தற்போதைய சிரமங்களை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்கை ஆற்றுவதற்கு தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படும் என சீனா நம்புகிறது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான விரைவான முன்னேற்றம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று இந்த வாரம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
IMF , பிற சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்களுடன் சீனா நீண்டகாலமாக நல்ல ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது என்று மாவோ தெரிவித்தார்.
இலங்கையின் கடன் பிரச்சினை தொடர்பில், இலங்கையின் சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக மாவோ குறிப்பிட்டார்.
“பிரச்சினையை சரியான முறையில் தீர்ப்பதற்கு நிதி நிறுவனங்களை இலங்கையுடன் இணைந்து செயற்பட நாங்கள் ஆதரிக்கிறோம்.
தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படுவதோடு, இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிப்பதற்கும். அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தொடரும் என நாங்கள் நம்புகிறோம் என மாவோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய மூன்று நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
சர்வதேச அபிவிருத்திக்கான நிலையத்தின் தலைவர் மசூட் அஹமட்டுடான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய மூன்று நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியன காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள அவர் தனியாரையும் உள்வாங்க முடியும் என கருதுகின்றோம் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் வரிகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் உள்ளதால் அது தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் எனவே அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அவரின் கருத்துக்கு பதில் வழங்கும்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,
“சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்படிக்கை குறித்து நான் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளேன். அவர் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு எதிரானவர் அல்ல. அதில் வரி தொடர்பான முக்கிய விடயங்கள் உள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தாங்கள் விரைவில் தேசிய சபையை ஸ்தாபித்து, குறித்த ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தை முன்வைத்து கட்சித் தலைவர்களின் கருத்தைப் பெறுவோம் என்றும் அவர் கூறினார்.
இதனையடுத்து, பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் உள்ள முக்கியத் தகவல்களை விட்டுவிட்டு ஏனைய விபரங்களை அவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்மொழிந்தார்.
இலங்கையின் பொருளாதார கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச 2.9 பில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியக்குழு இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையினை மேற்கோற்காட்டி செய்துள்ள டுவிட்டர் பதிவிலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினால் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஊழியர்மட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, மேலதிக கலந்துரையாடல்களையும் தீர்மானங்களையும் எடுப்பதற்காக சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமாப்பிக்கப்படும்.
பொருளாதார உறுதிப்பாட்டினையும் கடன் நிலைபேற்று தன்மையை மீட்டெடுக்கும் வகையிலும் , நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்தல், ஊழலினால் பாதிக்கப்படக்கூடிய தன்மைகளை நிவர்த்திசெய்தல், இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொணர்வதற்குக் கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்களை முன்னெடுத்தல் என்பன ஊழியர் மட்ட இணக்கப்பாட்டின் குறிக்கோள்களாகவுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரவானது பொருளாதாரத்தினை உறுதிப்படுத்தல், இலங்கை மக்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் பொருளாதார மீட்சிக்கான தளத்தினைத் தயார்படுத்தல் மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சியினை ஊக்குவித்தல் என்பவற்றினை நோக்காகக்கொண்டுள்ளது. இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிக்கும் முகமாக எமது ஈடுபாட்டினைத் தொடர்ந்தும் முன்னெடுக்க ஆவலுடன் இருக்கிறோம்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி இராஜ்ஜியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே அமெரிக்காவின் நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டில் போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கே ஈடுபட்டுள்ளார். அத்துடன் காலிமுகத்திடல் போராட்டத்திற்கும் இவரே ஒத்துழைப்பு வழங்கினார். அத்துடன் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவை ஜுலி சங்கே பதவியிலிருந்து விரட்டினார்.
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஜூலி சங் தலையிடுகின்றார். அவ்வாறு தலையிடுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதி முக்கியமானது அல்ல. சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை முன்வைக்கும். அந்த நிபந்தனைகளே இன்று நடைமுறைப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய கடனை மறுசீரமைக்கும் வியடத்திற்குள்ளும் நிபந்தனை விதிக்கும் பல காரணங்கள் உள்ளன. அந்த நிபந்தனைகள் மிகவும் மோசமானது என கூறப்படுகின்றது.
