தெருவில், சந்தியில் கதைப்பதை பாராளுமன்றத்தில் கதைப்பது தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத்தராது ! தனித்து நின்று எதையும் சாதிக்கவும் முடியாது ! சண்டைக்கு இழுப்பது திறமையல்ல !
சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் சங்கு சந்திரகுமாருடனான நேர்காணல்
தெருவில், சந்தியில் கதைப்பதை பாராளுமன்றத்தில் கதைப்பது தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத்தராது ! தனித்து நின்று எதையும் சாதிக்கவும் முடியாது ! சண்டைக்கு இழுப்பது திறமையல்ல !
சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் சங்கு சந்திரகுமாருடனான நேர்காணல்
கடந்த கால ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர் – சந்திரகுமார் வேண்டுகோள் !
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சங்கு சின்ன வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சனிக்கிழமை அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழ் தரப்புக்கள் ஒற்றுமையுடன் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
மேலும், கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் நடைபெற்ற ஊழல் நடவடிக்கைகள் மக்கள் முன்னிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு மக்களே மாற்றத்திற்கான முடிவை எடுக்க வேண்டிய நேரமிது என்று சந்திரகுமார் தெரிவித்தார். கிளிநொச்சியில் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் ஊழலற்ற வினைத்திறனான நிர்வாகம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தாங்கள் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக நிலங்கள் பாதிக்கப்பட்டு தங்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு மக்களுக்கும் பிரதேசத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் முதலீட்டு முயற்சிகளை தங்களது பிரதேசத்துக்குள் அனுமதிக்காதீர்கள் என்ற பொன்னாவெளி மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஒருபோதும் நிராகரிக்க முடியாது. அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை சமத்துவக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பொன்னாவெளியில் நேற்று (05) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு காரணமாக அப்பிரதேசத்தில் ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்படும்.
100 மீற்றருக்கு மேல் ஆழத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு காரணமாக அந்த பிரதேசம் முழுவதும் உவராக மாறிவிடும். இதனால் காலம் காலமாக பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் தங்களின் சொந்த நிலத்தை விட்டு வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை உருவாகும். எனவே தங்களது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு நடவடிக்கையினை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அம்மக்கள் தெரிவிப்பதில் எவ்வித தவறும் இல்லை.
அந்த மக்கள் இன்றைக்கு 270 நாட்களை கடந்து அமைதி வழியில் தங்களது நிலத்தை பாதுகாக்க போராடி வருகின்றார்கள். எனவே அவர்களின் நியாயமான போராட்டத்தை மதித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, வன்முறைகளை தூண்டிவிடும் வகையில் வெளி பிரதேசங்களிலிருந்து மக்களை அழைத்துச் சென்று இனத்துக்குள்ளே மோதவிட்டு அதில் தங்களின் சுயலாபங்களை நிறைவேற்றிக்கொள்ளும் மிக மோசமான நடவடிக்கைகளை மக்களோடு நின்று சமத்துவக் கட்சியும் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், பொன்னாவெளி மக்களோடு நாம் தொடர்ந்தும் நிற்போம். