அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

மருந்து கொள்வனவில் ஊழல் மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் கெஹலியரம்புக்வெலவுக்கு பிணை !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

 

அதன்படி கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு 7 மாதங்களின் பின்னர் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மருந்து இறக்குமதியில் ஊழல் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது !

சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளையடுத்து வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அழைக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி அவர் அங்கு சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவில் இலங்கையின் சுகாதாரத்துறையை மையப்படுத்தி புனையப்பட்ட பொய்கள் – நகைப்புக்குறியயை என்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட இதர சர்வதேச ஸ்தாபனங்களிடத்தில் இலங்கையின் சுகாதாரத்துறையை மையப்படுத்தி புனையப்பட்ட பொய்களை மையப்படுத்தி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியவை என்று சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அடிப்படைகளுடன் பின்னிப்பிணைந்துள்ள சுகாதாரத்துறை, உணர்வு ரீதியான விடயம் என்பதால் அதனை பயன்படுத்தி இலகுவாக அரசியல் நன்மைகளை அடைவதற்கு பலதரப்பினரும் தீவிரமான முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சுகாதாரத்துறையானது நலிவடைந்துள்ளதோடு, பொதுமக்களுக்கான உரிய சேவையை முன்வைக்க முடியாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சும் கட்டமைப்பும் ஊழல்கள் நிறைந்தவையாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வில் பங்கேற்றிருந்த சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யப்பா பண்டார உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த நிலையில், குறித்த விடயம் சம்பந்தமாக பதிலளிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் சுகாதாரத்துறையானது, மக்களுக்கு சேவைவழங்குவதாக உள்ளது. அதனால் சுகாதாரத்துறை தொடர்பான விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் உணர்வு ரீதியாக இலகுவாக பிரசாரம் செய்யக்கூடியவையாக உள்ளன.

அதனடிப்படையில் வங்குரோத்து அடைந்துள்ள எதிர்க்கட்சிகளும், சில தொழிற்சங்கங்களும், பொய்யான பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக சுகாதாரத்துறையை கையிலெடுத்துள்ளன.

அவற்றின் பொய்யான பிரசாரத்தினால் எனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமையானது அதற்கு சிறந்த உதாரணமாக காணப்படுகின்றது.

இதேநேரம், நான் சுகாதாரத்துறையை பொறுப்பெடுக்கும்போது 570 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டது. தற்போது அது 60 வரையில் குறைந்துள்ளது.

இவ்வாறான நிலைமைகள் பற்றியெல்லாம் தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் சிந்திப்பதில்லை. இலவச சுகாதாரத்துறையை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் நாட்டத்தின் மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் வகையிலும் தான் செயற்படுகின்றன.

இந்நிலையில் தான் எதிரணியினர் ஐ.நாவுக்குச் சென்று முறைப்பாடுகளை முன்வைத்திருக்கின்றனர். நாட்டின் சுகாதாரத்துறை தொடர்பில் ஐ.நாவுக்குச் சென்ற செயற்பாடானது நகைப்புக்குரியதாகும்.

சர்வதேச நாடுகள் சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்காக தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதால் அவற்றுக்கு யதார்த்தமான நிலைமைகள் நன்கு தெரியும் என்றார்.

யாழ். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – “முழுமையான அறிக்கை விரைவில் என்கிறார் அமைச்சர் கெஹலிய”

யாழ். சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் அடுத்த வார இறுதிக்குள் முழுமையான அறிக்கை தனக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியான சாண்டில்யன் வைசாலியின் இடது கையில் பொருத்தப்பட்டிருந்த மருந்து ஏற்றுவதற்காக பொருத்தப்பட்ட கனூலா காரணமாக ஏற்பட்ட தாக்கத்தால் அவரது கை மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சின் நடவடிக்ககைள் பற்றி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுமியின் கை அகற்றப்பட்டமை துரதிர்ஷ்டவசமான நிகழ்வாகும். அந்த விடயம் சம்பந்தமாக வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல தரப்பட்டவர்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து எனது பணிப்புரையின் பேரில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஊடான விசாரணைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அடுத்த வாரத்துக்குள் அந்த விசாரணைகள் பற்றிய முழுமையான அறிக்கை எனக்கு கிடைக்கவுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்றார்.

நாட்டின் சுகாதாரத்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவர 500பில்லியன் ரூபா தேவை !

நாட்டின் சுகாதாரத்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவர 500பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. அந்த பணத்தை தேடிக்கொள்வதாக இருந்தால் இலங்கையை வங்குராத்து பட்டியலில் இருந்து மீட்டிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இரண்டாவது நாளாக இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

உண்ணாட்டரசிறை திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பது, நாட்டை வங்குரோத்து பட்டியலில் இருந்து விரைவாக கழற்றிக் கொள்வதற்காகவே யாகும்.

 

சுகாதாரத் துறையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன அந்த வகையில் சுகாதார சேவையை முழுமையாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதானால் 500 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

 

அந்தளவு தொகையை தேடிக்கொள்வதென்றால் இலங்கை வங்குரோத்து பட்டியலில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும்.

 

அத்துடன் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு ஒரு சிலர் மட்டும் காரணமல்ல பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள். அதிகாரிகளும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

 

அந்த வகையில் நான் சரி. அவர் தவறு என ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு சுகாதாரத்தை அரசியலாக்கிக் கொள்வதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. அனைவரும் தவறு செய்துள்ளவர்கள். அந்த வகையில் அனைவருமே ஒன்றிணைந்து அதனை நிவர்த்திக்க வேண்டும்.

 

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அதனையடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் நாட்டை வங்குரோத்து பட்டியலில் இருந்து அகற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.

கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு !

நுவரெலியா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையை அடுத்து பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நுவரெலியா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களில், 11 பேர் குணமடைந்த அதேநேரம் இரண்டு பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்தனர்.

