தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு

“இம்முறை தமிழர் பகுதிகளில் மே தினம் கொண்டாடப்படும். அது தமிழ்தேசிய தினமாக கொண்டாடப்படும்.”- எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு !

‘இம்முறை மே தினம் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் கொண்டாடப்படும். அது தமிழ் தேசிய மே தினமாக நடத்தப்படும். ” தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு கொந்தளிப்பான அரசியல் நிலமை காணப்படுகின்றது. இந்த நிலை தொடர்பில் ஆராய்வதற்காக எமது கட்சியின் அரசியல் உயர் மட்ட குழு கூடியது. இந்த அரசியல் கொந்தளிப்புக்கு அடிப்படைக் காரணம் பொருளாதார வீழ்ச்சி. எப்படியாக இலங்கையினுடைய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதற்கான காரணிகள் என்ன? இனி என்ன மாதிரியாக இந்த நிலமை மாறப் போகிறது என்பன குறித்து நீண்ட நேரமாக கருத்து பரிமாற்றம் செய்தோம்.

சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார வீழ்ச்சி ஒன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய பக்க விளைவுகளை எமது மக்கள் எதிர் நோக்க வேண்டிய நிலையும் வந்திருக்கிறது. இந்த நிலையில் வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய பிரதான அரசியல் கட்சியாக நாங்கள் எனன விதமான தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும். மக்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை கொடுக்க வேண்டும். பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலையில் என்ன மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி மிகவும் ஆழமாக பேசியிருந்தோம்.

இந்த பொருளாதார நிலை காரணமாக இன்னும் மோசமான நிலைக்கு நாடு தள்ளப்படுவதற்கான நிலமை தான் காணப்படுகின்றது. அது எமது மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதிக்கப் போகிறது. அவர்களது பொருளாதார நிலமையும் பாதிக்கப் போகிறது. அதற்கு மாற்று வழிகளாக பல யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தோட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியுள்ளது. இது எங்களது மக்களுக்கு புதிதான விடயமல்ல. இருப்பினும் மக்கள் தயாராக இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் என்ற வகையில் அவர்களுக்கான வழிகாட்டுதல்களை நாங்கள் கொடுப்போம். எங்கள் பொருளாதார நிபுணர்கள் ஊடாக அது தொடர்பில் கலந்துரையாடுவதுடன், எமது அடுத்த மட்ட பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம்.

இம்முறை மே தினம் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் கொண்டாடப்படும். அது தமிழ் தேசிய மே தினமாக நடத்தப்படும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அதில் கலந்து கொள்வார்கள் என நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.

இன்று அரசாங்கம் ஒன்று இல்லாத நிலமை காணப்படுகின்றது. அமைச்சரவை என நான்கு பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் உடனடியாக இராஜினாமா செய்தார். நிதி அமைச்சர் இல்லாத நாடு என நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த போது அவர் பாராளுமன்றத்தில் பேச எழுந்தார். அப்போது நீங்கள் தானா தற்போது நிதி அமைச்சர் என அவரிடம் நான் கேள்வி கேட்டேன். ராஜினாமா செய்து விட்டு, தான் நிதி அமைச்சர் என அவர் சொன்னார். அவ்வாறு அவர் சொன்ன போது அவருடன் கூட இருந்தவர்கள் எல்லாம் வியப்பாக அவரை திரும்பி பார்த்தார்கள். ஏனெனில் இப்பொழுது அவர் தான் நிதி அமைச்சர் என்பது அவர்களுக்கே தெரியாது. இப்படியாக நாடு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக சென்று பேச வேண்டும். கடன் கொடுத்த நாடுகள், அமைப்புக்களுடன் பேச வேண்டும். அமைச்சரா, இல்லையா என்று புரியாத நிலையில் உள்ளவர் தான் போய் பேச போகிறார். சர்வதேச நாணய நிதியமும், மற்றைய நாடுகள், அமைப்புக்களும் உதவிக்கு முன் வருவதாக இருந்தால் கூட நாட்டில் ஒரு அரசியல் ஸ்திர தன்மை இல்லாமல் அவர்கள் அந்த செயற்பாட்டுக்குள் வர மாட்டடார்கள். ஆகவே அரசியல் ஸ்திரதன்மையை உருவாக்குவது அத்தியாவசியமான செயற்பாடு. அதற்கு உகந்த வகையில் ஜனாதிபதியோ, பிரதமரோ செயற்படுவதாக தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக நான் கொழும்பில் இருந்த காரணத்தினால் பல்வேறு தலைவர்களுடன் பல கலந்துரையாடல்களில் பங்குபற்றியிருக்கிறேன். எதிர்வரும் நாட்களில் பிரதான எதிர்கட்சி சில முன்னெடுப்புக்களை செய்ய உள்ளார்கள். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதிபக்கு எதிரான குற்றப் பத்திரிகை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான சட்டப் பிரேரணை உட்பட பல விடயங்களை முன்னெடுக்கவுள்ளார்கள். இது தொடர்பில் ஆராய்ந்தோம்.

