எழுத்தாளர் ஹான் காங்

எழுத்தாளர் ஹான் காங்

உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியை பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை. “- நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு, தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கவித்துவமான மொழி நடையில் வரலாற்றுடன் தொடர்புப்படுத்தி எழுதியமைக்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தென்கொரியாவைச் சேர்ந்த முதல் பெண் எழுத்தாளர் நோபல் பரிசு பெறுவதால், அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் தனது பேஸ்புக் பக்கத்தில், “நமது நவீன வரலாற்றின் வலிமிகுந்த காயங்களைக் கடந்து ஒரு சிறந்த இலக்கியப் படைப்பை உருவாக்கியுள்ளது. இது கொரிய இலக்கிய வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் தேசிய கொண்டாட்டத்திற்கான காரணம்” எனப் பதிவிட்டுள்ளார்.

”ஹான் காங் ஒரு சிறந்த நாவலாசிரியர் ஆவார். இந்த உலகளாவிய அங்கீகாரத்திற்கு அவர் மிகவும் தகுதியானவர்” என பச்சிங்கோவின் கொரிய-அமெரிக்க எழுத்தாளர் மின் ஜின் லீயும், “ஒரு கொரிய நாவலாசிரியர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்றால், அது ஹான் காங்காக இருக்க வேண்டும்” என்று தென்கொரிய எழுத்தாளர் சுங்-இல் கிம்மும் “கொரியாவின் கடந்தகால வரலாற்றை மறைக்கவும் சிதைக்கவும் முயற்சிக்கும் முட்டாள்தனத்தை இந்தப் பரிசு வென்றுள்ளது” தென் கொரிய எழுத்தாளர் கிம் போ-யங்கும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள தென் கொரிய எழுத்தாளரான ஹான் காங், இதுகுறித்த சந்தோஷத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அவர், தனது தந்தையிடம் சில கருத்துகளைக் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. அதன்படி ஹான் காங்கின் தந்தையும் எழுத்தாளருமான ஹான் சியுங்-வோன், “ ‘போர் உக்கிரமடைந்து, ஒவ்வொருநாளும் மக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் அல்லது செய்தியாளர் சந்திப்பு எப்படி நடத்த முடியும்?’ என என் மகள் என்னிடம் கேள்வி எழுப்பினார்.

உக்ரைன் மற்றும் காஸாவில் நடைபெற்று வரும் போர், தன் மகளைத் தொந்தரவு செய்துள்ளது. ’உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியை பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை. நாம் ஒரு மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினால், நமது குரல்கள் எவ்வளவு பலவீனமாகவும் சிறியதாகவும் தொலைவில் இருந்தாலும் அதற்கான நமது பொறுப்புகளை நாம் கைவிட முடியாது’ என தன் மகள் தன்னிடம் தெரிவித்தார்.

 

வெகுஜன மனிதர்கள், துயரத்தில் இருக்கும்போது ஓர் எழுத்தாளராக தனக்கு தார்மீக பொறுப்பு இருப்பதாக அவள் உணர்கிறாள். ஆரம்பத்தில் இதைக் கொண்டாடுவதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், பின்னர் ஒரே இரவில் தன் மனதை மாற்றிக் கொண்டார்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

2024 – இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளருக்கு !

இலக்கியத்திற்கான நோபல் பரிசை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் வென்றுள்ளார்.

 

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

 

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

 

உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.

 

அந்தவகையில் நடப்பாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக கடந்த 7ம் திகதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கேனிற்கு அறிவிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து 8ம் திகதி இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

 

அதேபோல் நேற்று 9ம் திகதி வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

 

விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களின் இறந்த நாளான டிசம்பர் 10 ஆம் திகதி, 8 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுடன் நோபல் பரிசு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.