போதையில் பொலிஸார் – 17 பேர் பணி நீக்கம் !
ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்களை உட்கொண்டதற்காக கடந்த நான்கு மாதங்களில் 17 அதிகாரிகளை இலங்கை பொலிஸ் பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இலங்கை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளின் பட்டியலை புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு தொகுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
குறித்த அதிகாரிகள் பரிசோதிக்கப்பட்டு பொலிஸ் திணைக்களத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அதிகாரிகள் மீது விசாரணைகள் நடந்து வருவதாகவும், அவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்எஸ்பி மனதுங்க உறுதிப்படுத்தினார்.
இதேவேளை வடக்கு மாகாணத்தின் பல நகர்ப்புற பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை மிகத் தீவிரமாக போதைப்பொருள் பாவனை பரவி வருவது தொடர்பிலும் இவற்றை கட்டுப்படுத்த வடக்கு மாகாண பொலிஸார் பாராமுகமாக செயற்படுவதாகவும் பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.