நாட்டில் இளைஞர்களாக சேர்ந்து தன்னெழுச்சியாக நடத்தப்படும் போராட்டங்களில் அரசியல்வாதிகள் இல்லாமலேயே நடத்தப்படுகின்றது. எமது பகுதிகளிலும் சில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் ஆர்வமாக உள்ளார்கள். இந்த மூன்று பிரேரணைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும். அந்த தீர்மானம் பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்து கலந்துரையாடி உத்தியோக பூர்வமான தீர்மானமாக எடுப்போம். எமது மக்கள் மத்தியிலும் இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று எமது கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை எமது கட்சி தலைவர் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்துவார்.

தேசிய அரசாங்கம் வந்தால் நாங்கள் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. அவ்வாறான ஒரு தேவையை இப்போது நாங்கள் கருதவில்லை. இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மாறி மாறி வந்த அரசாங்கங்களே காரணம். மிகவும் முக்கிய காரணம் 30 வருடத்திற்கு மேலாக ஒரு போரை நடத்தியது. அதற்காக கண்மூடித்தனமாக எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கினார்கள். அதற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பொறுப்பு. இறுதியாக தவறு ஏற்பட்டது இந்த ஜனாதிபதியின் காலத்தில் தான். இதனை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களிடத்தில் உள்ளது. இதில் நாம் பொறுப்பில்லாதவர்களாக செய்யற்பட முடியாது. இதனுடைய தாக்கம் எங்களது மக்களுக்கும் மோசமாக அமையப் போகிறது. அவ்வாறு எமது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் செயற்பட வேண்டும். அதற்கு தேவையான ஆதரவை இடைக்கால அரசாங்கதற்கு கொடுக்க வேண்டுமாக இருந்தால் அப்போது அதற்கான முடிவை எடுப்போம். ஆனால், அமைச்சரவையில் நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டிய தேவை ஏற்பட வில்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக நான் சந்திக்கவில்லை. அவர் என்னை சந்திக்க கேட்டிருந்தார். அதனடிப்படையில் இரவு அவரை தனியாக சந்தித்து பேசியிருந்தேன். அரசியலமைப்பு தொடர்பாக பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என பல விடயங்கள் பேசப்படுகின்றன. பல கட்சித் தலைவர்கள் என்னுடன் பேசுகிறார்கள். இலவசமாக சட்ட ஆலோசனை பெறுகிறார்கள் என நான் யோசிகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் என்னுடன் பேசினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் தொலைபேசியில் காலையில பேசியிருந்தார். வேறு தலைவர்கள் பலர் பேசுகிறார்கள். சட்ட நிலைப்பாடு தொடர்பாகவும் அறிகிறார்கள். அரசியல் நிலையை ஸத்திரதன்மைக்கு கொண்டு வருதல் தொடர்பாக நடைபெறும் பேச்சுக்களிலும் நான் கலந்து கொண்டு வருகின்றேன். பிரதமர் மஹிந்த அவர்களுக்கு நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனையை அரசாங்கமே கொண்டு வந்தால் சில விடயங்களில் முன்னேற முடியும் என ஆலோசனை வழங்கியுள்ளேன் எனத் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசில் இருந்த போது கூட்டமைப்பினர் ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவில்லை.? – வி விக்னேஸ்வரன் பதில் !