 

எனினும் தற்போது அந்த நிறுவனத்தின் மருந்துகள் முற்றாக பாவனையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த மருந்து இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டதாகும்.

இந்த நிறுவனம் இலங்கைக்கு கடந்த 7 ஆண்டுகளாக இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்து வருகின்றது. இலங்கைக்கு மாத்திரமின்றி 53 நாடுகளுக்கு குறித்த நிறுவனம் மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது.

 

எனினும், துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நட்ட ஈடு வழங்கப்படும்.

மேலும் நாட்டில் உள்ள பெரும்பாலான வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் உள்நாட்டில் கனிசமான அளவு வைத்தியர்களின் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்வதற்காகவே வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60இலிருந்து 63ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தோடு முதுகலை பட்டதாரிகளை வைத்தியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல – மின்சார கட்டண பட்டியல் கிடைக்கவில்லையாம்.!

தனது வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்கு சரியான மின்சாரக் கட்டண பட்டியல் கிடைக்காததே காரணம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் உரிய முறையில் கிடைக்கப்பெற்றவுடன் அதனை நிலுவைத் தொகையுடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று (02) இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

கேள்வி – ஒரு கோடியே இருபத்தெட்டு இலட்சம் மின்கட்டணமாக இலங்கை மின்சார சபைக்கு நீங்கள் செலுத்தவில்லை. அது ஏன் ?

“நான் இருந்த வீட்டின் மின் கட்டண பட்டியல் வேறு ஒருவரின் பெயரில் இருந்தது. எனது பெயருக்கு பட்டியலை மாற்றித் தருமாறு 3 கடிதங்களை அனுப்புயுள்ளேன். . பில் என் பெயரில்தான் இருந்தால்தான் என்னால் பணம் செலுத்த முடியும். பட்டியல் என் பெயருக்கு மாற்றப்பட்ட மறுநாள் அபராதம் தவிர எல்லாவற்றையும் செலுத்தினேன்.

கேள்வி – இவ்வளவு பெரிய தொகை நிலுவையாக இருந்தும் உங்கள் வீட்டில் மின் இணைப்பை ஏன் வெட்டவில்லை?

“அது அவர்களின் தவறு இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”

கேள்வி – ஏழை, அப்பாவி மக்களின் இணைப்புகளை மட்டும் மின் சார சபை துண்டிக்கிறதா?

“அது உங்களின் கருத்து ”

கேள்வி – இது உண்மையில் ஒரு நியாயமான கேள்வி. ஒரு கோடியே இருபத்தெட்டு இலட்சம் மின்கட்டணம் செலுத்துமளவுக்கு நீங்கள் என்ன உபகரணங்களைப் பயன்படுத்துகிறீர்கள்?

 

“என்ன பிரச்சினை என்று தெரியலை.. இது குறித்தும் மின்சார சபைக்கு அறிவித்து விட்டேன் ..இரண்டு மூன்று தடவை வந்து செக் பண்ணிச் சென்றார்கள் . ஆனால் நான். மின்சாரம் பயன்படுத்தினேன், அதற்கு நான் பணம் செலுத்தினேன்.”

“நெல்சன் மண்டேலாவின் மரணத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டது போல ஒரு கௌரவம் மகிந்தவுக்கும் கிடைக்க வேண்டும்.”- அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய சேவை அனைத்தையும் செய்துவிட்டார். இனி அவர் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“மகிந்தவின் தலைமைத்துவம் இல்லை என்றால் இப்போதும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும். அவர் 80 வயதை நெருங்குகின்றார். அவர் ஓய்வெடுப்பது நல்லது. யாரும் அவரை அவர்களின் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தினால் அதற்கு நான் இணங்கமாட்டேன்.

நெல்சன் மண்டேலாவின் மரணத்தின் போது உலகத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்படியொரு கௌரவம் மகிந்தவுக்குக் கிடைக்க வேண்டும்”  எனவும் தெரிவித்துள்ளார்.

“மாதம் அரசாங்க சம்பளம் வாங்குவோர் நாட்டை மூடுமாறு கோஷமிடுகின்றனர்.” – அமைச்சர் கெஹலிய

இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் இலங்கை இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொத்மலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் கூறியுள்ளதாவது,

“உலகில் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்துக்கு வந்துள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும் கூட சுகாதார அமைச்சினால், அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பத்திரங்கள் நிராகரிக்கப்படுவதில்லை. மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதால்தான் இவ்வாறு நடைபெறுகின்றது.

நாட்டை மூடுமாறு சிலர் கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு மாதம் அரசாங்க சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால் நாட்கூலி பெறுபவர்களின் நிலைமை? அத்துடன், நாடு தற்போது வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதியையும் ஹிட்லரையும் இணைத்து கூறப்பட்ட கருத்து இராஜாங்க அமைச்சருடைய தனிப்பட்ட கருத்தேயாகும்.” – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

“ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரைப் பற்றி இராஜாங்க அமைச்சர் ஒருவர் அண்மையில் வெளியிட்ட கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல.” என அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பாகும். அவர் அவ்வாறு செயற்படாமையின் காரணமாகவே அவர் மீது குற்றஞ்சுமத்தப்படுகிறது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையிலேயே மேற்குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் ,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஹிட்லர் ஆகியோரைப் பற்றி தெரிவிக்கப்பட்டது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார். இந்த கருத்து அரசாங்கத்தின் கூட்டு நிலைப்பாடு அல்ல என்றும் அரசாங்கத்தின் முன்னோக்கு என்று கருதக்கூடாது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில் அவை தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்து இலங்கையில் உள்ள ஜேர்மன் தூதுவருடன் முரண்பாட்டை ஏற்படுத்தாது என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.