இலங்கை தமிழர் – சிங்களவர்

இலங்கை தமிழர் – சிங்களவர்

83 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலைக் கலவரம் – தமிழர்களிடம் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரிய அரசாங்கம்!

83 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலைக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களிடமும் 41 வருடங்களின் பின்னர் அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இவ்விடயம் குறித்து இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, 83 கலவரம் நாட்டை இருண்ட யுகத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்புக்கோரும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

நாம் அப்போது ஆட்சி செய்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்காவிட்டாலும், நாம் அம்மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். அதேபோன்று, 41 வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டை கறுப்பு யுகத்திற்கு அழைத்துச் சென்ற, 83 கலவரம் நடைபெற்றது.

 

இதனால், நாட்டிலுள்ள தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

அப்போதைய காலக்கட்டத்தில் நாம் அரசியலில் இல்லாவிட்டால்கூட, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழர்களிடம் மன்னிப்புக்கோர நாம் இவ்வேளையில் கடமைப்பட்டுள்ளோம்.

இதனால்தான் இவ்வேளையில், நாம் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“தாராளமாக வாருங்கள்! கொல்ல வேண்டும் என்றாலும் வாருங்கள்!” – சிங்கள இளைஞரை அழைத்த விக்னேஸ்வரன் !

என்னை கொலை செய்ய கொலை வெறியில் இருந்த சிங்கள இளைஞன் தன் தவறை உணர்ந்து மனம்மாறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதிலிலேயே இவ்விடயத்தை தெரிவித்தார்.

 

அந்த கேள்வி பதிலில்,என்னுடைய சில கேள்வி பதில்களை வாசித்துவிட்டு ஒரு படித்த சிங்கள இளைஞர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். பேச்சு கிட்டதட்ட பின்வருமாறு அமைந்தது.

 

இளைஞர் – “சேர்! உங்களைக் கொல்ல வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தேன். என்றாலும் நீங்கள் குறிப்பிட்ட பேராசிரியர் ஆரியரட்ணவின் சிங்கள நூலான “தெமள பௌத்தயா”வை (தமிழ் பௌத்தர்கள்) வாசித்த பின்னர்தான் உங்கள் கூற்றுக்களின் உண்மையைப் புரிந்து கொண்டேன். உங்களை வந்து சந்திக்க விரும்புகின்றேன்.”

 

நான் – “தாராளமாக வாருங்கள்! கொல்ல வேண்டும் என்றாலும் வாருங்கள்! எனக்கு இப்பொழுது 83 வயது (அப்போதைய வயது). தொடர்ந்து இந்த உலகத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை எதுவும் எனக்கில்லை.”

 

இளைஞர் – :“இல்லை சேர்! நான் வெறும் பேச்சுக்கே அவ்வாறு சொன்னேன்.” இன்றுவரை அவர் என்னை வந்து சந்திக்கவில்லை. ஆனால் அவர் தமது மனமாற்றத்தை வெளியிட்டமை தான் இந்தக் கேள்வி – பதிலுக்கு முக்கியமானது.

 

சிங்கள மக்களுக்கு எம்மைப் பற்றிய போதிய அறிவு இல்லாமையே தமிழ் -சிங்கள உறவானது இன்றும் மேம்படாமல் இருப்பதற்குக் காரணம் – என்றுள்ளது