ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“அரசாங்கத்தை மாற்ற முனைந்தால் இராணுவத்தை பயன்படுத்த வேண்டி வரும்.” – ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை!

” நாம் ரணில் விக்கிரமசிங்கவை முன்பு நம்பினோம். இப்போது சந்தேகப்படுகிறோம்.” எம்.ஏ.சுமந்திரன்

நீண்ட காலமாக நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளமையை சந்தேக கண்ணோட்டத்திலேயே  பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடியது. இதன்போது வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டோம். பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்தோம். நாட்டின் நலனுக்கு முரணான விடயங்களை கண்டுள்ளோம். பாதுகாப்பு துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையான அடிப்படை சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் பாதுகாப்புக்கான நிதி 12 வீதத்தால் அதிகரித்துள்ளன. இது அவசியமான விடயம் அல்ல.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் சாதகமான விடயங்களை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் நாங்கள் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கின்றோம்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக ஒரு விடயத்தை குறிப்பிடுகின்றார். நீண்ட காலமாக நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளார். அதனை நாங்கள் சந்தேக கண்ணோடே பார்க்கின்றோம். அவரை ஒருகட்டத்தில் நம்பினோம். இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டாலும் அதனை செய்யவில்லை என்றார்.

 

“ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக தனது கட்சியை வளர்க்க ரணில் முயற்சி.” – வாசுதேவ குற்றச்சாட்டு !

“ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை வளர்க்க  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.” என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ 20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு / செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த வரவு / செலவுத் திட்டத்தின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு கிடையாது. அரசாங்கத்தின் தீர்மானங்களை மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

மக்களாதரவு இல்லாமல் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது. நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது கையாள்கிறது. எல்லை நிர்ணய குழு அறிக்கையினூடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தமக்கு மக்களாணை உண்டு என குறிப்பிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பொதுஜன பெரமுன மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை விஸ்திரப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.

அரச செலவினங்களை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம் என்றார்.

“ஜனாதிபதி ரணில் மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும்.” – மனோ கணேசன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐநா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் “தள வேறுபாடு” களை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.

வடக்கில் ஜனாதிபதி செயலக உப காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். நல்லது. காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே. ஆனால், இவை நடைமுறையாகி நல்லது நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் மகிழ்ச்சியடைவேன்.

மலையகத்தில் ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே, ஐநா சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறி உள்ளன. ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டபுறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருப்பதாகவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கிறது எனவும் அறிக்கை சமர்பித்து கூறி விட்டார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். 200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும். அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன்.

பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐநா சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள். ஐநா, மற்றும் இந்திய நாட்டு உதவிகளை கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்.

தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் நெகிழ்வுப்போக்கு மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நெகிழ்வாக இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று (19) வவுனியாவில் இடம்பெற்ற, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலக திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள். எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை.

இன்று நீங்கள் ஜனாதிபதியாகி விட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும். அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “ஏதோவொரு காரணத்தால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போது, போனது போகட்டும்.

நாம் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.

நாம் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

 

“நாட்டை பிளவுபடுத்தாமல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க திட்டமிடுகிறேன்.” வவுனியாவில் ஜனாதிபதி ரணில் !

வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75 ஆவது சுதந்திர தின விழாவின் போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை நேற்று (19) வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்கள் பல்வேறு காரணங்களால் சிரமப்படுவதாகவும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க தாம் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

இந்த அலுவலகத்தில் இருந்தபடி வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முடியும். யாழ்பாணத்திற்கு மட்டுமே அனைத்தும் வழங்கப்படுவதாக அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். தற்போது வவுனியாவிலும் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.

அமைச்சுக்களிலுள்ள அதிகாரிகளும் இந்த அலுவலகத்திற்கு நேரில் வந்து வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு முற்படுவார்கள் என நான் நம்புகின்றேன். அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் வடக்கு மக்களுக்குள்ள பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை வழங்க வேண்டும். அதேபோன்றே, இலங்கை சமூகத்தில் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. மலையக மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற சமூக கருத்து நிலவுகிறது.

