இலங்கை கல்வி முறை

இலங்கை கல்வி முறை

“இலங்கையின் கல்வி முறையின் மீது பிள்ளைகள் நம்பிக்கை இழந்துள்ளனர்” – நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த !

“தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக” கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது. குறிப்பாக ஒரு சில வருடங்களுக்கு முன்னர் 330,000 ஆக காணப்பட்ட இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் தற்போது 33,0000 ஆக குறைந்துள்ளது.

இதனால் எதிர்காலத்தில் தரம் ஒன்று மாணவர் சேர்க்கை குறைவடையும் நிலை காணப்படுகின்றது.

இலங்கையில் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகி தனியார் வகுப்புகளுக்கு அதிகம் செல்கின்றனர். ஏனெனில் நாட்டின் கல்வி முறையின் மீது பிள்ளைகள் நம்பிக்கை இழந்துள்ளனர்” இவ்வாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி !

8 ஆம் வகுப்பு முதல் முன்னோடி திட்டமாக பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஒக்டோபர் 2 இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி முறையில் செயற்கை நுண்ணறிவு குறித்த படிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலைகளில் AI இன் அறிமுகத்திற்கான முன்மொழிவு கல்வி முறையில் ஒரு தீவிர மாற்றமாக இருக்கும், மேலும் குழந்தைகளை எதிர்காலத்தில் விடுவிக்க உதவும்.

AI தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழுவின் பரிந்துரைகளின்படி முன்மொழியப்பட்ட படிப்புகளை அறிமுகப்படுத்துவது பொருத்தமானது.

மூலோபாய திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுக் கல்வியில் AI படிப்புகளை அறிமுகப்படுத்த ஒரு பைலட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மைக்ரோசாப்டின் ஆதரவுடன் மேற்படி முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொழில்நுட்பம் மற்றும் கல்வி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் சர்வதேச பாடத்திட்டத்தை திருத்தியமைத்து, தேவையான அடிப்படை மனித வளங்கள் உள்ள பாடசாலைகளில் 8 ஆம் வகுப்பிலிருந்து முன்மொழியப்பட்ட முன்னோடித் திட்டங்களைத் தொடங்கவுள்ளது. .

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கும் வசதிகளின் கீழ் முன்னோடி திட்டத்திற்கு பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தெரிவு செய்யப்பட்டால், 100 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரியர்களை பயிற்றுவிப்பாளர்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

“வணிகமயமாக்கப்பட்ட டியூஷன் வகுப்புகளால் இலவசக் கல்வி அழிந்து போய்க்கொண்டிருக்கிறது.” – கல்வி அமைச்சர் விசனம் !

மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது எனவும் பாடசாலை வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி மாற்றத்தின் கீழ், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு கூட மாணவர்கள் வருகைக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற வேண்டும் . அதன்படி, எதிர்காலத்தில் மாணவர்கள் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது அனைத்து தரங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

1,500க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒரு மண்டபத்தில் கூட்டி சொற்பொழிவு செய்வதன் மூலம் கல்வி என்பது அடையக்கூடிய ஒன்று அல்ல என்றும் . தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் உட்பட ஆரம்ப வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இவ்வாறான கற்பித்தல் முறைகளை பிரயோகிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோர்கள் கஷ்டப்பட்டு தங்கள் குழந்தைகளை டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பினால் பாடசாலைகள் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என தெரிவித்த அவர், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களுக்கு முகங்கொடுத்து சிரமங்களை எதிர்நோக்கும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்விக்காக பெரும் தொகையை ஒதுக்க வேண்டிய இக்கட்டான நிலையை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

வணிகமயமாக்கப்பட்ட டியூஷன் வகுப்புகளால் இலவசக் கல்வியின் நோக்கம் மறைந்து வருவதாகவும் இவ்வாறானதொரு நிலைமை வேறெந்த நாட்டிலும் காணப்படவில்லை எனவும், இந்த நாட்டில் ஆரம்பகால கல்வி தொடர்பாக தற்போதுள்ள கருத்துக்கள் மற்றும் அளவுகோல்கள் முற்றாக மாற்றப்பட வேண்டிய மட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய கல்வி முறைகளை உருவாக்கும் போது மாணவர் பாராளுமன்றங்களின் கருத்துக்களை பெற தீர்மானம் !