கடந்த நல்லாட்சி காலத்தில் அரசோடு சேர்ந்து இயங்கிய கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அவரது வாசஸ்தலத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நல்லாட்சி அரசின் போது அரசாங்கத்தோடு சேர்ந்து பயணித்த கூட்டமைப்பினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் செயற்பாட்டை அப்போதே நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் தமது நண்பருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதற்காக அதனை செயற்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். கடந்த 43 வருடமாக மக்களுக்கு எதிரான ஒரு சட்டமாக பயங்கரவாத தடைசட்டம் இருந்து வருகின்றது

எனினும் காலம் கடந்தும் கூட்மைப்பின் இளைஞர் அணி இதையாவது செய்து கொண்டு போகிறார்கள் என்பதை நாங்கள் நல்ல விதத்திலே பார்ப்போம். ஆனால் அரசியல் ரீதியாக பிழையான கருத்துக்களை முன்வைக்கவில்லை.

மேலும் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு நிபந்தனை விதித்திருப்பதற்கு தமிழ் பேசும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தியாவை 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்த கோரி கடிதம் கையளித்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கமானது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்தோடு 13வது திருத்தச் சட்டத்தினை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கோரியிருக்கின்றது. இதற்கு தமிழ் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு இந்தியை கோரி இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் காலம் கனிந்து நல்லதே நடக்கும் என ஏற்கனவே கூறியிருந்தோம் அதன் ஒரு அங்கமாக கூட இது இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த அமைச்சருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.? – சபையில் சாணக்கியன் கேள்வி !

தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த அமைச்சருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.?  என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சபையில் வைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக மேலும் உரையாற்ற அவர்,

“இன்று கொலை செய்து, கற்பழித்து, களவெடுத்த குற்றத்தில் சிறைத்தண்டனைப் பெறும் கைதிகளுக்காக சபையில், இன்று பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக போராடி, தன்னுடைய இனத்தின் அரசியல் உரிமைக்காகப் போராடி, 20 – 30 வருடங்களாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும்.

அண்மையில், அநுராதபுர சிறைச்சாலையில் துரதிஷ்டவசமானதொரு சம்பவம் இடம்பெற்றது. அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த குறித்த அமைச்சர் பதவி விலகியதாகக் கூறப்பட்டது. ஆனால், அவருக்கு எதிராக கட்சி என்ற ரீதியில் என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது?
சிறைச்சாலைக்குள் சவர்க்காரம் மற்றும் நீர் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இரவில் உறங்கக்கூட முடியாத நிலைமைக் காணப்படுகிறது.

இதுதொடர்பாக நீதி அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? நாம் அவர்களுக்கு சவர்க்காரம் வேண்டும், நீர் வேண்டும் என்றுக் கூறவில்லை.

மாறாக அவர்களை நிம்மதியாக உறங்கவேனும் விட வேண்டும் என்று தான் கோருகிறோம்.
அவர்களின் வழங்குகளைத் தான் விரைவில் முடிக்க முடியாதுள்ளது. குறைந்தது இந்த நடவடிக்கையையேனும் செய்ய வேண்டும் என்று தான் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.

அதேநேரம், பதுளை சிறைச்சாலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளும் தாக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பாக நீதி அமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன? நிம்மதியாக சிறையிலேனும் அவர்களை இருக்க விட வேண்டும்.

