சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம்

IMF கடன் – உத்தரவாதமளித்தது சீனா !

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.

சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக  புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வௌியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா தனது உத்தரவாதத்தை வழங்க தாமதித்ததன் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவித் திட்டம் தாமதமானது.

“பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும்.” – சர்வதேச நாணய நிதியம்

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கிளையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமையப்பெற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளையின் சிரேஷ்ட பிரதானி Peter Breuer, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை கிளையின் தலைமை அதிகாரி Masahiro Nozaki ஆகியோர் ஒன்றிணைந்த அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

அரசாங்கத்தின் செலவுகளை ஈடு செய்வதற்கு புதிய வருமான வரி உதவி செய்யும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நியமங்களுக்கு அமையவே புதிய வருமான வரி அமைந்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி சீர்திருத்தம் தற்போதுள்ள நிலைமையை சீர் செய்ய உதவும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெறாவிட்டால், எதிர்காலத்தில், எரிபொருளின்றி 12 மணி நேர மின்வெட்டுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டிற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தை தவிர உலகில் வேறு எந்த நிறுவனமும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகள் இருப்பின், அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிப்பதற் கான வாய்ப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற கண்டி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சட்டத்தரணிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சில அரசியல் கட்சிகள் இதற்கான முன்மொழிவுகளை முன்வைக்காமல் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் எவருக்கும் விளையாட முடியாது எனவும் வலியுறுத்தினார்.

இந்த சவால்கள் தொடர்பில் தெரியாமல் தான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்கவில்லை எனவும், தடைகள் வந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த சவால்கள் தொடர்பில் தெரியாமல் தான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்கவில்லை எனவும், தடைகள் வந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை தெளிவுபடுத்துவதற்கும், இந்நிலையிலிருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காகவும் இன்று இச்சந்திப்பு இடம்பெறுகின்றது. நாம் இன்று கடினமான காலங்களை கடந்து கொண்டிருக்கிறோம். ஒரு வீட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது வீட்டிலுள்ளவர்கள் அதை உணர்கிறார்கள். ஒரு வணிகம் வீழ்ச்சியடைந்தால், வர்த்தகர்கள் அதை உணர்கிறார்கள். ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அதை ஒட்டுமொத்த மக்களும் உணருவார்கள்.

பதினொரு மாதங்களுக்கு முன்னர் நாம் இந்த நிலையை எதிர்கொண்டோம். எங்களிடம் எரிபொருள், மின்சாரம், மருந்து எதுவும் இல்லை. ஒரு நாடு என்ற வகையில் நாம் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டோம். நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது.

நான் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது இவ்வாறானதொரு பிரச்சினைக்குரிய சூழல் நாட்டில் இருந்தது. ஆனால் முறையான திட்டத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். மேலும், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட்டன. சரியான நேரத்தில் உரங்களை வழங்கியதால், இந்த முறை பெரும்போகத்தில் வெற்றிகரமான அறுவடை கிடைத்துள்ளது.

இப்போது எரிபொருள் வரிசைகள் இல்லை. மின்சாரம் உள்ளது. அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை முந்தைய நிலையை விட படிப்படியாக சிறந்த நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று பணவீக்கம் உயர்ந்துள்ளது. வட்டி விகிதம் மிக அதிகம். அதனால், வர்த்தக சமூகம் சிரமங்களை எதிர்நோக்குவதை நாம் அறிவோம். சட்டத்தரணிகளும் தங்கள் பணியை மேற்கொள்வதில் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. நாட்டின் பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளோம் என்றே கூற வேண்டும். மேலும் பல பிரச்சினைகள் நமக்கு முன்னால் உள்ளன.

ஒரு நாடு வங்குரோத்தடையும் போது, சர்வதேச நாணய நிதியத்திடம் தான் செல்ல வேண்டும். அதைத் தவிர, ஒரு நாடு வங்குரோத்தடையும் போது உதவி செய்யும் வேறு எந்த அமைப்பும் உலகில் இல்லை. பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியே மீண்டு வந்துள்ளது. சரிந்த பொருளாதாரத்தில் இருந்து கிரீஸ் மீண்டுவர 13 ஆண்டுகள் சென்றது. பதின்மூன்று ஆண்டுகள் ஜனாதிபதி பதவியில் இருக்கும் எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. இந்த வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரே ஒரு ஏணிதான் உள்ளது. அதுதான் சர்வதேச நாணய நிதியம். பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு கதைகளை கூறி வருகின்றன. சரிந்த பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு வேறு ஏணி இருந்தால் சொல்லுமாறு நான் அவர்களுக்கு கூறுகின்றேன்.

