யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண கடற்கரையோரங்களில் தொடர்ந்தும் கரையொதுங்கும் மனித சடலங்கள் !

யாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்தும் சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன. பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரையிலும், மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரையிலும் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரு  சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

இன்றைய தினம் கரையொதுங்கிய இரு சடலங்களுடன், கடந்த 6 நாட்களுக்குள் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

கடந்த சனிக்கிழமை வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளில் இரு சடலங்களும், ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்கரையில் ஒரு சடலமும், கடந்த  செவ்வாய்க்கிழமை மருதங்கேணி கடற்கரை பகுதியில் ஒரு சடலமும் கரையொதுங்கி இருந்தன.

கரையொதுங்கிய ஆறு சடலங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் கிறித்தவ தேவாலயத்தின் மீது தாக்குதல் !

யாழ்ப்பாணம்- கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட 18 வயது மகளும் அவருடைய தாயும் – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம்-  மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண், தன்னுடைய பச்சிளம் குழந்தை ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு அவருடைய தாயாருடன் முனைந்ததாக அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் இருவரும் செயற்படும்போது, குழந்தை அழுததால் தாம் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்டுக் காப்பாற்றியதாக பொலிஸாரின் விசாரணைகளில் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், குழந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அயல்வீட்டாரின் மிலேச்சனத்தனமான தாக்குதலால் 55 வயதுடைய நபர் படுகாயம் – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஜெ-199 அம்பனை பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று(வியாழக்கிழமை) மாலை 2 மணியளவில் பழைய பகையின் காரணமாக அயல் வீட்டார் பணி நிமிர்த்தம் வெளியே செல்லும் போது மற்றுமொரு அயல் வீட்டாரினால் வீதியில் வைத்து மிலேச்சத்தனமாக போத்தல்கள் மற்றும் கம்பிகளால் தாக்கப்பட்ட சம்பவமே இவ்வாறு பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு யாழ்.போதனா  வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 55 வயதுடைய முத்து ஜெகதீசன் என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அயல் வீட்டாரான இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை !

யாழ்ப்பாண மாவட்டத்தில்  நீரிழிவு தொற்றுக்குள்ளாகுவோரின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையம் பொறுப்பு வைத்திய அதிகாரி ம அரவிந்தன் தெரிவித்தார் .

இன்று  (திங்கட்கிழமை) தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்நீரிழிவு சிகிச்சை முகாதினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “யாழ்  மாவட்டத்தைப் பொருத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது குறிப்பாக இளவயதினர் சேர்ந்தவர்களுக்கு இந்த நீரிழிவு நோயானது அதிகமாக காணப்படுகின்றது.

இந்த நோய்த் தாக்கத்திற்குள்ளாகும் எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது குறிப்பாக இந்த நீரிழிவு நோய் தொற்றுக்கு உள்ளாகுவோருக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படுவதற்கான சான்றுகள் உள்ளன குறிப்பாக பாரிசவாதம் மற்றும் ஏனைய பல தொற்று நோய்கள் ஏற்படகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன எனவே இளவயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் அல்லது ந தகுந்த வேளைகளில் நீரிழிவு பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோயினை இனங்காணும் பட்சத்தில் அந்த நோயை குணமாக்க முடியும் அல்லது நோய் தொற்று காணப்பட்டால் அதனை முறையாக பின்பற்றி குணப்படுத்த முடியும் எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவுநோய் தொடர்பில் பொதுமக்கள் சற்று அவதானமாக செயற்பட வேண்டும் என அவர தெரிவித்தார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நீரிழிவு கழகம்  யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு  சிகிச்சை முகாம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது

யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெறும்  நீரிழிவு சிகிச்சை முகாமினை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த சத்தியமூர்த்தி மற்றும் மற்றும் நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் ஆகியோர் ஆரம்பித்து வைத்ததோடு யாழ் நீரிழிவு கழகத்தின் தலைவர் தி. மைக்கல், செயலாளர் க. கணபதி மற்றும் நீரிழிவு கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் குறித்த நீரிழிவு சிகிச்சை முகாமில் பொதுமக்கள் நீரிழிவு பரிசோதனையினை மேற்கொண்டுள்ளமை”குறிப்பிடத்தக்கது

வருடா வருடம் வெள்ளக்காடாகும் யாழ்ப்பாணம் – நிவாரணப்பொருட்கள் கையளிப்பதுடன் முடிந்து போகும் பெருஞ்சோகம் !