மேலும், முகநூலில் கருத்துக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்ட குற்றத்திற்காக பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிணை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

ஒருசிலருக்கு அரசாங்கம் பிணை வழங்கியிருக்கலாம். இவை ஐ.நா. மனித உரிமை பேரவையை ஏமாற்ற செய்த செயற்பாடுகளாகும். எனவே, அநுராதபுரம் மற்றும் பதுளை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளுக்கு நடந்த தாக்குதலுக்கான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும்.

அவர்களை நிம்மதியாக சிறைகளில் உறங்கவேனும் அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்” – எனத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு !

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்றினை முல்லைத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று (03) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் தொடக்கி வைத்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தினார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்து போராட்டத்தினை தொடக்கி வைத்துள்ளார்கள்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரிய கையெழுத்து போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்.,

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் மிக மோசமான சட்டமாக இருக்கின்றது. 6 மாத காலத்திற்கு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டது 42 ஆண்டுகளாக இருக்கின்றது. விசேடமாக தமிழ் இளைஞர்களை நசுக்குகின்ற ஒடுக்கி ஆழ்கின்ற சட்டமாக சர்வதேச விழுமியங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி செயற்படும் சட்டமாக இருக்கின்றது.

அது நீக்கப்படும் என்று இலங்கை அரசு தெளிவாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி கொடுத்துள்ளது. அவ்வாறு நீக்குவதற்கான முயற்சியும் சென்ற அரசாங்க காலத்தில் இடம்பெற்றுள்ளது. அது முழுமை பெறவில்லை. ஆனால் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை சீர்த்திருத்துகின்றோம் என்று சொல்லி எந்த வித உப்புச்சப்பில்லாத ஒரு சீர்த்திருத்தமாக அறிவிக்கப்படுகின்ற ஒரு வர்த்தமானி பிரசுரம் வந்துள்ளது.

அது நடைமுறையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அமுலில் எந்த மாற்றத்தினையும் செய்யப் போவதில்லை. ஆகவே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு விசேடமாக ஜரோப்பிய ஒன்றியத்தினை ஏமாற்றுவதற்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கின்றது அவர்களையும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் இது செய்யப்படுகின்றது அவர்கள் எல்லாருக்கும் விளக்கமாக விடையங்களை அறிவித்துள்ளோம்.

இந்த தருணத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்குவோம் என்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் அந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்று முழுதாக நீக்கப்படவேண்டும் என்று எங்கள் மக்கள் நேரடியாகவே கையெழுத்திட்டு கோருகின்ற ஆவணத்தினை கையெழுத்து இட்டு ஆரம்பித்து வைக்கின்றோம்.

இது எட்டு மாவட்டங்களிலும் மக்களிடத்தில் வீடு வீடாக சென்று வீதி வீதியாக சென்று மக்களின் கையெழுத்து வாங்கி இன்று ஆரம்பித்து வைக்கின்றோம். தமிழரசு கட்சியின் இளைஞர் அணி கையெழுத்து போராட்டத்தினை மக்களிடத்தில் முன்கொண்டு செல்லவுள்ளது.

யாழில் நடைபெறுகின்ற மீனவர்களின் போராட்டத்தினை கருத்தில் கொண்டு அந்த போராட்டத்திற்கு ஒரு முடிவு வந்த பின்னர் கையெழுத்து போராட்டத்தினை முழு வீச்சாக செயற்படுத்துவோம் என்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களிடத்தில் கையெழுத்து சேகரித்து அனுப்பவுள்ள கடிதத்தில் 1979 ஆம் ஆணடின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டமே (தற்காலிகமாக) எமது சட்டப்புத்தகங்களில் காணப்படும் மிகக்கொடூரமான சட்டமாக தற்போதும் சட்டப்புத்தகங்களில் காணப்படுகின்றது.

1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் அதன் தலைப்பில் தெரிவிப்பது போல தற்காலிகமாக 6 மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாக வேண்டியது 42 ஆண்டு காலங்கள் நீடித்து அநீதியை விளைவித்தும் அநேகருக்கு துன்பத்தினையும் கஸ்டத்தினையுமே வழங்கியுள்ளது.

