எம்.ஏ.சுமந்திரன்

எம்.ஏ.சுமந்திரன்

“நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச பொறிமுறையாக இருக்க வேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச பொறிமுறையாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றத்தை நாடியமை மகிழ்ச்சியானதே. சிங்கப்பூர் நீதிமன்றம் பக்கசார்பின்றி முடிவை வழங்கும்.

ஆனால் கடந்த 14 வருடங்களாக தமிழ் மக்கள் நீதிக்காக காத்திருக்கின்றனர். உள்ளகப்பொருமுறையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவேதான் சர்வதேச நீதிமன்ற பொறிமுறையை தொடர்ந்தும் வலியுறுத்துகின்றனர்.

இதனை முதலில் அரசாங்கம் தொடர்ந்தும் மறுக்கின்றது. நாங்கள் சர்வதேசம் செல்லத் தயாரில்லை எனவும், உள்நாட்டு பொறிமுறை ஊடாக தீர்வு வழங்குவதாக கூறிவருகின்றது. இதுவே இந்த அரசாங்கத்தின் உண்மையான இனவாத முகம்.” என கூறினார்.

“மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும் போது புலிகள் என கூச்சலிடுவதை ஏற்க முடியாது.” – எம்.ஏ சுமந்திரன்

பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான வேளையின் போது உரையாற்றிய இரா.சாணக்கியன்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரை  மற்றும் படுவான்கரை ஆகிய பகுதிகளில் பாலம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு இனவாதி, கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாவலனாக தன்னை நினைத்துக் கொண்டு ஒருதலை பட்சமாக செயற்படுகிறார். தமிழர்கள் வாழும் பகுதிகளில் உட்கட்டமைப்பு தேவைகள் நெருக்கடி நிலையில் காணப்படுகிறது.

தெற்கு மாகாணத்தில் தேவையற்ற வீதி அபிவிருத்திகளும்,பாலம் நிர்மாணிப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்ற.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முறையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதில்லை. ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன என?“ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

சாணக்கியன் தனது உரையை நிறைவு செய்வதற்கு முன்னர் அவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது.

இதற்கு சாணக்கியன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, “உங்களின் கேள்வி ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நீங்கள் சத்தமாக உரையாற்றுவதற்கு நான் அச்சமடைய போவதில்லை.“ என்றார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு கேள்விக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்போது சாணக்கியன் தொடர்ந்து உரையாட முற்பட்டு, “கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கும் போது உரிமை மறுக்கப்படுகிறது.“  என்றார்.

இதன்போது உரையாற்றிய மனுஷ நாணக்கார, “புலிகளின் உண்மை முகம் வெளிப்படுகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இவர்கள் தான் தடையாக உள்ளார்கள் என கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனைத்தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், ‘மாவட்டங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து உரையாற்றும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த அமைச்சர் அரசியலில் எவ்வாறு செயற்படுகிறார் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். சபையில் உரையாற்றும் வழிமுறையை அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சரவை நோக்கி குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த அமைச்சர் ஆற்றிய உரையில், புலிகள் என்ற சொற்பதம் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அதனை ஹென்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

“ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்.” – எம்.ஏ.சுமந்திரன்

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் நேற்று மாலை (08) ஊடகங்களுக்கு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாரிய பொருளாதாரச் சிக்கல் ஒன்று இந்த நாட்டை பீடித்திருக்கின்றது. அதிலிருந்து இந்த நாட்டை மீட்க போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார். அவ்வாறு நாடு மீண்டதாக ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் மிக விரைவிலே நாடு மிக மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு செல்ல இருக்கிறது. அப்படியான சந்தர்ப்பத்தில் திரும்பவும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என்ற காரணத்தினால் அதை கட்டுப்படுத்துவற்கு இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர். ஏனெனில் கடந்த காலங்களைப் போன்று மீண்டும் மக்கள் போராட்டங்கள் ஏற்படுகிற பொழுது அதனைக் கட்டுப்படுத்த அல்லது ஒடுக்குவதற்கு தற்போது ஜனாதிபதியின் கையில் இருக்கின்ற சட்டங்கள் போதாது என்று அவர் கருதுகின்றார்.

