இலங்கை போதைப்பொருள் பாவனை

இலங்கை போதைப்பொருள் பாவனை

தொடரும் யுக்திய – போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் !

தற்போது நாடளாவிய ரீதியில் யுக்திய என்ற பெயரில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் அதனை விற்பனை செய்பவர்களையும் மையப்படுத்தி காவல்துறையினர் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்த வியாபாரத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் இந்த செயற்பாடு முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்த போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்திற்காக 200 வளவாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவை மன்ற பயிலுனர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தென் கடற்பரப்பில் விசேட சுற்றிவளைப்பு – 60 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு !

தேவேந்திர முனையிலிருந்து 100 கடல் மைல் தொலைவில் தெற்கு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 60 கிலோ போதைப்பொருட்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த போதைப்பொருள் தொகையை சூட்சுமமாக மறைத்துக்கொண்டு சென்ற இலங்கையின் நீண்ட நாள் மீன்பிடி படகொன்றும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் பிரிதொரு படகும் சுற்றிவளைக்கப்பட்டு அதிலிருந்த 11 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து இல்லாதொழிக்கும் தேசிய இலட்சியத்தை அடைவதற்காக, நாட்டின் கடற்பரப்பை உள்ளடக்கிய ஊடுருவல் நடவடிக்கைகளை மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டுவரும் கடற்படையினர், நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, கடற்படையின் சுரனிமில என்ற கப்பலின் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை (19) குறித்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று சனிக்கிழமை (20) காலி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 – 52 வயதுக்குட்பட்ட மாத்தறை, கந்தரை மற்றும் தேவேந்திரமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கடற்படை புலனாய்வு பிரிவு முன்னெடுத்து வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

யுக்திய நடவடிக்கையின்போது சித்திரவதைகள் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைள் இடம்பெறுகின்றது – மனிதஉரிமை ஆணைக்குழு விசனம் !

இலங்கையின் மனிதஉரிமை ஆணைக்குழு இலங்கையின் பொலிஸாரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் யுக்திய நடவடிக்கை குறித்து கரிசனம் வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 17 ம் திகதி முதல் 31 ம் திகதி முதலான வரையான காலப்பகுதிக்குள் 20,000க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள மனித உரிமை ஆணைக்குழுபோதைப்பொருளை திட்டமிட்ட குற்றச்செயல்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள மனித உரிமை ஆணைக்குழு எனினும் யுக்திய நடவடிக்கையின்போது சித்திரவதைகள் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற முறையில் நடத்துதல் கண்மூடித்தனமான கைதுகள் தடுத்துவைத்தல் என்பன காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

யுக்திய நடவடிக்கை குறித்து கடும் கரிசனையை வெளியிட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த நடவடிக்கை பரந்துபட்ட நீதியுடன் இணங்காணப்படுவதாக மாறியுள்ளது யுக்திய என்ற சிங்கள சொல்லிற்கு பொருத்தமற்றதாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது இளைஞர்கள் உட்பட்டவர்களை ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துதல் குறித்த அறிக்கைகளால் கலக்கமடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது – வவுனியாவில் சம்பவம் !

போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் காதல் ஜோடி ஒன்று வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்த காதல் ஜோடியானது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டதாகவும் சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை இடப்பட்டது.

இதன்போது அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த காதல் ஜோடி இன்றைய தினம் (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் காவல்துறையினர் நீதிமன்றத்தின் அனுமதிய பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களைச் சிக்க வைக்க விசேட அதிகாரங்களைக் கொண்ட புதிய படை !

போதைப்பொருள் தடுப்பு, பாரிய கடத்தல்காரர்களைச் சிக்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ‘தேசிய போதைப்பொருள் தடுப்புக் கட்டளை’ (போதைக்கு எதிரான கட்டளை) பிரிவு என்ற படையை உருவாக்குவதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சு ஆகியன இணைந்து சட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரத்தை உருவாக்கி, பாரியளவிலான கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான விசேட அதிகாரங்களைக் கொண்ட ‘தேசிய போதைப்பொருள் எதிர்ப்புக் கட்டளை’ பிரிவை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

யாழில் மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை – இளைஞர் கைது !