21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் பாராளுமன்றம் ஆகிய தரப்புக்களின் ஆலோசனைகளும் பெறப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்னும் இரண்டு வாரங்களில் நிறுவப்படவுள்ள அரசியல் கட்சிகளின் மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஆணைக்குழுவில், மாணவர் பாராளுமன்றங்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரத்தினபுரி சீவலி கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 140 மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இந்தச் சந்திபப்பு நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தின் வரலாறு மற்றும் இந்நாட்டு அரச நிர்வாக செயற்பாடுகளில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் இடம் என்ற வகையில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 10 பல்கலைக்கழகங்களையாவது நாட்டில் உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர் கடன் திட்டங்களின் ஊடாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு தேவையான பாடங்களை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் அந்த பல்கலைக்கழகங்களின் ஊடாக வழங்கப்படுமெனவும், புதிய தொழில்நுட்ப கல்லூரிகளை நிறுவுதல் உட்பட கல்வித்துறையின் பல்வேறு சீர்த்திருத்தங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் மாணவர்களிடத்தில் கருத்துகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அதற்கான சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கானவர்களைத் தெரிவுசெய்த பின்னர், அதன் முதல் கூட்டத்தை இந்நாட்டின் முதலாவது பாராளுமன்றம் கூடிய தற்போதைய ஜனாதிபதி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிநிதிகளான மாணவர் குழுவொன்றும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதோடு, தமக்கு கிடைக்காமல் போன வாய்ப்பை, தமது சகோதர மாணவர் குழுவுக்குப் பெற்றுத் தந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் நீல் வதுகாரதவத்த, ஆசிரியர்கள் சிலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

‘இன்று  நாம் 21 வது நூற்றாண்டில் இருக்கின்றோம். ஆனால் எம்மிடம் 20 ஆம் நூற்றாண்டின் கல்வி முறைமையே உள்ளது..” – ஜனாதிபதி ரணில்

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

அலரி மாளிகையில்  நேற்று வியாழக்கிழமை (16)  இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வியற் கல்லூரிகளை உருவாக்கும் திட்டத்தின் ஸ்தாபகரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  தேசிய பாடசாலைகளுக்கான 1729 நியமனங்களும் மேல் மாகாணத்திற்கான 626 நியமனங்களும் வழங்கப்பட்டன. அதனையடுத்து ஏனைய 8 மாகாணங்களுக்குமான நியமனங்களும் வழங்கப்பட்டதோடு  மொத்தமாக இன்றைய தினத்தில்  7342 டிப்ளோமாதாரிகளுக்கு  நியமனங்கள் வழங்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்குள்  2050 ஆம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்குவதற்கான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதற்கான முதன்மைக் காரணி மனித வளம் என வலியுறுத்திய ஜனாதிபதி மனித வளத்தை தயார்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்துள்ளது என்றார்.

தற்போது நாட்டிற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்டாமல் இருக்க வேண்டும் எனில் ஏற்றுமதி  பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும்  அதற்கு ஏற்றவாறு கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இங்கு  மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“நியமனங்களை பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.  கொவிட்  பரவல் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 வருடங்கள் மேலதிகமாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருந்திருந்தீர்கள். உங்களுக்கு கற்பித்த பீடாதிபதிகளுக்கும் விரிவுரையாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

1985 களில் நான் கல்வி அமைச்சராக இருந்தபோதே கல்வியற் கல்லூரிகள்  ஆரம்பிக்கப்பட்டன.  தற்போது கல்வியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு 38 வருடங்களாகின்றன. இந்த 38 வருடங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அன்று கையடக்கத் தொலைபேசிகள் இருக்கவில்லை. சிறிதளவு கனிணிகள் மாத்திரமே இருந்தன. அவை அனைத்தும் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் மாத்திரமே தயாரிக்கப்பட்டன. இன்று அந்த நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன. அந்த உற்பத்திகள் சீனா அல்லது இந்தியாவிலேயே இடம்பெறுகின்றன. அந்த இரு நாடுகளிலுமே கனிணி உற்பத்தி துறைசார் நிபுணத்துவம் காணப்படுகின்றன. அவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு அறிவியலும் இணைந்துள்ளது.

