ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க

“நாட்டிற்கு வருமானம் ஈட்டுவதற்கான சரியான வழிமுறையொன்று விரைவில் தயாரிக்கப்படும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின மிகச்சிறந்த 40 வர்த்தகர்களுக்கு விருது வழங்குவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற பிஸ்னஸ் டுடே விருது வழங்கல் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் வர்த்தகத் துறையில் விஷேட செயல்திறனை வெளிப்படுத்தும் நிறுவனங்களை பாராட்டும் நோக்கில் மேற்படி விருது வழங்கும் விழா பிஸ்னஸ் டுடே சஞ்சிகையினால் வருடாந்தம் நடத்தப்படுகிறது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நாம் இரு வருடங்களுக்கு முன்னதாக இறுதியாக சந்தித்திருந்த சந்தர்ப்பத்தில் கடுமையான நெருக்கடிகளுடன் கூடிய இரு வருடங்களின் பின்னரான சந்திப்பு எவ்வாறு அமைந்திருக்கும் என கணிக்க முடியாமல் இருந்திருந்தாலும் தற்போது நாம் நெருக்கடியிலிருந்து மீள்வதற்குரிய பாதைக்குள் பிரவேசித்துள்ளோம்.

இருப்பினும் ஸ்திரமானதும் அபிவிருத்தியை நோக்கி நகர்வதுமான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். வொஷிங்டனில் நடைபெற்ற வசந்த கால அமர்வுகளில் பங்கேற்கச் சென்றிருந்த இராஜாங்க அமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநரும் பல்தேசிய நிறுவனங்கள் நமக்கு உதவ முன்வந்துள்ளது என்ற நற்செய்தியுடன் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும். அது தொடர்பில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்களுடனும் பரிஸ் கிளப் பிரதானியுடனும் சூம் தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடியிருந்தோம். நாம் முன்னேறிச் செல்வதற்கான ஊக்குவிப்பை அவர்கள் வழங்கியிருந்தனர். அதேபோல் சீனாவுடனான பேச்சுவார்த்தைகளும் தொடர்ச்சியாக இடம்பெறுகிறன.

நாம் நெருக்கடிகளிலிருந்து துரித கதியில் மீண்டு வந்துள்ளமை வியப்புக்குரியதாக இருந்தாலும், உங்களால் தாங்கிக்கொள்ள கூடிய கடினமாக தீர்மானங்கள் பலவற்றை மேற்கொள்ள உள்ளமை எனது வாழ்விலும் கடினமான காலமாகும் என்றே கூறுவேன்.

நீண்ட கால தீர்வுகள், மற்றும் இடைப்பட்ட காலங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் பற்றி தேடியறிவதால் நல்ல பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் பணம் அவசியம் என்பதால் வருமானம் ஈட்டிக்கொள்ளும் பிரச்சினையே நம்முன் பெரிதாக நிற்கிறது. அதனால் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகளையும் தேடி அறிய வேண்டும்.

சில காலங்களுக்கு முன்பு உங்களிடத்திலும் உங்களது நிறுவனங்களிடத்திலும் வரி சேகரிப்பது மாத்திரமே அதற்குரிய வழியாக காணப்பட்ட போதிலும், தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளே அதற்குரிய சரியான வழிமுறையாக தெரிகிறது. எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

வருமானம் ஈட்டுவதற்கான சரியான வழிமுறையொன்று விரைவில் தயாரிக்கப்படும், அதற்கான பணிகளுக்கு திறைசேரியும் தயாராக வேண்டியது அவசியமாகும். நாம் மேம்படுத்த வேண்டிய பல துறைகள் உள்ளன. கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பது அவசியமாகும். எனினும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் குறித்து எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

அதேபோல் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளின் போது கடன் வழங்குநர்களுக்கு நாமும் பங்களிப்புக்களை வழங்க வேண்டியது அவசியமாகும். சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவும் நமது அர்பணிப்புக்கள் அவசியமாகிறது. மறுமுனையில் திறைசேரி அதற்குரிய மாற்று வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது.

நாம் கடன் மறுசீரமைப்புக்களை செய்ய தவறும் பட்சத்தில் நாம் கடுமையான நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும். எவ்வாறாயினும் மேற்படி செயற்பாட்டிற்கான மாற்று வழிகள் மக்களுக்கு நெருக்கடியாக அமைந்திருக்காது என்ற உறுதியை வழங்குகிறேன்.

அதற்காக இம்மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ள அதேநேரம். மே மாத இறுதிக்குள் பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகளை நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம். பொருளாதார ஸ்திரத் தன்மைக்கான குழுவின் அறிக்கையும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளால் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே 134 உறுப்பினர்கள் ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.” – விமல் வீரவன்ச

“ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே 134 உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2019 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் சிறந்த மாற்றத்திற்காக கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆட்சிமாற்றத்திற்கு முன்னின்று செயற்பட்டோம்.நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை, மாறாக ராஜபக்ஷர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது.