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை குரல் கொடுப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு அடிப்படைத்தேவைகளுக்கு பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்ற நிலையிலும் உள்ளுர் உற்பத்திகளைப் பெருக்க அரசு எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை என்றும் அரசினுடைய இவ்வகையான தூரநோக்கற்ற செயற்பாடுகள் இளைஞர் யுவதிகளையே அதிகம் பாதிக்கும் என்றும் சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் மு சந்திரகுமார் தெரிவித்தார். நவம்பர் 20ம் திகதி கிளிநொச்சி லிற்றில் எய்ட் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். அமரத்துவமடைந்த லிற்றில் எய்ட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சிவஜோதியின் ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய மு சந்திரகுமார், அதிகரித்துள்ள அரச உத்தியோகத்தர்கள் இருப்பதற்கே அலுவலகங்களில் இருக்கைகள் இல்லை எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் அரசு இனிமேல் அரச ஊழியர்களை விலத்துவது பற்றி தீவிரமாக சிந்திப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் குறிப்பி;ட்டதாக மு சந்திரகுமார் அங்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வின் இறுதியில் இயல், இசை, நாடகக் கலைஞர்கள் வள்ளிபுரம் ஏழுமலைப்பிள்ளை, கணேஸ் விஜயசேகரன், பார்வதி சிவபாதம், செல்லத்துரை விந்தன் ஆகியோர் அவர்களுடைய சேவைக்காக பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் பார்வதி சிவபாதம் அவர்கள் இவ்வாண்டுக்கான 2022 சிவஜோதி ஞாபகார்த்த விருதை வெற்றிகொண்டார். 2022 சிவஜோதி ஞாபகார்த்த விருதை கிழக்குமாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலாவும் சிவஜோதியுடைய தந்தையும் இணைந்து பார்வதி சிவபாதம் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர். மற்றைய கலைஞர்களுக்கு ரூபாய் 5000 மும் அவர்களின் சேவையை கௌரவிக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
‘தனது குழந்தைப் பருவம் முதல் இயல் இசை நாடகத்துறையில் தடம் பதித்து பதின்ம வயதிலும் அதில் ஈடுபட்டு கலைத்துறையிலேயே வாழ்க்கைத் துணையையும் தேர்ந்து கலைத்துறையில் தன் அடுத்த தலைமுறையையும் தடம்பதிக்க வைத்தமைக்காக இயல் இசை நாடகத்துறையில் பார்வதி சிவபாதமும் அவருடைய குடும்பத்தினரும் ஆற்றிய பங்களிப்பை கௌரவிப்பதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டதாக காணொலியூடான தன்னுடைய பகிர்வில் லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவித்தார்.
மு சந்திரகுமார் தன்னுடைய உரையில் ‘இவ்வாண்டு இறுதியுடன் சில ஆயிரம் பேர் அறுபது வயதையெட்டுபவர்கள், ஓய்வுபெறப் போகின்றனர். அந்த வெற்றிடங்கள் எதுவுமே நிரப்பப்படாது’ எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இராணுவ சேவைகளில் 15 ஆண்டுகள் சேவையாற்றியவர்கள் ஓய்வு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். சிங்கள மக்கள் மத்தியிலேயே இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் மேற்கத்தைய சார்புடைய அரசு தற்போது இருப்பக்கரம் கொண்டு போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதைப் பற்றி சர்வதேசமும் தற்போது பெரிதாகக் கண்டுகொள்வதில்லை எனத் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு இனிவரப் போகும் காலங்கள் மிகச்சவாலானதாக அமையும் எனத் தெரிவித்த மு சந்திரகுமார் ‘கிளிநொச்சி மண்ணில் லிற்றில் எய்ட் செய்யும் பணிகள் அளப்பெரியது. பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொழில்நுட்ப கல்வியைக் கற்று வெளியேறுகின்றனர். லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் இளைஞர் – யுவதிகளின் எதிர்காலம் விருத்தி குறித்து மிகுந்த கவனம்கொண்டுள்ளார்’ எனக் குறிப்பிட்ட மு சந்திரகுமார், இன்னும் 15 வருடங்களுக்கு அரச உத்தியோகங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கிளிநொச்சியில் உள்ள இளைஞர் – யுவதிகளுக்கு லிற்றில் எய்ட் ஒரு சிறந்த வாய்ப்பு எனத் தெரிவித்தார்.
‘அறிவு – திறன் – மனப்பாங்கு என்ற மூன்று அம்சங்கள் எங்களின் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பரீட்சைக்காக மட்டுமல்லாமல் அதற்கு அப்பாலும் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலா தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘கருத்துக்களை சிந்தனைகளை கொள்கைகளை உருவாக்கியவர்களே வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை அதனை பின்பற்றுபவர்களே பின்நாட்களில் அதனை வளர்த்தெடுக்கின்றனர். சிவஜோதியின் எண்ணங்களும் அவ்வாறே, இன்று பலர் மத்தியிலும் விதைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது’ எனத் தெரிவித்தார்.
