மூலம் தொழில் துறைகளை இயக்க முடியும். குறிப்பாக ஆனையிறவில் உள்ள குறிஞ்சாதீவு உப்பளம், மட்டக்களப்பு காகித தொழிற்சாலை உள்ளிட்ட மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை இப்பொழுது இருக்கின்ற காலத்திற்கேற்ற தொழிற்சாலைகளாக மாற்றியமைப்பதன் மூலம் உடனடி வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும்.

அதேபோன்று பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் கைத்தொழில்பேட்டை ஒன்றை உருவாக்குவதன் மூலம் அதில் பல்வேறுபட்ட தொழில் துறைகளை உருவாக்க முடியும். வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சந்திக்கக்கூடிய பகுதியாக பரந்தன் பகுதி உள்ளது.

அவ்வாறான தொழிற்துறைகளை முன்னெடுப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி அலையொன்றை அல்லது தொழில் புரட்சியொன்றை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் இந்த இடைக்கால நிர்வாகம் தொடர்பில் நாங்கள் சிந்திக்கின்றோம். இது தொடர்பில் நாங்கள் பல தடவை சிந்திக்க இருக்கின்றது. இது தொடர்பில் கட்சியின் உயர் மட்டத்திலும் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுடனும் இது தொடர்பில் கூடி ஆராய்ந்து அவர்களின் கருத்துக்களும் பெறப்பட்டு வடக்க கிழக்கில் பொருளாதார ரீதியாக ஒரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசியல் உள்ளிட்ட விடயங்களிற்கும் பலத்தை தரும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

இதேவேளை வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்களை தடுத்து வடக்கு கிழக்கினை பாதுகாக்க முடியும் என்பதுடன், வடக்கு கிழக்கு என்றால் அது தமிழீழம் அல்ல என்பதையும், உலகத்தில் உள்ள சமஸ்டியின் கூடிய அலகாக இந்த நாட்டில்தான் இருக்கின்றது. அவர்கள் அப்படி வாழ வேண்டும் என்பதில் நியாயம் உள்ள என்பதை சிங்கள மக்கள் உணரக்கூடிய வகையிலான செயற்பாடடை அதன் ஊடாக கொண்டுவர முடியும்.

அதுதான் தென்பகுதி மக்களிற்கும் நன்மையை கொண்டு வரும். ஏனென்றார் நிதி நாட்டுக்குள் கொண்டுவரப்படும்போது இலங்கையின் பொருளாதாரத்திலும் கடுமையான வளர்ச்சியினை கொண்டுவரும். சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளக்கூடிய இந்த காலத்தில் இடைக்கால நிர்வாகம் என்பது எங்களிற்கு அவசியமானது.

அது தொடர்பில் தூர நோக்கோடும், நல்லெண்ணத்தோடும் ஒவ்வொருவரும் சிந்தித்தால் வாய்ப்பானதாக அமையும் என்று நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறான விடயத்தை நடைமுறைப்படுத்த முற்படுகின்ற பொழுது மத்திய அரசினை நீங்கள் எதிர்க்கின்றபொழுது அவர்களும் இதனை எதிர்ப்பார்கள் அல்லவா என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்,

சுனாமி ஏற்பட்ட குறிப்பிட காலத்தில் இவ்வாறான நிர்வாக அலகு ஒன்றை சிரான் அமைப்பு விரைந்து முயற்சி எடுத்தபொழுது ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க இருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் அது கைவிடப்பட்டது. தற்பொழுது அவர் பிரதமராக இருப்பதால் குறித்த திட்ட வரைபை அவர் மறுக்கமாட்டார் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.