குடும்ப ஆட்சி காரணமாக நாட்டு மக்கள் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் ராஜபக்ஷர்களை புறக்கணித்தார்கள். இந்த நிலை மீண்டும் தோற்றம் பெறாது, வரலாற்று பாடத்தை ராஜபக்ஷர்கள் கற்றுக்கொண்டுள்ளார்கள் என எதிர்பார்த்தோம் ஆனால் எமது எதிர்பார்ப்பு இறுதியில் பொய்யானது.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் அமைச்சரவையை பகுதியளவில் ஆக்கிரமித்த ராஜபக்ஷர்கள் 2020 ஆம் ஆண்டு அமைச்சரவையை முழுமையாக ஆக்கிரமித்தார்கள். போதாதற்கு ரோஹித ராஜபக்ஷவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது கடும் எதிர்ப்பால் அந்த முயற்சியை ராஜபக்ஷர்கள் கைவிட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதாரம் தொடர்பில் அடிப்படை தகைமை இல்லாத பஷில் ராஜபக்ஷவை நிதியமைச்சராக நியமித்து அரசியல் ரீதியில் பாரிய தவறு செய்து இறுதியில் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு ராஜபக்ஷ குடும்பம் பொறுப்புக் கூற வேண்டும்.

ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்கள் ரணில் விக்கிரசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.  மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் வாக்குரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். போராடியேனும் நாட்டு மக்களின் வாக்குரிமையை வெல்வோம் என்றார்.

2030 வரை ஜனாதிபதி ரணில் தான் !

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2030 ஆம் ஆண்டு வரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்படுவார். அனைத்து போட்டியாளர்களும் ரணில் விக்ரமசிங்கவின் திறமைக்கு அப்பால் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

“பௌத்த பிக்குகளை அழித்தால் மட்டுமே உங்களால் 13ஆவது திருத்தத்தில் கைவைக்க முடியும்.” – வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர்

‘பௌத்த பிக்குகளை முற்றாக இல்லாதொழித்தாலன்றி , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவராலும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது.’ என வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டில் ஒற்றுமையை இல்லாதொழித்துள்ளார். 2009 இன் பின்னர் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட ஒற்றுமையை இல்லாதொழிப்பதற்காக 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டை 9 பகுதிகளாக பிளவடையச் செய்வதே அவரது தேவையாகவுள்ளது. நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளைப் புறந்தள்ளி இவ்வாறான பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.

அவர் கூறுவதைப் போன்று 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் 9 மாகாணங்களுக்கும் தெரிவு செய்யப்படும் முதலமைச்சர்களால் நாடு சீரழிவுக்குள்ளாக்கப்படும். எமக்கு தமிழ் மக்களுடன் எந்த பிரச்சினைகளும் இல்லை. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை விடுத்து ஏனையவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.

இது தொடர்பில் தீர்க்கமான முடிவினை அறிவிக்குமாறு ஜனாதிபதிக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கியுள்ளோம். எனவே அவர் தனது முடிவை மகா சங்கத்தினருக்கு அறிவிக்க வேண்டும். நாட்டில் இரத்த வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். பௌத்த மத குருமார்கள் விகாரையில் இருக்க வேண்டும் என்று சி.வி.விக்கினேஷ்வரன் குறிப்பிடுகின்றார்.

விகாரையிலிருந்து கொண்டே மக்களின் ஒற்றுமைக்காக செயற்படுவோம் என்பதை அவரிடம் தெரிவித்துக் கொள்கின்றோம். பௌத்த மதகுரு மார்களை முற்றாக இல்லாதொழித்தால் மாத்திரமே 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.

ராஜபக்ஷாக்கள், மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க 13 தொடர்பில் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக கோட்டாபய ராஜபக்ஷவை விட அதிகமாக செலவு செய்த ரணில் விக்கிரமசிங்க !

இவ்வருட சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் அதிகளவிலான தொகையை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக 950 இலட்சம் ரூபா அல்லது 9.5 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்த வருட சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக 40 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளதால் பெரும் செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வருடங்களில் சுதந்திர தின விழாக்களுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

2021 இல் 80,662,000.36
2020 இல் 63,214,561.99
2019 இல் 68,130,091.15
2018 இல் 86,805,319.35

இரா.சம்பந்தனை பொன்னாடை போர்த்தி சந்தித்த மகிந்த – பதவியில் இருந்த போது தீர்க்க முன்வராத இனப்பிரச்சினையை தீர்க்க ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசுவதாகவும் உறுதி !

