ஹர்ஷ டி சில்வா

ஹர்ஷ டி சில்வா

“இலங்கையின் ஜனாதிபதியாக  ஆறு மாதங்களுக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வா.” – முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை !

இலங்கையின் ஜனாதிபதியாக  ஆறு மாதங்களுக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ பரிந்துரையொன்றை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஹரீன் பெர்ணாண்டோ, அடுத்த ஒராண்டிற்கு தாம் வேதனத்தை பெறாமல் பணியாற்றுவதாக கூறியுள்ளமை சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

மக்கள்,  நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒரே மாதிரியாகவே பார்க்கின்றனர். அனைவரும் திருடர்கள் என்றே அவர்கள் கருதுகின்றனர். எனினும் இரண்டு பக்கங்களிலும் நல்லவர்களும் இருக்கின்றார்கள். ஏன் எமக்கு தற்போது இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. எம்மால் குழுவாக ஒன்றிணைய முடியாதுள்ளது. மக்கள் வீதிகளில் மரணிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினால், என்ன செய்வது? யார் ஆட்சியை வழிநடத்துவது? அரசியலமைப்பில் அதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

இடைக்கால அரச தலைவரை நியமிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவரும் நிலையில், தேர்தலை நடத்த முடியுமா? அனைவரும் ஒன்றிணைவது, முதலாவதாக நடைபெற வேண்டிய ஒன்று. அந்த ஒன்றிணைவு என்பது உளமார்ந்ததாக இருக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து, ஆறு மாதங்களுக்கு ஹர்ஷ டி சில்வாவிடம் ஜனாதிபதி பதவியை கையளியுங்கள். எமது தலைவர் ஜனாதிபதி பதவியை கோரப் போவதில்லை. அதன்பின்னர் தேர்தலை பார்ப்போம்.

நாட்டிற்கு ஏதாவது செய்யும் ஒருவர் வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. எனக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் வேண்டாம். நான் யோசனை ஒன்றை முன்வைக்கின்றேன். சிற்றுண்டிச் சாலையில் நான் உணவருந்த மாட்டேன். நாம் மாற்றமொன்றை கொண்டுவர வேண்டும். மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய விடயங்கள் உள்ளன.

மக்கள் துன்பத்தில் இருக்கும் போது இவ்வாறு இரண்டரை இலட்சம் சலுகையை பெறுவதில் எந்தவொரு பயனும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள வரலாறு காணாத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி !

நாடு வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்திருந்த அவர்,

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய ஒரே வழி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறு மாற்று வழிகள் எதுவும் இல்லை எனவும், உள்நாட்டு ரீதியான தீர்வுத்திட்டமொன்றை பெற்றுக் கொள்வதற்கான காலம் கடந்து விட்டது.

ஒரு பிள்ளை கடுமையாக நோய் வாய்ப்பட்டால் அதனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும்.மாறாக வீட்டில் கசாயங்களை வைத்து கொடுத்து வீட்டில் பராமரிப்பது பொருத்தமற்றது. அது போலவே பொருளாதார நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கு வேறும் எந்தவொரு மாற்று வழியும் கிடையாது.

ஒக்டோபர், நவம்பர் மாதங்களுக்கு இடையில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 30 வீத வீழச்சியை பதிவு செய்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இது மறைப் பெறுமதியை எட்டும்.

நாட்டின் பொருளாதாரம் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலையை இதுவரையில் சந்தித்தது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது” – அமைச்சர் சரத்வீரசேகரவின் கருத்துக்கு ஹர்ஷ டி சில்வா எதிர்ப்பு !

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் செயற்படுவதையும், நட்ட ஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். மேலும் இதன் மூலம் புலிகளுக்காக பணம் செலவழிக்கவும் அரசு தயாராகவில்லை என அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் கூறியிருந்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறும் போது,

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் செயற்படுவதையும், நட்ட ஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கையாகும்.

அதற்கு எதிர்ப்பு வெளியிடுவது ஒட்டுமொத்த நல்லிணக்க செயற்பாடுகளையும் எதிர்ப்பதற்கு ஒப்பானதாகும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு கூறினார்.