ஐ.பி.சி பாஸ்கரன்

ஐ.பி.சி பாஸ்கரன்

மாவீரர்களுக்கு மாபெரும் கோயில் கட்டுவேன் ! ஐ.பி.சி பாஸ்கரன் – முதலமைச்சராக்குவார்களா வடக்கு தமிழர்கள் ?

மாவீரர்களுக்கு மாபெரும் கோயில் கட்டுவேன் ! ஐ.பி.சி பாஸ்கரன் – முதலமைச்சராக்குவார்களா வடக்கு தமிழர்கள் ?

இல்லாத தெய்வங்களுக்கு கோயில் கட்டுவதை விட எங்களுடைய மாவீரர்களுக்கு என ஓர் ஆலயம் கட்டுவேன் என ஐ.பி.சி பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ஐ.பி.சிக்கு வழங்கிய சுயதம்பட்ட நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் கஜா – கஜா குழுவினரின் உசுப்பேற்றும் அரசியலை ஐ.பி.சி பாஸ்கரனிடமும் எதிர்பார்க்க முடியும் என பல தரப்பினரும் தெரிவித்து வரும் நிலையில் பாஸ்கரனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குமார் பொன்னம்பலத்திற்கு அண்மையில் மாலை அணிவித்த ஐபிசி பாஸ்கரன் முதலமைச்சராவதற்கான தடங்களை பதிக்க ஆரம்பிக்கின்றார்.

ஐ.பி.சி தமிழ் மற்றும் ரீச்சா பார் உரிமையாளரான பாஸ்கரன் தனது முதலைமைச்சர் கனவை நோக்கி படிப்படியாக நகர ஆரம்பித்துள்ளார். இது தொடர்பில் தேசம்நெட் பல தடவைகள் பதிவு செய்துள்ளது.

தமிழரசுக்கட்சியில் தனக்கு ஏதேனும் தேறுமா என எதிர்பார்த்த போது முன்னாள் பா.உ சுமந்திரனின் ஆதிக்கத்தால் தமிழரசுக்கட்சி பாஸ்கரனை தூரப்படுத்தியிருந்ததது. இதனை தொடர்ந்து சுமந்திரனை தமிழ்தேசியத்துக்கு எதிரானவராகவும் பா.உ சிறீதரனை மீட்பர் போலவும் ஐ.பி.சி உட்பட பாஸ்கரனின் ஊடகங்கள் காட்சிப்படுத்தி வருகின்றன.

தற்போது, மாகாண சபை தேர்தல்கள் தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகிவரும் நிலையில் தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்ய முன்னணியின் கஜா – கஜா குழுவினருடன் கைகோர்த்துள்ளார் பாஸ்கரன். படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு இதை உறுதிசெய்திருந்தார்.

புலிகளின் பெயரை சொன்னாலே ஒருவருடைய பின்புலம் – மக்களுக்கான கடந்த கால அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் அரசியல் அதிகாரங்களை தூக்கி கொடுத்துவிடுமளவிற்கு வடக்கு மக்கள் உள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காய் நகர்த்துகிறார் ஐ.பி.சி பாஸ்கரன் என அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

ஐபிசி பாஸ்கரனின் தடாலடி அறிவிப்பும் அரசியலுக்கான நகர்வும் !

ஐபிசி பாஸ்கரனின் தடாலடி அறிவிப்பும் அரசியலுக்கான நகர்வும் !

“என்ன தொழில் தெரியுமோ, அந்த தொழிலுக்கு ஏற்ற வேலை நான் தாறேன்” என அழைப்பு விடுக்கின்றார் ஐபிசி பாஸ்கரன். இயக்கச்சியில் இயங்கும் றீச்சாவில் காப்பென்டர் வேலை, பிளம்பர் வேலை, வெல்டிங் வேலை, மேசன் வேலை போன்ற வேலைக்கு ஆட்கள் தேவை என்று கூறும் பாஸ்கரன் மற்றும் ராற்றோ ( Tattoo) குத்தவும் வேலைக்கு ஆட்கள் தேவை என்று குறிப்பிடுகிறார். ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி வார்க்கவும், வாகனங்கள் ஓடவும், உணவகத்தில் வேலை, தீம் பார்க்கில் இருக்கின்ற விளையாட்டு இயந்திரங்களை இயக்கும் மெசின் ஒப்பிறேற்ரர்கள் என பல்வேறுபட்ட வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக காணொலி வெளியிட்டுள்ளார். அத்துடன் பல கவர்ச்சிகரமான சம்பளக் கொடுப்பனவுகளையும் அறிவித்துள்ளார். அதில் முக்கியானது நேர்மையாக 5 வருடங்கள் தன்னிடம் வேலை செய்தால் இரண்டு பரப்பு காணியில் வீடு கட்டித் தருவதாகவும் வாக்குறுதியளிக்கிறார். தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தங்கும் விடுதியுடன் மூன்று நேர உணவுடன் வேலை கொடுப்பேன் என்கிறார். அத்துடன் ஏற்கனவே 110 பேர் றீச்சாவில் தங்கியிருந்து வேலை செய்கிறார்கள் என்றும் றீச்சாவில் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தரவாதம் அளிக்கின்றார்.

