சரோஜா சாவித்திரி போல்ராஜ்

சரோஜா சாவித்திரி போல்ராஜ்

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவராக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் !

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது.

இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவராக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவுசெய்யப்பட்டார். அவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன வழிமொழிந்தார்.

அத்துடன், பெண் பாராளுன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக இருவர் தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி பண்டார கிரிஎல்லே பிரதி இணைத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், இவருடைய பெயரை ரோஹினி விஜேரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க வழிமொழிந்தார்.

மேலும் மற்றுமொரு பிரதி இணைத்தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கிருஷ்ணன் கலைச்செல்வி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே வழிமொழிந்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில், பொதுமக்களின் வாக்குகளால் குறிப்பிடத்தக்க வீதமான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது சிறந்த வெற்றியாகும் என்றார். எனவே, அரசியல் வேறுபாடுகள் இன்றி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் செயற்பட வேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவது ஒன்றியத்தின் நோக்கம் என இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

அத்துடன், ஒன்றியத்தால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இரு துணைத் தலைவர்கள் தலைமையில் உபகுழுவொன்று அமைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்னவின் பரிந்துரைக்கு அமைய பாலின அடிப்படையில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான தினத்தை எதிர்வரும் 06ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி விஜேரத்ன, சமன்லி குணசிங்க, சமிந்திரானி பண்டார கிரிஎல்லே, தீப்தி வாசலகே, துஷாரி ஜயசிங்க, ஒஷானி உமங்கா, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, லக்மாலி ஹேமச்சந்திர, கீதா ஹேரத், ஹிருனி விஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, சாகரிக்கா அதாவுத, எம்.ஏ.சி.எஸ்.சதுரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தை, நிலாந்தி கொட்டஹச்சி, ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் எம்மைப் பிரித்து ஆட்சிசெய்து அவர்களின் பரம்பரைகளுக்காக அனைத்தையும் செய்துகொண்டார்கள் – ஜே.வி.பி குற்றச்சாட்டு!

இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் எம்மைப் பிரித்து ஆட்சிசெய்து அவர்களின் பரம்பரைகளுக்காக அனைத்தையும் செய்துகொண்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

 

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மகளிர் மாநாடு ஹோமாகமையில் அண்மையில் இடம்பெற்றது.

 

இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,

 

இற்றைவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ள சமூக, பொருளாதார, அரசியல் சீரழிவு காரணமாக நாங்கள் அனைவரும் கண்டுகொண்டிருந்த கனவு கலைக்கப்பட்டுள்ளது.

 

நாங்கள் இதுவரை சிறைப்பட்டிருந்த அரசியல் கட்சிகளை மறந்து எமது பிள்ளைகளுக்காக சுதந்திரமாக மூச்செடுக்கக்கூடிய ஒரு நாட்டை சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்காகவும் உருவாக்கிட திடசங்கற்பத்துடன் அணிதிரண்டுள்ளோம்.

 

உலகின் ஏனைய நாடுகள் பெற்றுள்ள கலாசார மற்றும் சமூக சுதந்திரத்தை நிலவுகின்ற ஊழல்மிக்க அரசியல் முறைமையே இழக்கச்செய்துள்ளது.

இந்த கொள்ளைக்கார பொருளாதாரத்தையும் ஊழல்மிக்க அரசியலையும் முடிவுக்கு கொண்டுவந்து முன்நோக்கி நகர நாமனைவரும் யதார்த்தத்தில் அணிதிரண்டிருக்கிறோம்.

 

எனினும் இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் எம்மைப் பிரித்து ஆட்சிசெய்து அவர்களின் பரம்பரைகளுக்காக அனைத்தையும் செய்துகொண்டார்கள்.

 

சம்பிரதாயபூர்வமாக மூதாதையர்களின் மரபுரிமையால் அரசியலில் ஈடுபடுவதற்குப் பதிலாக பெண்களுக்கு உண்மையான வெற்றியை பெற்றுக்கொடுக்கக்கூடிய பெண்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன் தேசிய மக்கள் சக்தியைச்சுற்றி அணிதிரண்டு வருகிறோம்.

 

ஒட்டுமொத்த பெண்கள் தலைமுறையினருக்கும் முன்னணிக்குவர ஊக்கமளித்த, பலம்சேர்த்த, வழிகாட்டிய மற்றும் தலைமைத்துவம் வழங்கிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்பதை நாங்கள் மிகவும் வலியுறுத்திக் கூறுகிறோம்.

 

இதற்கு அப்பால் நாங்கள் எத்தகைய நாட்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும்? அமைதிநிறைந்த, சகவாழ்வுகொண்ட, சுதந்திரமான கலாசாரத்தை உருவாக்குகின்ற ஆட்சியொன்று எமக்கு அவசியமாகி உள்ளது.

 

அதற்குள்ளே பெண்களாகிய எங்களை அநீதிக்கு, அநியாயத்திற்கு, சமத்துவமின்மைக்கும் இழுத்துப்போடுகின்ற அனைத்து நிபந்தனைகளையும் அகற்றி பொருளாதார நியாயத்தைக்கொண்ட கலாசார சுதந்திரத்தை உருவாக்கிகொள்ள வேண்டும்.

 

அத்தகைய ஆட்சியை உருவாக்கிக் கொள்வதற்காக நாங்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறோம்.

 

தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அந்த ஆட்சியை உருவாக்க முடியும். இதுவரை நாங்கள் பயணித்த பாதையில் விரிக்கப்பட்டிருந்த சவால்களை சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன் ஒன்றிணைந்தால் மாத்திரமே வெற்றிகொள்ளமுடியும்.

 

எமது பிள்ளைகளுக்காக தடைகளின்றி முன்னேறிச்செல்லக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குகின்ற பொறுப்பு எமது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றுசேராத அனைவரையும் எம்மோடு இணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்று மேலும் தெரிவித்தார்.