2019 இல் இருந்ததைப் போலவே நமது வரி வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகிறது. தற்போது அது 09% ஆக குறைந்துள்ளது. நீங்கள் உங்கள் மக்களுக்கு வரிச்சலுகை வழங்குவீர்களாயின், நாம் எவ்வாறு எங்கள் மக்களிடம் அதிக வரி வசூலித்து உங்களுக்கு நிவாரணம் வழங்குவது என்று அவர்கள் எம்மிடம் கேட்கிறார்கள்.

அதனால், எமது கொள்கைகளை எதிர்ப்பவர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி முன்மொழிவுகளை சமர்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கத் தயாராக உள்ளோம். சர்வதேச நாணய நிதியம் அந்த முன்மொழிவுகளுடன் உடன்படுகிறதா என்பதைப் பார்க்க முடியும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. அதன்படி, செப்டம்பரில் அதிகாரிகள் மட்டத்தில் உடன்பாடு காண முடிந்தது. அவர்கள் எமக்கு நடைமுறைப்படுத்த பதினைந்து விடயங்களைக் முன்வைத்தார்கள். டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அதனை நடைமுறைப்படுத்த சர்வதேச நாணய நிதியம் கால அவகாசம் வழங்கியது. ஆனால் அன்று அதைச் செய்ய முடியவில்லை. பின்னர் ஜனவரி 31ஆம் திகதி வரை அவகாசம் பெற நடவடிக்கை எடுத்தோம். அப்போதும் அந்த 15 விடயங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இறுதியாக பெப்ரவரி 15 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டது. பெப்ரவரி 15 ஆம் திகதி மாலை 06:00 மணிக்குள் அனைத்து விடயங்களையும் நிறைவேற்றி வாஷிங்டனுக்கு அனுப்பினோம்.

இந்தப் பதினைந்து விடயங்களில் ஒரு விடயம் மட்டுமே தாமதமாகி வருகிறது. அது மின்சார சபை கட்டண உயர்வு தொடர்பானது. மின்சார சபைக்கு வருடாந்தம் 230 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகிறது. நிறுவனங்களைப் பராமரிக்க அரசாங்க வரிகளை பயன்படுத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறு நடந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாட்டில் ஒருவர் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை எதிர்த்தார். இதன் காரணமாக, சர்வதேச நிதியத்தின் ஆதரவைப் பெறுவது ஆறு வாரங்கள் தாமதமானது. இல்லையென்றால், ஜனவரி இறுதிக்குள் இதனை நிறைவுசெய்திருக்கலாம். தற்போது, எங்களுக்கு வழங்கப்பட்ட 15 விடயங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்போது சர்வதேச நாணய நிதியத்திற்கான சந்தர்ப்பமே உள்ளது.

எங்களுக்கு கடன் வழங்கிய பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனா என்பன கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவித்துள்ளன. அதற்குத் தேவையான நிதி உத்தரவாதத்தை வழங்கும் முறைமை பாரிஸ் கிளப்பில் உள்ளது. இந்தியாவிடம் மற்றொரு முறைமை உள்ளது. சீனா மற்றொரு முறையை நடைமுறைப்படுத்துகிறது. பாரிஸ் சமூக நாடுகள் தங்கள் சொந்த முறையைத் தவிர இந்தியாவின் முறையையும் ஏற்றுக்கொண்டன, ஆனால் சீனாவின் முறை குறித்து இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.

இது குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. அனைவரையும் ஒரே மேடைக்கு கொண்டுவந்து கலந்துரையாட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியமும் பரிந்துரைத்தது. ஆனால் சீனா உலக வல்லரசாக இருப்பதால் அவர்களின் முறை வேறு. ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடுகளின் கடனை எவ்வாறு மறுசீரமைப்பது குறித்து அங்கு ஆராயப்பட உள்ளது. அதில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை குறித்து சீன நிதி அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்க் கப்பட்டுள்ளது. அவர்களின் நிலைப்பாட்டின்படி, செயல் படுத்த இரண்டு அல்லது மூன்று மாற்று வழிகள் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெறாவிட்டால், எதிர்காலத்தில், எரிபொருளின்றி 12 மணி நேர மின்வெட்டுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும். சிறு போகத்திற்கு உரம் கிடைக்காது. இந்த நிலையில் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

நாட்டின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையாகும். அதை நோக்காகக் கொண்டே நாம் செயற்பட வேண்டும். அது இல்லாமல், இந்த பிரச்சினையை மறைக்க முடியாது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும். ஆனால், பிரதம நீதியரசர் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்தாலும் கூட நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை , நீதிமன்றத்தில் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. பொருளாதாரத்தை முன்கொண்டுசெல்லும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கே இருக்கிறது. எனவே 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும்.