வேதனை அளிக்கும் எனவும் கூறப்படுகின்றது. அதேபோன்று அந்த நிபந்தனைகள் மக்களின் எதிர்ப்பிற்கு உள்ளாகும் எனவும் கூறப்படுகின்றது. அவ்வாறெனின் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு வேதனை அளிக்கும் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தினால், பாரிய மக்கள் எதிர்ப்பை மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்க வேண்டும்.
அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இருக்கின்றார். இன்று அவர் கோர்பச்சோப் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கோர்பச்சோப் சிறந்த ஒருவர். அவர் கமியூனிஸ்ட் சித்தார்ந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ரஷ்யாவை உடைத்தார். தாராளவாதத்தை அறிமுகப்படுத்தினார். இலங்கைக்கும் கோர்பச்சோப் போன்ற ஒருவர் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஜுலி சங், சிறிலங்கா நிர்வாகம் குறித்து ஏன் அவர் தலையீடு செய்கின்றார்.
வடக்கு கிழக்கு பகுதிக்கு தனியான அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் இலங்கையில் கோர்பச்சோப் போன்ற ஒருவர் தேவை என கூறுகின்றார்.
வடக்கு கிழக்கிற்கு தனியான அரசாங்கம் ஒன்றை பெற்றுக்கொடுப்பது அவரின் பிரதான நோக்கமாக மாறியுள்ளது. இலங்கையின் உள்ளக ஆட்சி குறித்து அவருக்கு உரிமை உள்ளதா? இல்லை. இது அமெரிக்காவின் பலவந்தமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள 40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்து ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நிதி நிபந்தனையை அரசாங்கம் பாராளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைக்கும் போது அந்த பிரேரணைக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியமோ அல்லது வேறு எந்தத் தரப்பினரோ இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வாறான நிபந்தனையை விதிக்கவில்லை என ஹர்ஷ டி சில்வா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டால் நெருக்கடிக்கு அவர்களே தீர்வுகளை வழங்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற வேண்டும் என எவரேனும் கூறினால் அவர்கள் முட்டாள்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டின் பொருளாதாரத்தை திரும்பிப் பார்க்கும் போது சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தெளிவாகத் தெரிகின்றது.
தாய்லாந்து, தைவான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை நோக்கத்தை புரிந்து கொண்டதால் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அறிவுறுத்தல்களை நிராகரித்ததாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்கும் அரசியல்வாதிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை சமநிலைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் இலங்கை உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
“சீனா ஒரு பெரிய கடன் வழங்குநர். எனவே அந்த நாடு வழங்கிய கடனை மறுசீரமைக்க அந்த நாட்டுடன் இலங்கை தீவிரமாக பேச்சில் ஈடுபட வேண்டும்” என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் நேற்று முன்தினம் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அண்மைய வரலாற்றில் மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, சீனா இலங்கைக்கு 6.5 பில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, இலங்கையில் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி ஆலைகள் போன்ற திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, அதிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் வசதியை கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காலிமுகத்திடல் அரகலியாக்களின் போராட்டம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை விரட்டிவிட்டு அமெரிக்க – ஐஎம்எப் (சர்வதேச நாணய நிதியம்) ஆல் சிபாரிசு செய்யப்பட்ட ரணிலை ஜனாதிபதியாக்கியது. அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தங்கள் காரியம் நடந்து முடிந்ததும் அரகலியாக்களை அடித்து விரட்டினர். கோட்டபாய ராஜபக்ச மக்களால் தெரிவு செய்யப்பட்டு இருந்தும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கொண்டிருந்தும் அரகலியாக்களுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தவில்லை. அரகலியாக்களின் போராட்டத்தினால் நட்டைவிடே ஓடி பதுங்கி இருக்கின்றார். விரும்பியோ விரும்பாமலோ அதிகாரம் ராஜபக்சக்களின் வசமே இன்னமும் உள்ளது. ராஜபக்சக்கள் யாரைக் காட்டினார்களோ அவர் – ரணில் ராஜபக்ச ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.
அரகலியாக்களும் அமெரிக்க – ஐஎம்எப் கூடலும் ஊடலும்:
இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் ஐஎம்எப் – சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் காலிமுகத்திடல் அரகலியாக்கள் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தவும் அரகலியாக்கள் கோரவில்லை. அப்படிக் கோரி இருந்தால் நாடு எதிர்காலத்தில் சுயசார்பாக வந்துவிடும். ஐஎம்எப் – உலகவங்கிக்கு அடிமையாக இராது. அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் முழுமையான ஆதரவு போராட்டகாரர்களுக்கு வழங்கப்பட்டு இராது. இந்தப் போராட்டத்தை மேற்கு நாடுகள் கண்டுகொண்டிராது. போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களுக்கு 45 மில்லியன் டொலர் வழங்கப்பட்டும் இராது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கோக்கோ கோலா குடிபானம் முதல் இலவச உணவுகள் வழங்கப்பட்டிராது.