முக்கியமாக விஷேட தேவைகள் உடையவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்றும் கூறுகிறார் பாஸ்கரன். கந்தையா பாஸ்கரனின் வேலைவாய்ப்பு அறிவுப்புக்கள் வரவேற்கத்தக்கது என்றாலும், அவர் தொழிலாளர் நலன்புரி சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று தொழிற்சங்கவாதிகள் கூறுகின்றனர். குறைந்த சம்பளத்தில் கூடிய வேலைவாங்கல், தொழிலாளர்களின் விடுமுறை மற்றும் ஓய்வுநேரம், உடல், உள சுகாதாரம், பணிச்சுமை, மேலதிக வேலைக்கான படி மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களில் தொழிலாளர் சட்டங்களில் குறிப்பிடப்படும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சமூக சேவையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விடயத்தில் வட மாகாண ஆளுநர் மற்றும் கிளிநொச்சி பிரதேச சபை போன்றனவும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். ஐபிசி பாஸ்கரனின் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புக்கள் அவரது வட மாகாண முதலமைச்சர் கனவை சாத்தியமாக்குமா? என்பதை எதிர்வரும் காலம் பதில் சொல்லும்.

வடக்கில் வேலை வாய்புக்கள் இல்லாமல் இல்லை. இருக்கின்ற வேலைகளை செய்வதற்கு இளைஞர் மற்றும் யுவதிகள் தயாராகவும் இல்லை. ஒருபக்கம் புலம்பெயர் நாடுகளிலிருந்து வரும் உதவிகளையே தமது வாழ்வாதாரமாக எதிர்பார்த்து வாழ்கிறார்கள். மறுபுறம் தாங்களும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை வேலைக்கு ஆட்கள் கிடைக்காமையால் வெளிமாவட்டங்களிலிருந்து வந்தும் ஏன் நேபாளத்திலிருந்தும் வந்து வேலை செய்வதாக கூறப்படுகிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் உணவகங்களில் தங்கும் விடுதிகளில் இந்நிலமையை காணக்கூடியதாக உள்ளது.

உண்டியல் குலுக்கி வாழாமல் உழைத்து வாழும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு சமூகத்தின் தலையாய கடமையாகும்.

 

தை பிறந்தால் லைக்காவில் வேலை போகும்! 60 மில்லியன் பவுண் வரி நிலுவை! அரசியலிலும் சறுக்கல்! வியாபாரத்திலும் சறுக்கல்!

தை பிறந்தால் லைக்காவில் வேலை போகும்! 60 மில்லியன் பவுண் வரி நிலுவை! அரசியலிலும் சறுக்கல்! வியாபாரத்திலும் சறுக்கல்!

தை மாதம் 31 திகதி லைக்காவின் பணியாளர்கள் 316 பேர் வேலையை இழக்க உள்ளனர். பிரித்தானியாவில் பணியாற்றுகின்றவர்களில் 90 சதவீதமானவர்கள் வேலைநீக்கப்பட, 50க்கும் உட்பட்டவர்களே பிரித்தானியாவில் இருந்து பணியாற்ற உள்ளனர். 2022 இல் லைக்கா நிறுவனம் 24 மில்லியன் பவுண்கள் நட்டமடைந்ததாக கணக்கியல் கோவைகள் தெரிவிக்கின்றது. அத்தோடு கடந்த ஆண்டு பிரான்ஸ் நீதிமன்றம் லைக்கா மோபைல் எட்டாயிரம் பவுண்களுக்கு அதிகனான தொகை வரி செலுத்தவேண்டும் என உத்தரவுவிட்டிருந்தது. அத்துடன் லைக்கா மோபைல் நிதிமோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றசம்சாட்டியிருந்தது. மேலும் பிரித்தானிய நீதி மன்றம் லைக்கா மோபைல் நிறுவனம் 51 மில்லியன் பவுண்கள் வரி செலுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி அண்மையில் தீர்ப்பளித்து இருந்தது.

லைக்கா சுபாஸ்கரனும் லிப்பரா பாஸ்கரனும் 2000ம் ஆண்டுகளில் தொலைபேசி அட்டை விநியோகத்தில் போட்டாபோட்டியாக வளர்ந்தவர்கள். இவர்களுக்கு கீழ் இயங்கியவர்கள் மற்றவர்களது தொலைபேசி அட்டை விற்பவர்களைத் தாக்குவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான ஒரு சம்பவத்தில் லிப்பரா நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கண்டு வசீகரன் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். அன்று 2008இல் அவர் தேசம்நெற்றை அணுகியதால் இச்செய்தி எமது சகோதரப் பத்திரிகையான லண்டன் குரலில் வெளியிடப்பட்டு வசீகரனுக்கு நட்டஈட்டையும் இரு நிறுவனங்களும் வழங்கியது.

இது பற்றி தேசம்நெற்க்குத் தெரிவித்த வசீகரன் தற்போது தனது இடது கண் பார்வையை இழந்துவிட்டதாகவும் 2008இல் நடந்த சம்பவங்களை மீளவும் எண்ணிப்பார்த்தார். மேற்படி வன்முறைச் சம்பவம் பிரித்தானியாவின் மன்செஸ்ரர் பகுதியிலேயே இடம்பெற்றது.

