அவுஸ்திரேலியா பெண்கள்

அவுஸ்திரேலியா பெண்கள்

“ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல.” – பெண் பாராளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலியாவின் பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விவரிக்கும் பொழுது தெரிவித்துள்ளார்.

சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப், கண்ணீருடன் செனட் சபையில் ஆற்றியுள்ள உரையில்,

“பலம் வாய்ந்த ஆண்களால் தாம், பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கு ஆளானதாகவும், மாடிப்படிகளில் நகர விடப்படாமல் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாகவும், அத்துமீறிய தொடலுக்கு ஆளானதாகவும், தமக்கு பாலியலுறவுக்கான அழைப்புகள் வந்ததாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக தன்னுடன் பணியாற்றும் செனட் உறுப்பினர் ஒருவர் மீது பாலியல் தாக்குதலுக்கான குற்றச்சாட்டை வைத்த தோர்ப், பின்னர் பாராளுமன்ற தடை வருவதற்கான ஆபத்து வந்ததும் அவற்றை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

தற்போது, தோர்ப் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த டேவிட் வான் என்பவர் மீது தாம் முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளை மீண்டும் தொடுத்துள்ளார். வான் வழக்கறிஞர்களை அமர்த்தியுள்ளதாக தெரிவித்த தோர்ப், பாராளுமன்ற விதிகளின்படி தமக்கு நேர்ந்ததை மீண்டும் கூற வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது பற்றி தோர்ப் மேலும் கூறியுள்ளதாவது:- விடாமல் பின் தொடர்வது, தீவிரமாக பாலியல் உறவுகளுக்கு அழைக்கப்படுவது, தமது உடல் அத்துமீறி தொடப்படுவது போன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானேன். அலுவலக கதவுகளை திறக்கவே அஞ்சினேன். வெளியே செல்வதற்கு முன் மெதுவாக திறந்து எவருமில்லையென உறுதி செய்து கொள்வேன். கட்டிடத்தின் உள்ளே வரும் முன் பாதுகாப்பிற்காக என்னுடன் எவரையேனும் வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னைப் போன்று மேலும் பலர் இருந்தாலும், தங்களுடைய நலனுக்காக அவர்கள் எதுவும் சொல்ல முன்வரவில்லை. இவ்வாறு தோர்ப் தெரிவித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை உண்மையில்லை என மறுத்த வான், இதனால் தாம் மனதளவில் நொறுங்கி விட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கட்சியும் வான்-ஐ இடைநீக்கம் செய்து விட்டது. ஆஸ்திரேலியாவில், பாராளுமன்றத்திற்குள் பாலியல் அத்துமீறல்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் 2021-ம் வருடத்திலிருந்து வரத் தொடங்கியுள்ளது. அரசியல் உதவியாளர் பிரிட்டனி ஹிக்கின்ஸ் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிகாரி ஒருவர் ஒருவர் பாராளுமன்ற அலுவலகத்திற்குள்ளேயே தம்மை கற்பழித்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கென தனித்தனியே 5 விசாரணைகள் நடைபெற்றன. ஹிக்கின்ஸ் வழக்கு நாடு தழுவிய எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. இதற்கென நடைபெற்ற ஒரு விசாரணை, முறையற்ற வகையில் நடந்ததாக கூறப்பட்டாலும், ஹிக்கின்ஸின் மனநலத்திற்கு பாதிப்பு வரக்கூடும் என்பதால் மறுவிசாரணை செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் பல பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் மேலும் தன் மீது குற்றஞ்சாட்டியவர் மீது வழக்கு தொடரப் போவதாகவும் எச்சரித்தார். மேலும் அவர், சம்மதமில்லாத பாலியல் உறவுக்கான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுத்தார். அரசாங்கம் நடத்திய 2021 விசாரணை ஒன்றும் ஆஸ்திரேலியா அரசியலில் உள்ள பெண்களுக்கெதிரான நிலையை கடுமையாக விமர்சித்துள்ளது.

அப்பொழுது, பாராளுமன்றத்தில் பணியாற்றும் 3-ல் 1 பங்கினர் பாலியல் துன்புறுத்தல்களுக்கும், தாக்குதல்களுக்கும் ஒரு முறையாவது ஆளானதாக தெரிவித்தனர். இவற்றில் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 63% பெண் உறுப்பினர்கள் அடக்கம்.