சசிகலா ரவிராஜ்

சசிகலா ரவிராஜ்

வீட்டிலிருந்து வெளியேறி சங்குகட்சியுடன் இணைந்தார் சசிகலா ரவிராஜ் !

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியில் அவருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை.

தமிழரசுக் கட்சியின் இந்த வேட்பாளர் தெரிவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடாவடித்தனமாகப் பல்வேறு குளறுபடிகளைச் செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு நியமனத்தைக் கொடுத்துள்ளார் என்று சசிகலா நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து தமிழரசுக் கட்சியில் இருந்து இன்று காலை வெளியேறிய சசிகலா, ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சின்னமான சங்குச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று பிற்பகல் கையெழுத்திட்டுள்ளார்.

சசிகலா விடயம் தொடர்பில் இரா.சம்பந்தனுடன் கலந்தாலோசித்து முடிகளை மேற்கொள்ளுவோம் – மாவை சேனாதிராஜா

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினத்தில் யாழ்வேட்பாளர் சசிகலா ரவிராஜ் அவர்களுடைய வாக்கு எண்ணல் தொடர்பாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சசிகலா ரவிராஜ் அவர்களாலும் அவருடைய ஆதரவாளர்களாலும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் “சசிகலா விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்தாலோசித்து முடிகளை மேற்கொள்ளுவோம்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நேற்றைய தினம் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகலா ரவிராஜ் சந்திப்பொன்றை மேற்கொண்டார். அதன்பின்னர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் இறுதி முடிவுகள் அறிவிக்கும் நேரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் கவலையளிக்கின்றன. சசிகலா ரவிராஜ் கூறுவது போன்ற நிகழ்சிகள் நடைபெற்றிருந்தால் அது கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தக் கூடியவையாகும்.

இது தொடர்பில் என்ன முடிவை எடுப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் கலந்தாலோசித்து தீர்மானிப்போம்.

தேசியப் பட்டியலில் சசிகலாவை உள்வாங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் இனிமேல்தான் ஆராய வேண்டும்.

தான் வெற்றிபெற்றுவிட்டதாக அங்கு கடைமையாற்றிய அலுவலகர்களே உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரிவித்து பாராட்டுக்களைத் தெரிவித்திருந்த நிலையில் முடிவுகள் நீண்ட இடைவெளியின் பின்னர் வெளியிடப்பட்டன.

இதன் மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனக் சசிகலா குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விடயம் தொடர்பில் உரியவர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவுக்கு வருவோம் என்று கூறியுள்ளார்.