இந்த சட்டத்தின் விதிகள் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை மூலாதாரங்களுக்கு எதிரான திசையில் இயங்குகின்றன. உண்மையில் விசாரணை நிலுவையில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானமும் கூட எமது சட்டம் காவல் துறையினரிடம் வழங்கப்படும் எந்த வாக்கு மூலத்தையும் கண்டு கொள்வதில்லை. இது நீதி மன்றத்தினால் சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படாது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் மாத்திரமே விதிவிலக்காக ஒரு உதவிக் காவல் அத்தியட்சகர் பதவிக்கு குறையாத ஒரு காவல்துறை அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்கு மூலம் குற்ற ஒப்புதலாக ஏற்றுக்கொள்ளப்படும். இருந்த போதிலும் அது ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும் இந்த விதி மட்டுமே பல தவறான தீர்ப்புக்களுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாது காவல்துறையின் விசாரணை திறமை மழுங்கடித்தது என்பதனை சொல்ல தேவையில்லை.

உண்மையான குற்றவாளி இன்னும் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில் ஒரு குறிப்பிட்ட குற்றம் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறுவதற்கு ஒரு தீர்ப்பினை வலுவாக்க ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கப்படுவதே போதுமானது என்பதாலும் இது எதிர் விளைவாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் வாக்கு மூலங்கள் தடுப்பு காவல் மற்றும் பிணை இல்லாமல் காவலில் வைப்பதற்கான விதிகள் ஆகியவை காவல்துறை சித்திரவதை நிகழ்வுகளை அதிகரிக்க செய்துள்ளது. இக் காலகட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் தொர்பான பிரசுரிக்கப்பட்ட தீர்ப்புக்களை அவதானித்தால் இதனை கண்டு கொள்ளமுடியும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தர நிலைகளுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு இலங்கை உறுதியளித்திருந்தது.

2018 இல் ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருப்பினும் பயங்கரவாத தடைச்சட்டத்ததை சீர்திருத்தம் செய்வதற்காக 2022 ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி அதன் திருத்திற்கான சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் நடைமுறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் அமுலாக்கங்களிலும் அதைத் தொடர்ந்து வரும் கடுமையான விளைவுகளிலும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

இந்த பின்னணியில் நாம் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்காக தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வலியுறுத்தி சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் என்னை புலி என்றும் கனடாவில் புலி இல்லை என்றும் ஏசுகிறார்கள்.” – கனடாவில் இரா.சாணக்கியன் !

இலங்கையில் என்னை புலி என்கிறார்கள், கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னை பார்க்கின்றேன்.

சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து ஒன்று உள்ளது. இவர் என்ன எங்களுடைய பிரச்சனைகளை கதைக்கின்றார். எங்களுக்காக பேசுகின்றார் என. எனினும் நான் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுகின்றேன்.

அதிலே இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியிலேயே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை பாராட்டுவதனை விடவும், இஸ்லாமியர்களுடைய பாராட்டுக்கள் அதிகமாக வருகின்றது. எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர் சொன்னார் நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று. அது உண்மைதான். என்னை பொறுத்தவரையில் நான் அந்த வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்யவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் பேரினவாதிகளின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழர்களின் சமாதானமான வாழ்க்கைக்காக அமெரிக்கா பயணிக்கும்” – வெளியாகியுள்ள அமெரிக்காவின் அறிவிப்பு !

இலங்கையில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் முக்கியமானவை என அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, வலியுறுத்தினார். அத்தோடு, நிரந்தர சமாதானத்திற்காக இலங்கை தமிழர்களுடன் அமெரிக்கா இணைகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  மற்றும் உலகத் தமிழர் பேரவை  ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ட்விட்டர் பதிவில்,

இலங்கைத் தமிழ் மக்களுடன் நிரந்தர சமாதானத்தையும், அவர்களின் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முழுக் குரலையும் தேடுவதில் தானும் இணைந்து கொள்வதாக லூ கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் உலகளாவிய தமிழ் மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மேலும் அவர்கள் வெள்ளை மாளிகை உட்பட உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக பரப்பிலுள்ள இலங்கை தமிழர்கள், சொந்த மண்ணின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்கள்.”- நாடாளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன் !

பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள புலம் பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கை போன்ற சிறிய நாட்டில் வருமானத்தை மீறிய மிகவும் பெரிய தொகையை, ஒவ்வொரு வருடமும் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் பாதுகாப்புக்காக ஒதுக்குகின்றது. இதுவே இலங்கை தொடர்ச்சியாக பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகுவதற்கு முக்கிய காரணமாகும்.

இதேவேளை அரச சேவையாளர்கள் நாட்டிற்கு சுமை  என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உண்மையாக படைத் தரப்பே சுமையாகும். ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சி செய்வதற்கு இராணுவத்தின் ஒத்துழைப்புக்கும் இராணுவத்தின் வாக்கு வங்கிக்காகவும்தான் நிதி ஒதுக்கீடு செய்கின்றார்கள்.

மேலும், அரச சேவையாளர்களில் நிபுணத்துவம் கொண்டவர்களை தவிர்த்து ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகளை அமைச்சின் செயலாளர்களாகவும் பணிப்பாளர்களாகவும் நியமித்து, நிபுணத்துவ அரச சேவையாளர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றமையினால், இன்று பல அமைச்சுக்களில் இருந்து நிபுணர்கள் பலர் தாமாக பதவி விலகியுள்ளார்கள்.

இதேவேளை நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு தடுக்கின்றது. குறிப்பாக உலக பரப்பிலுள்ள இலங்கை தமிழர்கள், சொந்த மண்ணின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் முதலீடு செய்வதற்கு முன்வந்தால், அவர்களை அச்சுறுத்துகின்றனர். இதனால் அவர்களின் முதலீடுகள் தடுக்கப்படுகின்றது.

மேலும் சுற்றுலாப்பிரயாணிகளாக அதிகளவு நாட்டுக்கு வருகை தருகின்றவர்கள் புலம்பெயர் தமிழர்களாவர். பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள அவர்களினால்தான் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் வருகையை எதிர்த்து கனடாவில் போராட்டம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கனடா வருகைக்கு எதிராக கண்டனப் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1686எல்லெஸ்மியர் சாலை ஜே.சி எஸ் விருந்து மண்டபம் இக்கு முன்பாக இக்கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்களான கனடியத் தமிழர் முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

இனப்படுகொலை செய்யப்பட்ட எம் மக்களை நெஞ்சிலே நிறுத்தி அனைத்து கனடியத் தமிழர்களும் மற்றும் அமைப்புக்கள், ஊர்ச் சங்கங்கள், பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து இக்கண்டன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உரிமையோடு அழைப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்

அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த ஆளுந்தரப்பு – கூட்டமைப்பின் நிபை்பாடு என்ன..?

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எந்த அரசாங்கத்தோடும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதற்காக கதவுகளை மூடியதில்லை என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கூட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் 13 சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியதாக சிறிதரன் கூறினார்.

“பணத்தை எப்படி செலவழிக்கலாம் என்பதற்காக ஒரு வரவு செலவுத்திட்டம்.” – இரா.சாணக்கியன்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பணத்தை எவ்வாறு செலவழிக்க முடியும் என்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனை தெரிவித்தார்.

​​வெளிநாட்டு முதலீடுகள் மூலமே வருவாயை ஈட்டுவதற்கான ஒரே வழியாக இருக்கும் நிலையில் 2022 வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வெட் மற்றும் வரிவிதிப்பு முறை மாற்றப்பட்டாலும், தற்போதைய பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அது போதுமானதாக இருக்காது என இரா.சாணக்கியன் கூறினார்.

கடனை அடைப்பதற்கும் கையிருப்பில் டொலர்களை வைத்திருப்பதற்குமான எந்தவித திட்டங்களும் இந்த வரவுசெலவு திட்டத்தில் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.