இருபது ஆண்டுகளுக்கு முன் தங்கள் வியாபார விளம்பர நிலைகளுக்காக மல்லுக்கட்டிய இரு நிறுவனங்களும் கடந்த இருபது ஆண்டுகளில் அமோக வளர்ச்சியை எட்டின. லிப்பரா பாஸ்கரன் மொபைல் வியாபாரத்தை விற்று முற்றிலும் தமிழ் சூழலுக்குள் தனது எஞ்சிய காலத்தை கழிக்க எண்ணியுள்ளார். விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட ஐபிசி ஊடகத்தை பொறுப்பேற்ற பாஸ்கரன் ஒரு முதலமைச்சர் கனவோடு இயங்கி வருகின்றார். இவரது கனவை குலைத்து வரும் எம்ஏ சுமந்திரனை ஐபிசி பாஸ்கரன் முழுபலம் கொண்டு ஓரம்கட்ட முனைந்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். எம் ஏ சுமந்திரனை தமிழ் தேசத் துரோகியாக்கியதில் பாஸ்கரனின் பங்கு அளப்பெரியது. ஆனாலும் ஐபிசி பாஸ்கரன் எதிர்பார்த்தது போல் தமிழரசுக் கட்சியை தன் பண, ஊடக பலத்தைக் கொண்டு தோற்கடிக்க முடியவில்லை. சுமந்திரனையும் கட்சியை விட்டு துரத்த முடியவில்லை. இப்போதும் ஐபிசி பாஸ்கரனின் முதலமைச்சர் கனவுக்கான தடை விலகவில்லை.

மாறாக அல்லிராஜா சுபாஸ்கரன், நேரடியாக அரசியலில் குதிக்கும் ஆர்வத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அரசியலில் தான் ஒரு ‘கிங்மேக்கர்’ ஆக வரவேண்டும் என்ற ஆசை நிறையவே உள்ளது. லண்டனில் 24 மில்லியன் பவுண்கள் நட்டக் கணக்கு 2022இல் காட்டப்பட்டாலும் இலங்கைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்தார். தமிழ் பொது வேட்பாளராக சங்கு அரியநேந்திரன் நிறுத்தப்பட்டு அவரது வெற்றிக்கு நிதி வாரி வழங்கப்பட்டது. மறுபுறம் ஜனாதிபதி ரணிலுடைய தேர்தல் பிரச்சார நிதியையும் அல்லிராஜா சுபாஸ்கரனே வழங்கியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றியை உறுதிப்படுத்தவே தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதனை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்தவர்கள் முற்றாக மறுக்கின்றனர்.

மேலும் பாராளுமன்றத் தேர்தலிலும் தெற்கில் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 15 லட்சம் சமபளம் கொடுத்து ஒலிவாங்கியில் போட்டியிட்டவைத்தார். வடக்கில் சங்கு சின்னத்தில் முதலீடு செய்தனர். சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக அது முடிந்தது. அதன் பாராளுமன்ற உறுப்பினர்களில் செல்வம் அடைக்கலநாதனைத் தவிர ஏனையவர்கள் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களை இழந்தனர். வி ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் நிதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வியாபராத்தில் சறுக்கினார்களோ அல்லது கணக்குப் புத்தகத்தை சறுக்க வைத்தார்களோ என்பது எல்லாம் ‘லிங்க பூசை’ ஆசாமி புலிக்கள் முரளிகிருஸ்ணனுக்குத் தான் வெளிச்சம். ஆனால் அரசியலில் சாண் ஏறாமலே முழம் சறுக்கியது. ‘ஒருவன்’ என்று தற்போது ஒரு ஊடகத்தையும் ஆரம்பித்துள்ளார்கள்.

ஆரம்பத்தில் வெக்ரோன் தொலைக்காட்சியை நடத்தியவர்கள் தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒருவன் என்ற ஊடகத்தை ஆரம்பித்துள்ளனர். பணம் பலதும் பத்தும் செய்யும் என்பதற்கு லைக்கா சிறந்த உதாரணம்.

லைக்காவுடைய பெரும்பாலான வர்த்தகச் செயற்பாடுகள் தற்போது இந்தியா நோக்கி நகர்த்தப்படுகிறது. ஏற்கனவே ஐரோப்பாவில் 60 மில்லியன் பவுண்கள் வரி நிலுவை இருக்கின்ற போது எப்படியும் எதிர்காலத்தில் இந்நிறுவனம் மீதான செயற்பாடுகள் இறுக்கமடையும். அதனால் செலவுக்குறைப்புக்கான செயற்பாடு என்ற பெயரில் லைக்கா இந்தியாவை நோக்கி நகர்கின்றது. மேலும் லைக்கா நிறுவனம் சினிமாவிலும் கணிசமான முதலீடுகளைக் கொண்டுள்ளதால் அவர்கள் இந்தியா – தமிழகம் நோக்கி நகர்கிறார்கள்.