‘சிவஜோதியொரு பன்முக ஆளுமை நல்ல கலைஞர்’ எனத் தெரிவித்த வி குணபால ‘நாங்கள் கலைஞர்களை உருவாக்கத் தேவையில்லை, எங்கள் மத்தியில் நல்ல சுவைஞர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் உருவாக வேண்டும’; எனத் தெரிவித்தார். வி குணபாலா தனது உரையில் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி ‘எல்லாவற்றையும் அனுபவித்து உணர்ந்துகொள்ள ஆயள் போதாது ஆனால் பல அனுபவங்களை வாசித்து அனுபவித்துக்கொள்ள புத்தகங்கள் நிச்சயம் உதவும்’ என்பதைச் சுட்டிக்காட்டினார்.
வி குணபாலாவின் தலைமையுரையைத் தொடர்ந்து பத்தி எழுத்தாளர், நூலாசிரியர், கலை இலக்கிய விமர்சகர் சி கருணாகரன் சிவஜோதி நினைவுச் சிறப்புரை நிகழ்த்தினார்.
இளையோரை விருத்தி செய்தல்: அறிவு – ஆற்றல் – ஆளுமை – பண்பு – செயல்திறன் என்ற தலைப்பில் சிவஜோதியின் இளையதலைமுறையினரை முன்நிறுத்தும் தன்மையை விதந்துரைத்தார். தற்போது போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனைகள் அதீதமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய கருணாகரன் சர்வதேச என்ஜிஓக்களின் புரஜகட் கலாச்சாரத்தால் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் இது இளைஞர்களின் தவறல்ல அவர்களை நல்வழிப்படுத்தாத பெற்றோர்கள் ஆசிரியர்கள் என் போன்ற சமூகத்தினரதும் தவறு எனச்சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி மண்ணில் மட்டும் வேலைவாய்ப்புகள் இல்லாமல் 20,000 இளைஞர்கள், யுவதிகள் என்ன செய்வதென்று தெரியாமல் பொழுதை வீணடிப்பதாகக் குறிப்பிட்ட கருணாகரன், மண்ணின் மைந்தர் என்று மார்தட்டிக்கொள்ள ஆட்கள் இருக்கின்றனர் ஆனால் மண்ணுக்கு சேவை செய்ய ஆட்கள் இல்லை எனக் குறைப்பட்டார். ‘அரசோ வெளிநாட்டுக்கு போய் உழைத்து வரச்சொல்லி இலவசமாகக் கல்வியைக் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய பயிற்சியையும் கொடுத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றது. எங்கள் நாட்டில் உள்ள வளங்களை வைத்து உற்பத்திகளைப் பெருக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தன்னுரையில் கருணாகரன் கேட்டுக்கொண்டார்.
‘இன்று கிராமங்களிலும் கூட பட்டதாரிகள் இல்லாத வீடுகள் இல்லை என்ற அளவுக்கு வந்துவிட்டது. அப்படி இருந்தும் அறிவான சமூகத்தில் இவ்வாறான போதைப் பழக்கங்கள் தலைவிரித்தாடுவது எதனால்?’ என அவர் கேள்வி எழுப்பினார். அதனால் அறிவு மட்டும் போதாது எனக் குறிப்பிட்ட அவர், ‘நல்ல எண்ணங்கள் வளர்த்தெடுக்ப்பட வேண்டும் அதற்கு இயல், இசை, நாடகம், ஓவியம் என கலையம்சங்களும் அவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
‘கடந்த 12 ஆண்டுகள் லிற்றில் எய்ட் கிளிநொச்சி மண்ணில் கணணித் தொழில்நுட்பத்துடன் ஆளுமையையும் வளர்க்கின்றது. இங்கு புரஜக்ற் கலாச்சாரம் இல்லை. புரஜக்ற் எழுதி நிதிசேகரிப்பு நடைபெறுவதில்லை. மாணவர்களே சிரமதானம் செய்கின்றனர். மாணவர்களே பெயின்ற் அடிக்கின்றனர். அதுவொரு குடும்பமாகச் செயற்படுகின்றது’ என்றும் கருணாகரன் தனதுரையில் குறிப்பிட்டார்.