தேவைப்பட்டால், மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, இரான் மற்றும் ஹர்ஷ போன்றவர்களின் முன்மொழிவுகளைக் கூட சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்க முடியும். இதற்கான ஆதரவையும் வழங்க முடியும். சில அரசியல் கட்சிகள் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில்லை. இது தொடர்பாக மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுகின்றனர். நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட முடியாது. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நாங்கள் பொறுப்பு. எனவே, பொருளாதாரத்தைக் கட்டியெ ழுப்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன்.யாரிடமாவது மாற்று முன்மொழிவுகள் இருந்தால், வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்களுடன் கலந்துரை யாடும் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க விரும்புகிறேன்.

யாரும் முன்வராத நிலையிலே இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகையில் பலவிதமான விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதை அறிந்தே ஜனாதிபதிப் பதவியை ஏற்றேன். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன். இந்த வருட இறுதிக்குள் நாட்டு மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பொருளாதார வளர்ச்சிக்கான ஆரம்பத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி 225 பேர் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது எப்படி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு உங்களின் தலைமைத்துவத்தை எதிர்பார்க்கிறோம். 2024 ஆகும் போது மீண்டும் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

“சீனாவின் நிதி உத்தரவாதமின்றி இலங்கைக்கு நிதி உதவி.” – சர்வதேச நாணய நிதியம்

சீனாவின் நிதி உத்தரவாதமின்றி இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்து வருகின்றது.

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு நிதி வழங்குவதற்கு சீனாவின் உத்தரவாதம் மாத்திரம் தடையாக உள்ளதால் சீனாவின் நிதி உத்தரவாதமின்றி  இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் நிதியை வழங்கலாம் என தெரிவித்துள்ள புளும்பேர்க் சர்வதேச அமைப்பு இலங்கை விடயத்தில் தான் எப்போதாவது பயன்படுத்தக்கூடிய  கொள்கையை பின்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபை தங்களின் கடன்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்துவதற்காக இலங்கை அதிகாரிகள் தங்களிற்கு கடன்வழங்கிய நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விடயத்தில் சர்வதேச நாணயநிதியம் பின்பற்றக்கூடிய கொள்கைகள் குறித்து தற்போதைக்கு  கருத்து தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள பேச்சாளர் கொள்கை நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுவது தொடர்பில் சர்வதேச நாணயநிதிய அதிகாரிகள் இலங்கையுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்

“சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.” – கிறிஸ்டினா ஜோர்ஜீவா

“குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாததால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.” என சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெறும் கூட்டத்தில் பாரம்பரிய கடன் வழங்குபவர்களையும், சீனா, சவூதி அரேபியா, இந்தியா போன்ற புதிய கடன் வழங்குநர்களையும், அதேபோன்று தனியார் துறையினரையும் பங்கேற்க வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனாவின் நிதியமைச்சர், மற்றும் அந்த நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் இந்தியாவில் இடம்பெறவுள்ள கடன் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இருந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு தலைமை தாங்கும் முதல் நபரான ஜோர்ஜீவா, சமூக சேவைகளில் வெட்டுக்கள் மற்றும் பிற பின்விளைவுகளைத் தவிர்ப்பதற்கு கடன் நிவாரணம் மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு தயாராக இருப்பதாக பத்திரப்பதிவுதாரர்கள் அறிவிப்பு!

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கத் தயாராக இருப்பதாக பத்திரப்பதிவுதாரர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன், இலங்கை அதிகாரிகளுடன் வழிகாட்டுதல் குழு மூலமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக பொன்ட் ஹோல்டர்ஸ் குரூப் என்ற இலங்கை பத்திரதாரர்களின் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டினா ஜோர்ஜீவாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த உறுதிப்பாட்டை இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் தங்கள் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை இலங்கை பத்திரதாரர்களின் குழு ஏற்றுகொண்டுள்ளது.

