ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சமஷ்டி அதிகாரத்தை நான் வழங்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சமஷ்டி அதிகாரத்தை நான் வழங்க முடியாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலம்மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என தன்னை சந்தித்த தமிழ்த் தேசிய கட்சியினருக்கு தெரிவித்துள்ளார்.அத்துடன், சமஷ்டி தீர்வு கிட்டும்வரை 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் என கூறிய ஜனாதிபதி, பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பேசி முடிவு எடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் 13ஆவது திருத்தம் தொடர்பில் தான் தயாரித்து வைத்துள்ள ஆவணம் ஒன்றையும் கட்சியினரிடம் வழங்கியுள்ளார்.

இதன்போது தமிழ்க் கட்சிகள் முன்வைத்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை நிச்சயம் தான் வழங்குவேன் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 – நிறைவேற்றப்பட்டது தீர்மானம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது .

 

இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

 

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கின் உயர் பொருளாதார திறனை வடக்கினதும் நாட்டினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

வடக்கின் உயர் பொருளாதார திறனை வடக்கினதும் நாட்டினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

யாழ்.மாவட்ட கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடனான நேற்றைய(02) சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண மக்கள் நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள போதிலும் அந்த மாகாணத்தில் பெருமளவு பொருளாதார திறன் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அந்த சந்தர்ப்பங்களை வடக்கு மாகாணம் உட்பட முழு நாட்டினதும் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

 

தேர்தல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற கடன் பெற்றதாலேயே நாட்டின் பொருளாதாரமும் அரசியல் கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்துள்ளதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

அதே தவறு மீண்டும் இடம்பெற அனுமதிக்காமல் புதிய பொருளாதார மற்றும் அரசியல் முறையில் முன்னேறிச் செல்வதற்கு பங்களிப்பது நாட்டிலுள்ள அனைத்து கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில் முயற்சியாளர்கள் உட்பட அனைவரினதும் பொறுப்பு எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

 

நாட்டில் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்களுக்கு முதன்மை இடம் கிடைத்தாலும் அனைவரையும் சமமாக நடத்துதல் மற்றும் பாலினச் சமத்துவம் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

 

தமிழ் மொழியையும் சிங்கள மொழியையும் ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எதிர்வரும் காலங்களில் தமிழ் நாட்டில் ஏற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியுடன் ஏனையவர்களுக்கு கிடைக்கப்பெறாத வாய்ப்புகள் தமிழ் பேசும் இலங்கையர்களுக்கு கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

 

வறுமை ஒழிப்பு, விவசாய நவீனமயமாக்கல் போன்ற பிராந்திய அபிவிருத்திக்காக மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 

பெண்களினதும் இளைஞர்களினதும் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கும் வகையில் மாகாண சபைத் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்து மாகாண சபையிலும் பாராளுமன்றத்திலும் ஒரே நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுவதற்கு இடமளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இதன் மூலம் மத்திய அரசும் மாகாண நிர்வாக பொறிமுறையும் இணைக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, விவசாயம் ஆகியவற்றில் யாழ்ப்பாணம் பெரும் திறனை கொண்டுள்ளதுடன் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து இந்தியாவுடன் தரைமார்க்க இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்து நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்கிரமசிங்க – வெளியாகியுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ரணில் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா சற்றுமுன்னர் தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (26.7.2024) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது.

 

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாட்டின் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து !

நாட்டின் எதிர்காலத்தை அரசியல்வாதிகளின் தேவைகளுக்கேற்ப பயன்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், கம்பஹாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

“ஜனாதிபதியாக பொறுப்பேற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

எனக்கு வழங்கப்பட்ட அடிப்படை கோரிக்கைகளை நான் பூர்த்தி செய்துள்ளேன். நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை.

பொருளாதாரம் ஒன்றில்லாத, அரசாங்கமொன்று இல்லாத ஒரு நாட்டையே நான் சவாலுக்கு மத்தியில் பொறுப்பேற்றேன். நெருக்கடிக்கு மத்தியிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

 

நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு பலரிடம் கோரியிருந்தேன். அப்போது, அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

அதன்பின்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நாம் கூட்டணியொன்றை ஆரம்பித்தோம்.

எரிபொருள், எரிவாயு, மருந்துகள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவியது. மின்வெட்டு காணப்பட்டது. அவ்வாறான ஒரு நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம்.

 

எனவே, நாம் மேலும் முன்னொக்கி செல்ல வேண்டும். நம் நாட்டில் அபிவிருத்தியை நோக்கி பயணிக்க வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

 

இன்று எமக்கு கடன்வழங்கும் நாடுகள் இலங்கை தொடர்பாக நம்பிக்கை கொண்டுள்ளன. நாட்டில் முதலீட்டு திட்டங்களுக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

நாட்டு மக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் எதிர்காலத்தை அரசியல் வாதிகளின் தேவைகளுக்குயேற்ப பயன்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. நாடு தொடர்பில் சிந்தித்தே செயற்பட வேண்டும்.

