கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மீள் விசாரணைக்குட்படுவர் :பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர !
கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பிரதியமைச்சர் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார் . அவர் மேலும் இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
இதனை அவர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில். நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை இதற்கு முதலிலே அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்ட வரலாறு இருக்கின்றது. 1977 ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்துக்கு ஒரு விடுமுறையை வழங்கி மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் சிறுபான்மைக்கும் எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது அப்படிப்பட்ட நாட்டிலே நாங்கள் வாழுகின்றோம் என்றார்.
அரசாங்கத்தை பொறுப்பெடுக்கும் போது உண்மையை அறியும் ஆணைக்குழுவை நியமித்து இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவோம் என தெரிவித்தோம் . அதற்காக மக்கள் 5 வருடத்துக்கு ஆட்சியை தந்துள்ளனர். எனவே இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதே ரீதியில் நாட்டில் ஒரு குரோதத்தை வளர இடமளியோம். அந்த வகையில் எல்லோரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் என்றார்.