அமைச்சர் டயனா கமகே

அமைச்சர் டயனா கமகே

“பெண் அமைச்சரை நாய் என கூறிய ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர்.” – பெண்களை கேவலப்படுத்தினால் கன்னத்தில் அறைவேன் என எச்சரித்த டயானா !

பெண்களை கேவலப்படுத்தினால் கன்னத்தில் அறைவேன் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சர் டயனா கமகே எச்சரிக்கை விடுத்தார்.

தன்னை பெட்டை நாயென ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்ததாக குறிப்பிட்டு சபையில் வியாழக்கிழமை (05) சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றத்தில் மட்டுமல்ல நாட்டில் எங்கேயும் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை. பெண்களை யார் என்று நினைத்தீர்கள். பெண்களை பெட்டை நாய் என்று இந்த சபைக்குள் கூற முடியாது. பெண்களிடம் கன்னத்தில் அறைவாங்கும் நாளில் புரியும்.

அதனால் பெண்களை அவதித்து பேசுவது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான மோசமான வார்த்தை பிரயோகங்கள் இந்த சபையில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அதனால் தொடர்ந்தும் இதற்கு இடமளிக்க முடியாது. அதனால் பெண்களை மோசமாக பேசுபவர்களுக்கு என்னிடம் தான் கன்னத்தில் அறைவாங்க நேரிடும்.

மத்தும பண்டார கடந்த நாள் பாராளுமன்றத்தில் என்னை ‘தகாத வார்த்தைகளால் திட்டினார். இது உண்மையில் வார்த்தைகளின் வடிவத்தில் பாலியல் துஷ்பிரயோகம். இது 52 சதவீத மக்கள்தொகை கொண்ட நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் அவமதிக்கும் செயலாகும். பாராளுமன்றத்திற்கு எம்.பி.க்களை தேர்வு செய்வது பெண்களே. பெண்களை இழிவுபடுத்த இந்த எம்.பி.க்களுக்கு உரிமை இல்லை. அவர் சிறப்புரிமைக் குழுவின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகக் கையாளப்பட வேண்டும்.எதிர்க்கட்சியில் என் மீது வெறுப்பு கொண்டவர்கள் அதிகம். அவர்களால் ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடியாது. மத்தும பண்டார எனது புடவைகளில் ஒன்றை அணிந்து ஒரு பெண்ணின் வேலையைச் செய்யலாம். நான் அவரது கால்சட்டை ஒன்றை அணிந்து ஒரு ஆணின் வேலையைச் செய்ய முடியும் என்றார்.

இதன்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

பெண்கள் தொடர்பான கொள்கைகளில் எதிர்க்கட்சியினராகிய ஐக்கிய மக்கள் சக்தியின் உயர் பதவிகளிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி மாவட்ட அமைப்பாளர்களும் சரி ஒரே மாதிரியான கொள்கைகளை பின்பற்றுவதை அவதானிக்க முடிகின்றது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்திருந்தது.  ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிந்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பிலும் – பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பிலும் தேசம் நெட் அதிக கவனம் செலுத்தி குறித்த தரப்பினரிடம் இது பற்றி கேளிவி எழுப்பியிருந்த போதிலும் கூட சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இது தொடர்பான எதுவித பதிலும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்க வேண்டும்.” – நாடாளுமன்றத்தில் அமைச்சர் டயனா கமகே !

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது அத்தியாவசியம் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

 

இன்று(9) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இதன் போது மேலும் உரையாற்றிய அவர்,

“இன்றைய மாணவர்களுக்கு பாலியல் பற்றிய உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

சில பாடசாலை மாணவர்களுக்கு சமூக நோய் என்றால் என்ன என தெரியாது.

சில மாணவர்கள் இந்த பிரச்சினைகள் பற்றி அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக பிரச்சினைகளால் உள்வாங்கப்படுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும்.” என தெரிவித்தார்.

 

 

“கலாசாரம், மதம் என பேசிக் கொண்டிருக்காது கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்க வேண்டும்.” – அமைச்சர் டயனா கமகே

“கலாசாரம், மதம் என்ற வரைபுக்குள் இருந்துக் கொண்டு செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. கஞ்சா செய்கையை நிச்சயம் சட்டபூர்வமாக்க வேண்டும்.” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அரச வருவாய் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வங்குரோத்தடைந்து விட்டது. பொருளாதார நெருக்கடி என குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. வெளிநாட்டு கையிறுப்பை ஈட்டிக் கொள்ள நான் முன்வைத்த ஒருசில யோசனைகள் தொடர்பில் ஒரு தரப்பினர் குறிப்பாக மத குருமார்கள் வெறுக்கத்தக்க பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள்.

சேறு பூசல் பிரசாரங்களுக்கு ஒருபோதும் அஞ்சபோவதுமில்லை. எனது திட்டங்களை தவிர்த்துக்கொள்ள போவதுமில்லை. எம்மை விட கலாசாரத்தை முன்னிலைப்படுத்திய நாடுகள் கலாசாரத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட்டதால் முன்னேற்றமடைந்துள்ளன என்பதை விமர்சனங்களை முன்வைப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

2,500 வருட கால பழைமை தொடர்பில் பேசிக் கொண்டிருந்தால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.சிறந்த திட்டங்களை முன்வைக்கும் போது கலாசாரம், மதம் ஆகிய விடயங்களை குறிப்பிட்டுக்கொண்டு ஒரு தரப்பினர் அத்திட்டங்களுக்கு தடையேற்படுத்துகிறார்கள்.குறுகிய வரைபுக்குள் இருந்துக் கொண்டு எதனையும் வெற்றிக்கொள்ள முடியாது.

கலாசாரம் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் இலங்கை பெண்கள் வெளிநாடுகளுக்கு பணி பெண்களாக செல்வது குறித்து ஏன் கவனம் செலுத்தவில்லை? இலங்கை பெண்கள் வெளிநாடுகளில் மிக மோசமாக துயரங்களை எதிர்க்கொள்கிறார்கள்.  இதற்கு ஆட்சியில் இருந்த அனைத்து அரச தலைவர்களும், அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும் அத்துடன் வெட்கப்பட வேண்டும்.

கஞ்சா பயிர்ச்செய்கையை ஏற்றுமதி செய்ய வேண்டும் என நான் குறிப்பிட்டதை ஒருசில பௌத்த தேரர்கள் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் தெரிவிக்கின்றனர்.  கஞ்சா எமது கலாசாரத்துடன் தொடர்புடையது. கஞ்சாவை மருத்துவ பொருளாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதையே குறிப்பிட்டேன். சட்ட பூர்வமற்றதாக செய்வதை ஏன் சட்ட ரீதியாக செய்ய முடியாது?

கொழும்பில் இரவு 10 மணிக்கு பிறகு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டதை ஒரு தரப்பினர் முழுமையாக திரிபுப்படுத்தி விட்டார்கள். 10 மணிக்கு பிறகு விபசார விடுதிகள் இல்லை என குறிப்பிடவில்லை. அதற்கு அப்பாற்பட்டு ஒன்றுமில்லை என்றே குறிப்பிட்டேன். நாட்டு மக்களின் மனநிலையும் கவலைக்குரியது.

காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை மதுபானசாலைகள் திறக்க வேண்டும். மதுபானம் அதிகம் விற்பனை செய்யப்பட்டால் அரசாங்கத்துக்கு வரி அதிகமாக கிடைக்கும். மாற்றுத்திட்டங்களை செயற்படுத்தாவிடின் பொருளாதாரத்தை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றார்.