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடிக்கும் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுக்கள் பேசுபொருளாகியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பு முன்னேற்றகரமான ஒன்றாக அமைந்திருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமை அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்ததுடன் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடினார்.

இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினை போன்றவற்றை முன்வைத்த சம்பந்தன், வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும்  அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ச சம்பந்தனிடம் உறுதியளித்தார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நாளை வியாழக்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இதே நேரம் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டங்களிலும் சரி – மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பணியாற்றிய காலகட்டங்களிலும் சரி இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்பட்ட போதும் கூட தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை சந்திப்பதற்கு கூட ராஜபக்ச தரப்பு பெரிதாக அக்கறை காட்டியிராத நிலையில் உள்ளூராட்சி தேர்தல்கள் நெருங்குகின்ற இந்த நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தனை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ரணில் கர்ணன் போல் நல்லவர். சிறந்த கொடையாளி. ஆனாலும் துரியோதனன் பக்கம் நிற்கிறார்.” – இராதாகிருஷ்ணன்

“ரணில் விக்கிரமசிங்க நல்லவர். சிறந்த அறிவாளி. ஆனாலும் அவர் தற்போது நிற்கும் பக்கம் தவறானது. எனவேதான் தர்மத்தின் வழி சென்று அவரை நாம் எதிர்க்கின்றோம்.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வட்டவளையில் இன்று இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்கு வருவதற்கு ராஜபக்ச குடும்பமே பிரதான காரணம். சீனாவிடமிருந்து பெருந்தொகை கடன்பெற்று, அவை தேவையற்ற அபிவிருத்திகளுக்கு பயன்படுத்தப்பட்டன. காலியில் ஒரு துறைமுகம் இருக்கும் நிலையில், அதனை மேம்படுத்தாமல் அம்பாந்தோட்டையில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. இதனால் என்ன பயன்?

போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கப்படமாட்டாது என பிரதமரான பின்னர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். ஆனால் ஜனாதிபதியான பிறகு மறுநொடியே போராட்டக்காரர்களை அகற்றினார். சொல் ஒன்று செயல் வேறுவடிவம் என்பதை அவர் நிரூபித்தார். உண்மையின் வழி நின்றகவில்லை.

கர்ணன் சிறந்தவர், நல்ல கொடையாளி, துரியோதனன் கூட்டத்துடன் நின்றதால் அவர் வதம் செய்யப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது இருக்கும் இடம் சரியில்லை. நாம் தர்மத்தின் பக்கம்தான் நிற்போம். ரணிலும், மஹிந்தவும் தர்மம் செய்யவில்லை. எனவே, தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் தேர்தல் அவசியம்.

அதேவேளை, மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்படும். தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒன்றிணைந்து பயணிப்போம். அதற்கான சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் விஜயசந்திரன் ஈடுபட்டுள்ளார் என்றார்.

“தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ரணில் – சம்பந்தன் ஒப்பந்தம் தேவை” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய 6 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேசத்தையும், தமிழ் தலைமைகளையும் ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளை ஏற்க முடியாது என்றும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் எமது அரசியல் உரிமைக்காக போராடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்று குறிப்பிடும் போது அனைவரும் ஒன்றிணைந்தே செயற்படுவோம் என்றும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையையும் அவர் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் போராட்டத்தில் உயிர்நீர்த்த உறவுகளை நாங்கள் நினைவு கூறுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை திட்டமிட்டு தூண்டும் ஜனாதிபதி ரணில் !

ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்தி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் தான் காரணம் என்பதை காட்டி அதனூடாக அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்த அவர் முயல்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை அமைத்தோம் என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி விரைவான தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை மாகாண சபை தேர்தலை போன்று உள்ளுராட்சி தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

ரணில் ஆரம்பத்தில் நம்மை பற்றி புறங்கூறினாலும் இன்று நல்வழிப்படுத்தப்பட்டுள்ளார் – மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருப்பதால் தற்போது நல்வழிப்படுத்தப்பட்டுள்ளாரென கட்சியின் அதிபரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி சிறிலங்கா பொதுஜன பெரமுன புறங்கூறி இருந்தாலும் கூட, தற்போது அவர் நல்லவர் எனக் கருதி அவரை ஏற்றுக் கொண்டிருப்பதாக களுத்துறையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “சிறிலங்கா பொதுஜன பெரமுன தற்போது பல சவால்களை எதிர் நோக்குகிறது. அவற்றை வென்று வர எம்மிடம் போதுமான பலம் உள்ளது.

மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை இலங்கை பொதுஜன பெரமுன முன்னெடுக்கும். பொது மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதே அரசாங்கத்தின் கடமை.

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான ஆதரவை வழங்க சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த காத்திருக்கிறது.

இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் உறுப்பினர்கள் முழு ஆதரவையும் வழங்குவார்கள்” என்றார்