யாழில் மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே கல்வியங்காடு பகுதியில் வைத்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன் போது  கைது செய்யப் பட்டவரிடமிருந்து   7 கிலோகிராம்  பாக்கினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த  நபரை  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் செயற்பாடு – ஒரே வாரத்தில் 10000 கைதுகள்!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஆயிரத்து 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியாக கடந்த ஒருவார காலமாக பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேவேளை 134 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 154 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும் கடந்த ஒரு வாரகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றி வளைப்புக்களில் மொத்தமாக 10 ஆயிரத்து 456 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த பிரதான போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய புள்ளியான அங்கஜன் இராமநாதனின் தம்பி கைது..? – தகவலை மறைக்கும் ஊடகங்கள்!

யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிமிக்க போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் போதைப்பொருள் விற்பனைக் கும்பல்களின் பிரதான வலையமைப்புக்களில் ஒன்றில் இவரது பங்கு பிரதானமாக இருந்ததாக கருதப்பட்டுவந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

 

இவரிடமிருந்து குஷ் ரக போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் இலங்கைக்கு புதிய வகையான போதைப்பொருளாகும். இன்னும் இலங்கையில் இந்த போதைப் பொருளை தடைசெய்யப்பட்ட போதைப் பொருளாக சட்டத்தில் கொண்டு வரப்படவில்லை. அதனால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ராஜனின் மகன் சிலவேளை பிணையில் வர சந்தர்ப்பம் உள்ளதாக தெரியவருகின்றது.

 

இவர் கைது செய்யப்பட்டு 3 நாட்களாகியும் யாழ்ப்பாணத்தில் உள்ள எந்தவொரு பத்திரிகையும் இவனது கைது தொடர்பாக செய்தி வெளியிடவில்லை என்பதிலிருந்து ராஜனின் செல்வாக்கு எந்த அளவில் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ராஜனுக்கு சொந்தமாக யாழில் பல எரிபொருள் நிலையங்களும் பல பிரபல வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றன. யாழ்ப்பாண முக்கிய அரச அதிகாரிகளை தென்பகுதி அரசியல்வாதிகளின் துணையுடன் இடம்மாற்றம் செய்வதில் ராஜன்  செயற்பட்டு வந்துள்ளதையும் பலர் குறிப்பிட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் ஏனைய சட்டவிரேதாத நடவடிக்கைகளுக்காக தனக்கு தேவையானவர்களை யாழ்ப்பாணத்தில் அதிகாரிகளாக வைத்திருப்பதற்கு ராஜன் முயன்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இலங்கை பொதுநிர்வாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தனது பணபலத்தின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து பல அதிகாரிகளை யாழ்ப்பாணத்திலிருந்து ராஜன் அகற்றியமை குறிப்பிடத்தக்கது. ராஜனின் செல்வாக்கில் யாழ்ப்பாணத்தில் செயற்படும் முக்கிய அரச அதிகாரி ஒருவரின் மகனும் போதைப்பொருள் பாவித்து பிரபல பாடசாலையிலிருந்து துரத்தப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ராஜன் யாழ்ப்பாணத்தின் பிரபல அரசியல்வாதியும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜனின் அப்பா இராமநாதனின் தம்பியாவான். ராஜனுக்கும் அங்கஜனின் அப்பா மற்றும் அங்கஜனுக்கும் இடையில் கடந்த ஓரிரு வருடங்களாக முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் கார்கில்ஸ் கட்டடத்திற்கு அருகில் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் நடந்த கொலைச் சம்பவம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடான காலத்தில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக பலரும் அங்கஜனை குற்றம் சாட்டியிருந்த போது அந்த எரிபொருள் நிலையம் தன்னுடையது இல்லை என அங்கஜன் பகிரங்கமாக அறிக்கை விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

ராஜன் தனது அரசியல் செல்வாக்கு காரணமாக தனது மகனை யாழ் பல்கலைக்கழக உயர் பீடமான பல்கலைக்கழக பேரவைக்கு உறுப்பினராக போட்டிருந்மையும் குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் விற்பனையாளர்கள் எவ்வாறு உயர்பீடங்களில் கௌரவமான தோற்றத்தில் காணப்படுகின்றார்கள் என்பதையே இது காட்டி நிற்பதாக பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உறுதி !

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதனால் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

 

நாட்டிற்கு பெரும் கேடாக விளங்கும் போதைப்பொருள் பாவனையையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்தார்.

