அசோக அபேசிங்க

அசோக அபேசிங்க

பொருளாதார நெருக்கடியின் எதிரொலி – இலங்கையில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்!

பொருளாதார பாதிப்பினால் நாட்டில் இறப்பு வீதம் உயர்வடைந்து,பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது ஆனாால்  பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

 

ஆனால் சமூக கட்டமைப்பில் மக்கள் வாழும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற வரித்திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

தேர்தலுக்கான அறிகுறிகள் இடம்பெறவுள்ள நிலையில் மின்கட்டணம்,அத்தியாவசிய உணவு பொருட்கள் குறைக்கப்படுகிறது.உரித்து வழங்கப்படுகிறது.

 

யுக்திய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.ஆகவே வெகுவிரைவில் தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கலாம்.

 

நாட்டில் 57 இலட்சம் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களில் 91 சதவீதமானோரின் வாழ்க்கை செலவுகள் உயர்வடைந்துள்ளன.

 

பெரும்பாலான குடும்பங்கள் மூன்று வேளை உணவை இரண்டு வேளையாக மட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.ஆனால் நாடு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.

 

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு மொத்த சனத்தொகை வளர்ச்சி 1 இலட்சத்து 44 ஆயிரத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. பிறப்பு வீதமும், குறைவடைந்துள்ளது..பொருளாதார பாதிப்பால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தவர்களில் 7120 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

 

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மாத்திரம் 13,1180 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். 3 இலட்சம் சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிறு கைத்தொழில் முயற்சியாண்மையாளர்களில் 15 ஆயிரம் பேரின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.

 

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சிப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

 

ஆனால் கடந்த ஆண்டு மாத்திரம் ஏற்றுமதி பொருளாதாரம் ஒரு பில்லியன் டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது.நடைமுறையில் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை.நிவாரணம் வழங்கி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

“அரச வருமானத்தை விட அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் அதிகம்.”- அசோக அபேசிங்க

அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக கணக்கு போட்டால் அது அரச வருமானத்தை விட அதிகம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் அரசின் வருமானம் 2 மில்லியன் கோடி என்றும் அரச வருமானத்தை விட அதிக ஊழல் மோசடிகள் அரச நிறுவனங்களில் நடந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க கணக்குகள் குழுவின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அசோக அபேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

100 வருடங்களாக அரசாங்க கணக்குகள் குழு இந்த விடயங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிவித்த போதும் அவை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு ஊழல் செய்தவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அடைந்த நஷ்டத்தை மீட்பதற்கோ, வழக்கு தொடரவோ இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.” – ஐக்கிய மக்கள் சக்தி

“ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெளிநாட்டிலிருந்து வந்த வைரஸால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ராஜபக்ச உறவினர்களால் வந்த வைரஸால் மக்கள் இரண்டாவது முறையாகப் பாதிக்கப்பட வேண்டி இருக்கின்றது.

ராஜபக்ச அரச தரப்பினர் நாட்டின் பெரும் பகுதியைச் சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர். சங்ரிலா ஹோட்டல் பகுதி, துறைமுக நகர பெரும் பகுதி ஆகியவற்றை சீனாவுக்கு வழங்கியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டவர்கள். நாட்டின் சொத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்கின்றனர்.

இதன் உச்சமாக கடந்த வாரத்தில் இந்த நாட்டின் மொத்த மின் உற்பத்தி நிலையங்களினதும் உரிமத்தை வெளிநாட்டவர்களுக்கு ஒப்படைத்துவிட்டனர். கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் திறைசேரிக்குச் சொந்தமானவை. 23.9 சதவீத பங்குகள் ஊழியர் சேமநல நிதியத்துக்குச் சொந்தமானவை.

இந்த நாட்களில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வுகள் இடம்பெறுகின்றன.

இந்த அரசு சங்கைக்குரிய தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. இந்த அரசைப் போன்று பொய் கூறும் ஓர் அரசைப் பார்த்ததில்லை என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறுகின்றார். ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை .” என்றார்.