ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தி

‘மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை கண்டறிந்து அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” – ஹர்ஷ டி சில்வா

“வறுமையின் அபாயத்தைக் குறைக்க, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை அரசாங்கம் கண்டறிந்து அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (30) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அங்குமேலும் பேசிய அவர்,

“சொந்தமாகத் தொழில் செய்யும் ஒருவருக்கு, வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும்போது, ​​அவர்கள் விற்கும் பொருட்களின் விலையை அதிகரிக்கலாம். அவர்கள் பணவீக்கத்துக்கு ஏற்ப நிர்வகிக்கிறார்கள். அதேசமயம், நிலையான சம்பளம் பெறுபவர்கள்தான் இந்த நெருக்கடியின் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

பொருட்களின் விலை உயர்வால், நிலையான சம்பளம் பெறும் தனி நபர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் உயர்வு இல்லை. அதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அரசுத் துறையிலும் நல்ல ஊதியம் பெறும் ஊழியர்களும், நல்ல ஊதியம் பெறாத சிலரும் உள்ளனர். எனவே இரு தரப்பினரையும் ஒரே மாதிரியாக நடத்துவது நியாயமற்றது. இது குறித்து ஆராயப்பட வேண்டும், இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சமூகப் பாதுகாப்பை வழங்க முடியாது.

 

வறுமையின் அபாயத்தைக் குறைக்க, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை அரசாங்கம் கண்டறிந்து அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தனியார் துறையில் இருந்தாலும், அத்தகைய நபர்களை அரசு கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினரே நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர், அவர்களே இப்போது பொறுப்பேற்று சரியானதைச் செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் தனது தேசத்தின் மக்களை தோல்வியடையச் செய்துள்ளது என்பதை முழு உலகமும் இப்போது உணர்ந்துள்ளது.

 

இலங்கையின் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பொருளாதாரத் தலைவர்களின் அலட்சியமே காரணம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, கோத்தபாய ராஜபக்ஷ தவறு செய்திருந்தால், அப்பாவி மக்கள் குற்றம் சாட்டப்பட வேண்டியதில்லை, தண்டிக்கப்பட வேண்டியதில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் அரசாங்கம் 1.5 டிரில்லியன் ரூபாவுக்கு மேல் அச்சிடப்பட்டுள்ளது.  பணத்தை அச்சடிப்பதன் மூலம் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடையும்.

பணத்தை அச்சடிப்பதன் மூலம் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகிறது, இதனால் வாழ்க்கைச் செலவு உயரும் என்பதை நாங்கள் முன்னறிவித்துள்ளோம். ஆனால், இதனால் குடிமக்கள் பாதிக்கப்பட முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே அரசாங்கம் மற்ற வரவு செலவுத் திட்டங்களில் குறைக்கும் வழிகளை ஆராய வேண்டும் மற்றும் அதற்குப் பதிலாக குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க நிதியைப் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற வீதிகள் மற்றும் கூடுதல் செலவினங்களை உருவாக்குவது நிறுத்தி வைக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக அந்த நிதி நாட்டுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

“இன்னமும் பிரதமராக பதவியேற்க நான் தயாராகவே இருக்கிறேன்.”- சஜித் பிரேமதாச

பிரதமராக பதவியேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எவ்வாறாயினும், அதிகாரத்திற்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்க மாட்டேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்க முடியாது என்று கூறவில்லை. இன்னும் பிரதமராக பதவியேற்க நான் தயாராக இருக்கிறேன். எங்களுடைய அமைச்சரவையை நியமிக்கவும் நான் எதிர்பார்க்கிறேன் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷ போராட்டக்காரர்களை  கலந்துரையாடலுக்கு அழைத்தமை நகைச்சுவையானது”- ஐக்கிய மக்கள் சக்தி

“மஹிந்த ராஜபக்ஷ போராட்டக்காரர்களை  கலந்துரையாடலுக்கு அழைத்தமை நகைச்சுவையானது” என தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களை கைக்குழந்தைகளாகக் கருதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை நகைச்சுவையானது.

இணக்கமற்ற இருவருக்கு இடையில் திருமணம் நடைபெற்றால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை போலவே இந்த அழைப்பு காணப்படுகிறது.  எனவே முழு அரசாங்கமும் பதவி விலகுவதற்கான நேரம் இது.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே பொதுமக்கள் தற்போது கற்பிக்கும் முக்கியமான அரசியல் பாடத்தை அரசாங்கம் உணர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கேட்டுக்கொண்டார்.

“அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் தோல்வியடைந்து விட்டன.” – ஹர்சா டிசில்வா

இலங்கை அரசாங்கம் தனது பொருளாதார கொள்கைகள் தோல்வியடைந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் விதத்தில் சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கைகள் காணப்படுகின்றன என ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதார கொள்கை காரணமாக நாட்டின் 22 மில்லியன் மக்கள் தற்போது இலங்கையில் என்றும் காணப்படாத மிகவும் துயரமான- மிகவும் மோசமான பொருளாதார சமூக நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாடாளுமன்ற பொறிமுறை ஊடாக நாங்கள் இந்த தீவிரமான சீர்திருத்தங்களை அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நிதிக்குழு அல்லது விசேட குழு மூலம் இதனை முன்னெடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை இதற்கான ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள ஹர்ச டிசில்வா மத்திய வங்கி ஆளுநர் தான் ஒருபோதும் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடப்போவதில்லை- அதன் ஆலோசனையும் தேவையில்லை என தொடர்ச்சியாக தெரிவித்து வந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பின்பற்றிய பொருளாதார கொள்கைகள் முற்றாக தோல்வியடைந்துவிட்டன என சர்வதேச நாணயநிதியம் தற்போது தெரிவித்துள்ளது மத்திய வங்கியின் திட்டமும் தோல்வியை என்பதை நிருபித்துள்ளது என குறிப்பிட்டுள்ள ஹர்சா டி சில்வா சர்வதேச நாணயநிதியத்தின் பரிந்துரைகளை ஏற்கவேண்டுமா இல்லையா என்பது அரசியல் தீர்மானம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“மலையக பெருந்தொட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்.” – பழனி திகாம்பரம் உறுதி !

“மலையக பெருந்தொட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. சஜித் தலைமையில் அதனை நாம் நிச்சயம் செய்வோம்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின விழா, நேற்று ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

” மலையக மக்கள் மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டாலும், மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.

இன்னும் 20 வருடங்கள் இந்த அரசை அமைக்கமுடியாது. தங்களுடன் வந்துவிடுங்கள் என எமக்கும் ஆளுங்கட்சியின் அழைப்பு விடுத்தனர். நம்பி சென்றிருந்தால் இன்று மலையக அமைச்சர் போன்று, மாவு அமைச்சராகவே இருந்திருக்க வேண்டும். 20 வருடங்கள் என சூளுரைத்தனர். இன்று இரண்டு வருடங்களிலேயே வீடு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது.

நல்லாட்சி என்பது மலையகத்துக்கு பொன்னான காலம். 50 வருடங்கள் அரசியல் செய்தவர்களுக்கு மத்தியில் நான்கரை வருடங்களில் மலையகத்தில் பாரிய வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தோம். உரிமை அரசியலையும் வென்றெடுத்தோம்.

மலையக பெருந்தொட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. சஜித் தலைமையில் அதனை நாம் நிச்சயம் செய்வோம்.

இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான பாரிய போராட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும். அதன்பின்னர் ஏப்ரல் 03 ஆம் திகதி தலவாக்கலையிலும் நடைபெறும். அதில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார் திகா.

ஐக்கியநாடுகள்மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இன்னுமொரு தீர்மானம் – இலங்கை எதிர்கொள்ள ஆபத்து !

ஐக்கியநாடுகள்மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக இன்னுமொரு தீர்மானத்தை நிறைவேற்றினால் இலங்கையின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை பொறுத்தவரை இலங்கை ஏற்கனவே ஒரு மோசமான விக்கெட் என தெரிவித்துள்ள அவர் அடுத்தஅமர்வு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய சூழ்நிலைகள் மற்றும் ஷானி அபயசேகர புதிதாக தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் பின்னணியிலேயே ஆரம்பமாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ள எரான் விக்கிரமரட்ண மிக முக்கியமான விடயம் என்னவென்றால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து ஆராயும் போது சட்டத்தின் ஆட்சி உரிய முறையில் உள்ளதா என பார்ப்பார்கள்,என தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை சட்டத்தின் ஆட்சியை பேணதவறிவிட்டது என தெரிவிக்கப்பட்டால் எந்த முதலீட்டாளரும் இலங்கைக்கு வரமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சந்தை டொலர் மூலம் வாங்கப்பட்ட ஆயுதங்கள் – பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல் !

கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை இலங்கை வாங்கியதாகக் கூறிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியதாக பசில் ராஜபக்ஷ கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சு அதனை நிராகரித்து ஊடக அறிக்கையை வெளியிட்டது. ஆனால் நிதியமைச்சரால் எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையிலேயே, பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கறுப்புப் பணத்தை எவரும் பயன்படுத்துவதற்கு எமது சட்டங்களில் இடமில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தால் தடைகள் விதிக்கப்பட்ட ஒரு நாட்டைக் கையாள்வதற்கான ஆணையை பொதுமக்கள் அரசாங்கத்திற்கு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

“நாம் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனா உயிரிழப்பை தடுத்திருப்போம்.” – ஐக்கிய மக்கள் சக்தி

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் 15,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றினால் உயிரிழக்க இடமளித்திருக்காது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தம்மிக பாணி, சுதர்சன பாணி போன்றவற்றைக் காட்டி தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்திய அரசு, தடுப்பூசி போடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடுவது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி போடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வைபவம் நடத்துவது உலகிலேயே இலங்கை மட்டும்தான் என்றும் அவர் கூறினார்.

இன்று கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதாகவும், சமூகத்தில் கண்டறியப்பட்டதை விட கண்டறியப்படாத நோய்த்தொற்றுகள் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சீன அரிசி பயன்பாட்டினால் இலங்கையில் ஏற்படவுள்ள பேரழிவு – வெளியாகியுள்ள தகவல் !

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை பொதுமக்கள் பயன்படுத்தினால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது,

சீனாவில் அதிகளவான இரசாயன உரங்கள் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகிறது. தரமற்ற உணவை உட்கொள்வதால் சிறுநீரக நோய்கள் ஏற்படுவதாகவும், இலங்கையில் நாளாந்தம் 6.5 மில்லியன் கிலோகிராம் அரிசி நுகரப்படும் அதேவேளை 3.5 மில்லியன் பாண்களும் நாளாந்தம் நுகரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு ஹெக்டேர் செய்கைக்கு 137 கிலோ யூரியா உரம் பயன்படுத்தப்படுகிறது, இதேவேளை சீனா 500 கிலோகிராம் யூரிவை பயன்படுத்துகிறது, மியான்மாரே அதிக அளவு உரங்களைப் பயன்படுத்துகிறது.

இரசாயன உரத்தை 3-4 மடங்கு அதிகமாக பயன்படுத்தும் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி பாவனைக்கு பாதுகாப்பானதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் மின்சார நெருக்கடி நிலவும் போதிலும் அரசாங்கத்தின் வீண் செயற்பாடுகள் இன்னும் குறையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

“ஆட்சிக்காலத்தை நீட்டித்தால் வீதிக்கு இறங்குவோம்.” – எச்சரிக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி !

“பொதுமக்களின் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சிக்காலத்தை நீடிக்க முயன்றால் வீதிக்கு இறங்குவோம்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து அதிகாரங்களை பறிப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது எனவும்
பொதுமக்கள் அரசமைப்பின் ஏற்பாடுகள் மூலமாக தங்கள் ஆணையை வழங்குவார்கள் மக்கள்  பிரதிநிதிகள் அதனை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று அல்லது வேறு பொருளாதார சர்வதேச காரணங்களிற்காக ஜனாதிபதியோ – பிரதமரோ ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பில் இல்லை.  சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மாத்திரமே பதவிக்காலத்தை நீடிக்க முடியும். பொதுமக்களிற்கு சேவையற்றுவதற்கு ஏதாவது தரப்பிற்கு விருப்பமிருந்தால் அவர்கள் அடுத்த மூன்று வருடங்கள் அதில் ஈடுபட்ட பின்னர் பொதுமக்களின் புதிய ஆணையைகோரமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் எதிர்க்கட்சிகளின் கருத்து தொடர்பில் அமைச்சர் நாமல்ராஜபக்ச ,

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியமில்லை. தேர்தலை நடத்தாமல் ஆட்சிக்காலத்தை நீடிக்கும்எண்ணம் எதுவும் ஆளும்கட்சிக்கு இல்லை.  அவ்வாறான திட்டம் எதுவுமில்லை,நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவினதும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினதும் அரசியல் வாழ்க்கையில் தேர்தல்களை ஒத்திவைப்பது அல்லது நீடிப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வருடங்களிற்கும் பொதுமக்களிற்கு நீதியாக நடந்துகொள்ள அரசாங்கம் என்ற முறையில் முயற்சிகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.