இன்று  நாம் 21 வது நூற்றாண்டில் இருக்கின்றோம். ஆனால் எம்மிடம் 20 ஆம் நூற்றாண்டின் கல்வி முறைமையே உள்ளது. அதனால் 21 ஆவது நூற்றாண்டிற்கு அவசியமான கல்வி முறைமையை கட்டமைப்பதற்காக அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும்.

இது பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த நாம் மீண்டெழும் நேரமாகும்.  இந்நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்படாதவாறு செயற்பட்டால் மாத்திரமே வர்த்தக நடவடிக்கைகளை  மேம்படுத்த முடியும்.  அதேபோல் ஏற்றுமதியால் வருமானம் ஈட்ட வேண்டும். நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றினையும் உருவாக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் அதேநேரம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுவூட்டக்கூடிய வகையிலான கல்வி முறையொன்றினையும் தயாரிக்க வேண்டியது அவசியமாகும்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் கொண்டுள்ள முதன்மை வளமாக மனித வளமே காணப்படுகின்றது. அந்த வளத்தை ஆசிரியர்களே பலப்படுத்துகின்றனர்.  அதனால் ஆசிரிய வளத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும்.

கல்விக்கான தனியானதொரு அமைச்சர்கள் குழுவை நாம் நியமித்துள்ளோம். கல்வித் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு வழங்குவோம்.  தற்போது அது தொடர்பிலான அறிக்கையொன்றை தேசிய கல்விக்குழு எம்மிடத்தில் கையளித்துள்ளது.  அதற்கு மேலதிகமாக பிரமரின் செயலாளர் தலைமையில் கல்வி நவீனமயபடுத்தல் தொடர்பிலான குழுவொன்று ஒவ்வொரு துறைசார்  குழுக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து அறிக்கைகளும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்பாக எனக்கு கிடைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளேன். அதனூடாக  21ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமானதும்  2050ஆம் ஆண்டுக்கு பொருத்தமானதுமான கல்விக் கொள்கையொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

தரம் 8 இல் பரீட்சையில் சித்தி பெற்றமை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெறவில்லை என்ற காரணங்களுக்காக மாணவர்களின் கல்வியை இடைநிறுத்த அனுமதிக்க கூடாது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை கட்டாயமாக வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் அதனை நாம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளோம். அதேபோல் அதற்கு பொருத்தமான வகையில் பாடசாலை கல்வியையும் கட்டமைக்க வேண்டும்.

அதேபோல் சங்கீதம்,கலைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களது தெரிவுகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.  குறிப்பாக ஸ்கெண்டினேவிய நாடுகளில் அவ்வாறான வாய்ப்புக்கள் உள்ளன.  அதுபோன்ற வேலைத்திட்டங்களுக்கு நாமும் செல்ல வேண்டும்.  உயர்தர பாடங்கள் மாத்திரமின்றி  வாழ்க்கைக்கு அவசியமான கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதனூடாக கிட்டும்.

13 வருட கல்வியை வழங்குகின்ற போது சாதாரண தர பரீட்சை அவசியமா என்ற கேள்வி எழுகின்றது.  சாதாரண தர பரீட்சை அவசியமில்லை என்பதே பலரதும் நிலைப்பாடாக உள்ளது. உலகின் அபிவிருத்தி அடைந்த நாடாக விளங்கும் அமெரிக்காவே அதற்கு உதாரணமாகும். அங்கு சாதாரண தர பரீட்சையும் இல்லை உயர்தர பரீட்சையும் இல்லை.  நம்மால் அதனை செய்ய முடியும் என நான் நம்பவில்லை. இருப்பினும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியது அவசியமாகும்.  அதனை மாற்று முறையில் நடத்துவதா அல்லது சித்தி பெறல், சித்தி பெறாமையை அடிப்படையாக கொண்டு நடத்துவதா என தீர்மானிக்க வேண்டும்.