லிற்றில் எய்ட் மாணவர்களின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வுக்கு லிற்றில் எய்ட் மாணவி செல்வி குகப்பிரியா வரவேற்று உரைநிகழ்த்தினார். ஆசிரியர் பி தயாளன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். கிளிநொச்சி ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் ஆலயப் பிரதம குரு முத்துக்குமார குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரநாத சர்மா சிவஜோதியின் நினைவுகளைக் குறிப்பிட்டு ஆசியுரை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து கிளிநொச்சி கருணா நிலைய வண பிதா எஸ் கே டானியல் சிவஜோதியுடைய நண்பரும் கூட ஆன்மீகத்துக்கூடாகவே ஒழுக்கத்தை கொண்டுவர முடியும் எனத் தெரிவித்தார். பொறுப்பற்ற கடமையுணர்வற்ற மனிதர்களைக் கண்டு சிவஜோதி தார்மீகக் கோபம் கொள்வதாகக் கூறிய அவர் ‘கடவுள் ஏன் இவ்வாறானவர்களுக்கு நல்ல சிந்தனையை வழங்குவதில்லை?’ எனத் தன்னிடம் கேட்டபார் என்றும் வண பிதா எஸ் கே டானியல் தன்னுடைய ஆசியுரையில் குறிப்பிட்டார். முன்னைய நிகழ்வு சிவஜோதி ஞாபகார்த்த அரங்காக நடைபெற்றது.
அடுத்த பத்து ஆண்டுகளில் அரச வேலை வாய்ப்புகள் கடுமையாக மட்டுப்படுத்தப்படும் என லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று நாடுள்ள நெருக்கடி நிலையில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவைச் செலுத்துவதிலேயே கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்றும் இந்நிலையில் புதிய தொழில் வாய்ப்புகளை வழங்குவது என்பது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளாக கிளிநொச்சியில் இயங்கி வரும் லிற்றில் எய்ட் அமைப்பின் 2022ம் ஆண்டின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் 10 April மிகச் சிறப்பாக இடம்பெற்றது. 200 பேர் மட்டுமே கொள்ளக் கூடிய மண்டபத்தில் 350 பேர்வரை கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 250 மாணவர்கள் கணணி வன்பொருள் கற்கை, கணணி மென்பொருள் கற்கை, வடிவமைப்பு, தையல் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் டிப்ளோமா கற்கைகளைப் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு ஆசியுரை வழங்கிய ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோயில் பிரதம குரு முத்துகமார குருக்கள் சிவஸ்ரீ மகேஷ்வரநாத சர்மா, அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களை அடக்கி ஒடுக்குவதாகவும் ஆனால் லிற்றில் எய்ட் போன்ற அமைப்பு கீழேயுள்ள மக்களை கல்வியறிவூட்டி வளர்த்துவிடுவதாகவும் தெரிவித்தார்.
கருணா நிலைய குரு எஸ் கே டானியல் தனது ஆசியுரையில் லிற்றில் எய்ட் இவ்வளவு தொகையான மாணவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் இவ்வளவு தொகையான மாணவர்களுக்கு கல்வியும் சமூகப் பண்புமூட்டி அவர்களை நல்வழியில் பயணிக்கச் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மாற்றங்களை யாரும் இலகுவில் ஏற்றுக்கொள்வதில்லை ஆனால் லிற்றில் எய்ட் தங்களிடம் வரும் மாணவர்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை ஆளுமைகளாக விருத்தி செய்து அனுப்புவதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வு லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. அவர் தனதுரையில் இச்சான்றிதழ்கள் கற்கையின் முற்றுப்புள்ளி அல்ல என்றும் சேர் ஐசாக் நீயூட்டன் குறிப்பிட்டது போல் நாம் கற்ற ஒரு துளிக்கல்விக்கான அத்தாட்சி மட்டுமே என்றும் கல்லாதது சமுத்திரத்தின் அளவானது என்பதைச் சுட்டிக்காட்டினார். பெறுபேறுகள், சான்றிதழ்கள், பட்டங்கள் அல்ல கல்வி எனக் குறிப்பிட்ட அவர், கல்வி என்பது அவற்றையும் கடந்தது எனத் தெரிவித்தார்.