 

அதேபோன்று, பயங்கரவாத தடை சட்டங்களை பிரயோகித்தால் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக அமையும் என்பதாலே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொடுக்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை கூட இல்லாமல் போகின்ற நிலைமை ஏற்படும். ஆகவே புதியதொரு நல்ல விடயத்தை தாங்கள் செய்வது போல மிக மிக மோசமான ஒரு செயலையே செய்வதற்கு முனைகின்றனர். குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக காட்டிக் கொண்டு அதனை விட மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமென்ற இந்தச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். அதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறேன் என்று ஒரு மாயத் தோற்றத்தை காட்டிக் கொண்டும் சர்வதேச நியமங்களுக்கு அமையவே புதிய சட்டத்தையே கொண்டு வருகிறேன் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

இந்த சட்டம் கொண்டு வரப்படுவதற்கான உண்மையான நோக்கம் என்னவெனில் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக அல்லது அரசாங்கத்திற்கு எதிராகவோ தமது எதிர்ப்பை காண்பிக்கின்ற போது அதனை இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கான ஒரு கருவியாகத்தான் அல்லது முன்னெச்சரிக்கையாகத் தான் முன்கூட்டியே இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முனைந்திருக்கின்றது. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது அரசியலமைப்பை மீறுகின்றது. அவ்வாறு அரசியலமைப்பை மீறுகின்றது என்றோ அல்லது வேறு காரணங்களைக் கூறியோ நீதிமன்றம் சென்றாலும் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் நீதிமன்றம் சொல்லலாம். அதேநேரம் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என்றும் கூட நீதிமன்றம் சொல்லலாம். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு என்ற ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் அரசாங்கம் செய்யலாம். ஏனெனில் ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சியில் இருக்கின்ற சில தரப்புக்களும் இணையப் போவதாக அறிகின்றோம். ஆனாலும் இந்த அரசுக்கு இப்பொழுது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிகளில் இருக்கின்ற பலர் இப்போது கட்சிதாவுவதற்கு தயாராகின்றனர்.

அரசாங்கம் மூன்று இரண்டு பெரும்பான்மையை இலகுவாகவே பெற்றுக் கொள்ளலாம். ஆகையினால் அதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் இதனை தடுக்க முடியாது. ஆகவே அரசின் இந்தப் புதிய சட்டம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களை மீறுகிறது என்பதை நாம் தெளிவாக சொல்லுகின்றோம்.

 

நாம் மட்டுமல்ல இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பலரும் இந்த விடயங்களை கூறுகின்றனர். இதனால் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை கிடைக்காமல் போகலாம் என்பதும் தெரிந்த விடயம். அதன் மூலம்தான் இந்த சட்ட மூலம் இயற்றுகின்ற அரசின் யோசனையை மாற்றலாம் என்று நாங்கள் நினைக்கின்றோம். அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நிறுவனங்களும் கூட இதனுடைய தாற்பரியத்தை அல்லது மோசமான தன்மையை உணர்ந்து அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் எப்படியாக நாடு பூராகவும் எழுச்சி ஏற்படுத்தினோமோ அதே போல் இந்த மோசமான சட்டத்தை தடுப்பதற்கு மக்களிடையே சென்று மக்கள் மத்தியில் விளக்கங்களை கொடுத்து ஒரு எழுச்சியை ஏற்படுத்த முனைகிறேன். இவ்வாறு நாட்டு மக்களிடத்தே இந்த விடயம் தொடரபில் கலந்துரையாடல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி மக்கள் எழுச்சியை எடுத்துக் காட்டுவோமாக இருந்தால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றாமல் தடுக்கலாம் என்று கருதுகின்றேன் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாங்கள்  முற்று முழுதாக எதிர்க்கிறோம் அதனை நிராகரிக்கின்றோம் – எம்.ஏ.சுமந்திரன்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது. ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆண்டு அது நிரந்தரமான சட்டமாக மாற்றப்பட்டது.