ஆனால் நடந்தது என்ன? மேலே சொன்னதெல்லாம் போராட்டகாரர்களுக்கு வாரி வழங்கப்பட்டது. காற்று வாங்க வந்த போராட்டகாரர்களுக்கு முதலுதவி முகாம்கள் அமைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்டது போல முதற்தரமான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. காலிமுகத்திடலில் நடந்த ‘கோட்டா கோ கம – கோட்டா கோ ஹோம்’ போராட்டம் தான் உலகில் நடைபெற்ற ஒரே செழிப்பான போராட்டம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்துதான் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இறுதிக் கட்டத்தில் தான் கும்பலில் கோவிந்தா என்று பெரும் தொகையானோர் ஈர்க்கப்பட்டனர். இதனை ஜேவிபி இன் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.
பிரித்தானியாவில் இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி ஐஎம்எப் இன் நிபந்தனைகளை நிராகரிக்கவும் கடன்களை மீளச்செலுத்த வேண்டாம் என்பது உட்பட பல முற்போக்கான கோரிக்கைகளை வைத்தது. ஆனாலும் இக்கோரிக்கைகள் பெரும்பாலும் தட்டிக்கழிக்கப்பட்டது. தங்கள் கோரிக்கைகள் தட்டிக் கழிக்கப்பட்ட போதும் கூட தமிழ் சொலிடாரிட்டி அரகலியாக்களுடைய அமெரிக்க ஐஎம்எப் சார்புநிலைக்கு ஆதரவளித்தனர். இந்தப் போராட்டங்களில் தலையைக் காட்டாவிட்டால் தாங்கள் துரோகிகள் ஆகிவிடுவோம் என்பதால் மேற்கத்திய ஜனநாயகத்தால் ஈர்க்கப்பட்ட லிபரல்களும் இடதுசாரிகளும் கூட தங்கள் தங்கள் நாடுகளில் ஆதரவுப் போராட்டங்களை கொப்பிகற் முறையில் அல்லது குழவாத உளவியல் மற்றும் டொமினோ தாக்கம் போல் மேற்கொண்டனர்.
அமெரிக்க – ஐஎம்எப் நலன்களுக்காகப் போராடிய இந்த அரகலியாக்களை அமெரிக்க – ஐஎம்எப் ஆதரவு பெற்ற ரணில் பதவியேற்ற 24 மணிநேரங்களிற்குள்ளாக இரவோடு இரவாக விரட்டி அடித்தார். நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களை விரட்டி அடித்து, ரணில் தன்னுடைய வீட்டை எரித்ததற்குப் பதிலடி வழங்கினார்.
மக்கள் செல்வாக்கற்ற காலிமுகத்திடல் அரகலியாக்கள்:
பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்ததும் அவருடைய கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாங்கள் அடுத்த தேர்தலலில் வெற்றி பெறுவது கடினம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு பதிலாக இன்னொருவரை புதிதாக தெரிவு செய்வதன் மூலமே தாங்கள் மக்களிடம் செல்ல முடியும் என்று நம்பினர். அதனால் 24 மணி நேரத்திற்குள் வரலாறு காணாத அளவில் 49 அமைச்சர்கள், துணை அமைசர்கள் பதவி விலகினர்.
ஆனால் ஆறு மாதகாலம் நீடித்த போராட்டத்தின் போதும் அதன் பின் கோட்டபாய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறிய பின்னும் கூட அவருடைய அமைச்சரவையிலோ பாராளுமன்ற பெரும்பான்மையிலோ குறிப்பிடத்தக்க சலசலப்பு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் கோட்டபாய ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் முன்னணி – பொதுஜனப் பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் அடுத்த தேர்தலிலும் வெற்றிபெறுவோம், அதற்கு ராஜபக்சக்களின் தலைமை தேவை என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவு அதனை மிகத் தெளிவாக்கி உள்ளது.
போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜேவிபிக்கு பாராளுமன்றத்தில் மூன்று வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு இப்பதவியை ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுன கட்சியினரே வழங்கி இருந்தனர். 134 வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மறுமுனையில் ரணிலுக்கு எதிராக களமிறக்கப்பட்டவர் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர். அவர் 82 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரும் ராஜபக்சாக்களின் நெருங்கிய சகா. இவ்விருவரில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் அவர் ராஜபக்சக்களின் அதரவுடனேயே ஆட்சியை மேற்கொள்கின்றார் என்பதே உண்மை. தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் ராஜபக்சக்களுக்கு மிகவும் விசுவாசமானவர். இவர்கள் அமைக்கின்ற அமைச்சரவை உறுப்பினர்களும் ராஜபக்சாக்களின் அமைச்சரவை உறுப்பினர்களாகவே உள்ளனர். இலங்கை மக்கள் மத்தியில் ராஜபக்சக்களின் ஆதரவுத் தளத்தில் எவ்வித பாரிய பாதிப்பும் ஏற்பட்டு இருக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது.
இழப்பதற்கு தம்முடைய வறுமையைத் தவிர எதுவுமற்ற மக்கள் அமெரிக்க நலன்களுக்கும் ஐஎம்எப்க்கும் மசிந்துவிட மாட்டார்கள். காலிமுகத்திடல் அரகலியாக்களுக்கும் இலங்கை வாழ் சாதாரண மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது. கொழும்பில் நீர்த்தடாகத்தோடு வீடுவைத்திருக்கும் ஒரு மனிதவுரிமை சட்டத்தரணி, தான் நடுத்தரவர்க்கம் என்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவதாகவும் கதையளந்தால் மலையகத்தில் லயன்களில் இலங்கையின் அடிப்படைச் சம்பளத்திலும் குறைவாக சம்பளம் பெறும் குடும்பங்கள் என்ன கருதும்?
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரும் மோட்டார் சைக்கிளும் வைத்துள்ளவர்கள். இலங்கை மக்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவக் காப்புறுதி உடையவர்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சக்தி கொண்டவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தங்களுடைய நாளாந்த தேவைக்கு பெற்றோல் வேண்டும். சமைக்க எரிவாயு வேண்டும். அவர்களுக்கு பெற்றோலுக்கு மானியங்கள் தேவையில்லை. கள்ளச்சந்தையில் பெற்றோலை லீற்றர் 3,000 ரூபாய்க்கும் வாங்கி ஓடக்கூடியவர்கள். ஆனால் இலங்கையின் கிராமப் புறங்களிலேயே வாழும் பெரும்பாலான மக்கள் எரிவாயுவை பயன்படுத்த தெரியாதவர்கள். அடுப்பூதி ஈர விறகை வைத்தே சமைப்பவர்கள். பல லட்சம் கொடுத்து காரையோ மோட்டார் சைக்கிளையோ வாங்க இயலாதவர்கள். சைக்கிள் இல்லாவிட்டால் பொதுப் போக்குவரத்தில் வாழ்பவர்கள்.
இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது வேலை செய்து சம்பாதிக்காதவர்கள். பெற்றோரை கஸ்டப்படுத்தி மோட்டார் சைக்கிளும் அவர்களிடமே ஓசியில் பெற்றோலும் அடித்து முறுக்கித் திரிபவர்கள். ஓசியிலேயே வாழும் இந்த ஜீவன்களுக்கு வாக்களித்து பழக்கம் இருக்கா என்பதே சந்தேகம். இவர்கள ஏன் போராடினார்கள்? என்னத்தை கோரினார்கள்?
‘கோட்டா கோ ஹோம் – பில் மை பெற்ரோல் ராங் (fill my petrol tank)’ போராட்டம் பூரண வெற்றி. இனிவரப்போகும் விளைவுகளுக்கு அவர்கள் பொறுப்பல்ல. இதனால் தான் அரகலியாக்கள் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தக் கோரவும் இல்லை.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே காரணம் எனவும் இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவான புரிதலை பெற்றவுடன் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருளாதாரத் தளம் அமைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்தார்.
இந்தியாவின் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் தவறான நிர்வாகத்தின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கண்டு மனம் உடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும், தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கையில் ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவை தாம் மதிப்பதாகவும், கடினமான காலங்களில் இந்தியாவின் ஆதரவானது நல்ல நட்பை வெளிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.