வன்னி மண் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் பல்வேறு சமூகச் சிக்கல்களை எதிர்கொள்கின்றது என்பதைச் கூட்டிக்காட்டிய த ஜெயபாலன் இளைஞர் வன்முறை, போதைவஸ்து பழக்கம், இளவயதுத் திருமணங்கள், வீதி விபத்துக்கள் மற்றும் இவற்றின் ஒட்டுமொத்த தாக்கமாக கல்வி வீழ்சி என்பன வன்னி மண் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை என்றும் இவற்றுக்கு மற்றவர்கள் மீது பழிபோடுவதைத் தவிர்த்து இதற்கான தீர்வைப் பற்றி தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜி தர்மநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசிய அவர் தொழில்நுட்ப அறிவு இல்லாமால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது கடினமாக இருக்கும் எனத் தெரிவித்தார். மாணவர்கள் நேரான (பொசிடிவ்) எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எமது பாரம்பரியமான ஆமையும் முயலும் கதை போல் அல்லாமல் ஆமையும் முயலும்; இணைந்து கூட்டாக தரையிலும் திண்ணீரிலும் செயற்படுவதன் மூலம் கூட்டு உழைப்பின் முக்கியத்துவதை;தை விளக்கினார் தர்மநாதன் விளக்கினார்.
லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இன்றைய பொருளாதார நெருக்கடிகள் பற்றியும் குறிப்பிட்டார். இன்றைய நெருக்கடியான சூழலைக் கண்டு நாங்கள் அஞ்ச வேண்டியதில்லை என்றும் நெருக்கடியான காலகட்டங்களிலேயே மனித குலம் புதிய திருப்பு முனைகளை கண்டுகொண்டது வரலாறு என்றும். ஐரோப்பாவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகக் காரணம் அம்மக்கள் எதிர்கொண்ட அசாதாரண காலநிலை. அதுபோல் எமது நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி எமது கல்வியலாளர்களையும், மாணவர்களையும், வர்த்தகர்களையும், அரசியல்வாதிகளையும் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டும் எனத் தெரிவித்தார். மாணவர்களாகிய நீங்கள் இன்று கற்பது நாளை உருவாகப் போகின்ற பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண்பதற்காகவே அல்லாமல் வெறும் பெறுபேறுகளுக்காக, சான்றிதழ்களுக்காக, பட்டங்களுக்காக என்று குறுக்கிவிடாதீர்கள் எனத் தெரிவித்தார்.
லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகளைப் பற்றி விதந்துரைத்த முனானாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் லிற்றில் எய்ட் எவ்வளவு சிரமங்களின் மத்தியில் இம்மண்ணில் செயற்பட்டு தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதற்கு காலம்சென்ற வி சிவஜோதியின் அர்ப்பணிப்பு மகத்தானது எனத் தெரிவித்தார். மு சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில் த ஜெயபாலன் கல்வியைக் கற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதை தனது சொந்த அனுபவத்தினூடாக மாணவர்களுக்குக் காட்டியவர் என்றும் எதிர்காலத்தில் அரச வேலைகளுக்காகக் காத்திராமல் தனியார் துறைகளிலும் சொந்த தொழில் முயற்சிகளை உருவாக்குவதிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தார். சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில் அரசதுறையில் 16 லட்சம் பேர் தேவைக்கதிகமாக வேலைக்கமர்த்தப்பட்டு உள்ளதாகவும் கடந்த கால அரசுகளின் திட்டமிடப்படாத பொருளாதார நடவடிக்கைகளே நாட்டினை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.
