யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

12 வயது பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை – கண்டுகொள்ளாத அதிபரும் – யாழ்ப்பாணத்து கல்விச் சமூகமும் !

யாழ்ப்பாணம் தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு, பாலியல் தொல்லை வழங்கியமைக்காக 42 வயதான ஆசிரியரொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே குறித்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டதையடுத்து, தாயார் அதிபரிடம் விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும், ஆசிரியருக்கு எதிராக பாடசாலைச் சமூகத்தால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் நேற்றுமுன் தினம் கைதுசெய்யப்பட்டார்.

அவர் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் நெடுந்தியில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவரிடம் தேசம்நெட் மூலமாக விடயத்தை அறிந்து கொள்ள தொடர்பு கொண்ட போது “குறித்த ஆசிரியர் குற்றம் செய்தமை தொடர்பில் அதிபருக்கும் – ஏனைய ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் கூட பாடசாலையின் நட்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்களிடம் பாடசாலை சமூகத்தினர் கோரிக்கைகளை முன் வைத்ததாக ” குறித்த நபர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கைதான ஆசிரியர் ஏற்கெனவே வலிகாமம் பகுதி பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும்பொழுது சில மாணவிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், மாணவிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்வரவில்வை. இதையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீளவும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலையும் குறித்த சமூக ஆர்வலர் தெரியப்படுத்தியிருந்தார்.

பாடசாலை ஆசிரியர்களால் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் வடக்கில் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது. சுய கௌவுரவம் குடும்பமான மானம், கல்வி சமூகத்தின் உயர்ந்த தரம், பாடசாலையின் பெருமை போன்ற விடயங்களை காரணம் காட்டி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் பலரும் பாதுகாக்கப்படுகின்ற ஒரு சூழல் தொடர்ந்தும் நீடிக்கின்றது. கடந்த வருடம் முல்லை தீவில் பாடசாலை ஆண் மாணவர்களுக்கு போதைப் பொருள் கொடுத்து சக மாணவிகளை குறித்த மாணவர்களின் துணையுடன் துஷ்பிரயோகம் செய்த தூண்டிய ஆசிரியர் அழுத்தத்தின் காரணமாக கைது செய்யப்பட்ட போதும் கூட இன்று விடுதலையாகி மீளவும் அவர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். இது போலவே அண்மையில் பல சம்பவங்கள் யாழ்ப்பாணம் வவுனியா முல்லைத்தீவு உள்ளிட்ட பல பாடசாலைகளிலும் பதிவாகியுள்ளது. என்னிடம் இது தொடர்பாக இதுவரையில் இறுக்கமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தினால் குற்றவாளிகள் சுதந்திரமாக இதுபோன்றதான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

படம் :- கோப்பு

பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவன் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது !

பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவனை தடுத்து வைத்து நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனனர்.

மேலும் குறித்த மாணவனுடன் போதைக்கு அடிமையாகி உள்ள ஏனைய மாணவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு போதைப்பொருளை விநியோகம் செய்யும் நபர்களை கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் 2000 ஏக்கர் நிலம் வனவளபாதுகாப்பு திணைக்களத்துக்கு..? – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் எந்தவொரு காணியையும் அபகரிக்கும் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லையென அவர் கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும் அதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

 

இது தொடர்பில் தனது சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்டத்தில் காணிகளை வனவளப் பாதுகாப்பு திணைக்களம் போன்ற எந்தவிதமான அரச திணைக்களங்களுக்கும் கொடுப்பதற்கான தீர்மானங்கள் எவையும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

1985 ஆம் ஆண்டிற்கு முன்னர் மக்களின் குடியிருப்புக்களாகவும் விவசாய நிலங்களாகவும் இருந்த அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டுள்ள புளிவாழைகள் மூலம் இலங்கைக்கு வாராந்தம் 40,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் !

யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சேதன புளி வாழைப்பழங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 25,000 கிலோ சேதன புளி வாழைப்பழங்கள் முதல்
ஏற்றுமதி தொகுதியாக இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 600 விவசாயிகள் புளி வாழை செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் 650 ஹெக்டேயருக்கு பயிர்ச்செய்கையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் ராஜாங்கனையில் பயிரிடப்பட்ட புளி வாழைப்பழங்கள் 18 தடவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் கீழ் உள்ள விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதிப் பங்களிப்பின் கீழ் புளி வாழை ஏற்றுமதி வலயங்களை நிறுவுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வருடம் எம்பிலிப்பிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டையை அண்மித்த பகுதிகளில் புளி வாழை ஏற்றுமதி வலயமொன்றை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

செவனகல பிரதேசத்தில் வாழைப்பழ பதப்படுத்தும் நிலையத்தை அமைப்பதற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜாங்கனையில் வாழைப்பழ பதப்படுத்தும் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பதப்படுத்தும் நிலையத்தின் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ராஜாங்கனையில் புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கைக்கு ஏற்றுமதி வருமானமாக 20,000 அமெரிக்க டொலர்களும், யாழ்ப்பாணத்தில் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்வதன் மூலம் வாராந்தம் 40,000 அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு கிடைக்கும் என அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டிப் படுகொலை!

கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் வயது 43 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 10 பேர் கைது !

யாழ்ப்பாண பல்கலைக்கழகவளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக குடு மற்றும் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்றைய தினம் மாவட்ட குற்றதடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வியாபாரியிடம் குடு வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும் கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வியாபாரி நீண்ட காலமாக போதை பொருள் விற்று வருவமை தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு போதை பொருள் வாங்கியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் – பொலிசார் அசமந்தப்போக்கு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தாயாரிடம் கூறியுள்ளனர். ஆனாலும் இரவு 08 மணி வரையில் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொலிஸாருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை பதிவு செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பிக்குமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியுள்ளதாகவும் இது தொடர்பில் விரைவான எந்த நடவடிக்கையும் பொலிசார் மேற்கொள்ளவில்லை எனவும்  குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் வீட்டினை சேதப்படுத்தி தீவைத்து ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் பொலிஸராரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸராரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொ. மேனன் தலைமையின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்கென யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி போலி இலக்கத்தகடுகளை மாற்றி பயன்படுத்தியமை தெரியவந்ததுள்ளது.

சில போலி இலக்கத்தகடுகளும் வன்முறைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நவாலி, மானிப்பாய், காரைநகர், விசுவமடு பகுதிகளைச் சேர்ந்த 24 தொடக்கம் 26 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்டப்டனர்.

மேலும் மூன்று சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

“யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் எங்களுக்கு காணி வேண்டும்.” – காணி அற்றோர் மக்கள் இயக்கம் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம் மகஜர் கையளித்துள்ளது.

நீண்ட காலமாக தாம் வாடகை வீடுகளில் வசித்து வருவதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் , தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமையால் , பெருந்தொகை வாடகையை செலுத்த முடியாது தவித்து வருவதாகவும் , அதனால் யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை காணியற்ற தமக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் , அங்கிருந்து பேரணியாக வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு சென்று செயலாளரிடம் மகஜரை கையளித்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலரிடம் மகஜர் கையளித்தனர். அதேவேளை அரச காணிகளை இராணுவத்தினர் கடற்படையினர் விமான படையினர் தமது படைமுகாம்களை அமைக்க தருமாறும் பிரதேச செயலர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதுடன் , அக்காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு !

யாழ்ப்பாணம் மாநகருக்கு அண்மையாகவுள்ள பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இந்தச் சடலம் மீட்கப்பட்டது. சடலத்துக்கு உரியவர் இனங்காணப்படவில்லை.

மேலதிக விசாரணை களை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.