மிகவும் மோசமான ஒரு சட்டம் பலராலே அப்படியாக விமர்சிக்கப்படுகின்ற சட்டம் அதை நீக்குவதாக. தற்போதைய  ஜனாதிபதியே பிரதமராக இருந்தபோது 2017 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கு பிறகு தான் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றி பயங்கரவாத  தடுப்புசட்டம் வர்த்தமானியில்  பிரசுரிக்கப்பட்டது. அது  மக்கள் பிரதிநிதிகளோடும் பொது அமைப்புகளோடும் கலந்துரையாடப்பட்டு அந்த வேளையிலே பல தவறுகளை சுட்டிக்காட்டி  பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

2018 ம்ஆண்டு  குண்டு வெடிப்பை சாட்டாக காட்டி அதனை நிறைவேற்றாமல் கைவிட்டார்கள். இப்பொழுது கொண்டுவந்திருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது அல்ல. இப்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட மோசமானதாக காணப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு  ஏற்கனவே நடந்த அத்துமீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறல்களை கூறுவது எல்லாவற்றையும்  இருப்பதையும் விட மோசமாக கொண்டு வரப்படுகின்றது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாங்கள்  முற்று முழுதாக எதிர்க்கிறோம் அதனை நிராகரிக்கின்றோம் அதற்கு எதிரான சட்டநடவடிக்கை எடுப்போம்.

அதற்கு மேலாக புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அது முதலிலே பொது அமைப்புகளோடு பேசி இணங்கப்பட வேண்டிய விடயம்.ஆனால் இதில் இன்னொரு விடயத்தை குறிப்பிட வேண்டும். பயங்கரவாத தடுப்புசட்டம் நீக்கப்படல் சம்பந்தமாக மனித உரிமை ஆணைக்குழு ஏற்கனவே சென்ற வருடம் ஒரு சிபார்சினை முன் வைத்திருக்கின்றது.

அதாவது பயங்கரவாதத்திற்கான ஒரு விசேட சட்டம் தேவையில்லை என்று. எனவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் அரசாங்கம் கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கின்றோம் குறிப்பாக  அரசாங்கமானது தான் செல்லுகின்ற பாதை ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதை அறியும்.

தேர்தல்கள் நடத்தப்படாமல் ஜனநாயக பாதையில் இருந்து அரசாங்கம் விலகி மாகாண சபை தேர்தலை பலகாலம் முடக்கி வைத்து தற்பொழுது உள்ளூராட்சி சபை  தேர்தலையும் அறிவிக்கப்பட்ட பிறகு கூட அதனை நடத்தாது நிதி நிலைமையை காரணம் காட்டி நாட்டில் ஒரே ஒரு நபர்  தடுத்து வைத்திருக்கின்றார் .

இந்த செய்கையின் மூலமாக இது ஒரு ஜனநாயக ஆட்சி முறை இல்லை ஒரு தனி மனித சர்வாதிகார ஆட்சி நாட்டிலே நடக்கின்றது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக இருக்கின்றது.

ஆகையினால் இந்த மோசமான  சூழலிலே இப்படியான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற ஒரு விசேட சட்டத்தை கொண்டு வந்து அரசாங்கத்துக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை தெரிவிக்கின்ற மக்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தண்டிப்பதற்குமான செயற்பாட்டிலே அரசாங்கம் இறங்கி இருக்கின்றது இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் இதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஈடுபடுவோம் என்றார்.

