டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்கள் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் ஒன்று திரண்டு இன்று செவ்வாய்க்கிழமை (19) மதிய நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்துகின்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதலுக்கு எதிராகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலாபம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை நிறுத்து , தேசிய வளங்களை விற்பதை நிறுத்து, பொருளாதாரத்தினை மேம்படுத்துவதாகக் கூறி நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கு இடமளிக்க முடியாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.