நாங்கள் விழுமியங்களை இழந்துவருகின்றோம் எனச் சுட்டிக்காட்டிய கிளி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபர் பெருமாள் கணேசன்; இலங்கையில் தமிழர்கள் மத்தியில் விழுமியங்களை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை எனத் தெரிவித்தார். தெற்கில் அனாகரிக தர்மபால சிங்கள மக்களின் விழுமியங்களை முன்வைத்து அவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் தமிழ் தரப்பில் ஆறுமுகநாவலர் அதனைச் செய்யத்தவறியதை பெருமாள் கணேசன் அங்கு சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி மண்ணில் இவ்வளவு திரளான இளம் தலைமுறையினரை காண்பதும் அவர்களைக் கொண்டு லிற்றில் பேர்ட்ஸ் என்ற இந்த சஞ்சிகையை வெளியிட்டு இருப்பதும் ஒரு போற்றுதற்குரிய விடயம் எனவும் பெருமாள்கணேசன்; தனது நயவுரையில் குறிப்பிட்டார். லண்டன் மெயிலாக, த ஜெயபாலன் லிற்றில் மாமா என்ற என்ற பெயரில், “தமிழ் சமூகத்தில் கல்வியும் அறிவும் வெறுமனே பாடப் புத்தகங்களுக்குள்ளும் சான்றிதழ்களுக்குள்ளும் முடக்கப்பட்டு, உண்மையான கல்வி, அறிவு என்பன தொலைக்கப்பட்டு விட்டது” என்ற குறிப்பைச் சுட்டிக்காட்டிய அவர் எழுதவும் வாசிக்கவும் லிற்றில் எய்ட் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வரவேற்றோர். சஞ்சிகையில் வெளியான ஒவ்வொரு ஆக்கத்தையும் தனது ஆய்வுக்கு உட்படுத்திய பெருமாள்கணேசன் தனது மதிப்பீட்டை மிகக் காத்திரமாக முன்வைத்தார். கிளிநொச்சியின் ஆளுமைகளை இனம்கண்டு அவர்களது நேர்காணலை பதிவு செய்ததை விதந்துரைத்த அவர் சிறுவர் சஞ்சிகையில் சித்திரக் கதைகள், நாடகக் கதைகள், சித்திரங்கள் என்பனவும் எதிர்கால இதழ்களில் சேர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழக மாணவன் சனோசன் பத்மசேனன தன்னுரையில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு எண்ணம் போல் வாழ்வதன் அவசியத்தையும் சிறந்த எண்ணங்களை உருவாக்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இதுவொரு சம்பிரதாயபூர்வமான நன்றியுரையல்ல எனக்குறிப்பிட்ட லிற்றில் எய்ட் ஆசிரியை பவதாரணி அனைவரதும் ஒத்துழைப்பும் இன்றி இந்த சான்றிதழ் வழங்கும் இந்நிகழவை இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்க முடியாது எனத் தெரிவித்தார். நன்றியுரைக்குப் பின் மாணவர்கள் தங்களுக்குள் பாடல்களைப் பாடியும் ஆடியும் தங்கள் தகமையடைவைக் கொண்டாடினர்.
உரைகளின் நடவே மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பரிசுகள், ஆசிரியர்களுக்கான கௌரவிப்புகள் எனபன இடம்பெற்றன. கல்வியியலாளர்கள் நைற்றா பரீட்சைப் பரிசோதகர் – அபிமன், ஐசிரி கற்கைகளுக்கான சோனல் டிரெக்டர் சந்திரமோகன், அதிபர் வட்டக்கட்சி ஆரம்பப் பாடசாலை பங்கயற்செல்வன், அதிபர் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் பெருமாள்கணேசன், அதிபர் கிளிநொச்சி விவேகானந்த கல்லூரி திருமதி ஜெயா மாணிக்கவாசகர், முன்னாள் தையல் ஆசிரியர் ஹேமமாலினி உதயகுமார் ஆகியோர் மாணவர்களுக்கான சான்ஙிதழ்களை வழங்கினர். மாணவர்களும் மாணவிகளும் ஆரவாரத்துடன் தொழில்சார் ஆடைகளை அணிந்து வந்து தங்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் முடிவில் தையல் மற்றும் வடிவமைப்பு கலைகளில் பயிற்சி பெற்ற மாணவர்கள் உருவாக்கிய அழகியல் பொருட்கள் ஆடைகள் என்பன காட்சிப்படுத்தப்படட்டு விற்பனையும் இடம்பெற்றது. இப்பொருட்களை எதிர்காலத்தில் ஒன்லைனில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஆசிரியை அனுஷியா ஜெயநேசன் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இரு மணிநேரம் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.