அபாயா விவகாரம் – இந்து மகளிர் கல்லூரி அதிபருக்கு ஆதரவாக ஆஜரான எம்.ஏ.சுமந்திரன்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் கலாசார ஆடை யான அபாயாவை அணிந்து கொண்டு கடமை ஏற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸை கடமை ஏற்க விடாமல் தடுத்த விடயத்தில் பாடசாலை அதிபர் திருமதி லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுமாறும் பெறாவிட்டால் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் கடுமையான இழப்பீடுகளைச் செலுத்த வேண்டி வரும் என்றும் எச்சரித்தார்.

ஆசிரியை பஹ்மிதா றமீஸ் சண்முகா அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் தொடுத்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் பயஸ் றஸ்ஸாக் முன்னிலையில் விளக்கத்துக்கு ஏலவே நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆசிரியை பஹ்மிதா றமீஸ் சார்பாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான அப்துல் சுபையிர், சட்டத்தரணி றதீப் அகமட் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
எதிராளி லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனோடு சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

அதிபர் லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தன்னுடைய சமர்ப்பணத்தில் இவ்வழக்கு பொய்யாகப் புனையப்பட்ட ஒரு வழக்கென்றும் அதிபரைத்தான் பஹ்மிதா றமீஸ் தாக்கினார்களே ஒழிய அதிபரால் பஹ்மிதா றமீஸுக்கு எந்தப் பங்கமும் விளைவிக்கப்ப்டவில்லை என்றும் இவ்வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கனதியான நட்டஈடுகளை செலுத்த வேண்டி நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த சட்டத்தரணி றதீப் அகமட், இந்தப் பிரச்சினையில் முஸ்லிம் கலாசார ஆடையான அபாயாவை அணிந்து செல்ல அனுமதிக்காமையானது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றும் இவ்வாறான இன ரீதியான குற்ற அணுக்கங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

இரு தரப்பினரும் இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்கு அவகாசம் ஒன்றை வழங்குவதற்காக எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதிக்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

“உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விலைவாசிகள் உயர்ந்த வண்ணம் உள்ளன. விலைவாசி அதிகப்பினாலும் வரி அதிகரிப்பினாலும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது.பலருக்கு வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத கடும் கஷ்டமான நிலை காணப்படுகின்றது.

அப்படியான சூழ்நிலையிலே இந்த உள்ளூராட்சி தேர்தல் என்கின்ற விடயத்தை  பேசு பொருள் ஆக்கி நாட்டிலே அதைக் குறித்த ஒரு சர்ச்சையை உருவாக்கி மக்களுடைய கவனத்தை அதன் பால் திருப்புவதற்காகவும் சில முயற்சிகள் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

திசை திருப்புவதற்காக அரசாங்கம் சார்பிலும் ஜனாதிபதி சார்பிலும் முயற்சிகள் நடைபெற்றாலும் கூட தேர்தல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு விடயம்.

ஒரு நாடு ஜனநாயக நாடா இல்லையா என்பதை தீர்மானிப்பது உரிய காலத்திலே தேர்தல்கள் கிராமமாக நடத்தப்படுவது முக்கியமான ஒரு அம்சமாகும். ஆகையினாலே நாட்டிலே பாரிய மாற்றங்கள் சென்ற வருட நடுப்பகுதியிலே இடம்பெற்றன

தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அதாவது ஜனாதிபதி நாட்டை விட்டு ஓடினர். பிரதமர் தானாக பதவி விலகினாலும் கூட தங்களுடைய நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் ஆட்சியை தொடர்ந்து வருவதோடு  நாட்டை ஆட்டிப் படைக்கின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.” என தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ரணிலின் சூழ்ச்சியை வெளியே கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

“ஜனாதிபதி ரணிலின் சூழ்ச்சியை வெளியே கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதே சபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நேற்று நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“தேர்தல் நடக்குமா என மக்கள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர், ஆனால்  ஜனாதிபதி ரணிலுக்கு தேர்தலைச் சந்திப்பதற்கு பயம், இதுவே தேர்தலை பிற்போடக் காரணம்.