எனவே இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே சிறந்த சந்தர்ப்பம். இந்தப் பிரச்சினைகள் முறையாகத் தீர்க்கப்பட வேண்டும். இது தொடர்பில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடவும் நாட்டைப் பிளவுபடுத்தாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

முதலில் மக்களின் சந்தேகங்கள் களையப்பட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயற்படும்போது அந்த சந்தேகம் நீங்கிவிடும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும். 83 இல் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அதுபோன்றே 2009 இல் இருந்தும் வெகுதூரம் வந்துவிட்டோம். எனக்கு தேசிய கீதத்தின் ஒரு வரி நினைவுக்கு வந்தது. அது, “ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ்வது” என்பதாகும். 75வது சுதந்திரதின விழாவின் போதாவது ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.

இங்கு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 2015ஆம் ஆண்டு வடக்கு மக்களுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். எனினும் ஏதோவொரு காரணத்தால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போது, போனது போகட்டும். நாம் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த வகையில் நெகிழ்வாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வாறாயினும் நாம் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்து மிகவும் மகிழ்ச்சி. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் இவ்வாறானதொரு அலுவலகத்தை ஸ்தாபித்தமைக்காக ஜனாதிபதிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் நாம் நம்புகின்றோம்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள். எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை. இன்று நீங்கள் ஜனாதிபதியாகிவிட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும் அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் வவுனியாவுக்கு வருகை – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியாவிற்கான இன்றைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதியின் வவுனியா விஜயம் : எதிர்ப்பு தெரிவித்து உறவுகள் போராட்டம்

அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் வெடிகுண்டு தகர்ப்பு பாதுகாப்பு பிரிவினர் , விசேட அதிரடிப்படையினர் , இராணுவம், பொலிஸார் என பலதரப்பினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டங்களை தடுக்கும் முகமாக கலகம் தடுக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

“கஞ்சாவின் மதிப்பை ஜனாதிபதி புரிந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” – அமைச்சர் டயானா கமகே பூரிப்பு !

இலங்கையில் கஞ்சா பயிரிடுவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று தெரிவித்துள்ளார்.

“இந்த மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி புரிந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பல வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில் இது. அதனால்தான் நான் அதை விளம்பரப்படுத்தினேன். அடுத்த ஆண்டு கஞ்சா உற்பத்தி மூலம் இரண்டு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டைக் கொண்டுவர எதிர்பார்க்கிறேன் என்றார்.

“தனியார் துறை ஊழியர்களுக்கு காப்புறுதித் திட்டம்.” – வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

தனியார் துறை ஊழியர்களுக்கு காப்புறுதித் திட்டத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே இந்த யோசனையை முன்வைத்தார்.

தனியார் துறையில் பணிபுரியும் போது பல்வேறு காரணங்களால் வேலையிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் இது மிகவும் சிக்கலான சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அங்கு, ஒரு காப்புறுதிக் கொள்கையை வழங்குவதற்கும், வேலை இழக்கும் வரையிலான காலத்துக்கு காப்புறுதி நிதியை நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டதுடன் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு வரையறுக்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படலாம்.

மேலும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதித் திட்டத்தின் மூலம் ஏராளமானோர் நிவாரணம் பெறுவார்கள் என்றும், தனியார் துறை ஊழியர்களுக்கும் இதுபோன்ற மருத்துவக் காப்புறுதி வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, உத்தேச சுகாதார மற்றும் காப்புறுதித் திட்டங்களுக்காக ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து சில தொகைகளை ஒதுக்குவது பொருத்தமானது எனத் தெரிவித்தார்.

இதன்படி, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் கீழ் இந்த இரண்டு புதிய முறைகளையும் உள்ளடக்கும் வகையில் ஊழியர் நம்பிக்கை நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

“75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவேன்.” – நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

வடக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டுத் தலையீடுகள் இன்றி அடுத்த ஆண்டு 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை விடயத்தில் யாரும் தலையிட விரும்பவில்லை எனவும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து முன்னோக்கிச் செல்லும் திறன் இலங்கைக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் கூடும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் அல்லது நாட்டின் சட்ட அமைப்பை நவீனமயப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சகல சட்ட முறைமைகளையும் இந்த வருடமும் அடுத்த வருடமும் நவீனமயப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.