அத்தகைய ஈடுபாட்டின் விளைவாக, இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் பங்களிப்பதற்கும் உறுதியளிக்கும் வகையில், இந்திய அரசாங்கம், 2023 ஜனவரி 16 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக தெரிவித்திருப்பதையும் பத்திரதாரர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேபோன்று, இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் மற்றும் சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கு நாடு மீண்டும் அணுகலை வழங்கவும், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி தயாராக இருப்பதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா இணக்கம்..?

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணையெடுப்புக்கு முன்னதாக, இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் நீண்ட கால கோரிக்கைக்கு சீனா நேற்று பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

\
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான கடன்களுக்கு பொறுப்பான சீனாவின் எக்சிம் வங்கி, சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடன்களை இரண்டு வருட காலத்துக்கு குறுகிய காலம் இடைநிறுத்தம் செய்யும் என்று கூறியது.

சீனாவின் ஆதரவைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகள் மற்றும் அதன் கடன்களை மறுசீரமைப்பதற்கான இந்தியாவின் ஆதரவுடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

2.9 பில்லியன் ரூபா பெறுமதியான, இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்தியா அறிவித்த சில நாட்களில் சீனா இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநர்களாவர். சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்திய உத்தரவாதங்கள் வழங்கப்பட்ட உடனேயே, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கு ஆதரவளிக்க மற்றைய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 24 மணி நேர பயணமாக இலங்கை வந்திருந்த கலாநிதி ஜெய்சங்கர், இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா “முழுமையாக” ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதேவேளை, சீனாவின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென் சோவ், வாரத்தின் முற்பகுதியில் இலங்கை வந்திருந்தார்.

சீனா தனது கடன்களை மறுசீரமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கை குறித்து சில “நல்ல செய்திகளை” அறிவிக்க இருப்பதாகவும் அறிவித்தார்.
வெளிநாட்டுக் கடன்களுக்குப் பொறுப்பான அரசு நிறுவனமான சீன எக்ஸிம் (ஏற்றுமதி-இறக்குமதி) வங்கியின் கடிதம், இன்று ஆரம்பமாகும் சீன சந்திர புத்தாண்டை முன்னிட்டு கொழும்பை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரச்சினைகளை IMF கடனால் கூட தீர்க்க முடியாது – அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக் கிடைத்தால்கூட, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

“இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளது.
அந்நாடு நேரடியாக ஐ.எம்.எப்.இற்கு இதனை அறிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்று நம்புகிறோம். எனவே, சிறந்த பெறுபேறு ஊடாக ஐ.எம்.எப்.உடன் எம்மால் பேச்சு நடத்த முடியும்.

எனினும், ஐ.எம்.எப். வழங்கும் 2.9 பில்லியன் டொலர் நிதியால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. ஆனால், நீண்ட காலமாக தீர்க்கமுடியாத பல தேவைகளை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை இதனால் நிறைவேற்ற முடியும் என நாம் நம்புகிறோம்.

நாம் படிப்படியாகத் தான் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியும். குறுகிய கால பிரசித்தமான தீர்மானங்களை எடுத்து, இந்த நாட்டை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதல்ல எமது முயற்சி. மாறாக நடைமுறைச்சாத்தியமான விடயங்களைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

பொருளாதார மறுசீரமைப்பை அமுல்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு என்பது சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட நிபந்தனை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சில நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் IMF தவணை தொடர்பில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இணங்கத் தவறினால் நாடு சர்வதேச ஆதரவையும் இழக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் விலையேற்றத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவாக இல்லை எனவும் அதற்கு பதிலாக பல சலுகைகளை வழங்க விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சலுகைகள் தன்னிச்சையாக வழங்கப்பட்டால் சர்வதேச உதவிகள் பெறப்படாது என்றும் கடன் மறுசீரமைப்பும் நடைபெறாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டலினா ஜியோஜிவா கூறுகிறார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் மெதுவான வளர்ச்சியே இதற்கு காரணம் என்று அவர் செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

யுக்ரைன் போர் மற்றும் அதிக வட்டி வீதங்கள் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் என்று கடந்த ஒக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது.

மேலும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள சீனா, தனது கொரோனா சுகாதாரக் கொள்கைகளைத் தளர்த்தியதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் போரினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையான பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.