யாழ். மாவட்டத்தில்  சீரற்ற காலனிலையால் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ள நிலைமை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக யாழ்ப்பாணம்,நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. இந்த தடவை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்த பகுதிகளே கடந்த வருடமும் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். கடல் பகுதிகள் இல்லாத மாவட்டங்கள் கூட வெள்ளப்பெருக்கை முறையாக கட்டுப்படுத்தி அனர்த்தத்தை வெற்றிகரமாக எதிர்கொள்கின்ற நிலையில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் வருடா வருடம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு பக்கத்தில் குளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு நகரங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. மக்கள் பொறுப்பற்ற விதத்தில் குப்பைகளை வாய்க்கால்களிலும் வடிகால்களிலும் கொட்டி மூடிவிடுகின்றமையால் வடிகாலமைப்பு தொகுதிகள் முழுமையாக குப்பைகளால் நிறைந்து போயுள்ளன. நீர் போகவழியில்லாது பெரிது பெரிதாக எழுப்பப்ட்டுள்ள சுவர்கள் என இந்த வெள்ளப்பெருக்குக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நாம் அனைவரும் மட்டுமே.

மாநகரசபைகளும் – பிரதேசசபைகளும் மழைக்காலத்தில் மட்டுமே அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களை பாதுமுகாக்கும் நோக்கமுடையாராயின் வெள்ளம் வருவதற்கு முன்பே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் மழை வந்த பிறகே வெள்ளம் பற்றியும் சிந்திக்கிறார்கள்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த வெள்ள காலகட்டங்களில் மேற்கொள்ளும்  பணிகள் அளப்பரியன. பாராட்டுதற்குரியன. ஆனால் பொருட்களை கொடுப்பதற்கு அப்பால் கடந்த வருடமும் வெள்ள காலத்தில் மக்கள் இடர்பட்ட அதே பகுதிகள் இந்த வருடமும் இடர்படுகின்றன. ஏன் இவ்வாறு குறித்த பகுதிகள் மட்டும் அனர்த்தத்துக்குள்ளாகின்றன..? அதற்கான தீர்வு திட்டங்கள் போன்றன தொடர்பில் அறிக்கைகளை தயாரித்து சம்பந்த தரப்பினரிடம் சேர்க்க வழி செய்வதுடன் அவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வருவதற்கான நகர்வுகளையும் தன்னார்வ அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த அனர்த்தத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்ன என்ன பதில்களையெல்லாம் கூறப்போகிறார்கள் என !

 

யாழில் ஒரு வாரத்தில் 12பேர் சாவு

யாழில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்களது எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலை நீடித்து வருகிறது.
ஜூலை 01 முதல் ஜூலை 07 வரையான ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு 12 கொரோனா இறப்புகள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி 4 பேரும், ஜூலை 2ஆம் திகதி 2பேரும், ஜூலை 4 ஆம் திகதி ஒருவரும், 5ஆம் திகதி ஒருவரும், ஜூலை 6ஆம் திகதி 3 பேரும், 7ஆம் திகதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் ஜூலை 7ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பிரதேச செயலர் பிரிவு வாரியாக நோக்கும் போது, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் தலா 8 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 5 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு, வேலணை பிரதேச செயலர் பிரிவு ஆகியவற்றில் தலா 3பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 2பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவன் கைது! மனித உரிமைகள் ஆனைக்குழுவில் மனைவி புகார்

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியின் மனைவி மனித உரிமைகள் ஆனைக்குழுவில் நேற்று முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் நகரப் பகுதியில் நேற்று காலை  முச்சக்கர வண்டியில் பயணித்த சிவில் உடையில் இருந்த பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதி தன்னை தாக்கியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இதனையடுத்து சிவில் உடையில் நின்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியின் மனைவி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் தனது கணவன் பொலிசாரால் திட்டமிட்டு பழிவாங்கும் பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.முச்சக்கர வண்டியில் பயணித்தமைக்கான பணத்தினைக் கேட்டபோது முரண்பட்டு விட்டு தன்னை தாக்கியதாக பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்து தனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று முறையிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலி

யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அருகாமையில் ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (20.07) 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே இந்த மாடுகள் உயிரிழந்துள்ளன.

இருந்தும் மாடுகளுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லையென சாவகச்சேரி பிரதேச சபையின் வெளிக்கள மேற்பார்வை உத்தியோகத்தர் கைலாயபிள்ளை சிவநேசன் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் டிப்பர் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.