அலெக்சே நவல்னி

அலெக்சே நவல்னி

அலெக்ஸி நவால்னியின் மரணம் தொடர்பில் மூன்று ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடை !

ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் தொடர்பில் மூன்று ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

நவால்னி உயிரிழந்த போலர் வூல்வ் எனப்படும் சிறையின் மேற்பார்வை அதிகாரி உட்பட மூவருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

நவால்னியின் மரணத்திற்கு பின்னர் அந்த அதிகாரிக்கு விளாடிமிர் புட்டினின் உத்தரவின் பேரில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உக்ரைனிற்கு எதிராக ரஸ்யா தாக்குதல்களை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில் ரஸ்யாவிற்கு எதிராக பரந்துபட்ட தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஸ்ய எதிர்கட்சி தலைவர் சிறைச்சாலையில் உயிரிழப்பு – புடினே காரணம் என்கிறார் பைடன் !

ரஸ்ய எதிர்கட்சி தலைவரும் விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்தவருமான  அலெக்சே நவல்னி சிறையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையில் அவர் உயிரிழந்துள்ளார் என ரஸ்ய சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை நவல்னி திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டார் சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் என ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன எனரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஸ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின்  மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியே காரணம் என  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.