ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு

இலங்கையின் 09 ஆவது ஜனாதிபதித் தேர்தல் இன, மத, பேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிகவும் அமைதியான தேர்தல் – ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு

இலங்கையின் 09 ஆவது ஜனாதிபதித் தேர்தல் இன, மத, பேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக அமைந்திருந்ததாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகைத்தந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

 

தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நேற்று (23) ஏற்பாடு செய்திருந்தனர்.

 

இதன்போது, கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமை அதிகாரி,

 

இலங்கையின் 09 ஜனாதிபதித் தேர்தல் இன, மத, பேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக அமைந்திருந்தது.

 

தேர்தல் ஆணைக்குழு வெளிப்படைத்தன்மை, செயற்றிறன்மிக்க தன்மையுடன், எவ்வித சந்தேகங்களையும் தோற்றுவிக்காத வகையில் செயற்பட்டது.

 

ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட 39 பேரில், பெண் வேட்பாளர்கள் எவரும் உள்ளடங்காமை மிகுந்த கரிசனைக்குரியது. எதிர்வருங்காலத்தில் இதுகுறித்து அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம். 39 வேட்பாளர்களில் சிலர் பிரசார நடவடிக்கைகளைக்கூட முன்னெடுக்கவில்லை. அவர்களுக்காக அரச நிதி செலவிடப்படுவது கரிசனைக்குரிய விடயமாகும். இதனை சீரமைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்

 

இலங்கை வரலாற்றில் நடைபெற்ற மிகவும் அமைதியான தேர்தல் இதுவாகும். திடீரென ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை ஒன்றுக்கொன்று முரணான தன்மையைக் காண்பிக்கிறது. தேர்தல் பிரசாரங்களின்போது சம்பள உயர்வு, வட்டி அற்ற கடன் போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கும் போக்கு ஏற்புடையதல்ல.

 

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவுக்கு தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் 5,000 முறைப்பாடுகளும், தேர்தல் தினத்தன்று 600 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.