தவறு செய்தால் இனவாத கருத்துக்களை முன்வைத்தால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – புத்தி ஜீவிகள் அமைப்பின் இணைப்பாளர் திரு அருள் கோகிலனுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்
தவறு செய்தால் இனவாத கருத்துக்களை முன்வைத்தால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – புத்தி ஜீவிகள் அமைப்பின் இணைப்பாளர் திரு அருள் கோகிலனுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்
ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையிலான குழு கசான் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த ரணில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு புதிய ஜனாதிபதி அநுரவும் விருப்பத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த விஜயத்தின் மூலம் பிரிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இலங்கையின் உறுப்புரிமை தொடரப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் கசான் நகரில் எதிர்வரும் 22ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நடப்பு ஆண்டின் தலைமைத்துவத்தை வகிக்கும் இந்தியா இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்புக்கு சாதகமாக பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சு, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அண்மைய கொழும்பு விஜயத்தின்போது, இலங்கையின் பிரிக்ஸ் உறுப்புரிமை அபிலாஷைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட சந்திப்புகளின்போது கலந்துரையாடி இருந்தார்.
சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற முக்கிய உலகப் பொருளாதாரங்களை உள்ளடக்கிய அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் பிரிக்ஸ் அமைப்பில் இணையும் விருப்பத்தை ஜனாதிபதி அநுரவும் இதன்போது வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கமைவாகவே இலங்கை பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 20ஆம் திகதி ரஷ்யாவிற்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் ஒரு முக்கிய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகவே பிரிக்ஸ் காணப்படுகிறது.
பிரிக்ஸ் அமைப்பு ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்காவை உள்ளடக்கியதாக இருந்த நிலையில் இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய உறுப்பினர்களாக இலங்கை, ஈரான், எகிப்து, எதியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை இந்த ஆண்டில் இணைத்துக்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றையதினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
“இலங்கையின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றைப் பேணும் அதேவேளை, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரினதும் சமத்துவம் – நீதி – கௌரவம் – சமாதானம் ஆகியவற்றுக்கான அபிலாஷைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கின்றது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த நோக்கத்தை அடைய மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது உதவும்’ என்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் மற்றும் IMF பேச்சுவார்த்தைகளுக்கான நியமிக்கப்பட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
கலந்துரையாடலை முடித்துக்கொண்டதன் பின்னர் விசேட அறிக்கை ஒன்றை இன்று (04) வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், இந்த தூதுக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
குறித்த அறிக்கையில்,
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிதி சவால்கள் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கையின் பொருளாதார குழுவுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டோம்.
2022 ஆம் ஆண்டில் இலங்கை எதிர்க்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கடின வெற்றிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
“சீர்திருத்த முயற்சிகளுக்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, எம்மை ஊக்குவிக்கிறது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிப்பதில் உறுதியான பங்காளியாக உள்ளதுடன் நாட்டின் பொருளாதார சீர்திருத்த இலக்குகளை அடைவதில் உதவ தயாராக உள்ளது.
சர்வதேச நாணய நிதியகத்தின் ஆதரவு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வுக்கான திகதியை நிர்ணயிப்பதற்காக சர்வதேச நாணய நிதிய குழு இலங்கையின் பொருளாதார குழுவுடன் அதன் நெருங்கிய ஈடுபாட்டைத் தொடருந்தும் பேணுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.
கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு மகத்தானது எனவும், அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமைவாகவே வறுமை ஒழிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானமாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியல் சம்பிரதாயம் மற்றும் பழைய அரசியல் கலாசாரத்திற்கு எதிரான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், அரச சேவையின் செயற்பாடு தொடர்பான பிரஜைகளின் அதிருப்தி போன்றன தாக்கம் செலுத்தியதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
எனவே, வினைத்திறன் மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் மோசடி மற்றும் ஊழல் இருப்பதாக மக்கள் நம்புவதாகவும், அதனை தடுப்பதற்காகவே இம்முறை மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரச கட்டமைப்பு முழுவதும் பரவியுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழலை தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதாகவும், அரச ஊழியர்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன் மற்றும் செயற்திறன் மிக்க அரச சேவையை உருவாக்க தற்போதைய அரச உத்தியோகத்தரின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
அரச சேவையில் இதுகாலவரை இடம்பெற்று வந்த அரசியல் பழிவாங்கல், இடமாற்றம், அரச சேவையில் பதவி உயர்வு வழங்காமை போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறாது என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களை திருப்திப்படுத்தும் வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு அரச உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாற்பது நாட்கள் நிலைமாற்ற காலமாகும் எனவும், அந்த காலப்பகுதியில் அரச சேவையை வீழ்ச்சியடையாமல் பேணுவதற்கு அரச உத்தியோகத்தர் பாடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் இந்த அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி சூசகமாக தெரிவித்தார்.
முன்பிருந்த அரச தலைவர்கள், அரச அதிகாரிகளை ஊடகங்களுக்கு முன்பாக கேள்வி எழுப்பியது போன்று தான் ஊடகங்களுக்கு முன்னால் அரச அதிகாரிகளை கேள்வி கேட்கப் போவதில்லை எனவும், இவ்வாறான ஊடகக் கண்காட்சிகளை தான் ஏற்கவில்லை எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
அரசு ஊழியரின் கண்ணியத்தைப் பாதுகாத்து குடிமக்கள் திருப்தியடையும் அரச சேவையை உருவாக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்து தெரிவித்த தூதுவர், இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும், சீனா அரசாங்கத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.
இலங்கைக்குள் தற்போது ஒத்துழைப்பு அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்காக சீன அபிவிருத்தி வங்கி (CDB) மற்றும் EXIM வங்கியின் செயற்திறனான தலையீடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில் பிரதான வர்த்தக கடன் வழங்குநர் மற்றும் இரு தரப்பு கடன் வழங்குநர் என்ற வகையில், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கியூபா தூதுவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு, இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை பலப்படுத்த கியூபா எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது.
டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளில் கியூபா பெற்றுள்ள வெற்றிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய கியூபா தூதுவர், இலங்கைக்கு டெங்கு ஒழிப்புக்கு அவசியமாக பொதுச் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கான உர மானியத்தை15,000 ரூபாயிலிருந்து 25 ,000 ரூபாயாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கிணங்க இதுவரை ஹெக்டெயாருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் உர மானியம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதோடு, இந்த மானியம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இந்த மானியத்தை செயற்திறனுடனும் திறம்படவும் கிடைக்கும் வகையில் குறித்த நிதியானது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான விவசாய இடுபொருள் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வழங்குவதற்கும் சிறந்த விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இரசாயனம் மற்றும் சேதனப் பசளை உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கும் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பின்னடைவை சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியம் வழங்கப்படவுள்ளது.
இந்த மானியம் மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்படும்.
மீன்பிடித் தொழிலை, நிலைபேறான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், அதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யவும், தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வரும் கடல் மீன்பிடித்தொழிலை முன்னேற்றுவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை லைசன்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்ய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றது என புதிதாக ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகி உள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது.
அதற்காக என்னால் உங்களுக்கு நன்றி கூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும்.
இது எம்மனைவரதும் வெற்றியாகும். நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம் செய்துள்ளார்கள்.
எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம்.
எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன.
இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுத வேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன. கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும்.
சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்று சேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன் மீது தான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம் என புதிய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.