13 வருட கல்வியை பெற்றுக்கொடுக்கின்ற போது அதற்கு உகந்த வகையில் பரீட்சைகளை நடத்த வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்துள்ளது. தற்போது பரீட்சை தினங்கள் மாறுகின்றன ஜனவரி முதல் டிசம்பர் வரையில் ஒவ்வொரு திகதியில் உயர்தர பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. அதேபோல் டிசம்பர் மாதத்தில் பரீட்சை இடம்பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்துக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.  அதன்படி பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்த வேண்டிய பொறுப்பு பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஏற்படும்.

பல்கலைக்கழக பட்டத்தை பெற்றுக்கொள்ளும் போது எனக்கு 21 வயது.  குறைந்தபட்சம் 23 வயதிலாவது பல்கலைக்கழங்களிலிருந்து வெளியேற வேண்டியது அவசியமாகும். அதேபோல் இன்று பல புதிய பாடத்திட்டங்கள் உள்ளன.  ஆங்கில கல்வி மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது.  ஆங்கில மொழி தெரியவில்லை என்ற நிலைமை எவருக்கும் ஏற்படக்கூடாது.

19 – 20 ஆம் நூற்றாண்டுகளில்  சிங்கள எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர்.  வண. ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்ல நாயக்க தேரர், ஈ.ஆர்.சரத்சந்திர,மார்ட்டின் விக்ரமசிங்க ஆகியோர் அனைவரும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் ஆவர்.

அதனால் அனைவருக்கும் ஆங்கில கல்வியை வழங்கும் வேலைத்திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக முதலில் ஆங்கில ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். அடுத்த 05 வருடங்களுக்குள் அந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அதன் பின்னர் ஆங்கில மொழியை தேசிய மொழியாக நடைமுறைப்படுத்த முடியும். ஆங்கிலம் அரசகரும மொழியாக இல்லாவிட்டாலும் பல்வேறு ஆவணங்கள் இன்னும் ஆங்கில மொழியிலேயே பேணப்படுகின்றன. நாம் ஒரு இடத்தில் முடங்கிக் கிடக்காது சீன மொழி,ஜப்பானிய மொழி, ஹிந்தி, அரபு போன்ற மொழிகளையும் கற்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.

அதேபோல் எமது பல்கலைக்கழக கட்டமைப்பினையும் நவீனமயப்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடரும் காலத்தை 3 வருடங்களா அல்லது 4 வருடகங்களா என்பதை தீர்மானிக்க வேண்டும். அதேபோல் அரச பல்கலைக்கழகங்களை நவீனமயப்படுத்த வேண்டும்.

தற்போது, ஆண்டுக்கு சுமார் 40,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.  மேலும் ஒரு குழுவினர் வெளிநாடு செல்கிறனர். இன்னும் சிலர் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளனர். எனவே, அரச பல்கலைக்கழகங்கள், தேசிய பல்கலைக்கழகங்களைப் போன்று அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் நாம் வாய்ப்புகளை வழங்குகிறோம்.

அவ்வாறு, அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்படவேண்டுமாயின், அந்த நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலகு வட்டி அல்லது வட்டியில்லா கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் தான் ஒரு மாணவர் கற்க வேண்டிய பாடத்தை அரசாங்கம் தீர்மானிக்கிறது. ஏனைய எல்லா நாடுகளிலும் உள்ள மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்தைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. அந்த முறையை நாம் உருவாக்க வேண்டும்.

இன்னும் 15-20 வருடங்களில் வகுப்பறை எவ்வாறு இருக்கும் என்று யாராலும் கூற முடியாது. தற்போது இருக்கும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்துடன் நாம் எவ்வாறு முன்னேற முடியும் என்று பார்க்க வேண்டும். Chat GPT காரணமாக  எதிர்காலத்தில், கற்பித்தல் முறைகளும் முற்றிலும் வேறுபடும். நாம் பெரும் மாற்றத்தின் சகாப்தத்தில் இருக்கிறோம். எனவே அந்த தொழில்நுட்பத்துடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.