நான் 2019 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கோரி தனிநபர் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தேன், ஆனால் மாகாண சபைத் தேர்தலையும் இவ்வாறான சூழ்ச்சியின் மூலம் பிற்போட்டு விட்டார்கள்.

இப்போது மாகாண அதிகாரமும் கிடையாது, உள்ளூராட்சி அதிகாரத்தையும் வழங்க மறுக்கிறார்கள். மக்கள் ஆணை இல்லாமல் ஜனாதிபதியாக வந்த ஒருவர் முழு அதிகாரத்தையும் தனது கையில் எடுத்து தேர்தலை பிற்போட செய்யும் சூழ்ச்சியை வெளியே கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.

இந்த தேர்தலினால் ஏற்படப்போகும் விளைவுகளை உணர்ந்த காரணத்தினாலேயே குறித்த தேர்தலை பிற்போட முனைப்புக் காட்டுகின்றனர்.” இவ்வாறு நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வதை ஏனைய பங்காளி கட்சிகளே விரும்பவில்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து கூட்டாக தேர்தலில் களமிறங்க தமிழரசுக் கட்சி தயாராகவே இருந்தது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், இருப்பினும் அதனை ஏனைய தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் முடிவு எடுப்பதற்கு முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மற்ற கட்சிகள் மீறியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழரசு கட்சி பெருவாரியான வெற்றியை பெறும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசு கட்சி நிர்வாகத்தை அமைத்திட அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதே நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி உள்ளூராட்சி தேர்தலை தனித்து எதிர்கொள்கின்ற பங்காளி கட்சிகள் எம்.ஏ சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து பிளவு பட செய்தார் என குற்றம் சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும்.”- தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஏ. சுமந்திரன் !

அதிகாரப்பகிர்வு என்ற பேர்வையில் மாயாஜால வித்தை காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை வெருகல் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் கோரும் சமஷ்டி தீர்வு என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தெற்கில் எவ்வாறான மாற்றம் ஏற்பட்டாலும் தம்மைத் தாமே ஆள அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்ற வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களது இந்த நிலைப்பாடு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வெளிப்படுத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“நான் ஒரு போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டிக் கொடுக்கவில்லை.” – எம்.ஏ. சுமந்திரன்

இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு போட்டியாக அரசுக்கு ஆதரவாக இன்னொரு கட்சி உருவாக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது. அரசு கூலியாக இருந்தவர்கள் தான் அந்த கட்சியை பதிவு செய்தவர்கள். தங்களிடத்தில் எது இல்லையோ அதை தங்களுடைய பெயரிலேயே சேர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகமாக அவர்கள் செய்யப்படவில்லை, அந்த நேரத்திலேயே வீதி வீதியாக சந்தி சந்தியாக நின்று காட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்.

அரசு கூலிப்படையாக செயல்பட்டவர்கள் பதிவு செய்த அரசியல் கட்சிக்கு பேர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. அவ்வாறானனவர்கள் இன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை தாங்கள் பாதுகாக்கின்றோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு போட்டியாக அரசு கைக்கூலியாக கட்சியை வைத்திருக்கின்ற அவர்கள் இன்றைக்கு அந்த கட்சியிலே போட்டியிட்டுக் கொண்டு அதற்குப் பெயர் கூட்டமைப்பு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஜனநாயகம் என்பது மறைந்து விட்டது என்பதை இப்போது ஏற்றுக் கொண்டவர்களாக அதை இல்லாத ஆக்கிவிட்டு சிறிய டீ ஒன்றை முன்னுக்கு வைத்துக் கொண்டு குறுகிப் போன ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு கட்சி நடத்துவதாக இன்றைக்கு தம்பட்டம் அடிக்கின்றார்கள்.

மக்களுக்கு இந்த தேர்தலிலே யார் எவர் என்பது நன்றாக தெரிந்திருக்கும். 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சூசை தாசன் போட்டியிட்டு இருந்தார். சூசை தாசன் என்பவர் 77 ஆம் ஆண்டு போட்டியிட்டு பெரு வெற்றியீட்டியவர்.