 

சஜித் பிரேமதாசவும், அநுரகுமார திசாநாயக்கவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

நாட்டின் கொள்கைகளுக்கு அமையவே அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு  பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை இன்று (20) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான காலம் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறித்த நிகழ்வின் போது, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் இலங்கையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நமது நாட்டில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான அறிவைக்கொண்ட மக்களே நமது நாட்டிற்கு அவசியமாகும்.

அதனால் தான் இந்தப் பல்கலைக்கழகம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. இன்று பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள் ஒரு சர்வாதிகாரத்தைப் போல மாணவர்களைக் கையாளுகின்றன. இத்தகைய சூழலில் கற்பிக்கும் விரிவுரையாளர்களைப் பாராட்டுகிறேன்.

பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களை பட்டங்களை விற்கும் கடைகள் என்ற கேவலமான பேச்சுக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது. பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி கற்கும் வகையில் இந்நாட்டில் உள்ள பல்கலைக்கழக முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

நாளை  சமூக வலைதளங்களில் இதனைச் சொல்லி என்னைக் குறை கூறலாம். இப்பல்கலைக்கழகம் அபிவிருத்தியடைந்தால் ஏனைய பல்கலைக்கழக கட்டமைப்புகளும் அபிவிருத்தியடையும் என்று எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உட்பட நான்கு கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்காகத் தான் பெருமைப் படுகிறேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்காகத் தான் பெருமைப் படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிரந்தர காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்று தம்புத்தேகம மிகவும் அபிவிருத்தியடைந்த நகரமாக மாறியுள்ளது. 1984 ஆம் ஆண்டு நான் இந்த பிரதேசத்திற்கு வந்தபோது எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்க அந்தப் பாடசாலையில் கற்றார்.

அந்தக் கல்லூரியில் உயர்தரக் கல்வி ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததால் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, நாம் ஆரம்பித்த களனிப் பல்கலைக்கழகத்தில் கற்று அதிலிருந்து பட்டம் பெற்று இப்போது நாடாளுமன்றத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

கல்வி வெள்ளை என்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ஜே.வி.பி. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த கல்வி வெள்ளை அறிக்கையில் இருந்து உருவான அவர்

இன்று ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்திருப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன்.

இது கல்வி முறையின் வெற்றியைக் காட்டுகிறது.

அநுரகுமார திஸாநாயக்கவும் நானும் நாடாளுமன்றத்தில் இணைந்து செயற்படுகின்ற போதிலும் எமது அரசியல் வேறுபட்டது. சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அனுரகுமார அரசியலின் ஆட்டக்காரர் மஹிந்த ராஜபக்ஷ என்று தெரிவித்தார்.

அது எனக்கு பிரச்சினை இல்லை. அவர் ஒரு ராஜபக்ஷவாதி என்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது.

அரசில் பல ராஜபக்ஷவாதிகள் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவானவர்கள் பலர் உள்ளனர். ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தது.

எந்த நாட்டிலாவது பிரதமர் பதவி வேண்டுமா என கையேந்திச் சென்றதுண்டா? 3 நாட்களாக பிரதமரை தேடினார்கள்.

 

வேறு நாடுகளின் அரசியலில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. எந்த நாட்டிலும், ஒரு ஆசனம் மாத்திரம் இருப்பவர் ஜனாதிபதியானதுண்டா? இந்த வீழ்ச்சியடைந்த அரசியல் முறைமையில் இருந்து இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம்.

 

அரசியலை தவிர்த்து உழைத்ததால் அந்த வெற்றியைப் பெற முடிந்தது. அதற்குமுன் எங்களுக்குள் பல்வேறு அரசியல் முரண்பாடுகள் இருந்தன. ஆனால் நாடு வீழ்ச்சியடையும்போது அவ்வாறு செயற்பட முடியாது” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – மதுபான விலையை குறைக்குமாறு ஜனாதிபதி ரணிலிடம் வேண்டுகோள்!

மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மக்களிடையே வேகமாக பரவி வருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமையினால் சுகாதார பிரச்சினைகளும் மக்கள் மத்தியில் வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்த வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா்.

இரா.சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன், பிரிக்கப்படாத இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கே எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டை முன்னேற்ற மகிந்த ராசபக்சவும் பொதுஜன பெரமுனவும் ஆதரவு வழங்கினர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தனது வேலைத்திட்டங்களுக்கு பொதுஜன பெரமுனவினா் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித்த அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்வின் 27 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு களுத்துறையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

நாடு நெருக்கடியை எதிர்நோக்கி சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிய போது பதில் ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றேன்.அதன்பின்னர் நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து கட்டியெழுப்புவது தொடர்பாக சிந்தித்தேன்.

அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது. சஜித்திடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. அனுரகுமாரவும் அப்போது எதனையும் தெரிவிக்கவில்லை. அதன்பின்னர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆதரவு கோரியிருந்தேன்.

அதன்பின்னர் கட்சி தரப்பினரும் கலந்துரையாடி பசில் ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பொதுஜன பெரமுன கட்சியாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் எனது வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

அதன்பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு நாடாளுமன்றிலும் பொதுஜன பெரமுனவினர் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அவர்களின் ஒத்துழைப்பினால் தடையின்றி என்னால் பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது.

அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்தாா்.