 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டிரான் அலஸ்,

 

“யுக்திய” என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கை குறித்து தற்போது நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்த நாட்டில் போதைப்பொருள் வர்த்தகமும் பாதாள உலக செயற்பாடுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இவற்றை யாராவது நிறுத்த வேண்டும். எனவே இதனை நிறுத்த தீர்மானித்தேன். அதற்காகத்தான் “யுக்திய” சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த விடயத்தில் சமூக பொலிஸ் குழுக்களுக்கும் விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த நடவடிக்கை வெற்றியடைய மக்களின் ஆதரவும் குறிப்பாக ஊடகங்களின் ஆதரவும் அவசியம். முப்பது வருட யுத்தம் வடக்கு கிழக்கில் மாத்திரமே இருந்தது. ஆனால் தற்போதுள்ள இந்த யுத்தம் நாடு பூராகவும் பரவியுள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்கள் வழங்கும் ஆதரவு பாதுகாப்புத் துறைக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

 

எனவே, இதற்குத் தேவையான ஆதரவையும் சரியான தகவல்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு முழுமையான ஒத்துழைப்பு கிடைத்தால் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒழிக்க முடியும் என நான் நம்புகிறேன்.

 

அத்துடன், கடல் மார்க்கமாக இந்நாட்டுக்கு போதைப்பொருள் கொண்டு வருவதைத் தடுக்க விசேட செயல்திட்டமொன்றை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர். முதலில், நாட்டில் இயங்கும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நிறுத்த வேண்டும். இரண்டாவதாக போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பாதாள உலக செயற்பாடுகள் நிறுத்த வேண்டும்.

 

மூன்றாவதாக, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். போதைக்கு அடிமையானவர்களுக்குப் பதிலாக போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கினேன்.

 

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 4,665 பேர் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இவர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். கடந்த 04 நாட்களில் மாத்திரம் புலனாய்வுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 731 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்படாத சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதற்கு மேலதிகமாக 8,451 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 346 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 61 பேர் சொத்து விசாரணைக்காகவும், 697 பேர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 04 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 431 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா, ஹஷிஸ், ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட பெருந்தொகை போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு சொந்தமான வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களின் பெறுமதி சுமார் 162 மில்லியன் ரூபாவாகும். எனவே, இதன் ஊடாக இந்த முயற்சி எவ்வளவு தூரம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு கைப்பற்றப்படும் அனைத்துப் பொருள்களையும் நீதிமன்றம் மூலம் அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பணிகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினேன். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் உள்ளார். எனவே ஜனாதிபதியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகள் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் நிறுத்தப்பட மாட்டாது. அதேபோன்று, இதனை ஒரு வாரத்துடன் நிறுத்தாது தொடர்ந்து செயல்படுத்துவோம். இந்நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டு, எதிர்கால சந்ததியினர் அச்சமோ சந்தேகமோ இன்றி வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம்.

சிறுவர்கள், பெண்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இந்த முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பாதுகாப்புத்துறைக்கு அவசர தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளேன். எனவே, இந்த விசேட தொலைபேசி எண்ணின் கீழ் பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். பெரும்பாலும் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை ஆண் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கூறத் தயங்குகிறார்கள்.

எனவே, 24 மணி நேரமும் இயங்கும் இந்த செயற்பாட்டு அறையில், பெண் காவலர்களை மாத்திரம் பணியமர்த்தப்படுவார்கள். இது தவிர, தமிழில் முறைப்பாடுகளை அளிக்கக்கூடிய வகையில் மேலுமொரு புதிய எண்ணை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நாட்டில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்ய முடியும் – பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனின் தொடரும் கைதுகள்!

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம்நாள் சுற்றிவளைப்புகளில் 2296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதனிடையே எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நாட்டில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்ய முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

 

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முப்படைகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்த விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் சுற்றிவளைப்புகளில் 2,296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 6,583 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

இவற்றுள் செவ்வாய்க்கிழமை (19) இரவு புளுமெண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை, சட்டவிரோத மதுபானம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஹொரனை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை கொரியர் சேவையூடாக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்து வந்த யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சியம்பலாவௌ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கோப்பாய் பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேக நபரிடமிருந்து இதன்போது வெவ்வேறு வகையான போதைப்பொருள் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 ஆயிரம் போதைப்பொருள் மாத்திரைகளுடன் மீனவர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 109 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் 14 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 184 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் தேடப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும் இதன்போது 1 கிலோ 170 கிராம் ஹெரோயின், 648 கிராம் ஐஸ், 11 கிலோ 600 கிராம் கஞ்சா, 46 கிலோ 285 கிராம் மாவா மற்றும் 19,507 போதைப்பொருள் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.