அப்படிப்பட்ட ஒருவர் 2010 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் தோல்வி அடைந்திருந்தார்.அந்த தோல்விக்கான காரணத்தை 2012 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்ற போது அவரே சொல்லியிருந்தார்.

அவர் பேசுகின்ற போது சொன்னார் நான் தோற்றமைக்கு காரணம் கேட்கின்றார்கள். நான் தோற்றதற்கு காரணம் நான் தூள் கடத்துவதில்லை, நான் ஆள் கடத்துவதில்லை, நான் கொலை செய்வதில்லை அதனால் தான் நான் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றேன் என்று சொன்னார்.

ஆனால் இன்றைக்கு தமிழரசு கட்சி மக்கள் முன்பாக ஒரு தூய்மையானதாக வந்து நிற்கின்றது. தூள் கடத்துபவர்கள் எங்கள் மத்தியில் இல்லை நீங்கள் தாராளமாக தமிழரசு கட்சிக்கு வாக்களிக்கலாம்.

இந்த தேர்தலில் எங்களுடைய கட்சி போட்டியாளர்களுக்கு நான் சொல்லுகின்ற விண்ணப்பம் எந்தவித போதை வஸ்துக்களையும் மக்களுக்கு விநியோகிக்க வேண்டாம், சாராயம் விநியோகிக்க வேண்டாம் அப்படி செய்கின்ற பலர் இருக்கின்றார்கள் அவர்கள் எல்லாம் இப்போது எங்களுடைய கட்சி இல்லை.

இப்போது வேட்பாளர்களாக இருக்கின்றவர்கள் மக்களுக்கு சாராயம் விநியோகிக்க வேண்டாம் தூய்மையான சாத்வீக வழியிலான ஒரு போராட்டத்தை தமிழரசுக் கட்சி முன்னெடுக்கினறது.

நெடுங்காலமாக இலங்கை தமிழரசு கட்சி சொல்லி வந்த கொள்கையை முன்வைத்து உங்களுடைய பிரதேசத்து மக்களுக்காக நீங்கள் போட்டியிடுங்கள் என்று அனைத்து வேட்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சம்பந்தரையும் என்னையும் குறை சொல்லுவது பலருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது அதைத்தான் இவர்களும் இப்போது கையில் எடுத்திருக்கின்றார்கள்.

சம்பந்தன் யார் ..?நான் யார்..? என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ஒரு காலமும் எங்களுக்காக போராடியவர்களை காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல, சந்தி சந்தியாக நின்று முகத்தில் சாக்கை போற்றி வைத்துக் கொண்டு தலையாட்டி காட்டி கொடுத்தவர்கள் அல்ல. அவர்களில் ஒரு தலைவருக்கு பழக்க தோஷமாக போய்விட்டது. இப்போது கூட்டத்திலும் தலை ஆடிக்கொண்டே இருக்கின்றது அது தலையாட்டிய பழக்கம்.

1980 ஆம் ஆண்டு இதனைச் சாதித்தோம், 1985இல் இதனைச் சாதித்தோம் 1987இல், 1989இல், 1994இல் 2001இல் 2004இல் இதனைச் தாதித்தோம் என வரலாற்றுப் பட்டியலிடுகின்றார். அதே பட்டியலில் எத்தனையாம் ஆண்டுகளில் யாரைப் போட்டுத் தள்ளினோம், எத்தனையாம் ஆண்டு அரச கூலிப்படையாக சேர்ந்து இயங்கினோம் என்பதனைக் கூற மறந்துவிட்டார்.

எங்கள் இருவருடைய சரித்திரத்தையும் நன்றாக துலாவி பார்க்கலாம் எந்த தருணத்திலையும் யாரையும் நாங்கள் காட்டிக் கொடுத்தோமா? அரசு கூலிப்படையாக செய்யப்பட்டோமா? என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என தெரிவித்தார்.